1 |
இத்தனைக்கும் அவர் ஊரான கோயில்பட்டியிலும் சாமிகள் அதிகமே. ஆனால் அவர் எங்கள் ஊரைப் பற்றிச் சொன்ன கணக்கு தவறு. அவர் நேரடியாக கண்ணால் கண்ட சுடலைகளை மட்டுமே கணக்கில் வைத்துத் திகைத்தார். உண்மையாக எங்கள் நிலமெல்லாமே பெரும்பாலும் சாமிகள்தான். விளைக்கு விளை பெரும்பாலும் சாமிகள் இருப்பார்கள். |
2 |
காலசாமி, சங்கிலி பூதத்தான, கட்டையேறும் பெருமாள் உட்பட. இவற்றில் நான் முத்தாரம்மன் கோயில்களை சேர்க்கவில்லை. அவை சில நுற்றாண்டுகளுக்குள் வந்து சேர்ந்தவை. சிறுவயதில் அப்பம்மைதான் வெற்றிலை பாக்கு வாங்க எங்களை கடைக்குப் பணிக்கிறவள். செக்கடி மாடனைப் பற்றி அவள் எச்சரித்து அனுப்புவாள். |
3 |
பட்டப்பகலிலேயே பயந்து பயந்து செக்கடியைத் தாண்டுவோம். போகிற வழியில் அங்கே கேட்பாரற்ற எண்ணைச் செக்கு ஒன்று சரிந்து கிடக்கும். ஏற்கனவே எங்கள் மனதில் பெரியவர்கள் சொல்லி வைத்த சங்கிலி பூதத்தான் கதைகள் உண்டு. செக்கடியைக் கடந்தால் சங்கிலி பூதத்தான் கோயில் வரும் சற்று தென் மேற்கில் காலசாமி கோயில். |
4 |
திருட வந்த கள்ளனையே கண்களை இருட்டாக்கி கையோடு கட்டி கோயிலுக்குள் பூட்டி வைத்த சாமி அவர். காலசாமி கோயில் கொடைக்கு செங்கிடா, கருங்கிடா என்று ஏராளம் பலிபூஜைகள். காலசாமி கோயிலுக்கு வடக்குப் பக்கமாக சிறிய வெற்றிலை பாக்கு கடை உண்டு. செக்கடியை நான் பெரும்பாலும் ஓடித்தான் கடப்பேன். |
5 |
அப்போதெல்லாம் பெரியவர்களிடம் சதா மெல்லிய அச்ச உணர்வு இருந்து கொண்டேயிருந்தது. அந்த அச்ச உணர்வு பல்வேறு காரணிகளால் வாழ்க்கைக்குள் நுழைந்தது. அதனை அவர்கள் எங்களுக்குள் கடத்தினார்கள். எனது அப்பையாவின் தம்பி இளைய பாட்டனார் பெயர் வைத்தியலிங்க நாடார். ஊரே நிமிர்ந்து பார்க்கும் உயரம். |
6 |
பளபள என்றிருப்பார். அவருக்கு ஓய்வாக இருக்கும் போது நாங்கள் குழந்தைகள் காலை பிடித்து விடவேண்டும். அவர் சாய்வு நாற்காலியில் படுத்தவண்ணம் கண்களை மூடி கதை சொல்வார். அவையெல்லாம் கேட்பவருக்குத்தான் கதைகள். அவருக்கு சுயசரிதை. அவரது சுயசரிதை முழுதுமே பேய்களாலும் தெய்வங்களாலும் ஆனது. |
7 |
அது முகம் திருப்பி அடித்து சிலருக்கு தொடையெலும்புகள் உடைந்திருக்கின்றன. அப்பைய்யா ஆதிநாராயணன் நாடார் வில்லிசைக் கலைஞராக இருந்தவர் என கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் அய்யா வைகுண்ட சாமிகளின் அய்யாவழிக்கு திரும்பிய பிறகு வில்லிசையைக் கைவிட்டார். அவரோடு கட்டிலில் ஒட்டி படுத்திருப்போம். |
8 |
அவருடைய கட்டிலில் எப்போதும் அவருடைய சுகமான உடல் வாசம் இருக்கும். விவசாயம் உடலில் ஏற்படுத்தும் வாசம் அது. இயற்கையானது. போர்வைகளில் தணுப்பு. அது தலைப்பக்கம் உயர்ந்திருக்கும் நார்க்கட்டில். அவர் வில்லிசைக்கதைகள் பலவற்றை முழுமையாகச் சொல்லி இவையெல்லாம் பொய் என்பார். நம்பக் கூடாது என்று அறிவுறுத்துவார். |
9 |
அவர்களுக்கு அய்யா வேறொரு உடன்பாடு ஏற்படுத்தித் தந்திருக்கிறார். நாட்டு தெய்வங்களோ, காட்டு தெய்வங்களோ நேரடியாக அவர்கள் மக்களிடம் பூஜைகள் கேட்கக் கூடாது. பகிரங்கமாக அவர்களுக்கு அய்யாவழி தாங்கல்களிலும், பதிகளிலும் கருவறைக்கு வலதுபக்கமாக சிவாய்மார் மேடை என்றொன்று அமைக்கப்பட்டு சுத்த பூஜை செய்யப்பட்டது. |
10 |
முப்புரத்தை அழிக்கும் கதை. பிற தெய்வங்களுக்கெல்லாம் தனித்தனி கதைகள். சாராம்சத்தில் அந்த கதைகளின் ஓட்டம் ஒன்றுபோலவே இருந்தாலும் கூட சின்னச் சின்ன மாற்றங்கள் இருக்கும். எங்களூர் இசக்கியம்மன் கோயிலில் பெரியவர்கள் பாட்டுக்காரர்களுக்கு ஊர் ஏடு எடுத்துக் கொடுப்பார்கள். அந்த கதை அந்த சாமிக்குரியது. |
11 |
கொடைக்கு அதையெடுத்தே படிக்க முடியும். எங்கள் ஊரில் அது சின்னாடாரிடம் இருந்தது. அவர் எங்களுக்கு ஒரு சிறிய தாத்தா. பாளையக்கோட்டை கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வை முனைவர் ராமச்சந்திரன் மேற்கொண்டிருந்த போது இந்த ஊர் ஏடுகளைத் திரட்டுவதற்காக சின்னாடாரைக் கேள்விப்பட்டு எங்கள் ஊருக்கு வந்தார். |
12 |
ராமச்சந்திரனிடம் அப்போது பல ஊர்களில் உள்ள தனியேடுகள்இருந்தன. சின்னாடாரிடம் எங்கள் ஊர் சாமிகளின் ஏடுகள் மட்டுமல்ல, பல ஊர் ஏடுகள் இருப்பதாக அவர் கேள்விப்பட்டு வந்திருந்தார்.சின்னாடாரிடம் எவ்வளவோ முயற்சித்தும் அவர் ஊர் ஏடுகளைஅவரிடம் ஒப்படைக்க இணங்கவில்லை. முடியாது என மறுத்து விட்டார். |
13 |
எல்லா ஊர்களிலும் அழிந்து விட்டன. நினைவுகளில் எஞ்சியிருப்பவை மீதம். இப்போது வில்லிசைக் கலைஞர்கள் பொதுக்கதைகளை பாடுவதில் தைரியம் அடைந்து விட்டார்கள். கொஞ்சம் மிஞ்சிக் கிடைத்தவை முனைவர் ராமச்சந்திரனின் சேகரிப்பில் இருக்கக் கூடும். ராமச்சந்திரன் இவ்வாறே எனக்கு சிறுவயதிலேயே அறிமுகமானவர். |
14 |
புரிந்து கொண்டார்கள். அது விஞ்ஞானம் என்று வெளித் தோற்றத்திற்கு எளிதில் புலப்படாத மூல அறிவின் களஞ்சியம். ஜெயமோகன் சொல்வது போல மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பழங்குடி மக்களின் வழிபாடுகளையும் சரி, தொன்மையான நம்பிக்கைகளையும் சரி ஒருவகையான இளகாரத்துடன் குனிந்து கீழே பார்க்கிறார்கள். |
15 |
இந்த நம்பிக்கைகளையும், கதைகளையும் முதலில் அப்படியே ஏற்க வேண்டும். அப்படியானால் மட்டுமே அவை உங்களுக்கு முகம்காட்டும். நீங்கள் ஏற்கனவே ஒரு அர்த்தத்தை அவற்றுக்குச் சூட்டுவதற்கு பையில் எடுத்து வந்திருப்பீர்களேயானால், நீங்கள் கொண்டு வந்த அர்த்தத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்ப வேண்டியது தான். |
16 |
வில்லடியோ, காணியாட்டோ கேட்டு துடிகொண்டு தெய்வங்கள் துள்ளியோடி வருவதற்கு நிகராக. அதற்கு அவர் என்ன மாயவித்தை செய்திருக்கிறார் ? முதலில் அவர்களை அவ்வாறே அறிவு கொண்டு சுருக்காமல் அனுமதித்திருக்கிறார். பெரும்பாலும் கல்விப்புலங்கள் வழியே நாம் பெறுகிற சுருங்கிய அறிவு நாம் இவற்றைக் காண்பதற்கான பெருந்தடை. |
17 |
ஜெயமோகன் இந்த நூலில் அவற்றை அவர்களில் விடுத்திருக்கிறார். இப்போது அவருடைய மொழியில் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் தெய்வங்கள் அத்தனையும் உயிர்ச்சாறு கூடி அருள் நிறைந்து நிற்கின்றன. நிச்சயம் இந்த தெய்வங்கள் அவருக்கு அருள் புரியும். இப்படியெழுப்புவதற்காக கன காலம் ஏங்கியிருந்த தெய்வங்கள் இவை. |
18 |
மக்களின் வாழ்விற்கும் குற்றங்களுக்கும் சாராம்சமாக இருந்த, இருக்கும் கதைகள் இவை. நாய்கள், நாகங்கள் ஆகியவை ஜெயமோகனின் படைப்பாற்றலில் இந்த தெய்வங்களை அறிவதற்கு பேருதவி செய்திருக்கின்றன. ஜெயமோகனின் இந்த நூலில் பல விசேஷங்கள் உள்ளன. இந்த கதைகள் உயிர் கொண்டு எழும்பி நிற்கின்றன என்பதோடு பணி முடிவடையவில்லை. |
19 |
அந்த மெய்மை வழக்கமான அன்றாட ஆன்மிகம் சுட்டிக் காட்டுகிற மெய்மை அல்ல. மக்களில் இருந்து தொடங்குகிற மிகவும் சிக்கலான அதேநேரம் தீவிரமான மெய்மை இது. எளிதில் அகப்படாதது அல்லது அகப்பட கடினமானது. ஆனால் அந்த விஷேச அனுபவத்தை திறன்பட, கவித்துவ சன்னதத்துடன் வாசகர்களிடம் கடத்தியிருக்கிறார். |
20 |
வென்றவர்களுக்குத் தோற்றவர்களின் தெய்வங்கள் பேய்களாகத் தெரிகின்றன. நாம் உலகெங்கும் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள்தாம். ராப்பா லூயீ தொல்குடிகள் உருவாக்கிய மோய் என்றழைக்கப்படும் பிரமாண்டமான இந்த சிலைகளே ஈஸ்டர் தீவு பேரில் எனக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கான காரணம். |
21 |
மனிதன் தன்னுடைய சூக்கும உடலை சதா தேடித் கொண்டிருப்பதும், சூக்கும உடல்கள் அவனைத் தேடித் கொண்டிருப்பதும் மனிதப் பிரயாசைகளின் பயணத்தில் முக்கிய அங்கங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த பிரயாணம் எங்கோ முடிவிலியில் தோன்றுகிறது, மற்றொரு முடிவிலி நோக்கி சென்று கொண்டேயிருக்கிறது. |
22 |
மனிதனின் மெய்மை நோக்கிய ஆசையும், பிரயாசையும் ஒருபோதும் அவனை விட்டகலவே செய்யாது. ஜெயமோகனின் தொல்குடி தெய்வங்களை பற்றிய இந்த நூலை படிக்கும்போது எனக்கு நாம் எல்லோருமே ஈஸ்டர் தீவு போன்றதொரு தீவிற்குள் வசிப்பவர்கள்தாம் என்று தோன்றிற்று. அந்த தீவிற்கு இடம் காலம் பெயர்கள் எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கலாம். |
23 |
அந்த தீவு மனிதகுலம் ஒருபோதும் கரையேறவே இயலாத தீவு. அப்படியானால் நமது உருவங்கள்,ஆண் பெண் என்னும் பாவனைகள் ? தெய்வங்களின் மடல்கள் அவை. சூக்கும உடல்களின் மடல்கள். அந்த மடல்கள் இளமை, முதிர்ச்சி என தங்களைத் தாங்களே கடந்து செல்கின்றன. பின் பிறிது மடல்களில் கொம்பில் தளிரில் வளர்கின்றன. |
24 |
என்று கூறி தன்னில் ஓருடல் துரோகத்தால் விடைபெறும் போது அடப் பாவி... என்பது தனியே வளரத் தொடங்குகிறது. ஏக்கம் வளர்ந்தால் அது எப்படியேனும் பற்றிக் கொள்ள வேண்டும், அதுவரையில் மீட்சியில்லை. ஆசை பொருத வேண்டும். துரோகம் பழிவாங்கப்படல் வேண்டும். இவை இல்லாது சாந்தம் என்பதில்லை. அப்படியிருப்பது செயற்கையானது. |
25 |
உடலில் இருந்து பிரியும் தாகம்; தனியே உயிர் வாழும் தன்மை கொண்டது. அதுதான் மெய்மையின் சிறப்பியல்பே. நாம் காணும் மனிதர்கள் நமது கண்ணுக்குத் தெரியும் மாய வடிவங்கள். இவர்கள் உண்மையானவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் வேறெங்கோ இருக்கும் எவருடையவையோ நிழல்கள்தான் இங்கே ஆடிக் கொண்டிருக்கின்றன. |
26 |
அந்த அசல் நாடகத்தை தெய்வங்களே பார்க்க முடியும். என்று இந்த நூலில் ஜெயமோகன் சொல்கிறார். இந்த நூல் முழுதையும் இணைக்கும் வாக்கியங்கள் இவை என்பது போல எனக்குத் தோன்றுகின்றன. ஜெயமோகனின் இந்த நூலில் பெரும்பாலும் குமரி மாவட்ட நிலப்பரப்பைச் சார்ந்த தெய்வங்களின் கதைகளே அதிகம் சில கதைகள் கேள்விப்பட்டவை. |
27 |
சில கேள்விப்படாதவை. சில வில்லிசையில் கதை பாடல்கள் மூலம் அறிந்தவை. இவையெல்லாமே இந்தநூலில் ஒரு படைப்பு மனத்தின் ஊடுருவலில் உயிர் கொண்டு நிற்கின்றன. அதன் மூலம் நமது மனப்பரப்பின் எல்லைகளை மெய்மையால் அகலப்படுத்துகின்றன. நானறிந்த நிலம், நானறிந்த தெய்வங்கள் என்பதால் எனக்கு கூடுதல் நெருக்கம் ஏற்படுகிறது. |
28 |
இந்த நூலில் வரும் தெய்வங்களில் சிலவற்றை நேரடியாக எனக்குப் பரிச்சயம். விஷ்ணுபுரத்திற்கும் முந்தைய எனது ஆரம்ப காலங்களில் நேரடியாக அவர் சிலவற்றைக் காட்டியும் தந்திருக்கிறார். ஜ்யேஷ்டை அவர் அவ்வாறு அழைத்துச் சென்று கண்ணில் காட்டிய தெய்வம். அதன் செல்வாக்கு விஷ்ணுபுரத்தில் உண்டென்றே கருதுகிறேன். |
29 |
இந்த நூலை ஜெயமோகனின் அகவுலகின் சான்றாகக் கருத முடியுமெனில், அவர் கண்டடைந்த மெய்மையின் முக்கியமான தாது ஜ்யேஷ்டை எனும் தெய்வம் எனலாம். அவர் நேரடியாகக் காட்டித் தந்த போதே கடுமையாக இருந்த அகப்பொருள் அது. ஜ்யேஷ்டைக்கு நிகராக ஆதிகேசவனின் படுக்கைக்கு கீழே அமர்ந்திருக்கும் கேசிகள். |
30 |
அதைக் கடந்தே மெய்மைக்கான பாதையைத் தொடர முடியும் என்கிற நித்ய சைதன்ய யதியின் கூற்று ஜ்யேஷ்டையின் கதையில் பொருத்தமாக இடம் பெற்றிருக்கிறது. நாம் கோபுரங்களில் மெய்மையைத் தேடித் கொண்டிருக்கும் போது ஜ்யேஷ்டையும், கேசிகளும் மனதின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார்கள். |
31 |
அனுபவமாக்குகிறது. நமது அக வெளியினை நம்மிடம் திறந்து காணச் செய்கிறது. மகாபாரதம் பற்றிய அறிவின் மனத்தடைகளில் இருந்து வெளியேற ஐராவதி கார்வேயின் யுகாந்தா ஒரு யுகத்தின் முடிவு என்னும் நூல் எனக்கு பெரிதும் உதவிய நூல். இத்தனைக்கும் சாதாரணமான மானுடவியல் அணுகுமுறை மூலம் எழுதப்பட்ட மிகச் சிறிய நூல்தான் அது. |
32 |
நாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான தொன்ம மரபுக்கும் என்ன உறவு, அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆராய்கின்றன இக்கதைகள். |
33 |
அந்திக்கு விளக்கு கொளுத்தியதும் கைகால் கழுவி அமர்ந்து ராமநாம ஜபம் முடிந்தபின் என்னை மடியிலமர்த்தி என் தலையை கையால் மெல்ல தடவியபடி கதை சொல்லுவாள். தேவர்களும் கின்னர கிம்புருடர்களும் உலவும் மிகப்பெரிய கதைவெளி. அசுரர்கள், பாதாளநாகங்கள், அரக்கர் அவர்களை வதம் செய்ய பிறவியெடுக்கும் தெய்வங்கள். |
34 |
நான் கதைகளில் வாழ்ந்துகொண்டிருந்தேன். இவ்வுலகில் உள்ளவை எல்லாம் மிக எளிமையான விதிகளின் அடிப்படையில் அர்த்தமே இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்தன. மனிதர்கள் பறக்கமுடியாது என்பது, நினைத்த இடத்தில் தோன்றமுடியாது என்பது, விரும்பிய தோற்றம் பூண முடியாது என்பது எத்தனை பெரிய கட்டுப்பாடு என மனம் புழுங்கினேன். |
35 |
கொலைவெறிகொண்ட பேய்கள், குருதி குடிக்கும் தெய்வங்கள், விசித்திரமான மிருகங்கள் நிறைந்திருக்கும். அவர்கள் இருவரும் அறியாத ஓரிடத்தில் எனக்குள் இரு கதையுலகங்களும் ஒன்றாகி இருப்பதை இப்போது காண்கிறேன். அந்தக்கதையுலகமே நான் எழுதுவது என்று தோன்றுகிறது எங்கள் வீட்டுமுன் ஓரிரண்டு செந்தென்னைகள் நின்றன. |
36 |
அவற்றின் காய்கள் இளநீருக்கு மட்டுமே பயன்படும். காயில் உள்ள இனிப்பு காரணமாக குழம்புக்கு அரைக்கமுடியாது. அவற்றை எங்கள்பக்கம் கௌரிபாத்ரம் என்று அழைப்பார்கள். அது ஏன் என்று பாட்டியிடம் கேட்டேன். முன்பு பார்வதிக்கு பரமேஸ்வரன் கொடுத்தது அது. கௌரியால் கொடுக்கப்பட்டதனால் அந்தப்பெயர் என்றாள் பாட்டி. |
37 |
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது கூடவே பல மங்கலப்பொருட்கள் எழுந்து வந்தன. காமதேனு என்ற தெய்வப்பசுவும், கல்ப விருட்சம் என்ற பொன்னிறமான தென்னை மரமும் அவற்றில் முக்கியமானவை. அவற்றை தேவர்களின் அரசனான இந்திரன் உரிமையாக்கிக்கொண்டான். அவனுடைய தோட்டத்தில் அவை வளர்ந்தன. |
38 |
ஒருநாள் பார்வதியும் பரமேஸ்வரனும் ஒரு வைதிகனாகவும் அவன் மனைவியாகவும் மாறி ஒரு காட்டுக்குள் காதலில் ஈடுபட்டிருந்தபோது தேவி இனிய பானம் எதையாவது குடிக்க விரும்பினார். சிவன் அந்தக்காட்டில் இருந்த அத்தனை தென்னைகளையும் தேர்ந்து நோக்கி மிகச்சிறந்த இளநீரை வெட்டிக்கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தார். |
39 |
அதை அருந்திய கௌரி சுவையாக இல்லை என்று சொல்லிவிட்டாள். அதற்கு என்ன காரணம் என்று சிவன் நோக்கினார். ஒவ்வொரு தென்னையின் அடியிலும் ஒரு மனிதனாவது புதைக்கப்பட்டிருந்தான். அல்லது அவன் சாம்பல் அங்கே கலந்திருந்தது. மனிதர்கள் வாழ்ந்தபோது அடைந்த துன்பங்கள் அவர்கள் உடலில் உப்பாக மாறும். |
40 |
எஞ்சியதெல்லாம் குருதியில் கலந்திருந்தது. அந்த உப்பு கலந்துதான் காய்கள் கரித்தன. அந்தக் கரிப்பு கொஞ்சமேனும் இல்லாத ஒரு காயும், ஒரு கனியும் மண் மீது இல்லை என உணர்ந்தார் இறைவன். ஆகவே அங்கிருந்த அழகிய பசுக்களில் ஒன்றின் பாலைக்கறந்து கொண்டு வந்து கொடுத்தார். அதில் குருதிவாசனை வீசுவதாகச் சொன்னாள் தேவி. |
41 |
ஏனென்றால் எந்தப்பசுவும் மானுடருக்காகச் சுரப்பதில்லை. தன் குட்டிக்காகவே சுரக்கிறது. அந்தப்பாலை மானுடர் கவரும்போது அது கண்ணீர் வடிக்கிறது என்று சிவன் அறிந்தார். ஆகவே அவர் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனை அழைத்தார். கல்பவிருட்சத்தையும் காமதேனுவையும் மண்ணுக்கு கொண்டுவரும்படி ஆணையிட்டார். |
42 |
அவ்வண்ணமென்றால் அவற்றின் நிழல் இங்கே விழட்டும் என்றார் சிவன். கல்ப விருட்சத்தின் நிழல் மண்ணில் விழுந்தது, அது ஒரு செந்நிறத்தென்னையாக ஆகியது. காமதேனுவின் நிழல் ஒரு நீர்நிலையில் விழுந்தது, அது வெண்ணிறமான உடலும் கரிய காம்புகளும் கொண்ட காராம்பசுவாக ஆகியது. இன்றும் அவையே மண்ணில் நீடிக்கின்றன. |
43 |
பார்வதி தேவி அருந்திய இளநீர்! கௌரிபாத்ர இளநீரும் காராம்பசுவின் பாலும் மட்டுமே கோயிலில் தெய்வங்களுக்குப் படைக்கத்தக்கது என்று அப்போது புரிந்துகொண்டேன். பின்னர் ஒருமுறை அதைப்பற்றி தங்கம்மாவிடம் பேசவேண்டியிருந்தது. எங்களுக்கு பன்னிரண்டு பனைமரங்கள் இருந்தன. அவற்றை குத்தகைக்கு விட்டிருந்தோம். |
44 |
இல்ல, பனையாக்கும் கல்பவிருட்சம் என்றாள் தங்கம்மா. அது முற்றிலும் வேறு கதை. முன்பொருகாலத்தில் பெரும்பஞ்சம் வந்தது. பசி பொறுக்காமல் கல்லையும் மண்ணையும் தின்று மக்கள் செத்த பஞ்சம். எட்டு குழந்தைகளின் அன்னையாகிய ஏழைப்பெண் ஒருத்தி பிள்ளைகள் பசியால் துடிப்பது தாளாமல் சோற்றுக்கற்றாழையை அரைத்துக்கொடுத்தாள். |
45 |
குழந்தைகளின் பரிதவிப்பை தாளமுடியாமல் சாவதற்கே முடிவெடுத்தாள். பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு காட்டுக்குள் சென்று அங்கே பாழடைந்து கிடந்த ஒரு கிணற்றுக்குள் ஒவ்வொரு குழந்தையாகத் தூக்கிப்போட்டாள். எனக்கு யாருமில்லை, இருட்டே நீயே அடைக்கலம் என்று கூவி அழுதாள்.அவளுடைய கண்ணீரால் மார்புகள் நனைந்தன. |
46 |
உண்மையில் அந்தக் கிணறு பாதாளநாகங்கள் பூமிக்குமேலே வருவதற்கான வாசல். அந்த பிரம்மாண்டமான பாம்புவளைக்குள் ஒவ்வொரு குழந்தையாகச் சென்று பாதாளத்திற்குள் விழுந்தன. பாதாளநாகங்களின் அரசனான வாசுகியின் அரசவையில் அவை சென்று விழுந்தபோது அவன் அதிர்ச்சியுடன் பார்த்தான். கடைசியாக அன்னையும் வந்து விழுந்தாள். |
47 |
அவன் கண்கள் இரு நட்சத்திரங்கள் போல ஒளிவிட்டன. அவனைச்சுற்றி கோடிக்கணக்கான இருண்ட நாகங்கள் சுருண்டு நெளிந்தன. அவற்றின் கண்கள் மட்டும்நட்சத்திரங்களாகத் தெரிந்துகொண்டிருந்தன. புயல்போல சீறி, மின்னல் போல ஒளிவிட்ட நாக்கை பறக்கவிட்டு, இடிபோன்ற குரலில் அவளிடம் அவள் ஏன் அங்கே வந்தாள் என்று கேட்டான். |
48 |
ஆகவே உனக்கு வேண்டியதைச் செய்கிறேன். ஆயிரம் கலம் நிறைய பொன்னை தருகிறேன், நீயும் உன் பிள்ளைகளும் போய் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்றான் வாசுகி என் அண்டைவீட்டுக்குழந்தைகள் பட்டினியால் சாகும்போது நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன். உன் செல்வம் எனக்கு வேண்டியதில்லை என்றாள் அன்னை. |
49 |
சரி உன் ஊரே சாப்பிடும்படி பொன் அளிக்கிறேன் என்று வாசுகி சொன்னான். நாகராஜனே, மண்ணில் ஒரே ஒரு குழந்தை பசியால் சாகக்கண்டால் கூட முலைசுரக்கும் அன்னையாகிய என்னால் மகிழ்ச்சியாக ஒருவாய் சோறு உண்ண முடியாது. எனக்கு உலகமே தேவையில்லை. இனி நான் இங்கே இந்த இருளிலேயே இருக்கிறேன் என்று அன்னை சொன்னாள். |
50 |
அவனுடைய ஆணைப்படி கராளன், கரியன் என்ற கன்னங்கரிய பாதாள நாகங்கள் இரண்டு மண்ணுக்கு வந்தன. கராளன் ஒரு பனைமரமாக ஆனான். கரியன் எருமையாக ஆனான். எருமை குப்பையை உண்டு அமுதாகிய பாலை அளித்தது. பனை புளியமரம் கருகும் கோடையிலும் வற்றாது சுரந்துகொண்டிருந்தது. அதன் காயும் கனியும் வேரும் உணவாயின. |
51 |
ஏழைகளுக்கான தெய்வம் மண்ணுக்கு அடியில் வாழ்கிறது என்று அன்று அறிந்துகொண்டேன். வெண்ணிறமான தெய்வங்களுக்கு சமானமாகவே கறுப்புநிற தெய்வங்களும் உண்டு என்றும். அந்த வயதில் அவ்வறிதல் அளித்த கொந்தளிப்புகளின் வழியாக நெடுந்தூரம் சென்றேன். புனைகதைகள் எழுத தொடங்கினேன். இலக்கியவாதி ஆனேன். |
52 |
அதிகமும் கேட்கப்படாதது அது. ஆனால் ஓயாமல் சொல்லப்படுவது. அதையும் சொல்லாமல் எந்தக்கதையும் முழுமையாவதில்லை. கூப்பிடுதூரத்துத் தெய்வங்கள் என் அம்மாவழி முப்பாட்டன்களில் ஒருவர் சுசீந்திரம் கோயிலுக்குப் போய்விட்டு கணியாகுளம் வழியாக நட்டாலம் என்னும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். |
53 |
பெருந்தோள் கொண்டவர். அடிமுறை ஆசான். ஒரு கையில் மான்கொம்பை கேடயமாகக்கொண்டு மறுகையில் நீளமான வாளுடன் களமிறங்கி பல போர்களில் வென்றுவந்தவர். அக்கால கேரளப் போர்வீரர் வழக்கப்படி திருமணம் என ஏதும் செய்துகொள்ளவில்லை. அச்சிகள் என்னும் பெண் தொடர்புகள்தான். அவருக்கு எந்தப்பெண்ணும் ஒத்துவரவில்லை. |
54 |
அவருடன் காதல்புரிவது ஆற்றுப்பெருக்கில் விழுந்து மூச்சுத்திணறுவது போல என்றனர் அவரது காதலிகள். ஆகவே ஒருகட்டத்தில் அவருக்குப் பெண்ணே கிடைக்கவில்லை. சுசீந்திரத்தில் ஓர் அச்சியைத் தேடிச்சென்றார். அவள் அவரைப்போலவே அடிமுறை கற்றவள், பெரிய தோள்கொண்டவள் என்றார்கள். மடிநிறைய பொன்னுடன் சென்றார். |
55 |
நள்ளிரவு, குளிர்ச்சாரலாக ஆடிமாத மழை. நிலவு. அடிக்கடி வானம் உறுமி மின்னல்வெட்டியது. ஆலம்பாறை கடந்து கள்ளியங்காட்டு பாதையில் வந்தபோது மின்னல் வெளிச்சத்தில் ஒரு பெண் சாலையோரமாக நிற்பதைக் கண்டார். தன் சூரிக்கத்தியை கையில் எடுத்துக்கொண்டு அணுகிச்சென்றார். இன்னொரு மின்னலில் அவளை அருகே கண்டார். |
56 |
இங்கே என்ன வேலை? என்றார். நான் ஒரு யட்சி என்று அவள் சொன்னாள். இங்கே மேலகரம் நம்பூதிரி வீட்டின் தெற்குமாளிகையின் உள்ளறையில் என்னை ஓவியமாக வரைந்து பதிட்டை செய்திருந்தனர். வெள்ளிதோறும் பூசையும் வருடம் ஏழுமுறை கொடையும் அளித்தனர். அங்கே நாநூறாண்டுக்காலமாக நான் அரசி போல வாழ்ந்தேன். |
57 |
அதற்கு முன் ஆலம்பாறைக் காட்டில் ஒரு காஞ்சிர மரத்தின் மேல் இருந்தேன். பூமிதோன்றிய காலம் முதல் இங்கு நானும் வாழ்கிறேன். அவள் கண்ணீர் நிறைந்த கண்களுடன் மார்த்தாண்ட வர்மா மகாராஜா திருவிதாங்கூரின் அனைத்து நம்பூதிரிகளையும் ஊரைவிட்டுத் துரத்தியபோது அவர்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டுச் சென்றார்கள். |
58 |
எனக்கு போக ஓர் இடமில்லை என்றாள். அபலையாக இங்கே நிற்கிறேன். என்னை ஆதரியுங்கள். அவர் நீ யட்சி. உன்னை நான் எங்கே அழைத்துச்செல்வது? என்றார். அவளை விலக்கிவிட்டு அவர் செல்ல முயன்றார். உன்னை செல்லவிட மாட்டேன். கொன்று குருதி குடிப்பேன் என்று அவள் பதினாறு கைகளை விரித்து பேருருவம் கொண்டு எழுந்தாள். |
59 |
சுறாமீன் போல வாய். இரு முலைக்கண்களிலும் பார்வை. பன்றியின் நாற்றம் எழுந்தது. முரசுத்தோல் உறுமும் ஒலியில் என்னை நீ கடந்து போய்விடுவாயா? என்றாள் அவர் தன் கத்தியை நீட்டியபடி என்னை என் கத்தியுடன் கொல் பார்ப்போம் என்றார் அவள் கடும் சினம்கொண்டு கூச்சலிட்டாள். இரும்பு யட்சிகளுக்கு ஒவ்வாதது. |
60 |
அருகே இருந்த சாஸ்தா ஆலயத்தை அவர் அடைவது வரை அவள் அவரைச் சூழ்ந்து கூச்சலிட்டு கொண்டே வந்தாள். சுழல்காற்று போல அவள் மரங்களை உலைந்தாடச்செய்தாள். பாறைகளில் ஓங்கி அறைந்து ஓசை எழுப்பினாள். சாஸ்தாவின் எல்லைக்குள் அவளால் நுழைய முடியவில்லை. அவர் கடந்து சென்றதும் அவள் அலறி அழுதபடி மண்ணில் விழுந்து புரண்டாள். |
61 |
எல்லை கடந்துசென்றதும் அவர் திரும்பிப்பார்த்தார். அங்கே அவள் மீண்டும் அந்தப்பேரழகி வடிவில் கிடந்து அழுவதைக் கண்டார். மார்பகங்களின் மேல் கண்ணீர் கோடாக வழிந்தது. மழைக்கால நீலமலர்களைப்போல கண்கள் ததும்பின. அவர் மனம் உருகியது. திரும்பச்சென்று அவளிடம் கேட்டார். சரி என்னுடன் வா. |
62 |
அதைச்சொல் என்றார் வெள்ளிக்கிழமை தோறும் விளக்கும் பூசையும். ஆண்டில் ஏழு குருதிக்கொடை. இவற்றை அளித்தால் குலத்துக்குக் காவலாக நிற்பேன். பெற்ற அன்னை போல கனிந்து துணையாவேன் சரி வாடி என்று அவள் கையைப்பிடித்து கூட்டி வந்தார். காலையில் அவர்கள் வீட்டை நெருங்கும்போது ஊரே அவளைப்பார்த்து வியந்தது. |
63 |
மணமகள் மிக அடக்கமானவளாக இருந்தாள். மிக இனிய குரலில் குறைவாகப் பேசினாள். அதைவிட முக்கியமாக அதுவரை வீட்டில் எட்டு பெண்களும் நான்கு வேலைக்காரிகளும் செய்த அத்தனை வேலைகளையும் அவள் ஒருத்தியே செய்தாள். விடியற்காலையில் மாமியார் எழுந்து பார்க்கும்போது எல்லா அண்டாக்களிலும் நீர் நிறைந்திருக்கும். |
64 |
பசுக்கள் குளிப்பாட்டப்பட்டிருக்கும். கறந்த பால் அருகே கலம்நிறைய நுரைத்திருக்கும். சமையலறை மெழுகப்பட்டு வேலை அனைத்தும் முடிந்திருக்கும். காலைச்சாப்பாட்டின் மணம் நாசியை நிறைக்கும். இவள் எப்படி இத்தனை வேலைகளையும் செய்கிறாள் என்று ஆரம்பத்தில் ஒரு வியப்பு இருந்தாலும் அதெல்லாம் பழகிவிட்டன. |
65 |
எவரும் இல்லாதபோது பேசாமல் திரும்பி வந்தாள். ஏன் தீபம் தெரியவில்லை என்று கேட்டபோது காற்று வீசியிருக்கும் என்று பதில் சொன்னாள். அவள் கணவனுக்கும் அவளுக்கும் மிகச்சிறப்பான காதல் வாழ்க்கை இருந்தது. இரவில் அவள் அவருக்காக புத்தாடை அணிந்து ஏழு திரியிட்டு சுடர் ஏற்றப்பட்ட குத்துவிளக்கு போல காத்திருந்தாள். |
66 |
அவர் முகம் காதல்கொண்ட இளைஞனின் முகம் போல ஒளிகொண்டது. எப்போதும் கனவிலிருப்பவர் போலிருந்தார். முன்பெல்லாம் எங்கிருக்கிறார் என்றே தெரியாது. இப்போது எங்கும் செல்வதே இல்லை. அவள் வந்தபின்னர் வீட்டில் செல்வம் கொழித்தது. பசுக்கள் பால் மழைபோலக் கறந்தன. உள்ளறைகளில் பொன் சேர்ந்தது. |
67 |
சமையலறையில் சோறு குறையவே இல்லை. ஆனால் அவள் கருவுறவேயில்லை. அதைப்பற்றி மாமியார் கேட்டால் சிரித்து மழுப்பினாள். அவர்கள் செல்வந்தராவதை அறிந்து ஒருநாள் ஏழு திருடர்கள் அவர்கள் இல்லத்திற்குள் கூரையை பிரித்து இறங்கினர். அப்போது வீட்டில் ஆண்கள் யாருமில்லை. பெண்கள் மிரண்டு அலறி அழுதார்கள். |
68 |
திருடர்களின் காலில் விழுந்து மன்றாடினார்கள். அவள் தன் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. ஒருவன் கதவைத்திறந்து அவளை நோக்கினான். அவள் உடம்பெங்கும் அணிந்த நகைகளைக் கண்டு அவன் தன் தோழர்களை கூவி அழைத்தான். அவர்கள் அரிவாட்களுடன் அந்த அறைக்குள் சென்றனர். முதலில் சென்ற தலைவன் அலறியபடி திரும்பி ஓடினான். |
69 |
மறுநாள் ஊருக்கு வெளியே செல்லும் பாதையில் அவர்கள் ரத்தம் கக்கிச் செத்துக்கிடப்பதைக் கண்டார்கள். அதன்பின்னர்தான் மாமியாருக்குச் சந்தேகம் வந்தது. மருமகளைக் கண்காணிக்கத் தொடங்கினாள். மருமகள் தூங்குவதே இல்லை என்பது அவளுக்குத் தெரிந்தது. பூசையறைக்கோ கோயில்களுக்கோ அவள் செல்வதில்லை. |
70 |
சிவன்கோயில் திருவிழாவுக்குக் கூட்டிச்சென்றபோது வழியிலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். ஒருநாள் விடியற்காலையில் மாமியார் எழுந்து காலில் சாக்குப்பையைக் கட்டிக்கொண்டு ஓசையில்லாமல் நடந்து வந்து மருமகளைப் பார்த்தாள். அவள் அப்போது பற்றுப்பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். |
71 |
உடலில் பதினாறு கைகள் எழுந்திருந்தன. அத்தனைக் கைகளாலும் ஒரேசமயம் வேலைசெய்தாள். மாமியார் மயங்கி விழுந்துவிட்டாள். கடும் காய்ச்சல் வந்து உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவள் மகன் வந்து பார்த்ததுமே விஷயத்தைத் தெரிந்துகொண்டான். யட்சியை அழைத்துவந்து காட்டி நடந்தவற்றைச் சொன்னான். |
72 |
அதன்பின் அவளை தெற்குப்பக்கம் ஒரு சிறிய கோயில்கட்டி குடியேற்றினார்கள். வெள்ளிக்கிழமை பூசையும் கொடைகளும் ஏற்பாடாயின. அவள் குடித்தெய்வமாக அமர்ந்து அருள்புரிந்து காத்தாள். என் மூதன்னையருக்கு யட்சி ஒரு தெய்வம் அல்ல, ஒரு துணைவி. தெற்குபக்கம் செல்லும்போது சருகு மேல் காலடி ஓசை கேட்கும். |
73 |
போதும்டி தெரியும்... சும்மா அடங்கி இருடீ என்று ஓர் அதட்டல் போடுவார்கள். களியங்காட்டு யட்சீ, நீ தாண்டி துணை என்று வேண்டிக்கொள்வார்கள். இரவில் வாசலை மூடும்போது தெற்கு நோக்கி உரக்க சரிடீ, இனி உன் பொறுப்பு எல்லாம். பாத்துக்கோ என்பார்கள். யட்சி என்னும் தெய்வம் சமண மரபிலிருந்து வந்தது. |
74 |
பெரும்பாலான யட்சிகள் முச்சந்தியில் கண்டெடுக்கப்பட்டவர்கள், குடியேற்றி வழிபடப்படுபவர்கள். எந்த மதத்திலானாலும் தெய்வ உருவகங்கள் மூன்று வகைப்படும். உலகியல்தெய்வங்கள் அல்லது சிறுதெய்வங்கள் முதல்வகை. மூதாதையர், போரில் உயிர்நீத்தவர்கள், கருக்கொண்டு இறந்த அன்னையர், கன்னியாக மறைந்தவர்கள் தெய்வமாகிறார்கள். |
75 |
பாறைகள்,மரங்கள், புற்றுகள், பாம்புகள், பலவகை உயிர்கள் போன்ற குறியீடுகள் தெய்வமாகின்றன. சிறுதெய்வங்கள் வெறும் மூடநம்பிக்கைகள் அல்ல. அவை தெய்வத்தை அன்றாட வாழ்க்கைக்குள் மிக அருகே கொண்டு வரும் மனநிலையின் வெளிப்பாடுகள். சிறுதெய்வங்களை சொந்தக்காரர்களாகவே எண்ணினார்கள். சகஜமாக அவற்றுடன் உரையாடினர். |
76 |
இரண்டாம் வகைத் தெய்வங்களை பெருந்தெய்வங்கள் எனலாம். ஆங்கிலத்தில் எனச் சொல்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்யும் தெய்வமே பெருந்தெய்வம். யூதர்களின் யகோவா பெருந்தெய்வம். முஸ்லீம்களின் அல்லா பெருந்தெய்வம். கிறிஸ்தவ மதத்தில் உள்ள பரிசுத்த ஆவியும் பிதாவும் பெருந்தெய்வங்கள். |
77 |
பெருந்தெய்வச் சாயல் இருந்தாலும் ஏசுவும் அன்னைமரியும் சிறுதெய்வங்கள் போன்றவை. பிதாவிடமும் பரிசுத்த ஆவியுடனும் வேண்டிக்கொள்வதை விட ஏசுவிடமும் மரியிடமும் வேண்டிக்கொள்ளும்போதே நாம் அணுக்கமாக உணர்கிறோம். இந்துமரபில் ஆறுமதங்கள் உள்ளன. அவற்றின் முதன்மைத்தெய்வங்கள் பெருந்தெய்வங்களே. |
78 |
வைணவத்தின் தெய்வம் விஷ்ணு. சக்தி சாக்த மதத்தின் தெய்வம். சூரியன் சௌர மதத்தின் தெய்வம். பிள்ளையார் காணபத்தியத்திற்கும் முருகன் கௌமாரத்திற்கும் தெய்வங்கள். மூன்றாவதாக ஒரு தெய்வ உருவகம் உள்ளது. அதை தத்துவார்த்தமான தெய்வம் எனலாம். அது முழுக்க முழுக்க ஒரு தத்துவார்த்தமான அறிதல்தான். |
79 |
அதேபோன்றது இது. இந்து மதத்தின் சாராம்சமான தெய்வ உருவகம் என்பது பிரம்மம். அது எங்கோ இருப்பது இல்லை. அதற்கு ஆண்,பெண் பேதங்கள் இல்லை. அது இந்தப்பிரபஞ்சத்தை இயக்கும் ஒரு ஆற்றல், இங்குள்ள அனைத்துக்கும் சாராம்சமான ஒன்று, இங்குள்ள அனைத்துமாக தன்னை வெளிப்படுத்துவது, நாம் அதை உணரத்தான் முடியும். |
80 |
தாவோ மதத்தின் மகாசூனியம் ஒரு தத்துவார்த்த தெய்வம். கீழை மதங்களான இந்துமதம். பௌதம், சமணம், தாவொ, ஜென் போன்றவற்றிலேயே தத்துவார்த்தமான தெய்வம் உள்ளது. அந்த தத்துவார்த்த தெய்வத்தை பெருந்தெய்வத்துடன் இணைக்கிறது இந்துமதம். எல்லா பெருந்தெய்வங்களும் பிரம்மத்தின் வடிவங்கள்தான் என்று சொல்கிறது. |
81 |
ஆகவேதான் அவை கூடவே இருக்கின்றன. நான் யோகப்பயிற்சி ஒன்றை நெடுநாட்களாகச் செய்து வருபவன். யோகத்தின் ஆரம்பகட்ட நிலைகளில் மேல்மனம் அல்லது விழிப்புநிலை என்னும் ஜாக்ரத் ஒருங்கு குவிகிறது. சுடரென அசையாமலாகிறது. அது ஒரு ஆனந்தநிலை. பெரும்பாலான பிரபல யோக மரபுகள் இங்கே நின்றுவிடுகின்றன. |
82 |
அதற்கப்பாலுள்ள நிலை மிகமிகக் கொந்தளிப்பானது. நேரடியான ஒரு குருவும் ஆழ்ந்த தத்துவப்பயிற்சியும் இன்றி அவ்வாசல்களைத் திறக்கலாகாது. நெடுநாட்களுக்கு முன் நான் அவ்வாறு அந்த எல்லையை மீறிச்சென்ற நாட்களில் ஒன்றில் ஓர் அனுபவம் நிகழ்ந்தது. தியானத்தில் அமர்ந்திருந்த என்னருகே ஒருவர் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். |
83 |
அழுகிச்சொட்டும் உடல். ஆனால் உயிருள்ள உடல். அதன் வெம்மையை உணரமுடிந்தது. நாற்றம் மூக்கைத்துளைத்தது. அது ஒரு பெண் என உணர்ந்தேன். மெல்ல ஆடியபடி ஏதோ முனகிக்கொண்டிருந்தார். என்னால் விழிகளைத் திருப்பமுடியவில்லை. ஆனால் நன்கு பார்க்கமுடிந்தது. மட்கிய மாட்டுத்தலை. கந்தலாடை. புழுதியும் கரியும் படிந்த சடைகள். |
84 |
துல்லியமான உருவெளிக்காட்சி உடல்விதிர்த்து விழித்துக்கொண்டேன். எழமுயன்று மயங்கி விழுந்தேன். கடும் காய்ச்சல் தொடங்கியது. அப்போது தருமபுரியில் இருந்தேன். பஸ்பிடித்து காய்ச்சலில் நடுங்கியபடி ஊட்டிக்குச்சென்றேன். ஊட்டி ஃபெர்ன்ஹில்லில் அமைந்த நாராயண குருகுலத்தில் என் குரு நித்ய சைதன்ய யதி இருந்தார். |
85 |
அவர் அருகே சென்று வெளுத்து விரைக்கும் உடலுடன் நின்றேன். என்னைப்பார்த்ததுமே அவர் புரிந்துகொண்டார். கைவிரலை வைத்தால் துண்டாக்கி கொண்டுசெல்லும் நதி ஒன்று ஓடுகிறது. அதைக்கடந்தே மெய்மைக்கான பாதையை தொடரமுடியும் என பௌத்த நூல்கள் சொல்கின்றன என்றார். நான் தலைகுனிந்து கண்ணீர் மல்கினேன். |
86 |
குரு இருவகையில் எனக்குத் தெளிவளித்தார். மேலை உளவியலாளர் சி.ஜி.யுங்கின் ஆழ்படிமக் கோட்பாட்டின்படி நான் அடைந்த அவ்வனுபவத்தை எப்படிப்புரிந்துகொள்வது என்று விளக்கினார். வுல்ஃப் காங் பௌலியின் நூலை மேற்கோள்காட்டி உளவியல்நிகழ்வுகள் எப்படி புறவுலகை சமைக்கமுடியும் என காட்டினார். |
87 |
அது என் பண்பாட்டில் இருந்து எழுந்து என் மூதாதையரின் ஆழ்மனங்களில் ஊடுருவி நிறைந்திருப்பது. ஆழ்மனம் என்பது ஒரு கிணறுபோல. நம் தோட்டத்தில் நாமே தோண்டி இறைக்கும் நீர் உண்மையில் நிலத்தடியில் அத்தனைபேருக்கும் பொதுவாக நிறைந்திருக்கிறது அல்லவா? குரு இந்திய யோகமரபிலிருந்து மீண்டும் விளக்கத் தொடங்கினார். |
88 |
நான் கண்ட தெய்வத்தின் பெயர் ஜ்யேஷ்டாதேவி. அந்தத்தெய்வத்தை நான் சிலையாகவோ ஓவியமாகவோகூட அதற்குமுன் எங்கும் கண்டதில்லை. ஆனால் என்னுள் இருந்து அது எழுந்து வந்திருக்கிறது. அதை விஸ்லேஷணம் என்று யோகமரபு சொல்லும். அது என்னுள் உறையும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் உருவத்தோற்றம் மட்டுமே. |
89 |
அது இருளின்,அழுக்கின்,கீழ்மையின் தெய்வம். ஆனால் அதைப்பழிக்காதே. அதுவும் நீயே. அவளும் அன்னை வடிவம் தான். அவளை வணங்கு என்றார் நித்யா. ஜ்யேஷ்டை என்னும் அச்சொல்லைப் பின் தொடர்ந்து சென்றேன். வெட்டம் மாணி தொகுத்த புராணிக் என்ஸைக்ளோபீடியா மலையாளத்தில் உள்ள ஒரு மாபெரும் தகவல் களஞ்சியம். |
90 |
ஜேஷ்டை என்றால் ஒரு பெண் தெய்வம். அமங்கலங்களின் தெய்வம் இது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் திரண்டு வந்த முதல் தேவதை இவள்தான். மங்கலங்களின் தெய்வமாகிய லட்சுமிதேவி அல்லது ஸ்ரீதேவி அதன் பின்னர்தான் அமுதுடன் வந்தாள். ஆகவே இவளுக்கு மூத்தவள் என்ற பொருளில் ஜேஷ்டை என்றபெயர் வந்தது. |
91 |
ஜ்யேஷ்டாதேவியின் ஆலயத்தின் கருவறை இருட்டானதாக ஒட்டடையும் தூசியும் குப்பையும் நிறைந்ததாக இருக்கவேண்டும். அதன் கருவறை வாயிலுக்கு முன் ஒரு கண்ணாடி இருக்கவேண்டும். கருவறைவழியாகத்தெரியும் தேவி அக்கண்ணாடியில் பிரதிபலிப்பதை கருவறைக்குப்பின்னால் இருபக்கமும் நின்றபடி பக்தர்கள் வணங்கலாம். |
92 |
நீலமலர்களை சூட்டவேண்டும். தமிழில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் சேட்டை என்ற சொல்லின் வேர் எது என்று புரிந்தது. அபிதான சிந்தாமணியை பார்த்தேன். இவள் முதலில் ஆதிசக்தியில் அவளுடைய ஒரு தோற்றமாகப் பிறந்து பின்னர் திருப்பாற்கடலில் தோன்றியவள் என்கிறார் ஆ.சிங்காரவேலு முதலியார். |
93 |
இரவு அவளுக்கான நேரம். ஆசாரமில்லாத வேதியரின் நிழல், உண்ட எச்சில் இலை, ஆடை கழுவிய தண்ணீர், விளக்குமாற்றின் புழுதி, மயிர்க்குப்பை, கழுதை, நாயின் புழுதி, வெந்த சாம்பல், ஆட்டுப்புழுதி போன்றவை இவள் இருக்கும் இடங்கள் என்று சிங்காரவேலு முதலியார் அண்ணாமலையார் சதகத்தை ஆதாரமாகக் காட்டிச் சொல்கிறார். |
94 |
அக்கா என்றும் இவளை பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. இவளுக்கு காகம் கொடியாக இருக்கிறது. இவள் தூக்கத்தையும் சோம்பலையும் வரவழைக்கும் தேவி. பதினான்கு வருடம் கண்துயிலா விரதம் எடுத்து ராமனுடன் காட்டுக்குச் செல்லும் லட்சுமணன் கங்கை கரையில் இருக்கையில் மூதேவி வந்து அவனை தழுவப்பார்க்கிறாள். |
95 |
பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்த்துக்கொண்டு சென்றபோது ஜேஷ்டை என்று எழுதி வைக்கப்பட்ட சிற்பத்தைக் கண்டேன். சாமுத்ரிகா லட்சணம் என என்னென்ன சொல்லப்படுகின்றனவோ அவற்றுக்கு நேர் எதிரான சிலை. சப்பை மார்பு, பெருத்த இடுப்பு, சூம்பிய பிருஷ்டம், மழுங்கிய மூக்கு. அவலட்சணமே உருவான ஓர் உருவம். |
96 |
ஜேஷ்டா, பிராம்மணி, மகேஸ்வரி, வைஷ்ணவி,கௌமாரி, வராஹி, சாமுண்டி ஆகியோர் சப்தமாதாக்கள். இந்த பட்டியல் சில இடங்களில் மாறுபடுகிறது. இந்திராணியும் இப்பட்டியலில் யாராவது ஒருத்திக்குப் பதில் சேர்க்கபபடுகிறார். இவர்களில் வராஹி பன்றி முகம் உடைய தேவதை. சாமுண்டி பேய்வடிவம் கொண்டவள். |
97 |
ஏழு அசுரர்களை அழிப்பதற்காக அன்னை இந்த ஏழு வடிவையும் அளித்தார். ஏழன்னை வழிபாடு என்ற பேரில் சாக்த மதத்தில் இவ்வேழு சிலைகளையும் வரிசையாக அமைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. சாக்தத்தின் தாய்நிலங்களில் ஒன்றான கேரள மண்ணில் இன்றுள்ள பகவதி கோயில்கள் பலவற்றில் ஏழன்னை சிலைகள் உள்ளன. |
98 |
பத்மநாபபுரம் கோட்டையும் அரண்மனையும் எட்டாம் நூற்றாண்டு முதல் உள்ளன. ஆனால் அங்குள்ள பெரிய குளமும் அதற்குப் பின்னால் உள்ள பெரிய பாறையும் அந்த ஊர் உருவாவதற்கும் முந்தையவை. அந்த பாறை குளத்துக்குள் மூழ்காமலிருக்கும்போது பார்த்தால் அதில் சிறிதாக ஏழன்னையர் சிலை இருப்பதைக் காணலாம். |
99 |
ஏழன்னையர் வழிபாடு என்ற பேரில் தொல்பழங்காலம் முதல் இந்தியாவெங்கும் இருந்த வழிபாட்டுமுறை மெல்ல சமணத்துக்குள் நுழைந்து சமண தத்துவ மையத்தின் அங்கீகாரம் இல்லாத ஒரு சிறுவழிபாடாக நீடித்தது. சமணம் அழிந்தபின் சாக்த மதத்துக்குள் நுழைந்தது. பின்னர் சக்திவழிபாட்டில் கரைந்து தன் தனித்தன்மையை இழந்தது. |
100 |
மூதேவி எப்படி உருவானாள்? நன்மை, அழகு, மேன்மை ஆகியவற்றுக்கு இணையாகவே தீமை, கோரம், கீழ்மை ஆகியவற்றையும் வழிபடும் ஒரு வழக்கம் உலகமெங்கும் பழங்குடியினரிடம் உண்டு. பழங்குடி மனம் இயற்கையிலிருந்து நேரடியாகவே பெற்றுக்கொண்ட அடிப்படை மெய்ஞானம் அது. இயற்கை நன்மை தீமை இரண்டாலும் சமன்செய்யப்பட்டுள்ளது. |
101 |
கறுப்பு வெளுப்பு இரண்டையும் பிரிக்க முடியாது. இயற்கையின் உள்ளுறையாக உள்ள தெய்வீகம் என்பது இவ்விரண்டின் கலவையே. நமது பிரம்மாண்டமான பழங்குடிமரபில் இருளும் ஒளியுமாக உருவகிக்கப்பட்ட ஏராளமான அன்னைதெய்வங்களில் இருந்து மைய மதங்களால் எடுத்துச் சேர்க்கப்பட்டவர்கள்தான் ஏழு கன்னியர் அல்லது ஏழு அன்னையர். |
102 |
தாந்த்ரீகர்களுக்கு ஏழு என்ற எண்ணிக்கையும் அதற்குரிய குணங்களை கொண்ட தெய்வ வடிவங்களும் மட்டுமே முக்கியமாக இருந்துள்ளன. தாந்திரீக மதங்கள் முன்வைத்த சடங்கு-தியானம் இணைந்த வழிபாட்டுமுறையை முழுமையாக நிராகரித்து சமர்ப்பணம் ஆராதனை ஆகியவை கொண்ட பக்தியை முன்வைத்தது பக்தி இயக்கம். |
103 |
சக்தி வழிபாடு பக்திமரபுக்குள் நீடித்து நின்றது. சக்தியின் பலநூறு ரூபங்களாக மட்டும் பிற அன்னையர் எஞ்சினார்கள். கௌமாரி, மகேஸ்வரி போன்ற பெயர்களை நாம் சக்தி துதிகளில் மட்டுமே இன்று கேட்க முடியும். மூத்தாள் வழிபாடும் இவ்வாறாக மறைந்து மொழியில் மட்டும் வசைகளாக எஞ்சியது. பக்திமரபில் மூத்தாளுக்கு இடமில்லை. |
104 |
ஆனால் யோகமரபில் தவிர்க்க முடியாத தெய்வம் இது. பாலாழி கடைந்த கதைக்கு தியான மரபு சார்ந்து உபரி அர்த்தம் அமைந்தது அவ்வாறுதான். பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடல் மானுட அகமேதான். அசுர சக்திகளும் தேவ சக்திகளும் சேர்ந்து அதைக் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷம். வாசுகி கக்கிய விஷம். |
105 |
அதை பெருமானே உண்டு ஆலாலகண்டன் ஆனார். அடுத்துவந்தவள் மூதேவி. இருளின், துயிலின், சோம்பலின் தேவி. பின்னர்தான் அமுதத்துடன் ஸ்ரீதேவி வந்தாள். எல்லா தியான மரபுகளிலும் இக்கதை கற்பிக்கப்படுகிறது. தியானம் அதன் முதல் வாசலைத் திறக்கையில் எழுவது கடும் விஷமே. பின்னர் இருண்மை. அதன் பின்னர்தான் அமுதம். |
106 |
அழியாமையை அளிக்கும் உணவு. ஆகவே சேட்டைகளைப் பற்றி வருந்த வேண்டியதில்லை. தீதும் நன்மைக்கே. திருவனந்தபுரம் அருகே ஜ்யேஷ்டா தேவிக்கென்றே ஒரு கோயில் உள்ளது. எட்டாண்டுகளுக்கு பின்பு அங்கே சென்றேன். அப்போது நித்யா சமாதியாகிவிட்டிருந்தார். என் அக இருளை நேர்நின்று நோக்க நான் பழகியிருந்தேன். |
107 |
ஆகவே மூத்த அன்னையை அன்புடன் நோக்கி வணங்க என்னால் முடிந்தது. என் மரபின் எண்ண முடியாத ஆழத்திலிருந்து முளைத்து என்னை வந்தடைந்தவள் அல்லவா அவள்? இருளும் ஒளியும் நான் சிறுவனாக முழுக்கோடு என்ற ஊரில் வளர்ந்தேன். அன்றெல்லாம் அங்கே நிறையபேர் அம்பாடி ரப்பர் எஸ்டேட்டின் ஊழியர்கள். அது அன்று மதிப்புமிக்க வேலை. |
108 |
ஏனென்றால் நிரந்தரமான மாதஊதியம். அத்துடன் ரப்பர்பால் சீவி சேர்த்து ஒப்படைத்துவிட்டு திரும்பி வரும்போது சைக்கிள் நிறைய விறகோ பச்சைப்புல்லோ கொண்டுவரலாம். அது அன்றாடச்செலவுக்கு. ஆனால் ஒரே சிக்கல் அதிகாலை மூன்றுமணிக்கே கிளம்பிச் செல்லவேண்டும். ஐந்துமணிக்கெல்லாம் வேலையை தொடங்கி விடவேண்டும். |
109 |
ரப்பர் மரங்களை வெயில் எழுவதற்கு முன்னரே பட்டைசீவி பால்வடித்து விடுவார்கள். வெயில் வந்துவிட்டால் பால் உலர்ந்து மேற்கொண்டு ஊறாமலாகிவிடும். காலை பத்துமணிக்கெல்லாம் பாலைச்சேர்த்து கொண்டுசென்று மையத்திற்குக் கொடுத்துவிட்டு கிளம்பிவிடலாம். வழியிலேயே புல்லறுப்பதென்றால் மீண்டும் ஒருமணி நேரம். |
110 |
இரண்டுமணிக்கு மதியச்சாப்பாட்டுக்கு திரும்பிவிடலாம். மதியம் ஒரு நீண்ட தூக்கம் போட்டபின் சிவந்த கண்களுடன் சாயங்காலம் டீக்கடைகளில் காணப்படுவார்கள் அம்பாடி ஊழியர்கள். எங்களூரில் அவர்கள்தான் கருக்கிருட்டுக்கு முன்னரே விழிப்பவர்கள். அவர்கள் காணும் காட்சிகள் வழியாக தெரியவரும் ஊரே வேறு. |
111 |
ஆகவே அவர்களின் பேச்சுக்களில் ஒரு தனி ஆர்வம் டீக்கடைக்காரர்களுக்கு உண்டு. அப்பு அண்ணன் சொல்லும் பேய்க்கதைகளை டீக்கடையில் கூடியவர்கள் விழிபிதுங்கி கேட்டிருப்பார்கள். அப்போதெல்லாம் எந்த ஆர்வமும் இல்லாமல் ஓரமாக அமர்ந்து குழிந்த கன்னம் மேலும் குழிய டீ குடிப்பவர் கிருஷ்ணபிள்ளை மாமா. |
112 |
அந்த ஒலிக்கு பழகிப்போய்விட்ட பால்வெட்டுக்காரர்கள் பாயிலிருந்து முனகியபடி எழுந்து முகம் கழுவி முந்தையநாள் மிஞ்சிய மயக்கிய மரவள்ளிக்கிழங்கும் மீன்கறியும் போட்டு கலத்திலிட்டு கனல் அடுப்பில் வைத்திருக்கும் கஞ்சியை மனைவியை எழுப்பாமல் தாங்களே எடுத்துக்குடித்துவிட்டு சைக்கிளில் கிளம்பிவிடுவார்கள். |
113 |
அதன்பின் சைக்கிளில் ஏறி மிதிக்கத் தொடங்கினால் ஐந்துமணிக்கு ஆலஞ்சோலை கடந்து அம்பாடி எஸ்டேட்டுக்குள் நுழையமுடியும். சைக்கிளில் ஏறியபின்னர் அவர்கள் பேசிக்கொள்ளமுடியாது. எதிரில் ரப்பர்தடி ஏற்றிக்கொண்டு லாரிகள் வரும். வழியில் மாடுகள் நிற்கும். முழுக்கவனமும் சாலையில் இருக்கவேண்டும். |
114 |
கிருஷ்ணபிள்ளையின் வீடு கடைசியாக இருந்தது. அவரது வீட்டுக்கு முன்னால் நின்று மணியடித்து அழைத்தபோது அவரது மனைவி ஜானு எழுந்து வந்து அவ்வோ கெடப்பாக்கும். நல்ல காய்ச்சலு உண்டு பாத்துக்கிடுங்க. இண்ணைக்கு வரேல்லன்னு சொல்லிப்போடுங்க என்றிருக்கிறாள். சரி என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். |
115 |
அவர்கள் செல்லும் சைக்கிள் ஓசையைக்கேட்டு அரைக்காய்ச்சலில் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை பாய்ந்து எழுந்தார். வழக்கமாகச் செய்வதுபோல பாய்ந்தோடி உமிக்கரி எடுத்து பல்தேய்த்து முகம் கழுவி அடுப்பில் கிடந்த மீன்கஞ்சியைக் குடித்துவிட்டு சைக்கிளில் ஏறி சாலைக்கு வந்தார். சாலையில் எவருமில்லை. |
116 |
அப்போதுதான் அவர் தூக்கத்திலிருந்தே முழுமையாக விழித்தெழுந்தார். முந்தையநாள் நல்ல காய்ச்சல் இருந்தமையால் கொஞ்சம் சாராயம் வாங்கி அதில் எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டு விட்டுப் படுத்தவர்தான். தலை சுழன்றாலும் எப்படியாவது மிதித்து நண்பர்களைச் சந்தித்து சேர்ந்துவிடலாம் என்று நினைத்து ஏறிக்கொண்டார். |
117 |
சைக்கிளை மிதிக்க மிதிக்க குளிர்காற்று கொஞ்சம் ஊக்கத்தைத் தந்தது. அன்றெல்லாம் களியல் என்னும் ஊரைத் தாண்டினால் காடும் ரப்பர்த்தோட்டங்களும் தான். இருபக்கமும் இருட்டு ஊறிக்குவிந்து கிடப்பதுபோல மரக்கூட்டம். வானத்தில் மேகங்கள் நிறைந்து மெல்லிய மின்னல்கள் வெட்டிக்கொண்டிருந்தன. |
118 |
கண்பழகிய வெளிச்சத்தில் சாலை மட்டும் தெரிந்தது. அச்சாலைக்கு அவரது சைக்கிளே நன்றாகப் பழகியிருந்தது. அவர்சென்று கொண்டிருக்கையில் தொலைவில் நாய்கள் பெருங்குரலெடுத்துக் குரைப்பதைக் கேட்டார். அப்பகுதியில் நாய்கள் இல்லையே என எண்ணிக்கொண்டார். காட்டுநாய்கள் அப்படிக் குரைப்பதில்லை. |
119 |
நெருங்கும்தோறும் சாலையில் நிறைய நாய்கள் வால்களை விடைத்து காதுகளை முன்குவித்து கால்களை மாற்றி மாற்றி வைத்து பதறிக்கொண்டும் குரைத்துக்கொண்டும் நிற்பதைக் கண்டார். அவையெல்லாம் களியலுக்கு இப்பால் திற்பரப்பு சாலைசந்திப்பைச் சேர்ந்த தெருநாய்கள் என்று தெரிந்தது. பலநாய்களை அவரால் அடையாளம் காணவும் முடிந்தது. |
120 |
அவை உச்சகட்ட அச்சத்தில் கழுத்துமயிர் சிலிர்த்திருக்க நின்றுகொண்டிருந்தன. இன்னும் கொஞ்சம் துணிந்த நாய்கள் முன்னால் சென்று நின்றிருந்தன. திடீரென்று ஒரு நாய் கடுமையாகக்குரைக்க மற்றநாய்களும் பெருங்குரலில் சேர்ந்துகொண்டன. நாய்கள் மேல் மோதாமலிருக்க சைக்கிளை திருப்பித்திருப்பிச் சென்றார். |
121 |
அது சினத்துடன் தலையை நன்றாகத் தாழ்த்தி வாலை நீட்டி மெல்ல உறுமியபடி நின்றது. அதைச்சூழ்ந்து நின்றிருந்த தெருநாய்கள் அதை தப்பவிடாமல் குரைத்துக்கொண்டிருந்தன. ஊருக்குள் நுழைந்த அந்த நாயை அவை குரைத்து துரத்தி காட்டின் எல்லை வரைக் கொண்டுவந்து விட்டிருக்கின்றன என்று அவர் ஊகித்தார். |
122 |
உள்ளூர் நாய் இல்லை. எஸ்டேட்டில் யாராவது வளர்க்கும் வெளிநாட்டு நாயாக இருக்குமா என்று தோன்றியது. தெருநாய்கள் அதைக் கடித்துக் கொன்றுவிடும் என்று நினைத்து சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு கல்லை எடுத்தார். அதற்குள் அந்த கரிய நாய் மெல்ல மெல்ல உறுமியபடி நகர்ந்து காட்டுக்குள் சென்றது. |
123 |
ஏதோ ஓர் எல்லையை கடந்தது போல திடீரென்று அதன் தோரணை மாறியது. பெருங்குரலில் கர்ஜித்தபடி ஒரு தெருநாயின் மேல் பாய்ந்து கழுத்தைக் கடித்து தூக்கி உதறி வீசியது. மற்றநாய்கள் ஊளையிட்டபடி சிதறி ஓடின. கடிபட்ட நாய் எழ முயன்று கீழே விழுந்து துடித்தது. அதன் கால்கள் மண்ணைப்பிராண்ட வால் புழுதியில் அளைந்தது. |
124 |
மற்றநாய்கள் ஊளையிட்டபடி விலகி தொலைவுக்குச் சென்றன. அங்கே நின்றபடி ஓலமிட்டு கதறியழுதன. கரியநாய் சாலைக்கு வந்து நின்று தலையை தூக்கி அவற்றை நோக்கி மீண்டும் உறும அவை அஞ்சி அழுதபடி ஓடி இருளுக்குள் மறைந்தன. கிருஷ்ணபிள்ளை தன் உடல் அச்சத்தில் விதிர்த்து செயலற்று நிற்பதை உணர்ந்தார். |
125 |
ஏனென்றால் அந்தக் கரிய நாய் கடைசியாக உறுமியபோது மனிதக்குரலில் வசைச்சொல் ஒன்றைச் சொல்வதாக அவர் கேட்டார். அந்த நாய் அவரை நோக்கித் திரும்பியது. அதன் கண்கள் இரு செங்கனல் துண்டுகள் போலிருந்தன. அது வாயைத்திறந்து நாவால் மோவாயை நக்கியபடி அருகே வந்தபோது யார்நீ? என்று அடிக்குரலில் உறுமியது. |
126 |
எனக்க தெய்வங்களே! எனக்கம்மே என்று அலறியபடி கிருஷ்ணபிள்ளை திரும்பி சைக்கிளில் ஏறிக்கொண்டு வெறியுடன் மிதித்தார். அவருடைய பழகிப்போன கைகால்கள் அதைச் செய்தமையால் அவர் தப்பினார். அவரைத்தொடர்ந்து கால்நகங்கள் தரையில் பிராண்டும் ஒலியுடன் அந்த நாய் துரத்திவந்தது. ஆனால் குரைக்கவில்லை. |
127 |
சைக்கிள் பெடலை அவரது கால்கள் இயந்திரம் போல மிதித்தன. உடலில் இருந்து வியர்வை வழிந்து உடைகள் நனைந்து காற்றில் படபடத்து துளிகள் தெறித்தன. எத்தனை தூரம் அப்படிச்செல்ல முடியும் எனத் தெரியவில்லை. சாலையில் வெண்ணிறமாக ஏதோ ஒன்று தெரிந்தது. காட்டுமாடு. அதை கடந்துசெல்லமுடியுமென்று தோன்றவில்லை. |
128 |
தெய்வங்களே என்று கூவியபடி அவர் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தார். முற்றிலும் மூளை செயலற்றிருந்தமையால் சைக்கிளை நிறுத்தக்கூட தோன்றவில்லை அது ஒரு வெண்ணிறமான மாடு. அதன் மேல் முட்டி அவர் அதன் முதுகின் மேல் உருண்டு மறுபக்கம் போய் விழுந்தார். சைக்கிள் காளைக்கு அப்பால் தரையில் கிடந்து சக்கரம் சுழன்றது. |
129 |
அதன் கண்களைத்தான் அவர் கடைசியாகப் பார்த்தார். காலையில் அவ்வழிச்சென்ற ஒரு லாரிக்காரன் அவரைக் கண்டடைந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றான். அங்கே அவர் கண் விழித்ததும் அஞ்சி நடுங்கி எழுந்து அமர்ந்து அலறினார். நர்ஸைக் கண்டதும் படுக்கையிலிருந்து எழுந்து ஓடி சன்னல்வழியாக வெளியே குதிக்கப்பார்த்தார். |
130 |
அவரை மயக்க ஊசிபோட்டு தூங்க வைத்தனர். உடல் மின்சாரம் பாய்ந்ததுபோல துடித்துக்கொண்டே இருந்தது. சாயங்காலம் கொஞ்சம் நினைவு வந்தபோது தான் நடந்தவற்றைச் சொன்னார் அது ஒடியாக்கும் மாப்பிள என்றார் அப்பு அண்ணா. ஒடி என்றால் என்ன என்று அவர் விளக்கினார். மலையாளக் குறவர்களின் மாந்திரீக முறைகளில் முக்கியமானது அது. |
131 |
பிறரும் அவர்களிடமிருந்து அதைக் கற்றுக்கொள்வதுண்டு. மலைக்குறவர்களுக்கு பலவகையான காட்டுத்தெய்வங்கள் உண்டு. அவை காட்டில் கண்ணுக்குத் தெரியாத வடிவில் வாழ்கின்றன. அவர்கள் அவற்றை பூசை செய்து வசப்படுத்தி மாந்திரீகத்திற்கு கையாள்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு வடிவம் உண்டு. சிலதெய்வங்கள் கழுகுகளைப்போன்றவை. |
132 |
அவை காற்றுடன் கலந்திருப்பவை. காற்றில் அவற்றின் சிறகோசையைக் கேட்கமுடியும். அவற்றின் சிறகுகளின் காற்று வந்து நம் உடலைத் தொட்டுச்செல்வதை உணரமுடியும். சில தெய்வங்கள் யானைகளைப்போல. அவற்றை முகில்களில் காணமுடியும். சில தெய்வங்கள் பன்றிகள். அவற்றை நாற்றமாக மட்டுமே உணரமுடியும். சிலதெய்வங்கள் மான்கள். |
133 |
சிலதெய்வங்கள் கிளிகள். அவை காட்டின் இருளுக்குள் மனிதர்களைப்போல சிரிக்கும், அல்லது அழும் அல்லது பேசும். அந்தத்தெய்வங்களை பூசைசெய்து மகிழ்ச்சிப்படுத்தி அருளைப்பெறும் மலைக்குறவன் அவற்றின் வடிவை தான் எடுக்கமுடியும். அப்படி கழுகாக, பன்றியாக, மானாக, கிளியாக உருமாறும் கலையைத்தான் ஒடிவித்தன் என்கிறார்கள். |
134 |
ஒடியாக மாறி வரும் மிருகத்தை மனிதர்கள் அடையாளம் காணமுடியாது. பிற மிருகங்கள் கண்டுகொள்ளும். மாடுகள் மிரண்டு விலகி ஓடும். மான்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளாது. பன்றிகள் சூழ்ந்து தாக்க முயலும். ஒடியாக வந்து எதிரியை கொன்றுவிட்டு திரும்பிச்செல்வார்கள் தீயமந்திரங்களைச் செய்யும் மந்திரவாதிகள். |
135 |
சொல்லும் இல்லை என்றேன். வெள்ளைக்காளையாக்கும். காட்டிலே ஏது வெள்ளைக்காளை? நான் பதில் சொல்லவில்லை அதும் ஒடியாக்கும். இது நாயி. அது வெள்ளைக்காளை. இருட்டிலே இருந்து தப்பி வெளிச்சத்துக்கு மேலே போய் முட்டியிருக்காரு யாரோ நல்ல மந்திரவாதி வெள்ளைக்காளையாக எங்கோ செல்லும்போது சென்று முட்டியிருக்கிறார். |
136 |
அங்குள்ள பழங்குடிகள் தங்களை சில விலங்குகளின் வழித்தோன்றல்கள் என எண்ணிக்கொள்ளும் வழக்கம் இருந்தது. முதலை, ஆமை, எருது, கரடி போன்ற பலவிலங்குகள் அவ்வாறு மூதாதையாக எண்ணிக்கொள்ளப்பட்டன. அவ்வாறு தங்களை ஒரு விலங்கின் மக்கள் என எண்ணும் பழங்குடியினர் அதை தங்கள் குலஅடையாளமாகக் கொண்டனர். |
137 |
பலியும் படையலுமிட்டு வணங்கினர். அம்மிருகங்களின் வேடம்புனைந்தவரை தெய்வமாக எண்ணி வழிபட்டனர். பின்னர் அத்தோற்றத்தை மரத்திலும் கல்லிலும் செதுக்கி தெய்வமாக வழிபட்டனர். இதை வெள்ளையர் என்றனர் இந்துமதத்தின் விலங்குத்தெய்வங்களை இதேபோல குலக்குறித்தெய்வங்கள் என்று அவர்கள் அடையாளப்படுத்தினர். |
138 |
மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பழங்குடிமக்களின் வழிபாடுகளையும் சரி தொன்மையான நம்பிக்கைகளையும் சரி ஒருவகையான இளக்காரத்துடன் குனிந்து கீழே பார்க்கிறார்கள். அவை அம்மக்களின் அறியாமையால் உருவானவை என்றுதான் விளக்குகிறார்கள். மாறாக அவை அம்மக்களின் நுண்ணுணர்வால் உருவானவையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். |
139 |
இப்பிரபஞ்சத்தை விளக்க தொன்மையான மக்கள் அறிவியலை பயன்படுத்தவில்லை. கவித்துவத்தையே பயன்படுத்தினர். அந்தக் கவித்துவப் புரிதல்களில் இருந்து உருவானவையே இயற்கைவழிபாடும் விலங்குத்தெய்வங்களும் எல்லாம். தொன்மையான மனிதர்கள் புயலையோ சூரியனையோ அஞ்சியோ புரிந்துகொள்ளாமலோ வழிபடவில்லை. |
140 |
சூரியனையும் வாயுவையும் பற்றிய நம் பக்திப்பாடல்களில் உள்ள வர்ணனைகளை பார்த்தாலே அதைக் காணலாம். அவர்கள் தெய்வத்தை கோடிச்சூரியன் என்று வாழ்த்துவதை நாம் அறிவோம். அதை உணராமல் பண்டைய மனிதர் சூரியனைக் கண்டு அஞ்சினார்கள். ஆகவே சூரியனை தெய்வமாகக் கும்பிட்டார்கள் என்று சொல்வது மடைமை. |
141 |
அதே போன்றுதான் விலங்குகளை வழிபடுவதை குலக்குறி வழிபாடு என்று சொல்வதும். இன்றைக்கும் நம் கல்லூரிகளில் நாட்டாரியல் என்றபேரில் வெள்ளையர்கள் அரை வேக்காட்டுத்தனமாக எழுதி வைத்தவற்றையே பேராசிரியர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். விலங்குகள் அனைத்தும் பல்வேறு விஷயங்களின் குறியீடுகள்தான். |
142 |
மிகப்பெரிய ஆற்றல் மிக மெல்ல வெளிப்படுவதே காளை என்பது. மிகவிரைவாக அணுகும் இருட்டே நாய். இப்படித்தான் நம்முடைய அத்தனை விலங்குத்தெய்வங்களும் பொருள்படுகின்றன. ஆரம்பித்தால் உங்களுக்கே தெரியும். முருகனின் கையில் உள்ள செந்நிறமான சேவல் தீயின் அடையாளம். நீலமயில் நீரின் அடையாளம். |
143 |
பயந்து ஓடிப்போய் காளையில் முட்டி விழுந்தார். ஒரு குறியீடு பயமுறுத்தியது. இன்னொன்று காப்பாற்றியது. தெய்வங்கள் அக்குறியீடுகள்தான். வேர்களும் விருட்சங்களும் திருவட்டாறு ஆதிகேசவ பேராலயத்திற்கு முன்பக்கம் நாகங்கள் பதிட்டை செய்யப்பட்ட அரச மரத்திற்கு அருகே என் தந்தைவழிப் பாட்டியின் வீடு இருக்கிறது. |
144 |
பாட்டி என்னைக் கொண்டு சென்று முகப்பு மண்டபத்தின் மேலேற்றி சிறு சாளரம் வழியாக உள்ளே மூன்று கருவறைகளை நிறைத்துப் படுத்திருக்கும் பெருமாளின் பேருருவத்தைக் காட்டுவாள். முன்பெல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு மட்டும் தான் மூன்று கருவறைகளையும் திறப்பார்கள். முதல் கருவறையில் பெருமானின் உலகளந்த திருப்பாதம். |
145 |
நடுக் கருவறையில் புடவி அமைத்த உந்தி. மூன்றாவது கருவறையில் மணிமுடி சூடி அறிதுயிலில் புன்னகைத்து அமைந்திருக்கும் பெருமுகம். என்னுடைய விஷ்ணுபுரம் நாவலுக்கான கருவை மிக இளம் வயதிலேயே இந்தக் கருவறையிலிருந்து தான் நான் பெற்றுக் கொண்டேன். இந்த விஷ்ணு படுத்திருக்கும் அந்த நிலைக்கு மகா யோக நிலை என்று பெயர். |
146 |
அந்த கரு வடிவ பெருமாளின் அகம் எங்கோ தன்னை தானென உணர்ந்த கணத்தில் பிறிதென எதையோ அறிந்தது. அங்கிருந்து பிரபஞ்ச சிருஷ்டி தொடங்கியது என்பது புராணம். நான் சிறுவனாக இருந்த போது ஒரு முறை அந்த ஆலமரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தேன், அப்போது ஒரு அம்பாசிடர் கார் அங்கே வந்து நின்றது. |
147 |
என்று கேட்டார். ஓரளவு பேசுவேன் என்று நான் சொன்னேன். எனக்குப் புரியும்படி நிறுத்தி நிதானமாக இந்த ஆலயம் இந்துக்கள் அல்லாதவரை உள்ளே அனுமதிக்குமா? என்று கேட்டார். நான் ஆம் என்று சொன்னபிறகு கோயிலுக்கு வெளியே இந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதியில்லை என்ற பலகை இருப்பதை நினைவு கூர்ந்தேன். |
148 |
ஆனால் அன்று ஆதிகேசவ பெருமாள் வளாகத்திலேயே மனித நடமாட்டம் மிகக் குறைவு. சொந்தத்தில் எனக்கு மாமா முறைகொண்ட ஒருவர்தான் அங்கே காவலராக இருந்தார். அவர் கோயிலுக்குள் ஒரு ராணுவமே வந்து சென்றாலும் அறியாத நிலையில் தான் பெரும்பாலும் இருப்பார். ஆகவே அவரை உள்ளே கொண்டு செல்லலாம் என்று நினைத்தேன். |
149 |
என்று கேட்டார். எனக்கு கிரிகெட் பழக்கமே அன்று கிடையாது. நாளிதழ்கள் கூடவா பார்ப்பதில்லை? என்றார். நாளிதழ்களை அடிக்கடிப் பார்ப்பதில்லை என்றேன். அவர் சற்று நம்பமுடியாமல் தான் என்னைப் பார்த்தார். ஏனென்றால் காளிச்சரண் அன்றைக்கு மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணியில் உச்ச நட்சத்திரமாக இருந்தார். |
150 |
நான் அவரை அழைத்துக் கொண்டு ஆலயத்துப் படிகளில் ஏறினேன். என் மாமாவிடம் அவரை உள்ளே அனுப்ப முடியுமா என்று கேட்டேன். ஆளைப் பார்த்தால் நம்மூர் இல்லையென்று தோன்றுகிறது. எதாவது பிரச்னையாகிவிடப் போகிறது என்றார். மாமா, அவர் பெயர் காளிச்சரண் என்று சொன்னேன். காளிச்சரண் என்றால் இந்து தானே. |
151 |
உள்ளே செல்லலாம் என்று மாமா சொன்னார்.நான் அவரை உள்ளே அழைத்துச் சென்றேன். பிரமை பிடித்தவர் போல அவர் என்னுடன் நடந்து வந்தார். திருவனந்தபுரம் ஆலயத்திற்குச் சென்றேன். அவர்கள் என்னை உள்ளே விடவில்லை. அங்குள்ள இறைவன் கன்னங்கரிய பேருருக் கொண்டவன் என்றார்கள். அதைப் பார்க்கலாம் என்று விரும்பினேன். |
152 |
நான் அவரை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றேன். கருவறைகள் திறந்து கரிய திருமேனி வெளிப்பட்டது. இருட்டுக்குள் இருட்டாலேயே செய்யப்பட்டது போல மெல்லிய ஒளியுடன் விரிந்து மல்லாந்திருந்தது பெருமாளின் பேருருவம். இரவில் நீர் நிலையைப் பார்ப்பது போன்ற பளபளப்பு அவரது கன்னங்களில் உந்திச் சுழிப்பில் தெரிந்தது. |
153 |
வாயடைந்துபோய் போல காளிச்சரண் நோக்கி நின்றார். நான் கை கூப்புங்கள் என்றேன். அறியாது கை கூப்பினார்.எதுவும் வேண்டிக் கொள்ளவில்லை. கண்கள் அந்தக் கால்களிலிருந்து தலை வரைக்கும் திரும்ப திரும்ப சுழன்று கொண்டிருந்தன. திரும்பும்போது இது தான் கடவுள். உண்மையான கடவுள். உண்மையான கடவுள். |
154 |
என் தலையை லேசாகத் தொட்டுவிட்டு காரிலேறிக் கிளம்பிச் சென்றார். உண்மையில் அதன் பிறகுதான் அந்தக் கருமை என்னை ஆட்கொண்டது. உலகம் எங்கும் பொன்னிறம்,வெண்மை நிறம் அழகென்று கொண்டாடப்படும்போது அழகுக்கு உச்சமென்று நம்முன்னோர் வடித்து வைத்த திருமேனி நிகரற்ற கருப்பு நிறத்துடன் இருக்கிறது. |
155 |
கடலின் கருமை, கார்முகிலின் கருமை, கருமணியின் கருமை, நீல மலரின் கருமை, இருளின் கருமை, பிரபஞ்ச பெருவெளியின் கருமை ! திருவட்டாறு கோயிலுக்கென்று ஒரு தொன்மம் உள்ளது. அனேகமாக பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவானதாக இருக்கலாம். வாய்மொழி மரபாகவே பெரிதும் இந்தத் தொன்மம் இருந்து வந்திருக்கிறது. |
156 |
ஒன்றிலிருந்து ஒன்றென பிறந்து பிறந்து பெருகி பிரபஞ்ச வெளியாக எங்கும் நிறைந்தன. பிரம்மனை படைப்பித்தது விஷ்ணுவின் இனிய கனவு. அவரது கரிய கனவிலிருந்து இருவர் தோன்றினார்கள். கேசி, கேசன் என்று இரு அரக்கர். புராணப்படி அவரது காதின் குறும்பியிலிருந்தும், மூக்கின் சளியிலிருந்தும் அவர்கள் பிறந்தனர். |
157 |
அவர்கள் விஷ்ணுவின் உடலிலிருந்து பிறந்தவர்கள் என்பதால் விஷ்ணு அளவுக்கே ஆற்றல் கொண்டவர்கள். விஷ்ணுவைப் போலவே அழிவற்றவர்கள். தல புராணத்தின் படி கரிய பேருருக் கொண்ட கேசியும் அவள் தமையன் கேசனும் தங்களுக்குரிய இடமாக கண்டடைந்தது திருவட்டாறு. அன்று இது பெரும் பாலைவனம் சூழும் ஒரு குன்றாக இருந்தது. |
158 |
இந்திரனை சிறைப் பிடித்துக் கொண்டு வந்து தங்கள் வாசல் நிலையில் கட்டி வைத்தனர். ஐராவதத்தையும், வ்யோமயானத்தையும் தனக்கென வாகனங்களாக எடுத்துக் கொண்டனர். தேவர்களைக் கொண்டு வந்து தங்களுக்கு குற்றேவலர்களாக அமர்த்தினர். ஏழு வானுலகங்களையும் ஏழு கீழுலகங்களையும் தங்கள் ஆட்சியில் வைத்திருந்தனர். |
159 |
தங்களுக்குக் காவலாக பாதாள நாகங்களை எட்டுத் திசைகளிலும் நிறுத்தியிருந்தனர். வெல்ல முடியாத கேசனையும் கேசியையும் கண்டு நடுங்கிய தேவர்கள் உங்களில் இருந்து தோன்றியதை நீங்களே வெல்ல முடியும் பெருமானே என்று விஷ்ணுவின் காலடிகளில் பணிந்தார்கள். புன்னகைத்து அவர்களை அழிக்க என்னால் முடியாது. |
160 |
விஷ்ணுவின் ஆணைப்படி ஆதிசேஷன் மலை உச்சியில் பெரு வெள்ளம் பெருக்கும் ஒரு காட்டாறாக பிறந்தார். செந்நிறத்தில் அலைபுரண்டு வந்த அந்தக் காட்டாறு கேசனின் நகரத்தைச் சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டது. அசைவற்று திகைத்த கேசனின் நகரம் மீது பெருமாள் தன் காலை வைத்து அமர்ந்து பின் பள்ளி கொண்டார். |
161 |
இந்திய பெருநிலத்தின் புராணங்களின் அமைப்பை விளக்கும் இதற்கு நிகரான ஒரு கதை கிடையாது. பேரருள் கொண்ட தெய்வமொன்றுக்கு அடியில் வெல்ல முடியாத கரிய பெரும் சக்தியொன்று குடி கொள்கிறது. அதுவும் பெருமாளே. பெருமாளிலிருந்து பிறந்து, பெருமாளால் வெல்லப்பட்டு, அழிக்கப்பட முடியாத பெருமாளின் இருள் அது. |
162 |
மூன்று கருவறை முன் நின்று வணங்கும்போது நாம் அதையும்தான் வழிபடுகிறோம். நன்மையும், தீமையும் ஒளியும், இருளும் சமன் செய்யப்பட்ட ஒரு தருணமே அங்கு பள்ளி கொண்டிருக்கும் பெருமாள். ஒரு தருணத்திலும் இப்பிரபஞ்ச கட்டமைப்பில் ஒன்றை இன்னொன்று முற்றாக அழிப்பதில்லை. முழுமையாக வென்று செல்வதும் இல்லை. |
163 |
சமூகவியல் கோணத்தில் நோக்கினால் இன்னொரு பொருளைச் சென்றடையலாம். கேசனும் கேசியும் இக்காடுகள் அனைத்தையுமே ஆட்கொண்டிருந்த தொல் தெய்வங்களாக இருக்கலாம். காட்டை முடி என்று சொல்வது தொல்குடிகளின் வழக்கம். காடுதான் நீலகேசி. கேசி என்னும் தெய்வ உருவகம் பின்னர் பௌத்த, சமண மதத்திற்குள் புகுந்தது. |
164 |
கேசனும் கேசியும் அங்கே கோயில்கொண்டவர்களாக இருக்கலாம். பின்னர் எப்போதோ ஆதி கேசவனின் வெற்றி அவர்கள் மேல் நிகழ்ந்தது. அவர்கள் பள்ளி கொண்ட பெருமாளின் அடியில் வேர் வடிவமாக மாறினர். உடனே நம்மூர் ஒன்றரையணா அரசியலை இதனுள் புகுத்தாமலிருந்தால் நாம் தப்பித்தோம். கேசனையும் கேசியையும் விடவும் கரியவர் பெருமாள். |
165 |
இன்று நான் சென்று நிற்கும் போது கிளை விரித்து, விழுதுகள் பரப்பி இலைகள் மந்திரங்களால் சொல்லும் நாவு போல் துடித்து நின்றிருக்கும் பேரால மரத்தைக் காண்கிறேன்.ஆனால் மண்ணுக்கு அடியில் நிற்கும் வேர்களையும் சேர்த்துதான் மரம் என்று சொல்ல வேண்டும். ஒரு தருணத்திலும் மரமும் வேரும் இரண்டாவதில்லை. |
166 |
விடாதவை என் அப்பா அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலைபார்த்தபோது நாங்கள் முழுக்கோடு என்ற சிற்றூரில் தங்கியிருந்தோம். நான் ஐந்தாம் வகுப்புவரை படித்தது அங்கேதான். அப்போதெல்லாம் ரேஷனில் பொருட்களை வாங்குவது வாழ்க்கைக்கு இன்றியமையாதது. வெளியே சீனியை வாங்கினால் அப்பாவின் சம்பளம் பாதி அதற்கே போய்விடும். |
167 |
அதில் ஒரு ரேஷன் கார்டு நாலைந்து மைல் தொலைவில் மஞ்சாலுமூடு என்னும் ஊரில் இருந்தது. அங்கே சீனிபோடும் தகவலை விசாரித்துக்கொண்டே இருப்பாள். கிடைத்ததும் என்னிடம் கார்டைக் கொடுத்து வாங்கிவரச் சொல்வாள். நான் பக்கத்துவீட்டு அண்ணன், அக்கா எவரையாவது கூப்பிட்டுக்கொண்டு சென்று வாங்கிவருவேன். |
168 |
அன்றைக்கு பள்ளிக்கூடம் போக வேண்டியதில்லை என்பது உற்சாகம் அளிப்பது. அத்துடன் அந்தச்சாலை எனக்கு அற்புதமான ஓர் கனவு அனுபவம். அன்றெல்லாம் அப்பகுதியில் மனித நடமாட்டம் அனேகமாக கிடையாது. பாறைக்கூட்டங்கள் செறிந்த செம்மண் கரடு. அதில் சரளைக்கற்கள் உருண்டுகிடக்கும் ஒரு வண்டிப்பாதை. |
169 |
ஆங்காங்கே கொம்புகள் கீழ்நோக்கி வளைந்த எருமைகள் போல கிளைதாழ்த்தி நிற்கும் முந்திரிமரங்கள். முந்திரி பழுத்த காலம் என்றால் பிற எங்கும் இல்லாத அளவுக்கு அளவும் சுவையும் கொண்ட முந்திரிப்பழங்களை பறித்துச்சாப்பிட முடியும். ஒருமுறை எனக்கு துணையென எவரும் அமையவில்லை. பலமுறை சென்ற அனுபவத்தில் நானே சென்றேன். |
170 |
முந்திரி பழுத்த மணம் நிறைந்த காற்று என்னைச் சூழ்ந்தது. பையை இடுப்பில் செருகிவிட்டு பக்கவாட்டில் பொட்டலுக்குள் நுழைந்து ஒரு மரத்தின் மேல் ஏறி உலுக்கினேன். அப்போது அப்பால் ஒரு முகத்தைப்பார்த்தேன். அச்சத்தில் கீழே விழப்பார்த்தேன். அதை முதலில் ஏதோ பேய்பூதம் என்றுதான் நினைத்தேன். |
171 |
சற்று தொலைவில் ஒருவர் பாறைமேல் இளவெயிலில் கண்மூடி அமர்ந்திருந்தார். மிகமிக வயதானவர். அதை ஒரு மனிதமுகம் என்று சொல்ல நிறைய கற்பனை தேவை. உருளை உருளையாக தசைகள் எழுந்து முகம் அனைத்து வடிவங்களையும் இழந்திருந்தது. உதடு தடித்து தொங்கியது. கண்கள் எங்கிருக்கின்றன என்றே தெரியவில்லை. |
172 |
இரு கால்களும் அவரது உடலளவே பெரிய அளவுக்கு யானைக்கால் நோயில் பருத்திருந்தன. நான் சில கணங்களுக்குப் பின் என்னை மீட்டுக்கொண்டேன். மெல்ல அருகே சென்று பாறை ஒன்றில் மறைந்திருந்து பார்த்தேன். அவர் உடம்பெங்கும் வாய்கள் திறந்தது போல புண்கள். அவர் முனகலாக ஏதோ பாடிக்கொண்டிருந்தார். |
173 |
ஆனால் அன்று இரவில் கெட்ட கனவு வந்து படுக்கையில் சிறுநீர் கழித்தபடி எழுந்து அமர்ந்து கூச்சலிட்டேன். உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. மூன்றுநாள் காய்ச்சல். என்ன நடந்தது என்று அம்மா திரும்பத் திரும்ப கேட்டாள். நான் சொன்னதும் எங்கள் சமையற்காரி எசிலியம்மை உடனே சொல்லிவிட்டாள் அது பூயன்லா. |
174 |
பிள்ள பயப்படவேண்டாம். அவன் பல்லில்லாத நாயாக்கும். பாக்கத்தான் அப்பிடி இருக்குதான் பூயனின் கதையை நான் பின்பு துளித்துளியாக கேட்டு தொகுத்துக்கொண்டேன். எழுபதாண்டுகளுக்கு முன்பு வள்ளியூர் பகுதியில் ஒர் ஒன்பதுமாத கர்ப்பிணிப்பெண் வீட்டின் திண்ணைக்குச் சாணிமெழுகிக்கொண்டிருந்தாள். |
175 |
வள்ளியூர் பகுதியில் அன்றெல்லாம் ஒரே உடைமரக்காடும், ஒற்றைப் பனைமரங்களும்தான். வீடுகள் ஆங்காங்கே தனித்து நின்றிருக்கும். அப்போது அங்கே ஒரு சிவப்பண்டாரம் வந்தார். அவள் கையில் சாணி இருந்தமையால் முற்றத்தில் பிடுங்கி வைக்கப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கில் இரண்டை பிட்சையாக எடுத்துகொள்ளச் சொன்னாள். |
176 |
அவர் எடுத்துக்கொண்டு அவளுக்கு விபூதி கொடுத்தார். அதை அவள் தன்னருகே இருந்த நாழி ஒன்றில் போடச்சொன்னாள். அவர் போட்டுவிட்டு சாயங்காலம் குளித்ததும் இதைப்பூசிக்கொள். உனக்கு நல்ல அம்மிக்குழவி போல ஆண்குழந்தை பிறக்கும் என்று சொன்னார். அவள் வீட்டை மெழுகி முடித்ததும் குளிக்கப் போனபோது நாழியை மறந்தே விட்டாள். |
177 |
பிறகு தெரிந்தது. அந்த நாழி கிளம்பி அதுவே உருண்டு சென்று மூடிய கதவில் முட்டிமுட்டி வெளியே போக முயற்சி செய்துகொண்டிருந்தது. அந்த வீட்டின் பெரியவர் உடனே ஊகித்துக்கொண்டார். கூரை வழியாக பையனை வெளியே போகச்சொல்லி தன் உறவினர்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைத்துவந்தார். |
178 |
அவர்கள் பாளையரிவாள்களும் தடிகளுமாக அதைத் தொடர்ந்து சென்றார்கள். அது இடைவழியில் உருண்டோடி பொட்டல்காட்டுக்குள் சென்றது. பாறைகளையும் முட்களையும் கடந்து பொட்டலின் மறுஎல்லையில் இருந்த எவரும் போகாத மொட்டைமலை நோக்கிச் சென்றது. அங்கே அவமரணம் அடைந்தவர்களை மட்டும் எரிக்கும் ஒரு சுடுகாடு இருந்தது. |
179 |
அங்கே வெளிச்சம் தெரிந்தது. அந்த நாழி அங்குதான் சென்று கொண்டிருந்தது. அந்தச்சுடுகாட்டில் காலையில் வந்த சிவனடியார் தன் சடைகளை விரித்துப்போட்டு நெற்றியில் கரிய மையும் அதன் நடுவே குங்குமமும் அணிந்து சிவப்புப்பட்டு சுற்றி அமர்ந்து பூசை செய்துகொண்டிருந்தான். அவனைச் சுற்றி ஏழு பந்தங்கள் நடப்பட்டிருந்தன. |
180 |
அவனைச் சூழ்ந்திருந்த புதர் மரங்களில் கோட்டான்களும், வௌவால்களும் வந்து அமர்ந்திருப்பதை. அவன் முன்னாலிருந்த பாறைகளிலெல்லாம் நீரோடைகள் போல பாம்புகள் வழிந்தன. அந்த நிழல்களில் விதவிதமான முகங்கள் தோன்றி மறைந்துகொண்டிருந்தன நாழி உருண்டு சென்று அவன் முன் நின்று துள்ளியது. ஓசைகேட்டு அவன் திகைத்து எழுந்தான். |
181 |
ஆனால் ஓர் இளைஞன் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து அவன் மேல் வீசினான். அந்தக்கல் சரியாக வந்து மந்திரவாதியின் வாய் மேலேயே பட்டது. அவன் முன்வரிசைப்பல் ஒன்று உடைந்து விழுந்தது. மந்திரவாதி கைநீட்டி சாபம் போட்டான். ஆனால் முன்பல் உடைந்திருந்ததனால் மந்திரத்தைச் சரியாக உச்சரிக்க முடியவில்லை. |
182 |
அவன் அலறியபடி ஓடினான். அவன் பெயர் பூயன். மஞ்சாலுமூட்டின் மிகப் பெரிய மந்திரவாதி. பதினெட்டு தேவதைகளை வென்று அடக்குவதற்காக அவன் செய்த கருபலி பூசைதான் அது. பூயன் பதினெட்டு ஆண்டுகள் ஆயிரங்கால்அட்டை, ஓணான், கோழி, ஆடு, பன்றி, மாடு, மனிதன் என பலிகளைக் கொடுத்து பதினேழு துர்தேவதைகளை வசப்படுத்தியிருந்தான். |
183 |
பதினெட்டாவது தேவதை வசப்பட கருவிலிருக்கும் குழந்தை தேவைப்பட்டது. அது கைகூடவில்லை. பூயனை தேவதைகள் வள்ளியூரில் இருந்து மஞ்சாலுமூடு வரை துரத்தித் துரத்தி தாக்கின. அவன் உடலில் அவை ஏறிக்கொண்டன. அவன் உடம்பெங்கும் முண்டுகள் எழுந்தன. கண்பார்வை பறிபோயிற்று. கால்கள் வீங்கி நடக்கமுடியாமலாகியது. |
184 |
அவன் அவர்களுடைய வாகனம் அல்லவா? துர்தேவதைகள் பேன் போல. மனிதன் இருந்தால்தான் அவை அவன் மேல் வாழமுடியும். ஆகவே அவர்கள் அவனைக்கொல்லவில்லை. எழுபது ஆண்டுகளாக அவன் மேல் அமர்ந்து ஆட்டம் போடுகின்றன. பூயனுக்கு இப்போது நூறுவயதுக்கு மேல் இருக்கும். என் தாத்தாவும் அவனும் ஒரே வயது என்றார் பக்கத்துவீட்டு தாத்தா. |
185 |
அவனால் முடியாது. அவன் நூற்றெட்டு புதையல்களை எடுத்து எங்கோ புதைத்து வைத்திருக்கிறான். துர்தேவதைகளை விட்டுவிட்டால் அந்தப் புதையல்களையும் விட்டுவிட வேண்டியதுதான். தாத்தா சொன்னார் அவன் தன் மந்திரங்களை சரியாகச் சொல்லிவிட்டால் அந்தப் பிடாரிகளை அடக்கிவிடலாம். புதையல்களை மீட்கலாம். |
186 |
உடம்பும் சரியாகிவிடும். அரசனைப்போல உலகை ஆளலாம் தாத்தா சொன்னார் எழுபது வருடங்களாக ஒவ்வொரு நாளும் தன் மந்திரங்களை திரும்பவும் சரியாகச் சொல்லத்தான் அவன் முயற்சி செய்துகொண்டிருக்கிறான். அவன் உதடுகளே அழுகிவிட்டன. ஆனாலும் அவனால் முயற்சி செய்யாமலிருக்க முடியவில்லை. நான் ஏன்? என்றேன். |
187 |
அவை கிழித்து உண்டதுபோக எஞ்சிய உடலை எரித்தனர். அப்போது சுற்றிலும் இருந்த மரங்களில் எல்லாம் கோட்டான்களும் வௌவால்களும் நிறைந்திருந்தன என்றும் அவை சிறகடித்து எழுந்து கூச்சலிட்டன என்றும் சொன்னார்கள். ஒரு சாதாரண நோயாளிக் கிழவரின் வாழ்க்கை ஊராரின் கற்பனையில் வளர்ந்ததாகக் கூட இருக்கலாம். |
188 |
தன் வாலை விழுங்கும் பாம்பு ஒருமுறை நெல்லை சந்திப்பில் சுமைதூக்கும் இருவரிடையே கடுமையான பூசல் வெடித்தது. ஏலே, மொதலாளியில்ல, இனி தேவேந்திரனுக்க அப்பன் முத்துப்பட்டன் வந்து நிண்ணாலும் எனக்கு மயிராக்கும்லே என்றார் ஒருவர். அதென்ன புதுக்கதை, தேவேந்திரனின் தந்தையாக ஒரு புதிய ஆள்? நாட்டாரியல் ஆய்வாளர் நா. |
189 |
நெல்லைமாவட்டத்தில் விக்ரமசிங்கபுரம் அருகே காரையார் என்னுமிடத்தில் சொரிமுத்து அய்யனார் ஆலயம் உள்ளது. அங்கே முத்துப்பட்டன் சொரிமுத்து அய்யனாரின் அருகே உள்ள பரிவாரதேவதையாக அமர்ந்திருக்கிறார். சிங்கம்பட்டி ஜமீனால் பதினெட்டாம்நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்தக்கோயில். முத்துப்பட்டன் ஓரு பிராமணன். |
190 |
அக்காலத்தில் திருவிதாங்கூர் பகுதி மதுரைக்கு கப்பம் கட்டும் அரசாக இருந்தது. மதுரைநாயக்கர் அரசில் நியோகி பிராமணர்கள் அமைச்சர்களாகவும், படைத்தளபதிகளாகவும் செல்வாக்குடன் இருந்தனர். மற்ற பிராமணர்களைப்போல அவர்கள் வைதிக பூசைகளில் ஈடுபடுவதில்லை, அவர்கள் பெரும்பாலும் போர்வீரர்கள். |
191 |
அவருடன் பிறந்தவர்கள் ஏழுபேர். அவர்கள் அங்கே ஒரு படைக்கலப் பயிற்சி சாலையை நடத்தினர். அதை அக்காலத்தில் களரி என்பார்கள். முத்துப்பட்டன் அதே களரியில் அண்ணன்களிடமே ஆயுதகலைகளைக் கற்றான். இயற்கையான நுண்ணுணர்வால் அவன் ஏழு தமையன்களை விடவும் பெருவீரனாக மாறினான். அவன் புகழ்பரவியது. |
192 |
அப்போது ஒருமுறை நெடுமங்காட்டு அரசி ரகசியமாகத் திருவனந்தபுரத்திற்குச் செல்லவேண்டியிருந்தது. துணைக்கு அழைத்துச் செல்ல ஒரே ஒரு பாதுகாவலன் தேவை. அமைச்சர் ஆலோசனைப்படி அரசி முத்துப்பட்டனை துணைக்கு அழைத்துச்சென்றார். இச்செய்தி பரவியதும் முத்துப்பட்டனின் தமையன்கள் அவன் மேல் மனவேறுபாடு கொண்டார்கள். |
193 |
ஒருநாள் ஓர் ஏழைக்கிழவி முத்துப்பட்டனிடம் அவன் தமையன்கள் தன்னிடமிருந்த ஒற்றை காலணாவையும் பிடுங்கிச்சென்று விட்டதாக சொல்லி அழுதாள். சினம் கொண்ட முத்துப்பட்டன் தன் தமையன்களிடம் சென்று அந்த காலணாவைத் திருப்பிக்கொடுக்கும் படிச் சொன்னார். அவர்கள் அவரை ஏளனம் செய்து இழிவுபடுத்தினர். |
194 |
நான் உன் தந்தையின் இடத்தில் இருப்பவன். நீ என்னை வெட்டமுடியும் என்றால் வெட்டு. அந்த பாவம் உன்னைசூழும் என்றார் தமையன். வாளை வீசிவிட்டு முத்துப்பட்டன் ஆரியநாட்டிலிருந்து வெளியேறினான். திருவிதாங்கூரில் இருந்து வெளியேறி கொல்லம் சென்று அன்று தனிநாடாக இருந்த கொட்டாரக்கரையை அடைந்தார். |
195 |
நெடுநாட்களாக முத்துப்பட்டனைக் காணாமல் அவன் அன்னை மரணப்படுக்கையில் விழுந்தாள். மகனைக்கூட்டி வராமல் கடைசிநீர் அருந்தமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். அவனுக்கு ஒரு திருமணம் செய்துவைத்துப் பார்த்தபின் இறந்தால்தான் தன் நெஞ்சுவேகும் என்றும் இல்லையேல் சாபம் போட்டுக்கொண்டு சாவேன் என்றும் ஆணையிட்டாள். |
196 |
அது தங்கள் தம்பிதான் என்று உறுதிகொண்டு அவனைத்தேடிச் சென்றனர். கொட்டாரக்கரையில் முத்துப்பட்டன் தலைப்பாகையும் பொன்வளையும் அணிந்து பட்டுக்கச்சை கட்டி பதவியில் இருப்பதைக் கண்டனர். அவனை தங்களுடன் வரும்படி அழைத்தனர். அறம் அறியாத அவர்களுடன் வரமுடியாது என்று முத்துப்பட்டன் மறுத்தான். |
197 |
அது எங்கள் குலத்தை அழிக்கும் என்று தமையன்கள் மன்றாடினார்கள். அரசரிடம் சென்று முத்துப்பட்டனை அனுப்பும்படி தமையன்கள் கோரினார்கள். தம்பிக்கு சேஷையர் பெண்ணை மணம் முடிக்க பார்த்திருக்கிறோம். முந்நூறு பொன்னும், மூன்று குதிரையும் அவர் சீதனமாக அளிப்பார். லட்சுமியம்சம் கொண்ட பெண் என்றார்கள். |
198 |
முத்துப்பட்டன் ஆணையை ஏற்று தன் தமையன்களுடன் சென்றான். அவர்கள் கொல்லத்திலிருந்து செங்கோட்டைப்பாதையில் ஆரியன் கோவில், குளத்துப்புளி, சவரிமலை ஆகிய ஊர்களைக் கடந்து பொதிகை மலை ஏறித்தாண்டி பயணம்செய்தனர். அப்படியே திருக்கணங்குடி வழியாக மலைப்பாதையில் நெடுமங்காடுக்குச் செல்லும் வழி அன்று பிரபலமாக இருந்தது. |
199 |
அவர்கள் தளவாய்கொட்டகை என்னும் ஊருக்கு வந்தபோது அந்தியாயிற்று. அங்கே தங்கள் சுமைகளை இறக்கிவிட்டு ஓடையில் நீராடி சந்திகால பூசைகளைச் செய்தார்கள். ஓய்வெடுப்பதற்காக ஒரு மரநிழலில் படுத்தனர். அண்ணன்கள் தூங்க முத்துப்பட்டன் மட்டும் அரைத்தூக்கத்தில் இருந்தான். அப்போது இருபெண்கள் பாடும் ஓசை கேட்டது. |
200 |
அவர்கள் சுமையிறக்கி வைத்துவிட்டு ஓடையில் இறங்கி நீர் அள்ளிக் குடித்தனர். மேலாடையை விலக்கி முகம் துடைத்தபின்பு மீண்டும் சுமையை ஏற்றிக்கொண்டு பொட்டல்காட்டுக்குள் சென்றனர். மோகம்கொண்ட முத்துப்பட்டன் அவர்களைத் துரத்திவந்தான். அவர்கள் அவனைக்கண்டு ஓட ஆரம்பிக்க அவனும் துரத்தினான். |
201 |
அவன் சங்கை அறுத்து மீள்கிறேன் என்று அரிவாளை எடுத்துக்கொண்டு வாலப்பகடை கிளம்பினார். காட்டில் மயங்கிக்கிடந்த முத்துப்பட்டனைக் கண்டு எழுப்பி அமரச்செய்து தன்னிடமிருந்த நீரை அளித்தார். நினைவு மீண்ட முத்துப்பட்டன் இவ்வழியே சென்ற இரு பெண்களை பார்த்தீர்களா? என்றான். ஆம், அவர்கள் என் மகள்கள் தான். |
202 |
அவர்களை ஒரு பிராமணன் பிடிக்கவந்தான் எனக்கேட்டு அவனைக் கொல்லவே செல்கிறேன் என்றார் வாலப்பகடை. அந்தப்பிராமணன் நானே. நான் அவர்களை பிடிக்கவரவில்லை. முறைப்படி மணமுடிக்கவே வந்தேன் என்றான் முத்துப்பட்டன். வாலப்பகடை திகைத்து என்ன பேசுகிறீர்கள்? நான் பகடை. ஆவுரித்துக் கொன்று உண்பவன். |
203 |
நாடு ஏற்காது. நம் இரு குலமும் ஏற்காது என்றார். இல்லை, இனி இவ்விரு பெண்களைத் தவிர எவரையும் என்னால் ஏற்கமுடியாது. வாழ்வு இவர்களுடன்மட்டுமே. என்னை கொன்றுவிடுங்கள், இல்லையேல் பெண்ணைக்கொடுங்கள் என்றான் முத்துப்பட்டன். சரி, நீ சென்று உன் அண்ணன்களிடம் அனுமதி பெற்று வா என்றார் வாலப்பகடை. |
204 |
அல்லது எங்களைப் போல நீயும் பகடையாக ஆகிவிடு. பெண் தருகிறேன். முத்துப்பட்டன் தன் அண்ணன்களிடம் வந்து தன் எண்ணத்தைச் சொல்ல அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நம் குலமும் தெய்வங்களும் இதை ஏற்காது. புழுப்பூச்சி தின்பவர்கள் அவர்கள் என்றனர். நாம் அறுத்த நெல்லை மணிகூட மிஞ்சாமல் கொண்டுசெல்பவர்கள். |
205 |
அவர்கள் பூச்சி தின்ன நாமே காரணம் என்றான் முத்துப்பட்டன். அவர்கள் மாட்டைத் தின்கிறார்கள் என்றார் மூத்தவர். நாம் கடைசித்துளிப் பாலைக்கூட கறந்து குடிக்கவில்லையா? என்றான் முத்துப்பட்டன். சக்கிலியர் மகளை நீ மணந்தால் நாங்கள் உயிரோடிருக்கவே முடியாது. நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம் என்றனர். |
206 |
பலவகையிலும் பேசிப்பார்த்தும் முத்துப்பட்டன் மசியாததைக் கண்டு அவனைக் கொல்ல முடிவெடுத்தார்கள். அவர்கள் இங்கே குளிரடிக்கிறது. அங்கே ஒரு பழைய கல்கட்டிடம் உள்ளது அங்கு சென்று பேசுவோம் வா என்று அவனை அழைத்துச்சென்றனர். அது பழமையான ஒரு கோட்டையின் எஞ்சிய பகுதி. அதற்குள் இருண்ட அறை ஒன்று இருந்தது. |
207 |
அதற்குள் அவர்கள் தம்பியைக் கூ ட்டிச்சென்றனர். அங்கே சென்றதும் அவனை ஏழுபேரும் சேர்ந்து கல்லால் அறைந்தனர். அடிதாளாமல் மயங்கிவிழுந்த முத்துப்பட்டனை குலத்தை அழிக்க வந்த நீ சாவதே மேல் என்று சொல்லி அங்கேயே போட்டு மேலே வந்து கற்களைத் தூக்கிவைத்து அந்த அறையை மூடிவிட்டுச் சென்றார்கள். |
208 |
அவன் செத்துவிட்டான் என்று எண்ணி அருகே ஆற்றில் நீர்க்கடன் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பினார்கள். ஆனால் அந்த அறைக்குள் ஓர் இருண்ட சுரங்கம் இருந்தது. நினைவு மீண்டதும் அதன்வழியாக வந்த காற்றைக்கொண்டு அவ்வழியை முத்துப்பட்டன் உணர்ந்தான். அதன் வழியாக தவழ்ந்துசென்று வெளியேறினான். |
209 |
அருகே இருந்த ஊருக்குள் சென்று தன் குடுமியையும் பூணூலையும் வெட்டி எறிந்தான். தன் வாய்க்குள் இருந்த பொன்கட்டிய பல்லை கொண்டுசென்று விற்று நல்ல ஆடைகள் வாங்கிக்கொண்டான். தோல்செருப்பும் தோல்வார் கச்சையும் கல்கடுக்கனும் அணிந்து பகடையின் தோற்றத்தில் வாலப்பகடையின் சேரியை அடைந்தான். |
210 |
நாற்பதுநாட்கள் நீயும் சக்கிலியத் தொழில் செய். செத்தமாட்டை உரித்துப் பதனிட்டுச் செருப்பு செய்து விற்று ஒரு பணமாவது சம்பாதித்துக் கொண்டு வந்து காட்டு. மகளைத்தருகிறேன் என்றார் வாலப்பகடை. அந்தச்சவாலை ஏற்ற முத்துப்பட்டன் மாட்டை உரித்து அதன் தோலை காயவைத்து கறைசேர்த்துப் பதனிட்டான். |
211 |
செருப்பு தைத்து அதைக்கொண்டு சென்று சந்தையில் விற்றுவிட்டு வந்தான். வாலப்பகடை மகிழ்ந்து அவனுக்குப் பெண்கொடுக்க ஒப்புக்கொண்டான். பொம்மக்கா, திம்மக்கா இருவரும் முத்துப்பட்டனுக்கு மனைவியானார்கள். அத்திமரம் நட்டு ஆவாரம்பூ கொண்டு பந்தலிட்டு முதுவள்ளுவன் வந்து திருமணத்தை நடத்திவைத்தார். |
212 |
பொம்மக்காவும் திம்மக்காவும் அவன் காலைப்பிடித்து மன்றாடி போக வேண்டாம் என கெஞ்சினர். இல்லை, நான் இங்கே சாதிமாறி திருமணம் செய்துகொண்டதை விரும்பாத எவரோதான் இதைச்செய்கிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று வஞ்சினம் உரைத்த முத்துப்பட்டன் நில் நில் என்று கூவியபடி பொட்டலில் ஓடினான். |
213 |
அவர்களின் ஆடுமாடுகளை ஓட்டிச்சென்றவர்கள் ஊத்துமலை வன்னியரும், உக்கிரக்கோட்டை வன்னியரும் என வில்லுப்பாட்டு சொல்கிறது. வன்னியர் என்னும் சொல் இங்கே மறவர்களைக் குறிக்கிறது. ஊத்துமலை உக்கிரக்கோட்டை ஜமீன்தார்களின் ஆட்கள் அவர்கள். முத்துப்பட்டன் அவர்களை மறித்துப் போரிட்டான். பலரை வெட்டி வீழ்த்தினான். |
214 |
பந்தல் பிரிக்கலையே, வந்தஜனம் போகலையே என்று அவர்களின் ஒப்பாரியை வில்லுப்பாட்டு சொல்கிறது. அவர்கள் கதறி அழுதபடி சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் வந்து தீப்பாய்வதற்கு அனுமதிகேட்டனர். நீங்கள் அரசியரைப்போல இங்கிருக்கலாம். உங்களுக்கு தேவையான அனைத்தையும் நான் அளிக்கிறேன் என்றார் சிங்கம்பட்டி ஜமீன்தார். |
215 |
ஆனால் அவர்கள் உயிர் துறப்பதில் உறுதியாக இருந்தனர். அத்தனைதூரம் ஆசைப்பட்டு அதற்காக அனைத்தையும் துறந்துவந்த முத்துப்பட்டன் எதையுமே அனுபவிக்காமல் இறந்ததனால் விண்ணுலகு செல்லமுடியாது. அவனை எங்கள் தவத்தால்தான் வானுக்குக் கொண்டு செல்லமுடியும் என்றனர். சிங்கம்பட்டி ஜமீன்தார் அனுமதி அளித்தார். |
216 |
முத்துப்பட்டனுக்குச் சிதைகூட்டப்பட்டது. மணப்பெண்களைப்போல ஆடையணிகள் பூண்ட பொம்மக்காவும் திம்மக்காவும் அந்த தீயில் பாய்ந்து உயிர்விட்டனர். அவர்கள் தாமரைமலரில் அமர்வது போல தீயில் கைகூப்பி அமர்ந்திருப்பதைக் கண்டு மக்கள் வாழ்த்துக்கூவினர். வானில் தெய்வங்கள் வந்ததனால் மெல்லிய மழை பெய்தது. |
217 |
குற்றாலக்குறவஞ்சியில் குறத்தி குறிவரத்து பாடும்போது துட்டரை அடக்குகின்ற சொரிமுத்து அய்யன்வாசல் பட்டன்மேல் வரவு பாட முக்கண்ணன் காப்பாமே என்று பாடுகிறாள். அதைச் சுட்டிக்காட்டும் வானமாமலை அக்காலத்திலேயே சொரிமுத்து அய்யனாரின் காவல்தெய்வமாக முத்துப்பட்டன் அமர்ந்திருந்தார் என்கிறார். |
218 |
இவை பட்டவராயர் சாமி என்றும் பட்டன்சாமி என்றும் குறிப்பிடப்படுகின்றன. சொரிமுத்து அய்யன் ஆலயத்தில் இப்போதும் தீக்குளிப்புச் சடங்கு ஒன்று நிகழ்கிறது என்று வானமாமலையின் நூல் சொல்கிறது. சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தின் வாரிசின் கையிலிருந்து பாசிக்கொத்தை வாங்கிக்கொண்டு தீக்குளம் தாண்டும் பூசனை அது. |
219 |
காதலுக்காக ஒருவன் அங்கிருந்து இங்கு வந்தான் என்பது ஓரு மகத்தான செய்தி. அவன் தெய்வமாகாதிருக்க வாய்ப்பே இல்லை. அத்துடன் ஒன்றுள்ளது. இந்திய நாட்டுப்புறக் கதைகளில் எல்லாமே இந்த இரு எல்லைகளுக்கும் நடுவே இருக்கும் மணவுறவு குறித்த கதைகள் உள்ளன. அனந்தன்காடு குறித்த கதையும் இவ்வகையானதே. |
220 |
ஏதோ ஒருகாலத்தில் சாதியின் உச்சநிலையில் இருந்தவர்கள் கடைநிலைக்கு வந்தனர் என்றும் அந்தக் கடைநிலையருக்கும் உச்சியில் இருப்பவர்களுக்கும் நடுவே உள்ள கடும்பகையும் அதேசமயம் விசித்திரமான ஒற்றுமையும் கொண்ட உறவு அதையே காட்டுகிறது என்றும் சொல்வார். அதை நோக்கி விரல்சுட்டும் கதை இது. |
221 |
மரணசிம்மாசனம் நான் தக்கலை அருகே உள்ள தொன்மையான கேரளக் கோட்டை நகரான பத்மநாபபுரத்தில் இரண்டு வருடம் குடியிருந்தேன். வரலாறு காலுக்குக் கீழே புதைந்து கிடக்கும் ஊர் அது. நூறாண்டுகளுக்கு முன்புவரை திருவிதாங்கூர் அரசின் இரண்டாவது தலைநகரம். முந்நூறாண்டுகளுக்கு முன்புவரை முதற்தலைநகரமாக இருந்தது. |
222 |
பெரிய கற்கோட்டையால் சூழப்பட்டது. உள்ளே திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மா காலகட்டத்தில் அமைந்த பெரிய அரண்மனை உள்ளது. அது தலக்குளத்து வலிய கொட்டாரம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய நகரைச் சுற்றி ஏராளமான தொன்மக்கதைகள் இருக்கும். ஒருமுறை ஆய்வாளர் பிரேம் என்னைப் பார்க்க வந்திருந்தார். |
223 |
எவ்வளவு ரத்தம் இதற்காகச் சிந்தப்பட்டிருக்கும்! அது என்னை அதிரச் செய்த சொல். ஏனென்றால் கதைகள் முழுக்க அதைத்தான் காட்டுகின்றன. வளமான நிலம், அழகான பெண், பொன் மூன்றும் அன்று பெருஞ்செல்வமாகக் கருதப்பட்டன. ஆயுதமெடுத்தவர்கள் அதைக் கைப்பற்ற முயல்வார்கள். கொன்றும் அழித்தும் கவர்ந்து செல்வார்கள். |
224 |
அதை உரிமை கொண்டவர்கள் ஆயுத பலத்தால் காத்து நிற்கவேண்டும். குமரிமாவட்டத்தின் கதைகள் முழுக்க இந்தப்பூசலின் ரத்தச்சுவடுகளால் ஆனது. பத்மநாபபுரம் அரண்மனைக்குள் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அங்கே பலவகையான சித்திரவதைக் கருவிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அன்றெல்லாம் இறப்பு எவருக்கும் அச்சமூட்டுவது அல்ல. |
225 |
ஏனென்றால் போர் நடந்துகொண்டே இருந்த அக்காலகட்டத்தில் எவரும் எப்போதும் கொல்லப்பட வாய்ப்பிருந்தது. தொற்றுநோய்களைக் கடந்து வாழ்வது அதைவிட பெரிய போராட்டம். பிறப்பு போல சாவும் ஓர் அன்றாட நிகழ்ச்சி. எந்த அன்னையைக் கேட்டாலும் பன்னிரு பிள்ளைகள் பெற்றேன், ஒன்று எஞ்சியிருக்கிறது என்றுதான் சொல்வாள். |
226 |
ஆகவே அன்று அனைவரையும் அஞ்ச வைத்த தண்டனைகள் இரண்டுதான். ஒன்று, சித்திரவதை. இன்னொன்று, செத்தபின் விண்ணுலகு செல்ல முடியாமலாக்கி விடுவது. தண்டிக்கப்பட்ட ஒருவரின் உடலை எவருக்கும் தெரியாமல் எரித்து ஈமச்சடங்குகள் செய்யாமல் புதைத்து விடுவதை ஒரு பெரிய தண்டனையாக அன்று எண்ணியிருந்தார்கள். |
227 |
சித்திரவதைகள் பலவகை. முக்காலியில் கட்டி அடித்தல் பரவலாக நடந்தது. பெரிய மூன்று மரச்சட்டங்களை மையத்தில் சேர்த்துக்கட்டி தரையில் ஊன்றி நிறுத்துவார்கள். தண்டிக்கப்பட வேண்டியவனை கைகளை பிணைத்து அந்த மையத்தில் தூக்கி கட்டி கால் தரையில் ஊன்றமுடியாத அளவில் நிர்வாணமாகத் தொங்கவிடுவார்கள். |
228 |
கருக்குமுள் கொண்ட பனைமட்டையை ஏந்திய மூவர் சூழ்ந்து நின்றுகொண்டு அவனை அடிப்பார்கள். அந்த பனைமட்டை கருக்குடன் வெட்டி கைப்பிடி செதுக்கப்பட்டு எண்ணைபூசி நிழலில் உலரவைத்ததாக இருக்கும். ஆகவே எத்தனை அடித்தாலும் முள் உதிராது. ரத்தவிளாறாக உடல் ஆனதும் அப்படியே அவனை வெயிலில் காய விட்டுவிட்டுச் செல்வார்கள். |
229 |
கடும் காய்ச்சல் வந்து இறந்து போகிறவர்கள் உண்டு. அன்று வரிகொடுக்காதவர்கள், திருடியவர்கள் ஆகியோருக்கான தண்டனையாக இது இருந்திருக்கிறது. இன்னொரு தண்டனை தளை. கைகளையும் தலையையும் சேர்த்து ஒரு தடியில் இரும்புத்தளைகளால் பூட்டி காலில் விலங்கிட்டு விட்டுவிடுவார்கள். உணவும் நீரும் அளிக்கப்படும். |
230 |
நாள் கணக்கில் இந்தத் தளையில் கிடக்கையில் கைகள் அசைவிழந்து மெல்ல தசைகள் உறைந்து கடும் வலி ஏற்படும். வலி பெருகிக்கொண்டே செல்லும். அரசனின் ஆணையை ஏற்று முழுதாகச் சரணடைந்த பின்னரே அந்த தளை அவிழ்க்கப்படும். நிரந்தரமாக கைகள் செயலிழந்து சூம்பிவிட வாய்ப்பு அதிகம். கூடு என்று இன்னொரு தண்டனை. |
231 |
உடலில் பதநீர் பூசப்படும். எறும்புகள் அவன் உடலை அரிக்கத்தொடங்கும். புண் உருவானபின் பறவைகள் வந்து கொத்தி இழுக்கும். தொங்கிக்கிடப்பதனால் உடலின் நீர் முழுக்க கால்களில் தேங்கி கடும் வலி ஏற்பட்டு வீங்கி கூண்டுக்கம்பியை நிறைக்கும். கம்பிகள் உடலுக்குள் புதைந்துபோகுமாம். உடல் உடைந்து சலம் வழியும். |
232 |
பத்துநாட்கள் வரை அங்கே கிடந்து அலறி அலறி மெல்ல உயிர்விடுவான். ஆலயங்களில் திருடுவது, அரசனுக்கு துரோகம் செய்வது போன்றவற்றுக்கான தண்டனை இது. ஆனால் தண்டனைகளில் கொடியதென்பது கழுதான். குமரிமாவட்டத்தில் கழுமேடு, கழுவன்திட்டை, கழுவடி போன்ற இடங்கள் முக்கியமான ஊர்களிலெல்லாம் உண்டு. |
233 |
தமிழகப் பகுதிகளில் கழுவேற்றம் என்றால் கூரிய குச்சியிலோ அல்லது கம்பியிலோ ஒருவனை ஏற்றி குத்தி அமரச்செய்வதுதான். குமரிமாவட்டத்தில் அது முழுக்க முழுக்க வேறுமாதிரியான ஒரு கொடூரக்கலையாக இருந்திருக்கிறது இங்கே கழுவேற்றத்தை நிகழ்த்துவதற்காகவே வைத்தியர்களின் ஒருசில குடும்பங்கள் இருந்தன. |
234 |
கழுவேற்றுதல் இவ்வாறு நடக்கும் என கேட்டிருக்கிறேன். நன்கு சிவந்த பிரம்பை காட்டிலிருந்து வெட்டிக்கொண்டு எண்ணையில் ஊறச்செய்து நிழலில் உலரவைத்து வெட்டி எடுப்பார்கள். மேல்முனை மொண்ணையாக சீவி வழவழப்பாக்கப்படும். அதில் தேன்மெழுகும் அரக்கும் சேர்த்து மேலும் மென்மையாக்குவார்கள். |
235 |
கழுவேற்ற ஆசான் தன் கையால் அவன் குடலை பலவகையில் அழுத்தி அதன் மடிப்புகளை நீட்டி அந்த பிரம்பு எந்த இடத்திலும் கிழிக்காமல் அவன் இரைப்பை வரைச் செல்லும்படிச் செய்வார். அதன்பின் கோட்டையை மூடிவிட்டு அனைவரும் சென்று விடுவார்கள். மிக மென்மையான பிரம்பு உள்ளே செல்லும்போது வலி இருக்காது. |
236 |
அவர்கள் சென்று சற்றுநேரம்வரைகூட வலி தெரியாது. ஆனால் பிரம்பில் கோர்க்கப்பட்டிருக்கும் குடல் மெல்ல அசைந்து தன் இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கும்போது வலி தொடங்கும். வலி பெருகிப்பெருகி வரும். ஆனால் எவ்வகையிலும் குருதி இழப்பு இல்லை என்பதனால் மயக்கம் வராது. மூளை விழித்தே இருக்கும். |
237 |
வயிற்றுக்குள் ஒரு பெரிய கான்சர் கட்டி திடீரென்று உருவானது போல. அதுவே மனிதனுக்கு நிகழும் வலிகளில் உச்சம் என்பார்கள். ஆனால் பன்னிரு நாட்கள் வரை சாவும் வராது. எவ்வளவு விரைவாக சாவு வருகிறதோ அவ்வளவு நல்லது. சாக விடக்கூடாது என்பதற்காக அவனுக்கு பதநீர் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். |
238 |
பத்மநாபபுரத்தைச் சுற்றியிருக்கும் பல சிறு தெய்வப் பதிட்டைகள் கழுமாட சாமிக்குரியவை. பொதுவாக கழுமாடசாமிகளுக்கு கோயில் என ஏதும் இருப்பதில்லை. ஒரு உருளைக்கல்லை நாட்டி அதன்முன் இன்னொரு சப்பைக்கல்லை பலிபீடமாக போட்டிருப்பார்கள். பூசை எல்லாம் நிகழ்வதில்லை. வருடத்திற்கு ஒருமுறை பலிகொடுத்து கும்பிடுவார்கள். |
239 |
இது ஒரு பிற்கால விளக்கம்தான். உண்மையில் கழுவேற்றப்பட்டவரை அவரது குடும்பத்தினர் கழிவிரக்கத்தால் தெய்வமாக்குகின்றனர். சமூகம் குற்றவுணர்ச்சியால் அதை ஏற்றுக்கொள்கிறது. பத்மநாபபுரம் கோட்டைக்குத் தெற்காக கோட்டையின் திட்டிவாயிலுக்கு அப்பால் உள்ள சுடுகாடு வழியாகச் சென்றால் சவக்கோட்டை வருகிறது. |
240 |
சவக்கோட்டையில் பலர் கழுவேற்றப்பட்டுள்ளனர். அங்கே நான் மாலைநடை செல்லும் வழக்கமிருந்தது. அந்தி இறங்கி இருள் வரும்வரை தனியாக அமர்ந்திருப்பேன். முழுமையான ஒரு தியானநிலை அப்போது உருவாகும். இங்கிருக்கும் இந்தக்காலத்தை அப்படியே கழற்றிவிட்டு காலமில்லாத ஒரு வெளியில் சென்றுவிட்டதுபோலிருக்கும். |
241 |
அவர்களுக்கும் அந்த மாடனுக்கும் சம்பந்தமில்லை. அந்த கழுவனின் குடும்பம் எங்கோ வாழச்சென்றிருக்கும். வருடம்தோறும் கொடைக்காக அந்த பூசகர் குடும்பத்திற்கு ஒரு தொகை அனுப்பிவைப்பார்கள். அவ்வளவுதான். கழுமாடனின் கதை என்ன என்றுகூட எவருக்கும் தெரிந்திருக்காது. கழுமாடன் ஒரு உருளைக்கல். |
242 |
சாதாரணமாகப்பார்த்தால் அதை உடைந்த அம்மிக்குழவி என நினைப்போம். அதற்கு செந்தூரமும் மஞ்சள்விழுதும் பூசி இரு பெரிய கண்களை கரியால் வரைந்திருந்தனர். ரத்தத்துடன் வெட்டிவைத்த தலைபோல மாடன் நோக்கியிருந்தார். எண்ணைப்பந்த ஒளியில் ஒரு வாழையிலையில் தீயில் சுட்ட பச்சரிசி அப்பமும் செவ்வரளி மலர்களும் இருந்தன. |
243 |
ஒரு சேவல் கால்கள் கட்டப்பட்டு கிடந்து கொக்கரித்துக்கொண்டிருந்தது. அதன் கால்விரல்கள் சுருங்கிவிரிந்தன. அவர்கள் ஒரு தென்னை மட்டை பிளாச்சை நீளமாக கீறி முனையைக் கூர்மையாக்கி அதை மண்ணில் குத்தி நிறுத்தினர். அதன்பின் அதில் அந்தச்சேவலின் இரு கால்களையும் விரித்து அதை அந்த பிளாச்சில் குத்தி இறக்கினர். |
244 |
மீண்டும் மீண்டும் பிறந்து அவன் கழுவேற்றப்படுகிறானா என்ன? இருளில் நடக்க முடியாமல் நின்றுவிட்டேன். வரலாறு என்பது பலிகொண்ட படியே இருக்கும் கொலைத்தெய்வம் என்று தோன்றியது. கட்டுண்டவர்கள் குமரி மாவட்டத்திலுள்ள சிறு தெய்வங்களில் பெரும்பான்மை ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்குரியது. |
245 |
தெய்வம் பேயாவதில்லை. தெய்வமானபின் அது பேயும் அல்ல. பயங்கரம் என்பது இந்து மரபின் தெய்வங்களுடன் கலந்த ஓர் அம்சம். கொடூரமாக இருப்பதனால், பலி கொள்வதனால்,அச்சுறுத்துவதனால் அது பேய் என்றாவதில்லை. இப்பிரபஞ்சத்தை ஊடுபாவாக நெய்திருக்கும் மனிதரை மீறிய புரிந்து கொள்ள முடியாத பேராற்றல்களின் பல சரடுகளில் ஒன்று. |
246 |
சமண தீர்த்தங்கரர்களின் காவல் தெய்வங்கள் அவை. பார்ஸ்வநாதரின் யக்ஷியாகிய பத்மாவதியும் வர்த்தமானரின் யக்ஷியாகிய கூஷ்மாண்டினியும் தமிழகத்தில் பிரபலமான தெய்வங்களாக இருந்திருக்கிறார்கள். முற்றும் துறந்து கை மலர்ந்து நின்றிருக்கும் தீர்த்தங்கரர்களிடம் சென்று உலகியல் விஷயங்களை வேண்டிக்கொள்ள முடியாது. |
247 |
குமரி மாவட்டத்தில் இருக்கும் இயக்கியர் அல்லது யக்ஷியரை தொல் தமிழ் தெய்வங்களா இல்லை சமண தெய்வங்களா என்று வகைப்படுத்துவது கடினம். சிலப்பதிகாரத்தில் மாதவி கோட்டைக்கு வெளியே இருந்த குறுங்காட்டுக்கு சென்று அங்கிருந்த கருங்கண் இயக்கிக்கு பலி கொடுத்து வழிபட்டு திரும்பி வருவதைக் காண்கிறோம். |
248 |
அந்தக் கருங்கண் இயக்கி சமண தெய்வமாகக் குறிப்பிடப் படவில்லை. ஆனால் அவள் கன்று மேய்க்கும் ஆய்ச்சியரின் தெய்வமாக இருக்கிறாள். ஆகவே தொன்மையான தமிழ் தெய்வமே இயக்கி என்று எடுத்துக் கொள்ளலாம். அவை சமணத்துக்குள் புகுந்து சமணம் மறைந்த பின்னர் மீண்டும் திரும்ப இந்து மதத்திற்குள் வந்திருக்கலாம். |
249 |
இன்று இந்து பெருங்கோயில்களின் புற இணைப்புகளிலும், பெரிய இல்லவளைப்புகளின் தெற்குமூலையிலும் இயக்கியரின் ஆலயங்கள் உள்ளன. பெரும்பாலான இயக்கியர் கோயில்கள் காடுகளுக்குள் நதிக்கரைகளில் மலையடிவாரங்களில் தனித்து அமைந்திருக்கின்றன. ய-அக்ஷி என்ற சொல் யக்ஷியாயிற்று என்று சொல்வார்கள் விழியுடையவள் என்று பொருள். |
250 |
பேரழகிகள். யக்ஷி என்ற தெய்வம் பொதுவாக இருந்தாலும் ஒவ்வொரு யக்ஷிக்கும் ஒரு கதை உண்டு. எங்கள் ஊரைச்சுற்றி செண்பகயக்ஷி, கொன்றைவனத்து யக்ஷி, பாலருவி யக்ஷி என்று பல தெய்வங்கள் உள்ளன. யக்ஷி என்பது ஒரு பொது வரையறையாக அமைந்து பல்வேறு நாட்டுப்புற தெய்வங்களை தன்னில் எடுத்துக் கொண்டிருக்கிறது. |
251 |
நான் இளமைப்பருவத்திலிருந்த போது ஓடு வேய்ந்த ஒற்றை அறை கொண்ட சிறிய கோயிலாக இருந்தது. அதற்குள் பெரிய கல் பீடமொன்றில் விழித்த பார்வையுடன் ஒன்றறை அடி உயரமான கருங்கல் சிலையாக செண்பகவனத்து யக்ஷி நின்றிருப்பாள். சற்று அப்பால் கிளைகள் குறுகிப்போன பழைய செண்பக மரம் நின்றிருக்கும். |
252 |
தினசரி பூசை எதுவும் கிடையாது. வருடத்திற்கு ஒரு முறை மட்டும் கொடையும், ஆராசனை என்று சொல்லப்படும் சாமிவந்து ஆடும் வழிபாடும் உண்டு. மற்ற நாட்களில் எவருடைய கனவிலேனும் வந்து பலி கேட்டால் அவர்கள் சிறு கோழியையோ, செல்வந்தர்களென்றால் வெள்ளாட்டின் குட்டியையோ கொண்டு வந்து பலி கொடுத்து வழிபடுவார்கள். |
253 |
காலடி ஒலிக்க வைத்து வைத்து உள்ளே சென்றால் பாம்புகளும் ஓணான்களும் சருகு கலைத்து ஓடி சலசலப்பு எழுப்ப கோயில் வளாகம் உயிர் கொண்டெழுவது போல தோன்றும். யக்ஷியின் கல் விழிகளில் ஒரு பார்வை உயிர் கொள்வது போல மனம் மயங்கும். செண்பக வனத்து யக்ஷியைப் பற்றிய கதை கள்ளியங்காட்டு நீலி கதைக்கு மிகவும் சமானமானது. |
254 |
தொன்மையான நாயர் குடி ஒன்றில் அவள் பிறந்தாள். ஏழு மங்கல அழகுகளும் கொண்டவள். அப்பேரழகை அடைய எண்ணி பன்னிரண்டு அரசர்கள் பெண்கேட்டு வந்தார்கள். எவருக்கு அவளைக் கொடுத்தாலும் பிற பதினொரு மன்னர்களுக்கும் எதிரியாகி விட வேண்டுமென்று அவள் தந்தை அஞ்சினார். அவரோ மிகச்சிறிய ஊர்த்தலைவர் மட்டுமே. |
255 |
ஆகவே தயங்கிக்கொண்டிருந்தார். பன்னிருவரும் தங்கள் தூதரை அனுப்பி உடனே அவளை மணமுடித்து தரும்படி கேட்டார்கள். வேறு வழி தெரியாத அவள் தந்தை ஒரு சூழ்ச்சி செய்தார். அவளை மணமகளாக அலங்கரித்து அனைத்து ஆபரணங்களையும் அணிவித்து காட்டுக்கு கூட்டிச் சென்று அங்கிருந்த செண்பகமரக் காட்டுக்குள் அழைத்துச்சென்றார். |
256 |
மூத்த செண்பக மரத்தடிக்கு சென்றபோது சிறுமியான அவள் ஆவலுடன் குனிந்து தரையில் கிடந்த செண்பக மலர்களை பொறுக்கும்போது தன் வாளை உருவி அவள் கழுத்தை வெட்டி துண்டித்தார். இறந்த உடலை அங்கேயே ஆழ குழி தோண்டி புதைத்துவிட்டு திரும்பி வந்தார். நோயுற்று அவள் இறந்து விட்டதாக பன்னிரு மன்னர்களுக்கும் செய்தி அளித்தார். |
257 |
அதுவே யக்ஷியாயிற்று. அந்தக் குடும்பத்தின் தந்தை ஒரு நாள் தன் கட்டிலில் விழிகள் வெறித்து திறந்திருக்க ரத்தம் இல்லாமல் வெளுத்து செத்துக் கிடந்தார். குடும்பத்தில் உள்ள ஒருவர் கூட மிஞ்சாமல் அத்தனை பேருமே ஒரு வருடத்துக்குள் குருதி உறிஞ்சப்பட்டு கொல்லப்பட்டனர். அந்த வீடு கைவிடப்பட்டது. |
258 |
இடிபாடுகளாகி மட்கி சிதிலரித்து மறைந்தது. அதன் பிறகும் அவளுடைய வஞ்சமும், காமமும் அடங்கவில்லை. செண்ப க மரத்தின் கரையில் அவள் நின்றிருப்பாள். அந்த வழியாக இளைஞர்கள் யாராவது சென்றால் அவர்கள் முன் நிலவொளியில் மின்னும் அழகிய உடலுடன் வந்து நிற்பாள். அவர்களைக் கவர்ந்து செல்வாள். |
259 |
எல்லா அறைகளிலும் தீபங்கள் எரிந்து கொண்டிருக்கும். தன்னை அந்த வீட்டில் வாழும் குலமகள் என்று நம்பவைப்பாள். பேரழகு காட்டி அவர்களில் காமம் எழுப்புவாள். அவர்களை அவள் கூட்டிச்சென்று செம்பட்டு விரித்த மஞ்சமிடப்பட்ட அறைக்குள் கொண்டு செல்வாள். அந்த அறையில் அவர்களுடன் அவள் முயங்குவாள். |
260 |
அலறியபடி அவர்கள் தப்பி ஓட முயல அவர்களை இறுக அணைத்துக் கொண்டு அவள் அடங்காத காமம் கொண்டு கூச்சலிடுவாள். அதுவரை இருந்த பேரழகுத் தோற்றம் மறைந்து பனம்பட்டை போன்ற கூந்தலும், குருதி வழியும் கண்களும், சோழிகள் போன்ற பற்களும் பன்றித்தேற்றைகள் போன்ற கோரைப்பற்களுமாக கன்னங்கரிய பேருரு எடுத்து அலறுவாள். |
261 |
மறுநாள் சப்பப்பட்ட மாங்கொட்டை போல வெளுத்து அவர்கள் அந்த செண்பக மரத்தடியில் சடலமாகக் கிடப்பார்கள். நாய், நரி கடித்து இழுத்து தின்ற பிறகு வெள்ளெலும்பாக அவர்கள் மிஞ்சுவார்கள். அவர்களைத் தேடி வருபவர்கள் அந்த எலும்புகளைத்தான் கண்டெடுப்பார்கள். பலநூறு பேர் வெள்ளெலும்பான பின்னரும் அவள் காமம் அணையவில்லை. |
262 |
ஏமாற்றம் கொண்டு அது மேலும் வளர்ந்தது. நாளடைவில் அந்தப் பகுதியில் எவரும் செல்லாமல் ஆனார்கள். செண்பக யக்ஷியைப்பற்றி ஊரெங்கும் பேரச்சம் நிலவியது. அவள் செண்பக மரத்தின் மலர்களிலேறி அந்த மணத்துக்குள் ஒளிந்திருப்பாள். இரவின் தனிமையில், தென்றலில் அந்த மணம் மீது ஏறி ஊருக்குள் வருவாள். |
263 |
பருவத்தின் ஆசையால் தூக்கம் இழந்து விழித்திருக்கும் இளைஞன் யாராவது அந்த மணத்தை அறிந்தால் அதன் வழியாக அவள் வந்து அவனை இதழ் சேர்த்து முத்தமிடுவாள் அவள் காமத்தின் மணமறிந்த அவன் எழுந்து அவள் கைப்பற்றி பின் தொடர்ந்து செண்பகக்காட்டுக்குள் செல்வான். பிறகு வெள்ளெலும்புகளாகவே மிஞ்சுவான். |
264 |
துணிந்தவர்கள் கொல்லப்பட்டனர். அவளை வெல்ல எளிய மந்திரவாதிகளால் முடியாது என்றான பிறகு நெடுமங்காடு அருகே இருக்கக் கூடிய ஒரு தொன்மையான நம்பூதிரி மடத்திற்கு சென்று அங்குள்ள மூத்த மாந்தீரிகரிடம் முறையிடுவதாக அவர்கள் முடிவு செய்தார்கள். குழுவாகச் சென்று நம்பூதிரியைப் பார்த்தார்கள். |
265 |
அப்போது அவர் மரணப் படுக்கையில் இருந்தார். அவரது காலில் விழுந்து அவர்கள் மன்றாடினார்கள். தங்கள் கிராமமே அழிந்துவிடும். நிலமும் நீரும் வீணாக கிடக்கும் என்றும் குல மூத்தார்களும் தெய்வங்களும் பலியும் கொடையும் இல்லாமல் பரிதவிக்க நேருமென்றும் சொல்லி அழுதார்கள். அவர் மனமிரங்கினார். |
266 |
தன்னுடைய ஒரே மகன் விஷ்ணுவை அழைத்து அவனிடம் அந்த யக்ஷியை வென்று வரச்சொன்னார். அவனுக்கு மந்திரவாதமோ எதுவும் தெரியாது. வேதம் கற்றுக் கொண்டிருந்த இளைஞன் அவன். அவர் அவனிடம் ஒரு மோதிரத்தை அளித்து எக்காரணம் கொண்டும் அதைக் கையிலிருந்து கழற்றக்கூடாது என்றார். அதில் அவருடைய மந்திரம் பொறிக்கப்பட்டிருந்தது. |
267 |
இன்னொரு மஞ்சள் சரடைக் கொடுத்து அதை அவன் கையில் சுற்றிக் கொள்ளும்படி சொன்னார். அந்த யக்ஷியை எப்படியேனும் தலை குனியவைத்து அவள் தலைக்கு மேலாக அந்த மஞ்சள் கயிற்றை கட்டினால் அவளை அடக்க முடியுமென்றும் மோதிரத்தை கழற்றாமலிருப்பது வரை அவளால் அவனை ஒன்றும் செய்ய முடியாதென்றும் ஆணையிட்டார். |
268 |
விஷ்ணு இடுப்பிலொரு சங்கும் கையில் சுற்றிய மஞ்சள் கயிறும் விரலில் மோதிரமுமாக முழு நிலவு நாளில் செண்பக வனத்துக்கு வந்தான். ஊராரை பிரிந்து போக சொல்லிவிட்டு தனியாக நடந்து அந்த முதுசெண்பக மரத்தடியை அடைந்தான். அங்கே மரத்தில் சாய்ந்து நிலவொளியே ஒரு பெண்ணானது போல செண்பக யக்ஷி நின்றிருந்தாள். |
269 |
அவள் அவனை நோக்கி சிரித்தாள். அருகே வந்து நாணம் கொண்டு தலை குனிந்து ஒசிந்து நின்றாள். அவள் யாரென்று கேட்டான். அருகே இருக்கும் பழைய வீட்டில் குடியிருப்பதாகவும் அங்கு தாயும் தந்தையும் தம்பியரும் இருப்பதாகவும் சொன்னாள். அங்கே நூறு விளக்குகளுடன் ஒரு பெரிய மாளிகை ஒளிவிட்டுக் கொண்டிருப்பதை அவன் கண்டான். |
270 |
ஏன் இங்கு நிற்கிறாய்? என்று கேட்டான் இவ்வழியே எனது நாதன் வருவானென்று கனவு கண்டேன். ஒவ்வொரு நிலவு நாளிலும் இந்த செண்பக மரத்தடியில் அவனுக்காக காத்து நிற்கிறேன். இப்போது அறிந்தேன் அது நீங்கள் தான் என்று என்றாள். நாணமும் காமமும் கலந்த அவள் கண்களைக் கண்டு அவன் புன்னகைத்து ஆம் நானும் உணர்கிறேன். |
271 |
நீதான் என் மனம் தேடும் பெண். உனக்காகத்தான் நான் இவ்வழி வந்தேன் என்றான். வாருங்கள் என்று சொல்லி செண்பக மரக்காட்டுக்குள் அவனை அழைத்துச்சென்றாள். ஆனால் தொடவில்லை. கையில் என்ன அந்த மோதிரம் அது எனக்கு பிடிக்கவில்லை. அதைக் கழற்றி வீசுங்கள் என்றாள். இல்லை பிறகு கழற்றுகிறேன் என்றான். |
272 |
என்று கொஞ்சினாள். நீ சொன்னால் எதையும் செய்வேன். இப்போதல்ல சற்றுக் கழிந்து என்று அவன் சொன்னான். கழற்றுங்கள் என்று கெஞ்சினாள். கழற்றுகிறேன், என்ன அவசரம்? என்று அவன் தவிர்த்தான். கொஞ்சியும், ஊடியும், கனிந்தும் அதைக் கழற்றவைக்க அவள் முயன்றாள். அந்த அனைத்து முயற்சிகளையும் சாதுரியமாக அவன் தவிர்த்தான். |
273 |
அவள் அவனை செண்பகக்காட்டுக்குள் அழைத்துச்சென்றாள். அங்கே ஒரு பாழும் கிணறு இருந்தது. அந்தக் கிணற்றருகே வந்தவுடன் அவன் தன் மேலாடையை அதற்குள் விட்டான். அய்யய்யோ, என் மேலாடை கீழே விழுந்துவிட்டதே என்றான். இதுஎன்ன பெரிய வேலை, நான் எடுத்து வருகிறேன். பதிலாக அந்த மோதிரத்தை கழற்றுவீர்களா? என்றாள். |
274 |
அவள் அந்தக் கிணற்றுக்குள் இறங்கியவுடனே அதற்கு மேல் அந்த மஞ்சள் கயிறை நீட்டி இருநிலைகளையும் முடிந்து அவன் கட்டி விட்டான். அதை உடைத்து அவளால் வெளியே வர முடியவில்லை. அதுவரை பேரழகுத்தோற்றம் கொண்டிருந்த அவள் பிடாரியாக மாறி கிணற்றின் சுவர்களை ஓங்கி அறைந்து ஓலமிட்டு கூச்சலிட்டாள். |
275 |
மூர்க்கம் கொண்ட பன்றி போல அந்தச் சிறு குழிக்குள் சுற்றிவந்தாள். அவன் தன் இடுப்பிலிருந்த சங்கை எடுத்து ஊதினான். அவ்வொலிக்காக காத்திருந்த ஊர்க்காரர்கள் ஓடிவந்து அவனைச் சூழ்ந்தார்கள். அவன் ஆணைப்படி அந்தக் கிணற்றை கல் வைத்து மூடி அதன் இடுக்குகளை அடைத்தனர். அதன் மேல் அவளை ஒரு சிறிய கற்சிலையாக நாட்டினான். |
276 |
எனக்கு ஒரு சொல் சொல்லிவிட்டு போங்கள். எப்போது என்னை விடுதலை செய்வீர்கள்? அவன் சொன்னான் நானோ, எனது வாரிசுகளோ இந்த ஊருக்குள் மறுபடி எப்போது கால் வைத்தாலும் உன்னை விடுதலை செய்வார்கள். அதன்பின் உன்னை எவருமே கட்ட முடியாது. இது ஆணை ஆணை ஆணை என்று மூன்று முறை மண் தொட்டு சத்தியம் செய்தான். |
277 |
வழியெல்லாம் அவன் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. சிறு வயதில் பலமுறை பல கோணங்களில் கேட்ட இந்தக்கதை என்னை பெரிய கனவுகளுக்குள் ஆழ்த்தியிருக்கிறது. ஓவ்வொரு முறையும் செண்பகவனத்து அம்மன் கண்களை சென்று பார்க்கும்போது நானறிந்த அத்தனை கன்னியரும் மனைவியரும் அன்னையரும் நினைவில் வந்து போகிறார்கள். |
278 |
கட்டுண்டவர்கள். முடிவில்லாமல் காத்திருப்பவர்கள். நச்சுத்தெய்வம் என் அம்மா முதல்முறையாக கர்ப்பம் தரித்திருந்த போது ஒருநாள் அரிசிப்பானையை திறந்தபோது உஸ்ஸ் என்ற ஒலியுடன் பாம்பு ஒன்று சீறி எழுந்தது. அம்மா பின்னால் நகர இடமில்லை. அத்தனை சிறிய பத்தாயப்புரை அது. முழங்கையளவு தடிமனான பெரிய நாகப்பாம்பு. |
279 |
படம் விரித்து, நாக்கு பறக்க அது அம்மாவை பார்த்தது. அம்மா கைகூப்பியபடி நின்று நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய அசைவு அப்படியே பாம்பிலும் எதிரொளித்தது. தீச்சுடர் காற்றிலாடுவதுபோல. பின்னர் அது பத்தி தாழ்த்தி பானைக்குள் இருந்து இறங்கி அம்மாவின் உள்ளங்காலில் ஏறி கடந்து சென்றது. |
280 |
பாம்பு செல்வதைப் பார்த்து பாட்டி அலறியபடி ஓடி வந்து பார்த்தபோது அம்மா சிலைபோல கண்விழித்து உறைந்து நின்றிருந்தாள். பாட்டி தொட்டதும் அப்படியே தழைந்து பாட்டியின் கையில் விழுந்தாள். நாகம் அம்மாவுக்கு ஆசி வழங்கிவிட்டுச் சென்றது என்று பாட்டி சொன்னாள். நாகராஜனே, உன்னை தேடிவந்து சாந்தி செய்கிறேன். |
281 |
பிள்ளையை நல்லபடியாக பெற்றுக் கொடுக்கச்செய் என்று வேண்டிக்கொண்டாள். அதன்படி நாகங்களுக்குரிய ஆவணி மாதம் ஆயில்யம் நாளில் சனிக்கிழமை அன்று ஆண்பிள்ளை பிறந்தது. அந்த இணைப்பு மிக அபூர்வம் என்றனர். ஆகவே நாகர்கோயில் நாகராஜா கோயிலுக்குச் சென்று மஞ்சள் பாலூற்றி நேர்த்திக்கடன் கழித்தார்கள். |
282 |
அண்ணனை ஊரில் இன்றும் ராஜன் என்றால்தான் தெரியும். அண்ணனுக்கு ஒருவயதிருக்கையில் அவன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் குரைக்கும் ஒலி கேட்டு ஓடிவந்து பார்த்த அம்மா அவன் எட்டடி நீளமான நாகப்பாம்பின் வாலைப்பிடித்து இழுப்பதையும் அது வளைந்து வளைந்து அவனுடன் விளையாடுவதையும் கண்டு அலறினாள். |
283 |
அண்ணா வாலை விட்டுவிட்டு டான்ஸ்குச்சி என்று பாம்பைச் சுட்டிக்காட்டிச் சொன்னான். அம்மா மயங்கி விழுந்துவிட்டாள். பிறிதொருமுறை அண்ணனுக்குக் கடும் காய்ச்சல் வந்து மயக்கமாக கிடந்தபோது அம்மா அழுதபடியே சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது படியில் மூன்று மடிப்பாக கிடந்த நாகத்தைப் பார்த்தாள். |
284 |
அவன் உனக்கு மட்டும் பிள்ளையில்லடீ. நாகம் அவனை காப்பாத்தும் என்றாள் பாட்டி. ஆயில்யம் நாளில் பிறந்தவர்கள் நாகங்களுக்குரிய முன்கோபமும் பெரும் அன்பும் கொண்டிருப்பார்கள் என்று சொல்வார்கள். அது எப்படி பொருந்துகிறதென்று நான் பார்த்ததில்லை. என் அண்ணன் அந்தக் குணங்களை முழுமையாகக் கொண்டவர். |
285 |
தந்தைக்குப்பின் அவரே என் தந்தையாக இருந்து வருகிறார். எங்கள் குடும்பத்திலேயே நாகம் பற்றிய கதைகள் பல உண்டு. முன்பு ஒரு மூதன்னைக்குப் பிரசவம் பார்த்த வயற்றாட்டி பிள்ளை முதலில் வெளியே வர கூடவே கருவறைக் குருதியில் வாலை அளைந்து நெளிந்தபடி ஒரு பாம்பும் வருவதைக் கண்டு அலறியபடி மயங்கி விழுந்தாள். |
286 |
பலமுறை அந்தப்பாம்பு அவள் கனவில் வந்திருந்தது. நீங்கள் விலகுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அவள் அந்தக் குழந்தையையும் பாம்பையும் எடுத்து மார்புடன் அணைத்துக்கொண்டாள். ஒருமுலைக்காம்பில் பிள்ளையும் மறுமுலைக்காம்பில் பாம்பும் பால்குடித்தன. மூன்றுமாதம் அவளுடன் குழந்தை போல இருந்தது பாம்பு. |
287 |
ஆனால் அந்த மூதாதை வளரும்போது ஒவ்வொரு கணமும் பாம்பின் துணை இருந்தது. ஒருமுறை அக்குழந்தை போட்டிருந்த கடுக்கன்களுக்காக அதைத் தூக்கிச்சென்றான் கள்வன் ஒருவன். புதரில் கொண்டுசென்று அதைக் கொன்று கடுக்கனைக் கழற்ற அவன் நினைத்தபோது தொடர்ந்து வந்த ராஜநாகம் அவனைக் கடித்துக் கொன்றது. |
288 |
சற்றுநேரத்திலேயே கடித்த பாம்பு நெளிந்து வளைந்து தேடிவரும். கடிவிஷத்தை திரும்ப உறிஞ்சி எடுத்து நோயாளியைக் காப்பாற்றும். அந்தப்பாம்பு வீட்டுமுற்றம் வரை இன்னொரு ராஜநாகத்தால் இழுத்துவரப்படுவதை கண்டதாக கதைகள் சொல்வார்கள். ஒருமுறை அரசருக்கு நெருக்கமான ஒருவருக்கு அரசரின் படைகளால் விஷம் வைக்கப்பட்டது. |
289 |
தலைமைக்காவலனை காலில் தீண்டிக் கொன்றது. அன்று அரசர் தன் படுக்கையறைக்குச் சென்றபோது தூங்கிக்கொண்டிருந்த தன் பட்டத்து இளவரசரின் மார்பில் ஒரு ராஜநாகம் சுருண்டு படம் தூக்கி நிற்பதைக் கண்டார். அவரைக் கண்டதும் பிள்ளையை கொத்த தலையை ஓங்கியது. கொல்லாதே, என்ன வேண்டுமென்றாலும் செய்கிறேன் என்று அவர் கூவினார். |
290 |
மூன்றுமுறை ஓங்கிவிட்டு திரும்பி வழிந்தோடிச் சென்று மறைந்தது. பின்னர் அரசு சோதிடர்கள் களம் வரைந்து சோழி உருட்டி அந்தப்பாம்பின் கோரிக்கையை கண்டறிந்தனர். அவர்கள் வழிகாட்ட அரசர் நேரில் மூதாதையை வீடுதேடி வந்து அரசமரியாதை செய்து மன்னிப்பு கோரினார். பரிசுகளும் நிலமும் அளித்தார். |
291 |
வயது முதிர்ந்து அவர் இறந்தபோது நாகம் தேடிவரும் என எதிர்பார்த்தனர். அவரை சிதையில் வைத்து நெருப்பிட்ட போது அருகே இருந்த புதருக்குள் இருந்து வயது முதிர்ந்து உடல் குறுகிய ராஜநாகமும் தவழ்ந்து வந்து அந்தச் சிதையில் ஏறி எரிந்தது. அதற்கும் பாலூற்றி முறைப்படி நீர்க்கடன்கள் செய்தனர். |
292 |
கேரளமும், நிலப்பரப்பில் அதன் பகுதியான குமரிமாவட்டமும் பசுமைமாறாக் காடுகளைச் சேர்ந்தவை. ஆகவே பாம்புகள் மிகுந்தவை. இந்தியாவில் ராஜநாகம் இருக்கும் மிகச்சில இடங்களில் ஒன்று குமரிமாவட்டத்தில் உள்ள முத்துக்குளி வயல் காடு. பிறபாம்புகளை உண்ணும் ராஜநாகம் பாம்புகள் மலிந்த இடங்களில்தான் வாழும். |
293 |
பாம்பைப் பார்க்காமல் ஒருநாள் கூட கடந்துசென்றதில்லை. நீர்க்கோலிகள் என்னும் தண்ணீர்ப்பாம்புகளையும் பச்சைப்பாம்புகளையும் பிடித்து சுருட்டி பொட்டலமாக ஆக்கி கால்சட்டைப் பையில் வைத்திருப்போம். வகுப்பில் திறந்துவிட்டு கலவரத்தை உருவாக்குவோம். சாரைப்பாம்பு எங்களுக்கு நாய்போல வளர்ப்புப் பிராணி. |
294 |
கடும்பசி கொண்ட அது இருக்குமிடத்தில் நச்சுப்பாம்புகள் வராதென்பதனால் சாரைப்பாம்பு முட்டைகளை தேடிச்சேர்த்து வீட்டுத்தோட்டத்தில் போடுவோம். திருவரம்பில் எங்கள் வீட்டிலேயே சாரைப்பாம்புகள் பல வாழ்ந்தன. பத்மநாபபுரத்தில் நான் வாழ்ந்த வீட்டுக்குள் மாடிப்படிக்கு அடியில் ஒரு சாரைப் பாம்பு வாழ்ந்தது. |
295 |
என் மகள் சைதன்யா அதை எச்சில் ஒழுக ஆம்பு ஆம்பு என துரத்தியபடி தவழ்ந்து செல்வாள். இன்று நான் வாழுமிடமே பாம்புகளின் மையம்தான். இப்போது ஒரு மாலைநடை சென்று ஒரு பாம்பைப் பார்த்துவிட்டு வந்துதான் இதை எழுதுகிறேன். இந்த நிலப்பகுதியில் பழங்காலத்தில் கிழங்குகள்தான் முதன்மை உணவு. கிழங்குகளுக்கு முதல் எதிரி எலி. |
296 |
ஆகவே பாம்புகள் மிக அவசியமான வேளாண்மைத் தோழர்கள். அத்துடன் பாம்புகள் மேல் உலகம் முழுக்க மனிதனுக்கு பெரும் கவர்ச்சி இருந்துள்ளது. கால்கள் இல்லாத இந்த உயிர் மிகவிரைவாக செல்லக்கூடியது. காதுகள் இல்லாத இது மிக நுட்பமாகக் கேட்கக்கூடியது. நகமோ கொம்போ இல்லாத இது யானையைக் கொல்லும் ஆற்றல் கொண்டது. |
297 |
தீயின் நெளிவும் நீரின் நெளிவும் ஒர் உயிரில் நிகழ்வதைப்போல அற்புதம் பிறிதென்ன? நாகம் பற்றிய தொன்மம் இல்லாத பண்பாடுகளே உலகில் இல்லை. இந்தியாவில் நாகம் எப்போதுமே வழிபடுதெய்வமாக, குலக்குறியாக இருந்துவந்துள்ளது. நாகர்கள் என்ற மக்கள் இந்தியாவின் நிலம் முழுக்க பரவி இருந்திருக்கிறார்கள். |
298 |
இன்று நாகர்கள் என்றபேரில் ஓர் இனம் வடகிழக்கிலேயே எஞ்சியிருக்கிறது. தமிழிலக்கியங்களில் பல தீவுகள் நாகர்களுடையவையாகச் சுட்டப்படுகின்றன. நாகநாடு என பல மலைநாடுகள் சொல்லப்படுகின்றன. நாகன், இளநாகன் போன்ற பெயர்கள் பழந்தமிழ்நாட்டில் சாதாரணமாக இருந்துள்ளன. இந்து தெய்வங்களில் நாகங்களுடன் தொடர்பற்றவை அரிது. |
299 |
பிள்ளையாரின் இடைக்கச்சை. தேவியின் கையில் கங்கணம். நாகம் நாம் அன்றாடம் வணங்கும் தெய்வம். நாக சன்னிதி இல்லாத ஆலயங்கள் இல்லை. நாகம் இந்துமதத்தின் பெருங்குறியீடுகளில் ஒன்று. ஒன்றை ஒன்று விழுங்கும் இருநாகங்கள் சித்தும் ஜடமும் கருத்தும் பொருளும் கொள்ளும் முடிவிலா உறவைச் சுட்டுகின்றன. |
300 |
வால்சுற்றி முகத்தோடு முகம் நோக்கி நிற்கும் நாகங்கள் காலமும் வெளியும். சமண மதத்திலும் நாகங்கள் முக்கியமானவை. சமண தீர்த்தங்காரரான பார்ஸ்வநாதரின் சின்னம் பாம்பு. அவர் தலைக்கு மேல் ஐந்துதலைநாகம் பத்தி விரித்திருக்கும். தமிழகத்தில் சமணம் வேர்விட்டபோது இங்கிருந்த நாகவழிபாடு அப்படியே சமணத்திற்குள் சென்றது. |
301 |
முதிர்ந்த நாகத்தின் நாவிலேயே அது உருவாகியிருக்கும். ஒரு நாகம் தன் நஞ்சை வாழ்நாள் முழுக்க ஒருமுறை கூட எதையும் கடிக்காமல் சேர்த்து வைத்தது என்றால் அது இறுகி ஒளிகொண்டு மணியாகிறது. நாகமணி கொண்ட பாம்பு நாகங்களில் ஒரு யோகி. அதற்கு சிவன் நேரில் தோன்றி முக்தியளிப்பார் என்கின்றன தொன்மங்கள். |
302 |
இவர்கள் இப்பகுதியை சங்ககாலத்தில் ஆட்சிசெய்த ஆய் மன்னர்களின் மரபைச் சேர்ந்தவர்கள் என்றும் பின்னாளில் திருவிதாங்கூர் அரசின் அமைப்புக்குள் ஒரு நிலைப்படையாக மாறினர் என்றும் சொல்வார்கள். குதிரைப்பந்தி விளை என்னும் ஊரில் ஒரு திரு விழாவில் வில்லுப்பாட்டு ஒன்று பாடப்படுவதைக் கேட்டேன். |
303 |
அது ஒரு கட்டிலின் கதை. இப்பகுதியைச் சேர்ந்த பெரியபண்டாரம் என்பவர் நூறுவேலிநிலத்தில் வாழை நட்டிருந்தார். முறைப்படி பத்மநாபபுரத்தில் உள்ள இல்லத்து வீட்டுப் போற்றி என்பவரை அழைத்துவந்து பூசைமுறைகள் செய்து நடப்பட்ட வாழை. மலையடிவாரம் என்பதனால் விலங்குகளின் தாக்குதல் அதிகம். காற்று வீச்சு அதிகம். |
304 |
அத்தகைய ஒரு குலை அதற்கு முன்பு காய்த்ததில்லை என்பதனால் அனைவரும் வந்து அதை பார்த்து சென்றனர். அதை பத்மநாபபுரம் நீலகண்டசாமிக்குக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும் என்று பெரியபண்டாரம் முடிவுசெய்திருந்தார். ஒருநாள் அந்த குலை மறைந்தது. அது எப்படி காணாமலாகியது என்று அனைவரும் திகைத்தனர். |
305 |
வாழையுடன் பிடுங்கப்பட்டிருந்தது. குலையை கொண்டு சென்றவர்களின் காலடித்தடம் சேற்றில் இருக்கவுமில்லை. பெரியபண்டாரம் அங்கிருந்த அனைவரையும் விசாரித்தபோது ஒரு மூளை வளராத சிறுவன் மனிதன் அளவுக்கே பெரிய பச்சைக்கிளி ஒன்று வாழையை குலையுடன் தூக்கியபடி பறந்து சென்றதை கண்டதாகச் சொன்னான். |
306 |
மலைக்காட்டுக்குள் ஏதோ வினோதமான பறவை வந்திருப்பதாக நினைத்து பெரிய பண்டாரத்தின் ஆணைப்படி பச்சை வாழைத்தண்டுகளையும் சருகுகளையும் போட்டு பெரிய புகைமூட்டத்தை எழுப்பி காற்றில் காட்டுக்குள் விட்டனர். பறவைகள் கலைந்து எழுந்து வந்தால் கொல்வதற்காக அம்பும் வில்லுமாகக் காத்து நின்றனர். |
307 |
ஆனால் கிளம்பிவந்தவை அவர்கள் அதுவரைக் கண்டிருக்காத சிறிய பூச்சிகள். அவை அவர்களை கடித்ததுமே நஞ்சேறி பலர் உயிர்துறந்தனர். எஞ்சியவர்கள் ஓடி வீடுகளுக்குள் புகுந்துகொண்டனர். விஷப்பூச்சிகள் வந்து அவர்களின் ஊரைச் சூழ்ந்துகொண்டன. எவரும் வெளியே செல்ல முடியவில்லை. அவற்றின் கடிபட்டவர்கள் உயிரிழந்தனர். |
308 |
இது வெறும் பூச்சித்தாக்குதல் அல்ல. இத்தகைய பூச்சிகளை இதற்கு முன்னால் பார்த்ததே இல்லை என்று அவர்கள் உணர்ந்தனர். இரவுகளில் தெருக்களில் எவரோ ஓடும் ஒலிகளும் கூச்சலிடும் குரல்களும் கேட்டன. மலையில் தீ எரிந்து எரிந்து அணைந்தது. கதவுகளை விடிகாலையில் காற்று போல வந்து எட்டி உதைத்து அதிரச்செய்தன ஏதோ சக்திகள். |
309 |
அந்த வாழைக்குலையை பெரிய பச்சைக்கிளியாக வந்து கொண்டு சென்றவள் அவளே. அவள் எடுத்த கொடை அது என்று அறியாமல் அவளை பழித்ததுதான் அவள் கோபத்துக்குக் காரணம். பத்மநாபபுரம் அருகே உள்ளது மேலாங்கோட்டு அம்மனின் கோயில். போற்றியின் ஆலோசனைப்படி அங்கே சென்று பிழை பொறுக்கும்படி கோரி குருதி பலிகொடுத்து வணங்கினார்கள். |
310 |
அனைத்தும் சீராயிற்று. பிற வாழைக்குலைகளுக்கு இசக்கியம்மனின் காவல் இருந்தமையால் கள்ளர் பயமும் இல்லாமலாகியது. போற்றிக்கு காணிக்கையாக அருகே உள்ள வேளிமலையின் உச்சியில் நின்றிருந்த முந்நூறாண்டு வயதான காஞ்சிரமரம் ஒன்றை வெட்டிக்கொண்டு வந்து அதைக் கடைந்து ஒரு அரிய கட்டில் செய்தனர். |
311 |
பெரியமரமாக வளராது. அவ்வாறு வளர்ந்த மரத்தின் கட்டை மிக அரியது. அதில் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் வாதநோய் வருவதில்லை. அதன் கசப்பு சுவைக்கு அந்த மருத்துவகுணம் உண்டு. பண்டைக்காலத்தில் வீடுகளின் கூரையை சுவரில் நிறுத்தும் அடிக்கட்டைகளை காஞ்சிரத்தில் அமைப்பார்கள். அதில் கறையான் ஏறாது. |
312 |
ஏனென்றால் அதில் மலைவாதை தெய்வங்கள் குடியிருக்கும். அவற்றை மந்திரம் செய்து விலக்கி விட்டே வெட்டிக்கொண்டு வரவேண்டும். அதற்குத் தச்சுகழித்தல் என்று பெயர். ஆர்வம் காரணமாக அதைச்செய்யாமல் மரத்தை வெட்டிக் கொண்டுவந்தனர் குறுப்புகள். ஏனென்றால் முந்நூறாண்டு வயதான எட்டி மரம் கிடைப்பது அரிதினும் அரிது. |
313 |
அந்த எட்டி மரத்தில் ஒரு மலைத்தெய்வம் குடியிருந்தது. அந்த மலை இசக்கியம்மன் கட்டிலில் குடிபுகுந்தாள். போற்றி கட்டிலைத் தன் வீட்டிற்குக் கொண்டு சென்றார். உறவினர்கள் எல்லோரும் வந்து கட்டிலை வியந்து பார்த்தனர். திருவிதாங்கூர் அரசருக்கும் அத்தகைய கட்டில் இல்லை என்று அவர்கள் பெருமைகொண்டனர். |
314 |
அவள் விளக்கைக்கொண்டு வந்தபோது தன் கணவனின் சடலத்தைத்தான் பார்த்தாள். போற்றியின் கடைசிச்சடங்கு நடந்தபின் அந்தக்கட்டிலை அவரது மனைவியின் தம்பியும் அவரது சொந்தத் தம்பியும் கேட்டு பூசலிட்டனர். அவருக்கு பிள்ளைகள் இல்லை. விதவை கட்டிலில் படுக்க முடியாது. ஆகவே கடைசியில் கட்டில் அவர் தம்பியிடம் சென்றது. |
315 |
அவரது மகன் பயந்து போய் அந்தக்கட்டிலை வண்டியில் ஏற்றி திருவிதாங்கூரில் இருந்த போற்றியின் மனைவியின் தம்பியின் இல்லத்திற்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டான். அவர் அதில் தன் மனைவியுடன் இரவில் படுத்தார். மனைவி இருட்டில் தன் கணவனுக்கு அப்பால் இன்னொரு பெண் வந்து அமர்வதைக் கண்டு எழுந்து அமர்ந்தாள். |
316 |
யார்? என்று கேட்டபோது அந்தப்பெண் சிரித்தாள். அவள் வாய்க்குள் ஒரு விளக்கு எரிந்ததுபோல அச்சிரிப்பு ஒளிவிட்டது. கண்கள் கனல் போலத் தெரிந்தன. அவள் அலறியபடி மயங்கிவிழுந்தாள். காலையில் கண்விழித்து எழுந்து பார்த்தபோது தன் கணவன் உடல் வலிப்பு கொண்டு இறுகி நின்றிருப்பதைக் கண்டாள். |
317 |
தொட்டுப் பார்த்தபோது அவர் செத்துவிட்டிருப்பது தெரிந்தது. போற்றியின் உறவினர்கள் கூடி தங்களின் குடும்பத்தை அழித்த கட்டிலை விற்றுவிட முடிவு செய்தனர். யாருக்கும் எதுவும் சொல்லாமல் இரணியலருகே திங்கள்சந்தைக்கு கட்டிலைக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு நாடார் வியாபாரியின் மூலம் கட்டிலை விற்க ஏற்பாடு செய்தனர். |
318 |
அவர் கட்டிலின் அழகைப் பார்த்து நல்ல விலை கொடுத்து வாங்கிச் சென்றார். முத்துவேலன் கட்டிலை வீட்டிற்கு கொண்டு சென்று பாதுகாப்பான அறையில் வைத்தார். அன்று இரவு அவர் அதில் படுத்ததுமே அவர் அறைக்குள் வரிசையாக பல நிழல்கள் நுழைந்தன. வெளியே எரிந்த பந்தங்களின் ஒளியில் நிழல்கள் சுவரில் நடனமிட்டன. |
319 |
அவை கூச்சலிடுவதை அவர் கேட்டார். அவரால் எழ முடியவில்லை. கட்டில் அவரை இறுகப்பிடித்து சேர்த்து வைத்திருந்தது. அவர் மூக்கில் ரத்தம் வழிய இறந்தார். முத்துவேலனின் மனைவியும் அவள் பிள்ளைகளும் புத்தளத்திலிருந்த சோதிகிரி என்ற மந்திரவாதியை அழைத்துவந்து வெற்றிலை மை போட்டு குறி பார்த்தனர். |
320 |
உடனே முத்துவேலனின் மக்கள் கட்டிலை ஊர்ச் சுடுகாட்டுக்குக் கொண்டுசென்று முத்துவேலனின் சிதைக்குழியில் வைத்து எரித்துவிட்டனர். சிதையிலும் கட்டில் அடங்கவில்லை. சிதைக்குழியில் எரிந்த கட்டிலின் கால் ஒன்று தீயின் வேகத்தால் தெறித்து விழுந்தது. அது ஒரு வேலிச்செடியின் மீது விழுந்து தொங்கியது. |
321 |
நாடாத்தியின் இறப்பிற்கு காரணம் தெரியாமல் திகைத்தனர். அவள் கைகள் முட்டிபிடித்து நகங்கள் கைவெள்ளையில் இறுகியிருந்தன. பற்கள் கோத்திருந்தன. ஆகவே அவளை ஏதோ வாதை தாக்கியிருக்கலாமென்று ஊகித்தனர். ஊர்கோவில் சாமியாடி சன்னதம் வந்து காட்டிசக்கி கட்டில் கால் வழியே இங்கு வந்துவிட்டாள். |
322 |
மக்களுக்கு அருள்புரியும் தெய்வமாக அவள் ஆனாள். அவளுடைய பயணத்தைத்தான் கட்டிலவதானம் கதை என்னும் வில்லுப்பாட்டு பாடுகிறது. ஒரு பொருள் தெய்வவடிவம் ஆகமுடியும் என்றால் பேய்வடிவமும் ஆகமுடியும். சிலை வழிபாடு என்பதன் பொருள் வெறுமே மேலோட்டமான தர்க்கம் கொண்டவர்களுக்குப் புரிவதில்லை. |
323 |
அவர்கள் வெட்டி நாத்திகம் பேசுவார்கள். அதைப்புரிந்துகொள்ள ஒன்று கீழைநாட்டு இந்து, பௌத்த,சமண சிந்தனைகளில் அறிமுகம் இருகக்வேண்டும் அல்லது மேலைநாட்டு உருப்பொருள் கொள்கை அல்லது கார் யுங்கின் ஆழ்படிமக் கொள்கை போன்றவற்றில் அறிமுகம் இருக்கவேண்டும். கீழைமரபில் விக்ரகம் என்பது கிரகிப்பதற்கான வழி. |
324 |
நாம் கனவில் அறியும் ஒன்றை எத்தனை சொன்னாலும் சொல்லிவிடமுடியாது. ஓவியமோ சிலையோதான் ஒரே வழி. கனவுக்கும் அப்பாலுள்ளவற்றைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. ஆகவேதான் உலகம் முழுக்க சிலைகள், அடையாளங்கள், குறியீடுகள் மனிதனின் உள்ளத்தையும் உள்ளத்தின் ஆழத்தையும் விளக்கும் முக்கியமான வழியாக இருக்கின்றன. |
325 |
குறியீடுகளுக்காகத் தான் மனிதர்கள் போரிடுகிறார்கள். உருப்பொருள் கொள்கையின் படி நாம் காணும் மொத்த உலகமே அர்த்தம் ஏற்றப்பட்ட பொருட்களால் ஆனதுதான். வெறும் பொருள் என எதையுமே நாம் காண்பதில்லை. கட்டில் என்றாலே காமம், ஓய்வு, மரணம், நோய், முதுமை என பல அர்த்தங்கள் நமக்குள் ஓடும். |
326 |
அந்த அர்த்தங்களையும் சேர்த்துத்தான் நாம் கட்டில் என்னும் போது பேசுகிறோம். நாளைக்கு கட்டிலிலே போறப்ப தெரியும்ல? என்று ஒருவர் சொன்னால் அதன் அர்த்தம் என்ன என நாம் அறிவோம். இதற்கும் அப்பால் உள்ளது ஆழ்படிமம். அது ஒரு சமூகத்திற்கே ஒட்டுமொத்தமாக ஆழ்மனதில் குடிகொள்ளும் சில அர்த்தங்கள். |
327 |
மஞ்சள்நிறமே எப்படியோ மங்கலமாக ஆழ்மனதில் நிலைபெற்றுள்ளது. இந்தக் கதையை புரிந்து கொள்ள மேலே சொன்ன வழிகளில் சிந்திக்கவேண்டும். காட்டில் தங்குதடையற்று வளர்ந்த மாபெரும் மரத்தை ஒரு வீட்டு உபயோகப் பொருளாக ஆக்குவது நாம் ஒவ்வொரு முறையும் செய்துகொண்டிருப்பது. காடுகளை அழித்து நகரங்கள் ஆக்குகிறோம். |
328 |
நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி கள்ளியங்காடு என்று அழைக்கப்பட்டது. இதன் அருகே இருக்கும் கணியாகுளம் என்ற விவசாய கிராமம் தவிர இப்பகுதியில் மக்கள் வாழ்க்கை அன்று அனேகமாக இல்லை. பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு இவ்வழியாக அதன் கால்வாய் வந்தபோது இந்நிலமெல்லாம் வயலாகியது. நகரம் வளர்ந்தபோது புறநகராகியது. |
329 |
கள்ளியங்காடு பலவகையில் வரலாற்றுப் புகழ் பெற்றது. ராணி மங்கம்மாவின் படைகள் பழைய திருவிதாங்கூரைத் தாக்கியபோது இரவிக்குட்டிப்பிள்ளை என்ற திருவிதாங்கூரின் தலைமைத் தளபதி தன் படைகளுடன் வந்து அப்படைகளை எதிர்கொண்ட இடம் இது. திருவிதாங்கூரின் உள் அரசியலின் விளைவாக வஞ்சத்தால் அவர் கொல்லப்பட்டார். |
330 |
அப்போரில் ஈடுபட்ட இஸ்லாமியத் தளபதி ஒருவர் பின்னர் சூஃபி ஆனார். அவரது தர்கா வயலுக்குள் உள்ளது. அவரது குதிரைக்கும் ஒரு சமாதி உள்ளது. இந்தப் போர் வரலாற்றின் காரணமாக கள்ளியங்காடு அக்காலம் முதல் மனிதர் அணுக முடியாத ஒரு பகுதியாகவே இருந்தது. ஆனால் கள்ளியங்காட்டுக்கு அதற்கும் முன்னரே ஒரு நீண்ட வரலாறு உண்டு. |
331 |
கள்ளியங்காட்டு நீலி என்று அழைக்கப்படும் ஒரு தெய்வத்தின் கோயில். தெய்வம் என்றால் படைத்துக் காத்து அருளும் விண் வாழும் தெய்வமல்ல. மண்ணில் காலூன்றி நின்று குரோதமும் சினமும் கொண்டு மனிதரைப் பார்க்கும் தெய்வம். நாட்டார் மரபில் அதைப் பேய்த் தெய்வங்கள் என்றும் நீத்தார் தெய்வங்கள் என்றும் சொல்வார்கள். |
332 |
அவள் குமரி மாவட்டத்தில் தலக்குளம் என்ற ஊரில் ஒரு நிலப்பிரபுவுக்கு மகளாகப் பிறந்தாள். பேரழகி. நற்குணங்கள் கொண்ட பெண். அவளுக்கு ஆயிரம் பொன் நகை செய்து வைத்திருந்தார் அவளுடைய தந்தை. தனக்கு நிகரான பெரும் செல்வன் ஒருவனுக்கே அவளை மணமுடித்துக் கொடுப்பதாக தந்தை எண்ணமிட்டிருந்தார். |
333 |
முற்றத்து வெயில் முகத்தில் படாமல் அவளைத் தந்தை வளர்த்ததாக நாட்டுப் புறப்பாடல் சொல்கிறது. அழகி, செல்வம் கொண்டவள், நற்குணம் கொண்டவள் என்பதே ஒரு வகையில் ஏதோ சில சக்திகளுக்கான ஒரு சீண்டல், ஒரு அழைப்பு என்று தோன்றுகிறது. அவளைத் தேடி பாண்டிய நாட்டிலிருந்து ஒருவன் வந்தான். பேரழகன். |
334 |
அதைவிட இனிய சொற்களைச் சொல்வதில் வல்லவன். அவள் தந்தையிடம் பட்டு விற்பதற்காக அவன் வந்தான். பட்டு தேர்வு செய்வதற்காக அவள் அவனருகே வந்தாள். அவளுடைய இனிய சொற்களால், ஒளி விடும் அழகிய கண்களால், அண்மையை அறிவிக்கத் தெரிந்த புன்னகையால் கவரப்பட்டான். பட்டு விற்கும்போது அவள் கையை அவன் தொட்டான். |
335 |
அதற்குச் சான்றாக ஒரு முத்திரை மோதிரத்தையும் காட்டினான். மனமகிழ்ந்த தந்தை அவனை தன் இல்லத்துக்கு அழைத்து உபசாரங்கள் செய்து மகளை மணமுடித்துக் கொடுத்தார். ஏழு நிலைப் பந்தலில் பொன்னாலான மாவிலைத் தோரணங்கள் கட்டி பட்டு விதானம் விரித்த மணப்பந்தலில் அமர்த்தி மகளைக் கைப்பிடித்துக் கொடுத்தார் தந்தை. |
336 |
அன்றில்கள் போலவும், இணை மான்கள் போலவும், துதிக்கை கோர்த்த யானைகள் போலவும் அவர்கள் காதல் கொண்டு மகிழ்ந்திருந்தனர். அதன் விளைவாக அவள் கருவுற்றாள். நிறை சூலி. நிறை மாத மனைவியை தன்னுடைய அன்னைக்குக் காட்டி அருள் பெற்று குலதெய்வத்தின் முன்னால் நிறுத்தி சில சடங்குகள் செய்ய வேண்டுமென்று அவன் சொன்னான். |
337 |
தந்தை அதற்கு ஆவன செய்தார். அவளுடைய அனைத்து நகைகளுடனும், மற்ற செல்வங்களுடனும் சீர்வரிசைகளையும் ஏற்றி அவளையும் ஒரு வண்டியில் உடன் அனுப்பி வைத்தார். அவ்வண்டியில் மனைவியை அமரச் செய்து பின்னால் நடந்து அவன் வந்தான். அவர்கள் பத்மனாபபுரம் வழியாக வில்லுக்குறி கடந்த போது அந்தி ஆகிவிட்டது. |
338 |
பயண அலுப்பால் அவள் பெரும் தாகம் கொண்டாள். தண்ணீர் வேண்டுமென்று கேட்டாள். கள்ளியங்காடோ ஒரு துளி நீர் இல்லாத வறண்ட கூழாங்கற்கள் பரவிய வெற்று நிலம். அவளைக் கைபிடித்து இறக்கி இங்கே அமர்க என்று சொன்னான். அங்கே ஒரு மாபெரும் கள்ளிச்செடி ஒற்றைக்காலில் நூறு கிளை விரித்து நின்றது. |
339 |
நீ ஓய்வெடு, நான் சென்று நீரள்ளி வருகிறேன் என்றான். நாகம்போல் நா தவிக்கும் தாகத்துடன் அவள் அமர்ந்திருக்க அவன் அவளை விட்டு விலகிச் சென்றான். நெடு நேரம் கழித்து மெதுவாக அவன் வந்து பார்க்கும் போது உடலெங்கும் பற்றி எரிந்த தாகத்தால் அவள் களைத்து அப்பாறையில் தலை சாய்த்து படுத்திருந்தாள். |
340 |
நீயே சாட்சி என்று சொல்லி அவள் உயிர் துறந்தாள். அவளுடைய நகைகள் அனைத்தையும் கழற்றி எடுத்துக் கொண்டு அவன் அந்த மாட்டு வண்டியில் ஏறி கள்ளியங்காட்டைக் கடந்து பாண்டி நாட்டுக்குள் நுழைந்தான். உண்மையில் அவன் பாண்டி நாட்டின் புகழ் பெற்ற பெரும் திருடர்களில் ஒருவன். அந்த மோதிரம் கூட திருடப்பட்டதுதான். |
341 |
வானைநோக்கி சிரித்துக்கிடந்தது மண்டை ஓடு. ஆனால் அவளுடைய தாகம் மட்டும் உடலில் இருந்து தனியாக பிரிந்து எழுந்தது. அடுத்த பௌர்ணமியில் அவ்வழியாக ஒரு வணிகன் வண்டியிலே சென்றான். அப்போது நிலவொளியில் எண்ணை பூசப்பட்டது போல ஒளிவிட்ட கள்ளிச் செடிகளின் நடுவே ஒரு பெண் இடையில் தன் குழந்தையுடன் நிற்பதைக் கண்டான். |
342 |
பேரழகி. ஒளிவிடும் அழகிய கண்கள் கொண்டவள். அவள் கூந்தல் சரிந்து தொடைக்கும் கீழே அருவி போலக் கொட்டி நெளிந்து கொண்டிருந்தது. குழந்தை சிரித்தபடி தன் வாய்க்குள் கையை விட்டு சப்பிக் கொண்டிருந்தது. இவ்வேளையில் இவ்வளவு அழகிய பெண் தனியாக கள்ளியங்காட்டில் நிற்பதெப்படி என்று அந்த வணிகர் வியந்தார். |
343 |
வண்டியை நிறுத்தும்படி வண்டிக்காரனிடம் சொல்லி வணிகர் தலையை வெளியே நீட்டினார். அவள் அருகே வந்து வணிகரே! வழி தவறி இக்காட்டிலே நிற்கிறேன். தங்கள் வண்டியின் பின்னே வந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னை அருகிருக்கும் ஊருக்குக் கொண்டு சென்று விட்டுவிடுங்கள் என்றாள். |
344 |
இந்த அழகிய பெண்ணை காட்டைக் கடப்பதற்குள் அடைந்துவிட வேண்டும் என்று அவர் மனம் கணக்குப் போட்டது. அவளை வண்டியில் ஏறும்படி கேட்டார். இல்லை. வண்டியில் நான் ஏறுவதில்லை. பின்னால் நடந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டாள். திரும்பத் திரும்ப வண்டியில் ஏறும்படி கேட்டுக் கொண்டும் கூட அவள் வண்டியில் ஏறவில்லை. |
345 |
சற்று தூரம் வந்தவுடன் அவள் வெற்றிலை ஒன்றை இடையிலிருந்து எடுத்து இந்தத் வெற்றிலைக்கு சற்று சுண்ணாம்பு கிடைக்குமா? என்று அவரிடம் கேட்டாள். அது பெண் ஆணிடம் பாலுறவுக்காக அழைக்கும் ஒரு குழூக்குறிச் சொல். அவளுடைய கண்களில் இருந்த ஒளியையும் இதழில் இருந்த புன்னகையையும் பார்த்து வணிகர் கிளர்ச்சியடைந்தார். |
346 |
மறுநாள் அவர்கள் கள்ளியங்காட்டைத் தேடி வந்தபோது ஓநாய்க்கூட்டம் உண்டு மிச்சம் விட்ட எலும்புகள் போல ஒரு சதை கூட இல்லாமல் வெள்ளை வெளேரென்று நக்கி உண்ணப்பட்ட எலும்புகளும் மண்டை ஓடுகளும் மட்டும் அந்தப் பாறைமேல் கிடந்தன. அத்துடன் அவளைக் கள்ளியங்காட்டு நீலி என்று அனைவரும் அழைக்க ஆரம்பித்தார்கள். |
347 |
கள்ளியங்காட்டில் நீலி இருப்பதை அத்தனை பேரும் அறிந்திருந்தாலும் கூட காமம் கொண்டவர்களை அது தடுக்கவில்லை. காமம் மீதூற அவளைக் காண்பதெற்கென்றே சென்றவர்களும் உண்டு. ஒரு குருதி அவளுக்கு ஒரு பௌர்ணமிக்குத் தான் தாங்கும். அணையாத பெருந்தாகத்துடன் அவள் கள்ளியங்காட்டில் நின்றிருந்தாள். |
348 |
அவனுக்கு அங்கு ஒரு கொலை செய்தது மறந்துவிட்டது. கள்ளியங்காட்டு நீலியிடம் இருந்து கவர்ந்த பணத்தால் மதுரைக்குச் சென்று வணிகம் செய்து பெரும் செல்வம் ஈட்டி பெரிய வணிகனாக மாறியிருந்தான். பொன்னிழைத்த பூண்வைத்த வண்டியில் அவன் வந்தான். உடன் இருந்தவள் அவன் மனைவி. அவள் நிறை சூலியாக இருந்தாள். |
349 |
எங்கோ பார்த்தது போல அவனுக்குத் தோன்றியது. அவனுடைய காமம் விழித்துக் கொண்டது. அருகே வந்தவுடன் இறங்கி அவளிடம் பெண்ணே நீ யார்? என்று கேட்டான். அவள் தன் தந்தை தாய் வணிகர்கள் பேரைச் சொல்லி அவர்களுடைய இரண்டாவது மகள் என்று சொன்னாள். அவனுக்கு அவருடைய முதல் மகளைத் தான் மணந்ததும், கொன்றதும் நினைவுக்கு வந்தது. |
350 |
வண்டியைச் சற்று ஒதுக்கி கள்ளியங்காட்டில் நிறுத்திவிட்டு இந்தப் பெண்ணிடம் சற்றுக் காமம் கொண்டாடி வந்தாலென்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. நீ ஏன் இங்கு நிற்கிறாய்? என்றான். என் கணவர் என்னை மாட்டு வண்டியில் அழைத்து வந்தார். இங்கு இறக்கி விட்டு விட்டுச் சென்றார். திரும்பி வரவில்லை. |
351 |
எனக்கு வேறு வழியில்லை என்றாள். அவன் நான் உன் தந்தையிடம் சேர்ப்பிக்கிறேன். உன் தந்தையை எனக்கு நன்றாகத்தெரியும் என்றான். அவள் மறைந்து போன என் அக்காவைத் தெரியுமா? என்று கேட்டாள். அவளை ஒரு பாண்டி நாட்டு வணிகன் திருமணம் செய்து கொண்டு சென்றான் என்று என் தந்தை சொல்லியிருக்கிறார் என்று சொன்னாள். |
352 |
அவள் கண்களில் மின்னிய வஞ்சத்தை அவன் கவனிக்கவில்லை. தெரியும். என் தம்பிதான் அவளைத் திருமணம் செய்து கொண்டு பாண்டி நாட்டுக்குக் கொண்டு சென்றான். இப்போது அவர்கள் அங்கே இன்பமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று அவன் சொன்னான். அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். |
353 |
அவன் அவளை தொடையைக்காட்டி அருகே வா என்று அழைத்தான். அவள் நாணி விலகிக் கொண்டு இங்கு உன் மனைவி இருக்கிறாள் என்றாள். அவள் சொன்ன குறிப்பைக் கொண்டு புரிந்து கொண்டு அப்படியானால் அப்படிச் செல்வோம் என்று அவன் காட்டைச்சுட்டிக்காட்டினான். ஆம் என்று அவள் மேலும் நாணம் கொண்டாள். அவள் பின்னால் அவன் சென்றான். |
354 |
கள்ளிப் புதர்கள் வழியாக அவனை அவள் அழைத்துச் சென்றாள். நிறை நிலாவின் ஒளியில் கள்ளியின் நிழல்கள் கூடக் கூர்மையடைந்திருந்தன. ஆனால் தன் மேல் ஒரு முள் கூடப் படாமல் அவள் சென்றாள். உன் மேல முட்கள் படுவதில்லையா ?என்று அவன் கேட்டான். முள்படாத உடல்கொண்டவள் நான் என்று சொல்லி சிரித்தாள். |
355 |
அந்தப் பாறை அருகே சென்ற போது அவனுக்குச் சற்று ஐயமேற்பட்டது. ஏனென்றால் அவன் கனவில் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்த பாறை அது. அவள் அந்தக் கள்ளிச் செடியை நோக்கி செல்வதைக் கண்டான். பயந்து திரும்பிவிடலாம் என்று நினைத்தால் அவனுடைய கால்கள் இரும்பு போல கனமாக மாறி அசைக்க முடியாதவையாக இருந்தன. |
356 |
தெரியும் என்று அவன் சொன்னான். இது சொன்ன சாட்சியைத் தெரியுமா? என்று கேட்டாள். அவன் தெரியும் என்று நடுங்கியபடிச் சொன்னான். ஒரு பெரிய சிரிப்பொலி கேட்டது. கூடவே ஒரு குழந்தை அழும் ஒலியும் இணைந்து கொண்டது. அவன் பார்த்தபோது அவள் அந்தக் கள்ளி மரத்தருகே இன்னொரு கள்ளி மரம் போல நின்றிருந்தாள். |
357 |
கள்ளிச் செடியில் கிளை முளைப்பது போல அவள் உடலில் இருந்து கைகள் எழுந்து கொண்டே இருந்தன. ஆயிரம் கைகள். அவன் அலறியபடி ஓட முயல்வதற்குள் அவள் அவனைப் பற்றிக் கொண்டாள். சிலந்தி இரையைக்கொண்டு செல்வது போல அவனை அள்ளி எடுத்து வானத்தில் கொண்டு சென்றாள். அவன் தலையை இளநீர் உடைப்பது போல உடைத்து அவன் மூளையை உண்டாள். |
358 |
அவன் உடலைக் கிழித்து அவன் ரத்தத்தை தன் தலையில் கொட்டி நீராடினாள். அவன் உடலில் இருந்த நிணத்தை அள்ளி தன் கூந்தலில் இட்டு நீவி குழல் முடித்தாள். அவனை உண்டு செரித்தபின் அவ்வெலும்புகளை தன் காதில் குழையாக அணிந்து கொண்டாள். அவன் மண்டையோட்டை அவன் தோலில் கோர்த்து தன் கழுத்தில் அணிகளாக அணிந்து கொண்டாள். |
359 |
மறுநாள் காலை அங்கு வந்த மற்ற வணிகர்கள் அங்கு வண்டிக்குள் ஒரு குழந்தை பிறந்திருப்பதையும், அந்த மனைவி அருகே இறந்து கிடப்பதையும் கண்டார்கள். அந்தக் குழந்தையை அவர்கள் எடுத்துக் கொண்டு சென்றார்கள். கள்ளியங்காட்டு நீலியின் கதையை எனது பாட்டி, அம்மா என வெவ்வேறு வடிவில் வெவ்வேறு பேர் சொல்லியிருக்கிறார்கள். |
360 |
நிலவில் முட்களின் நிழல்களும் ரத்தம் தேடும் கள்ளிக் காட்டில் ஒரு கீறல் கூட இல்லாமல் செல்லும் பட்டு உடல் கொண்ட ஒரு அழகி எனக்குள் எப்போதும் இருந்தாள். பிறகு தான் தெரிந்து கொண்டேன். கள்ளியங்காட்டு நீலியின் கதை சிறிய சிறிய மாற்றங்களுடன் தமிழகம் முழுக்க இருந்து கொண்டிருக்கிறது. |
361 |
தஞ்சாவூர் பகுதியில் பழையனூர் நீலி கதை என்று அதைச் சொல்வார்கள். இந்தக் கதைக்கு பிரபலமான பத்து வடிவங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். மிகத் தொன்மையான கதை நீலகேசியின் கதை. தமிழகத்தின் ஐந்து பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி. |
362 |
ஐந்து குறுங்காப்பியங்களாகிய உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, ஆகியவற்றில் நீலகேசி ஐந்தாவது. நீலகேசியின் கதை கள்ளியங்காட்டு நீலியின் இதே கதைதான். பாஞ்சால நாட்டில் உள்ள புண்டவர்தனம் என்ற ஊரில் சுடுகாட்டில் இடப்படும் உயிர்ப் பலியை முனிச்சந்திரன் என்னும் சமண ஞானி தடுத்தார். |
363 |
நீலி அவரை வழிமறித்தாள். தன் அழகுடல் காட்டி, இனிய சொல்காட்டி, நாணம் காட்டி அவரை அழைத்தாள். ஆனால் காமத்தை முழுமையாக வென்ற அவரை அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவள் அவரை பயமுறுத்த பார்த்தாள். கள்ளி மரம்போல ஆயிரம் கைகளைக் கொண்டு எழுந்து அவரை அச்சுறுத்தினாள். அவர் பயப்படவுமில்லை. |
364 |
முனிசந்திரர் தன்னுடைய இனிய குரலால் அவளை நோக்கி அருகரின் நாமத்தைச் சொல் என்றார். இந்த அகிம்சைச் செய்தியைக் கேட்டு அவள் அடங்கி அழகிய சின்னப் பெண்ணாக மாறி அவர் முன் நின்றாள். அந்த இளம் சிறுமியின் கைகளைத் தொட்டு வாழ்த்தி அவர் அவளைத் தன்னிடம் சேர்த்துக் கொண்டார். சமண முனிவரின் மாணவியாக நீலி சேர்ந்தாள். |
365 |
அதன்பிறகு அந்த நீலகேசி ஒரு சமணத்துறவியாக மாறி அங்கிருந்து கிளம்பிச் சென்று மதுரையிலும், புகாரிலும், காஞ்சியிலும் சென்று அங்கிருந்த பிற மதத்தைச் சேர்ந்த அனைத்து சமயக் குரவரிடமும் சமணக் கருத்துகளை முன் வைத்து விவாதித்து வென்றதை பற்றித்தான் நீலகேசி என்ற இந்தக் காப்பியம் சொல்கிறது. |
366 |
அன்றுவரை என்னுடைய உள்ளத்தின் இருண்ட ஆழத்திலிருந்த ஒரு தெய்வம் நானறியாத ஒரு பண்பாட்டின் ஒளிமிக்க மேல்பகுதியில் வந்து அமர்ந்திருக்கிறது என்பதைக் கண்டேன். ஒரு பேய் தெய்வமாகிறது. குருதித்தாகம் கொண்ட ஒரு இருப்பு அகிம்சையை உலகுக்கு உணர்த்துகிறது. இந்த முரண்பாடு மிகக் கூர்மையாக கவனிக்கத் தக்கது. |
367 |
ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் பக்கத்தில் ஒரு காவல் யக்ஷி அமர்ந்திருக்கிறாள். உதாரணமாக பார்ஸ்வநாதர் அருகே அமர்ந்திருக்கும் பத்மாவதி யக்ஷி தமிழ்நாட்டிலே மிகப் பிரபலமான தெய்வமாக இருந்திருக்கிறாள். இந்த யக்ஷிகளெல்லாமே ஏற்கனவே இந்து மதத்தில் சிறு தெய்வங்களாக நாட்டார் தெய்வங்களாக இருந்தவர்கள். |
368 |
அவர்களை சமணர்கள் வென்று தங்களுடைய காவல் தெய்வமாக ஆக்கிக் கொண்டார்கள். சமூக நோக்கில் நோக்கினால் அடித்தள மக்களிடமிருந்து உருவாகி வந்த தெய்வங்களை வன்முறை நீக்கம் செய்து அகிம்சைத் தெய்வங்களாக மாற்றி சமணமும் பௌத்தமும் எடுத்துக் கொண்டன. இந்து மதத்தில் இரண்டு அடுக்குகள் உண்டு. |
369 |
அதற்கு அடியில் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு அடுக்கு. சமணம் அந்தப் புராணப் பின்னணியை எதிர்த்து அதற்கு மாற்றாக உருவாகி வந்தது. ஆகவே இந்து மதத்தில் இருக்கக்கூடிய நாட்டார் பின்னணி தெய்வங்களின் கதைகளை அது கையில் எடுத்துக் கொண்டது. அப்படி அது கையில் எடுத்துக் கொண்ட தெய்வம் தான் கண்ணகி. |
370 |
இன்னொரு நாட்டார் தெய்வம் தான் குண்டலகேசி. இவர்களெல்லாருமே மக்களால் முன்னரே தெய்வங்களாக வழிபடப்பட்ட சிறு தெய்வங்கள். அவற்றை எடுத்து அவற்றின் மேல் சமணத்தைக் கொடுத்து அந்த மக்களிடம் கொண்டு சென்றனர் சமணர்கள். நம்முடைய நாட்டுப்புற தெய்வங்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு வகையில் உயிர் துறந்தவர்கள். |
371 |
கொல்லப்பட்டவர்கள். அவமதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள். உயிர்த்தியாகம் செய்தவர்கள். அவர்கள் தெய்வமாகிறார்கள். அந்த தெய்வத்தை வழிபடுவதென்பது இந்து மதத்தின் அடிப்படைக் கட்டுமானங்களில் ஒன்று. மகாபாரதத்தில் அப்படி கொல்லப்பட்ட கதாபாத்திரங்கள் அனைத்துமே தெய்வமாக ஆகிவிட்டிருப்பதைக் காணலாம். |
372 |
நம் குலதெய்வங்களில் கணிசமானவை அப்படிப்பட்டவை. அந்த தெய்வங்கள் இந்து மதத்திற்குள் பெருந்தெய்வங்களின் பரிவார தேவதைகளாக மட்டுமே இருப்பவை. சிவனையோ, விஷ்ணுவையோ சென்று கண்டு அருள் வாங்கி ஓரிரு தெய்வ சக்திகளுடன் குலம் காக்கவோ, குடி காக்கவோ, ஒரு ஊர் காக்கவோ, ஏரி காக்கவோ அமர்ந்தவர்கள். |
373 |
இந்த ஊடாட்டத்தை அறிவதுதான் இந்து மதத்தையும் அதனுடன் சமணமும் பௌத்தமும் கொண்ட உறவையும் புரிந்துகொள்வதற்கான முதல்படி. மெல்லிய எல்லைக்கோடு நான் எழுதிய ஒரு மலையாளப் படத்திற்கு லொக்கேஷன் தேடுவதற்காக குமரி மாவட்டத்தின் பழைய வீடுகளை தேடி இயக்குநர் மதுபாலும் நானும் பலநாள் அலைந்தோம். |
374 |
அது ஓர் அற்புதமான அனுபவம். ஒவ்வொரு இல்லமும் ஒவ்வொரு காலகட்டத்தில் உறைந்து நின்றிருந்தது. வீடுகளைப் போல காலகட்டத்தைக் காட்டுபவை பிறிதில்லை. இருநூறு வருடம் முந்தைய ஒரு வீட்டின் அமைப்பிலேயே அந்தக்கால கட்டத்தின் வாழ்க்கை முறை பொதிந்திருக்கும். அக்காலகட்டத்தின் நிகழ்வுகளின் நினைவுகள் அலையடிக்கும். |
375 |
அக்கால கட்டத்து நிலக்கிழார் ஒருவரின் மாளிகை அது. அன்றெல்லாம் பழைய விவசாயக் குடும்பங்களின் பெரிய வீடுகள் வயல்களின் கரையில் அமைவதுதான் வழக்கம். வயல்களெல்லாம் ரப்பர் தோட்டங்கள் ஆகிவிட்ட நிலையில் அந்த இல்லங்கள் அடர்காடுகளுக்குள் அமைந்தவை போல மாறிவிட்டன. சாலைகளிலிருந்து அங்கு செல்வதற்கான வழியே இல்லை. |
376 |
ஆனால் இடித்து விற்கமுடியாது. நூறுக்கும் மேல் வாரிசுகள் இருப்பார்கள். ஆகவே சட்டச்சிக்கல். அத்துடன் அங்கேயே குலதெய்வங்களும் சிறுதெய்வங்களும் கோயில்கொண்டிருக்கும். நாங்கள் சென்ற வீட்டில் ஒரு வயதான மனிதர் மட்டும் தான் இருந்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றவர். வயது எண்பதுக்கும் மேல் இருக்கும். |
377 |
அவருடைய மகன்களும் மகளும் இறந்துவிட்டனர். பேரன்,பேத்திகள் வெவ்வேறு ஊர்களில் இருக்கிறார்கள். அவருக்கு அவர்களுடன் தொடர்பே இல்லை. அந்த வீடு நாற்பது பேருக்குச் சொந்தமானது. அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை குலதெய்வ பூசைக்காக கூடுவார்கள். ஏதாவது திருமணம், நல்ல காரியம் என்றால் சாமி கும்பிட வருவார்கள். |
378 |
பதினாறு வயதில் வீட்டைவிட்டுக் கிளம்பிச்சென்று ராணுவத்தில் சேர்ந்தார். ஓய்வுபெற்ற பின் பர்மாவில் பணியாற்றினார். பிள்ளைகள் மும்பையில் குடியேறியபோது அங்கே சென்று ஓய்வுக்காலத்தைக் கழிக்க எண்ணினார். அங்கே ஒரே சிற்றறையில் மனைவியுடன் நாள் முழுக்க அமர்ந்திருப்பார். மகன்கள் இரவு தான் பணிமுடிந்து வருவார்கள். |
379 |
ஆனால் அவருக்குத் தைரியம் வரவில்லை. ஆகவே மனைவியை கடிந்துகொண்டு அடிக்கக் கை ஓங்குவார். இங்கிருந்து போனால் போதும். சிறையில் கூட கொஞ்சம் பெரிய அறை கிடைக்கும் என்று அவள் அழுதாள். ஒருநாள் மனைவி காலமானார். நெஞ்சுவலி. அவளை எரித்துவிட்டு வெறுமையில் தனிமையாக இருந்தபோது ஓர் எண்ணம் வந்தது. |
380 |
மனைவி அவள் நினைத்தது போலவே வெளியேறிவிட்டாள். அவர் மட்டும் தான் சிக்கிக்கொண்டிருக்கிறார். அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும். அப்போது கிளம்பாவிட்டால் பின்னர் முடியாமலே ஆகிவிடக்கூடும். ஒருநாள் விடியற்காலை அரைத்தூக்கத்தில் மனைவி இங்கே ஊரில் இந்த வீட்டில் இருக்ககூடும் என்று தோன்றியது. |
381 |
இங்கே வீடு பாதி இடிந்து புதர்பிடித்து கிடந்தது. இருபது அறைகளும், எட்டு கூடங்களும்,இரண்டு உள்முற்றங்களும் கொண்ட பெரிய ஓட்டுவீடு அது. இணைப்பாக இரண்டு சமையலறைகள். வேலைக்காரர்களுக்கான பெரிய கொட்டகையும், தொழுவமும் முன்னரே இடிந்துவிட்டிருந்தன. அந்த இல்லத்தை எவ்வகையிலும் சீரமைக்க முடியாதென்று தெரிந்தது. |
382 |
அங்கேயே தங்கலாமென்று முடிவெடுத்தார். அண்டைவீடு என்பது மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் சாலையில் தான். சுற்றிலும் அடர்ந்த ரப்பர்க்காடு. ஒரு சிறிய ஆறு. இரவு முழுக்க தவளைகளின் ஓசை. சீவிடுகளின் ரீங்காரம். பகலிலும் அரையிருள். அவர் அங்கே தங்குவதையே பல நாட்கள் கழித்துத்தான் மக்கள் அறிந்தனர். |
383 |
மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று முதலில் நினைத்தார்கள். பின்னர் அவர் அந்த இல்லத்தின் சட்டபூர்வ உரிமையாளர்களில் ஒருவர் என்று தெரிந்தபோது வியந்தனர். பின்னர் அவரை எவரும் பொருட்படுத்தாமலானார்கள். அவரும் எவரையும் பொருட்படுத்துவதில்லை. சாலையோரமாக இருந்த டீக்கடைக்குச் சென்று மதியம் சாப்பிடுவார். |
384 |
இரவுணவை பாத்திரத்தில் வாங்கிக்கொண்டு வருவார். டீ அவரே போட்டுக்கொள்வார். ஒரு குறையும் இல்லை. வந்து இருபத்திமூணு வருசமாச்சு.... நல்லாத்தான் இருக்கேன் என்றார். அவர் அந்த இல்லத்தைப் பார்த்தபோது என்ன உணர்ந்திருப்பார்? முதலில் நெஞ்சு அடைப்பது போலிருந்தது. உள்ளே ஏறி அறைகள் தோறும் நடந்தேன். |
385 |
நான் வாழ்ந்த வீடே அல்ல அது என்று தோன்றியது. திரும்பிச்சென்றுவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது தான் மனைவியின் குரலைக்கேட்டேன். என் உடம்பு சிலிர்த்துவிட்டது என்றார். கேட்டீர்களா? என்றேன். ஸ்கிஸோப்ரினியா நோயாளிகள் குரல்களைக் கேட்பதுண்டு. நோயின் முதல் அறிகுறியே அதுதான். |
386 |
நான் உண்மையிலேயே அவள் குரலைக் கேட்டேன். இங்கேயே நாம் இருக்கலாம். இங்கே எல்லாரும் இருக்கிறார்கள் என்றாள். எனக்குச் சற்றுப் பதற்றமாக இருந்தது. எல்லாரும் என்றால்? என்றேன். இங்கே என் அம்மா, சகோதரிகள் நால்வர், என் தாய்மாமன்கள் மூவர், அவர்களின் அம்மாக்களும், தாய்மாமன்களும் எல்லாரும் இருக்கிறார்கள். |
387 |
அல்லது அவர்களின் ஒரு அம்சம் இங்கே இருக்கிறது. நமக்கு உடலிருப்பதனால் நாம் ஒரே இடத்தில் இருந்தாக வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு உடல் இல்லை அல்லவா? அவர்கள் எங்கும் இருக்கலாம் அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவர் ஒன்றை முழுதாக நம்பிச் சொன்னால் நாமும் நம்பத்தொடங்கி விடுவோம். |
388 |
எனக்கு உடலில் குளிர்காற்று பட்டதுபோல சிலிர்த்துக் கொண்டே இருந்தது. இங்கே நான் தனியாகவே இல்லை. பேசிக்கொண்டே இருப்பேன். எந்த குறையும் இல்லை. மகிழ்ச்சியாக இருப்பதனால் எந்த நோயும் இல்லை. மும்பையில் இருக்கையில் எனக்கு பலநோய்கள் இருந்தன. தினமும் கைநிறைய மாத்திரைகள் சாப்பிடுவேன். |
389 |
என்றேன். இதோ நிற்கிறாளே பாகீரதி. இவளும் நானும் சின்ன வயதிலேயே நல்ல கூட்டு. என் சின்னம்மாவின் மகள். பெரும்பாலும் பகலில் இங்கேதான் இருப்பாள். சிரிக்கிறாள் என்றார். அங்கே ஒருவர் நின்றிருப்பது போலவே எனக்குத் தோன்றியதற்குக் காரணம் அவரது பார்வையும் முகபாவனையும் மிக மிக உண்மையாக இருந்தன என்பதுதான். |
390 |
சினிமா பிடிக்க வந்த ஆட்கள். சொன்னேன் இல்லையா? இவர்தான் கதை எழுதுகிறார் என்றார் அவர். நான் திரும்பிப்பார்த்தேன். அவர் சிரித்து ஆமாம், அந்தப்படம் ஜீவிதநௌகா. திக்குறிச்சி சுகுமாரன் நாயர் நடித்தபடம் என்று அந்த அருவுருவத்திடம் சொன்னார். சிரித்துக்கொண்டே அது மற்ற படம்டீ. ஆபி ஜாத்யம். |
391 |
இரண்டுமே திருவனந்தபுரம் பத்மநாபாவில் பார்த்தது என்றபின் என்னிடம் அன்றெல்லாம் திருவனந்தபுரம் போவது மிகப்பெரிய விஷயம். பயோனீர் பஸ்ஸில் ஏறி முழுநாளும் போகவேண்டும். நேமத்தில் ஒரு சொந்தக்காரக் குடும்பம் இருந்தது. அங்கே தங்குவோம். திருவனந்தபுரம் போனால் ஒரு சினிமா பார்க்காமல் வருவதில்லை என்றார். |
392 |
நான் லீவுக்கு வந்தாலே இவர்கள் சினிமா சினிமா என்று துள்ள ஆரம்பித்துவிடுவார்கள் என்று என்னிடம் சொன்னபின் அந்த வெற்றிடத்தைப்பார்த்து அந்தபாட்டு இதோ இங்கே நிற்கிறது என்றார். என் காதில் மிகமெல்ல ஆனத்தலையோளம் வெண்ண தராமெடா ஆனந்தக் கண்ணா வா துறக்கூ என்று ஒரு பெண்ணின் குரலைக்கேட்டேன். |
393 |
அவர் ஆமாம், அந்தப்பாட்டுதான்... ஆனத்தலையோளம் வெண்ண தராமெடா ஆனந்தக்கண்ணா வா துறக்கூ என்றபின் என்னிடம் இவளுடைய மூத்த மகன் பிரபாகரன் சின்னக்குழந்தையாக இருக்கையில் அதைத்தான் நாள் முழுக்க பாடிக்கொண்டிருப்பாள் என்றார். நான் எழுந்துவிட்டேன். அந்தக்குரலை நான் கேட்டதை அப்போதுதான் நினைவுகூர்ந்து சிலிர்த்தேன். |
394 |
உடனே அது ஒரு மனப்பிரமை என்றும் தெளிவு வந்தது. அந்தப்பாட்டு எனக்கு நினைவில் எழுந்தது. அது மலையாளத்தின் மிக மிகப் பிரபலமான பாடல். அந்தப்படத்திலுள்ள சிறந்த பாடலும் அதுதான். அச்சூழலும் அவரது பாவனைகளும் அதை என் கற்பனையில் பெண் குரலாகவே ஆக்கிவிட்டன. உள்ளம் கொள்ளும் பிரமைகள் வெளியுலகுக்கு நிகரானவை. |
395 |
உண்மையில் வெளியுலகம் என்பதே உள்ளம் கொள்ளும் பிரமைதான் என்று அத்வைதிகள் சொல்வார்கள். நான் கிளம்புகிறேன் என்றேன். அவர் பின்னால் பார்த்து கிளம்புகிறார் என்கிறார் என்றார். சரி என்று அவரே சொன்னார். என் மனைவி இங்கே இப்போது இல்லை. வருகிற நேரம் தான். நான் அவர் கைகளைப் பிடித்து குலுக்கி விடைபெற்றேன். |
396 |
படம் எப்போது ரிலீஸ் ஆகும்? என்றெல்லாம் இயல்பாக கேட்டு உரையாடியபடி வீட்டின் எல்லைவரை வந்து வழியனுப்பினார். அந்த எல்லையைக் கடந்தபின்னர்தான் என் மூளையே நிதானமாக வேலை செய்யத் தொடங்கியது. அதை முழுக்க முழுக்க நவீன உளவியலின் நெறிகளைக்கொண்டு விளக்கிவிடலாம். அவர் கண்டடைந்த வழி அது. |
397 |
நாமனைவருமே அப்படி நாம் வாழும் மாற்றமுடியாத யதார்த்ததில் இருந்து விலகி ஒரு கற்பனை உலகை உருவாக்கிக்கொண்டு தான் வாழ்கிறோம். அங்கே நட்பும் பகையும் உறவும் பிரிவும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. மானுடருக்கு அவர்கள் வாழக்கிடைத்த இந்த உலகம் போதவில்லை. அது இறுக்கமான சுவர்கள் கொண்ட அறை. |
398 |
அதை திறந்து வெளிக்காற்றில், வானத்திற்குச் செல்வது போன்றது கற்பனை. மெல்லிய கோடு ஒன்றால் கற்பனையும் உண்மையும் பிரிக்கப் பட்டிருக்கின்றன. எது கற்பனை என்று உண்மைக்குத் தெரியும். அது அழிந்தால் அனைத்தும் ஒன்றுதான். அங்கே எதுவும் சாத்தியம். நான் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தபோது அவர் ஆ, போகிறார். |
399 |
அத்தனை பலவீனமானவனா? என்னை நானே ஏவினேன். உந்தினேன். ஆனால் நான் கடைசிவரை திரும்பிப்பாக்கவில்லை. வரலாற்றின் விதைகள் நாகர்கோயிலில் இருந்து தக்கலைக்குச் செல்லும் வழியில் உள்ளது குமாரகோயில். முறையான பெயர் வேளிமலை முருகன் ஆலயம். பழந்தமிழில் வேளிர்மலை முருகன். ஆய்வேளிரின் மலை இது. |
400 |
குறிப்பாக இங்கு கிடைத்த ஆய் அண்டிரனின் கல்வெட்டு தமிழ் வரலாற்றாய்வில் மிக முக்கியமானது. குமாரகோயிலுக்கு அருகே மேலாங்கோட்டு அம்மன் என்னும் ஆலயத்தொகை உள்ளது. எங்கள் குடும்பம் உட்பட குமரியின் ஆயிரக்கணக்கானவர்களுக்கு குலதெய்வம். இப்பகுதி உதயகிரிக்கோட்டைக்கு நேர் பின்னால் உள்ளது. |
401 |
ஒரு வெறுமை எங்கும் நிறைந்துகிடக்கும். தொலைவில் வேளிமலையின் அடுக்குகள் பசுமையின் அலைகளாக எழுந்து வானைத்தொட்டு நிற்கும். மேலாங்கோட்டு அம்மன் கோயிலுக்கு நான் முதலில் சென்றது மூன்று வயதாக இருக்கும்போது. இன்றும் அந்தச் சித்திரம் என் நினைவில் உள்ளது. ஓலைக்கூரையும் மண்சுவர்களும் கொண்ட தாழ்வான கட்டிடம். |
402 |
வரிசையாகக் கருவறைகளில் மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் நின்றிருந்தன. வெள்ளியாலான கண்கள் பதிக்கப்பட்டவை. அக்கண்களில் பந்தங்களின் ஒளி பிரதிபலிக்க அவை என்னை நோக்குவதுபோல் உணர்ந்தேன். இரு கோயில்கள். முதல்கோயிலில் இருப்பவர்கள் செண்பக வல்லி அம்மன், குலசேகரத் தம்புரான் என்னும் இருவர். |
403 |
இளையவளுக்கு ஒவ்வொரு நாளும் பலிபீடத்தில் குருதி சிந்தப்பட வேண்டும். கருவறைக்கு வெளியே நின்று உள்ளே விழித்த வெள்ளிக்கண்களும் ரத்தம் வழியும் வாயுமாக வெறிக்கோலம் கொண்டு அவள் நிற்பதைக் காணமுடியும். அவள் ஓர் வரலாற்று மங்கை. குமரிமாவட்டம் சுதந்திரம் கிடைக்கும் காலம்வரை திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்தது. |
404 |
அதற்கு முன்பு இது தென்சேரநாடு என அழைக்கப்பட்டது. அருகே உள்ள இரணியசிங்கநல்லூர் என்னும் ஊரை இப்போது இரணியல் தலைநகராக்கி ஆண்டு வந்த சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனை ராஜராஜ சோழன் தோற்கடித்து குமரிமண்ணை கைப்பற்றினார். அதன்பின் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இப்பகுதி சோழர் ஆட்சிக்குக் கீழே இருந்தது. |
405 |
பிரிட்டிஷாரின் கடற்படை வல்லமையை முன்னரே ஊகித்து அவர்களுடன் கூட்டு வைத்துக்கொண்டார். வலுவான துப்பாக்கிப்படையை உருவாக்கிக் கொண்டு பிற கேரள நிலப்பகுதிகளை வென்று திருவிதாங்கூரை வலுவான சிறிய நாடாக ஆக்கினார். அவரது குடும்பத்தினர் தான் இந்திய சுதந்திரம் வரை திருவிதாங்கூரின் அரசர்களாக இருந்தனர். |
406 |
இப்போதும் அவ்வரச குலம் நீடிக்கிறது. சின்னஞ்சிறிய நிலப்பகுதியாக இருந்தாலும் குமரிமாவட்டத்தில் இரண்டு தனி நாடுகள் இருந்தன. இன்றைய தோவாளை, அகஸ்தீஸ்வரம் பகுதிகள் நாஞ்சில்நாடு என அழைக்கப்பட்டன. இன்றைய கல்குளம், விளவங்கோடு பகுதிகள் வேணாடு என்று அழைக்கப்பட்டன. வேளிர் ஆண்ட வேள்நாடு. |
407 |
அன்று திருவிதாங்கூரின் தலைநகரம் தலக்குளத்தில் இருந்து பத்மநாப புரத்திற்கு மாறிவிட்டிருந்தது. ராமவர்மா அங்கிருந்து தன் படைகளுடன் கிளம்பி சுசீந்திரம் தேர்த் திருவிழாவைக் காண்பதற்காகச் சென்றார். அன்றெல்லாம் தேர்த்திருவிழா பன்னிரண்டு நாட்கள் நடக்கும். பலவகையான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறும். |
408 |
மகாராஜாவுக்காக சிறப்பு நடனநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வடக்கே திருநெல்வேலிக்கு அருகே உள்ள யாதவர்களின் ஊரிலிருந்து வந்த அபிராமி என்னும் பேரழகி அவர் முன் ஆடினாள். அவள் தம்பி கிருஷ்ணன் நட்டுவாங்கம் செய்தான். அபிராமியின் அழகில் மகாராஜா மயங்கினார். அவளை அழைத்து அவள் குலத்தைப் பற்றி விசாரித்தார். |
409 |
அவளுடைய பூர்வீகம் குமாரகோயில் எனத் தெரிந்தது. அவளுடைய குடும்பத்தினர் பல தலைமுறைகளுக்கு முன்னரே குமரி நிலத்தை விட்டு வெளியேறி நெல்லைப்பகுதியில் குடியேறினர். அங்கே யாதவர்களுடன் மணவுறவு கொண்டு கலந்தனர். அழகியானதனால் அபிராமியை இளமையிலேயே கோயிலுக்கு தேவரடியாராக பொட்டுகட்டியிருந்தனர். |
410 |
அன்றைய திருவிதாங்கூரில் மருமக்கள் வழி அரசுரிமை நிலவியது. மகாராஜா எத்தனை பெண்ணை வேண்டுமென்றாலும் மணக்கலாம். ஆனால் அரசியாக அரண்மனைக்குக் கொண்டு வரக்கூடாது. அரசியெனும் பதவி மகாராஜாவின் அன்னைக்கும், சகோதரிகளுக்கும் உரியது. சகோதரியின் மூத்த மகனே அடுத்த அரசராக ஆகும் முறைகொண்டவன். |
411 |
இளவரசர்களுக்குரிய உரிமைகளும் உண்டு. ஆனால் ராமவர்மா மகாராஜா அபிராமியை பத்மநாபபுரத்திற்கு அழைத்து வந்து கிருஷ்ணத்தாளம்மை என்று பெயர் சூட்டி பட்டத்தரசியாக ஆக்கினார். அவர் அருகே அவள் முடிசூடி அமர்ந்தாள். அதை அரசரின் அக்காவாகிய கார்த்திகைத் திருநாள் மகாராணி ஒப்புக் கொள்ளவில்லை. |
412 |
கிருஷ்ணனும், கிருஷ்ணத்தம்மாளும் அங்கே குடியேறினர். அபிராமிக்கு அரசரில் மூன்று குழந்தைகள் பிறந்தனர். மூத்தவர் பத்மநாபஆதிச்சன் என்னும் பப்புத்தம்பி. இரண்டாமர் ராமனாதிச்சன் என்னும் ராமன் தம்பி. மூன்றாவதாகப் பெண்குழந்தை. மாணிக்கம்பிள்ளை என்று பெயர். செல்லமாக கொச்சு மாணி. இன்னும் செல்லமாக உம்மிணித்தங்கை. |
413 |
அவர்களை இரணியலில் இருந்து கொண்டு வந்து பத்மநாபபுரம் அருகே இருந்த சாரோடு என்னும் ஊரில் கட்டப்பட்ட சிறிய அரண்மனையில் குடிவைத்தார். மகாராஜா ராமவர்மா தன் மைந்தர்களுக்கு நாஞ்சில் நாட்டில் வரிவசூல் உரிமையை அளித்திருந்தார். மார்த்தாண்ட வர்மா அதை கொஞ்சம் கொஞ்சமாக ரத்துசெய்தார். |
414 |
அவர்களுடைய படைகளில் எவரும் சேரக்கூடாது என தடைசெய்தார். ஆலய உரிமைகளைக் கைப்பற்றினார். பத்மநாபன் தம்பியும், ராமன் தம்பியும் மதுரைக்குச் சென்று அங்கிருந்த நாயக்கர் அரசின் பேரரசியான ராணி மீனாட்சியிடம் முறையிட்டனர். தங்கள் தந்தையின் அரசில் தங்களுக்கும் சமமான உரிமை உண்டு என்றார்கள். |
415 |
அவர்கள் பத்மநாபபுரத்தைக் கைப்பற்றினர். மார்த்தாண்ட வர்மா திருவனந்தபுரத்திற்குத் தப்பி ஓடினார். அரசு பத்மநாபன் தம்பி, ராமன் தம்பி இருவரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அன்றைய அரசின் அடித்தளமாக இருந்த நிலப்பிரபுக்கள் முறைப்படி அரசு மார்த்தாண்ட வர்மாவுக்குரியதே என நம்பினர். அவரையே ஆதரித்தனர். |
416 |
ஆனால் வலுவான நிலப்பிரபுக்களாக இருந்த எட்டுவீட்டுப் பிள்ளைமார் என்னும் குழு பத்மநாபன் தம்பியையும் ராமன் தம்பியையும் ஆதரித்தது. அவர்கள் திருவனந்தபுரம் ஆலய நிர்வாகத்தை கையில் வைத்திருந்தமையால் மிக வலுவான ஒரு தரப்பாக இருந்தனர். ஆகவே மார்த்தாண்ட வர்மாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. |
417 |
அவளுக்குப் பரிசுகள் அனுப்பினார். பாதி அரசு தனக்குப்போதும் என்றும் அவள் தமையன்களின் அரசுரிமையை பறிக்கப்போவதில்லை என்றும் வாக்குறுதி அளித்தார். அவள் வயிற்றில் தனக்குப் மகன் பிறந்தால் அவனை திருவிதாங்கூரின் அரசனாக ஆக்குவதாக ஆணையிட்டுச் சொன்னார் உம்மிணித்தங்கை மெல்ல மனம் கனிந்தாள். |
418 |
மேலும் மார்த்தாண்ட வர்மாவும் தன் அண்ணன்களும் தன்னை முன்வைத்து சமாதானம் செய்துகொண்டால் நாட்டில் அமைதி உருவாகும் என்றும் எண்ணினாள். அவள் மார்த்தாண்ட வர்மாவை ஏற்றுக்கொண்டாள். சாரோடு அரண்மனைக்கு மார்த்தாண்ட வர்மா ரகசியமாக வந்து அவளைச் சந்தித்து மகிழ்ந்திருந்து விட்டு சென்றார். |
419 |
தன் காதலை அண்ணன்களிடம் சொல்ல அவள் விரும்பினாள். உன் வயிற்றில் குழந்தை உருவாகட்டும், அதன்பின்னர் சொல்லலாம். அப்போதுதான் அவர்களால் மறுக்கமுடியாது என்றார் மார்த்தாண்ட வர்மா. இப்படி வந்துபோகும் போதே மார்த்தாண்ட வர்மா அப்பகுதியில் இருந்த நாடார் சாதியைச் சேர்ந்த சில நிலப்பிரபுக்களின் ஆதரவைப்பெற்றார். |
420 |
அவர்களிடம் சிறிய படைகள் இருந்தன. ஒரு தனி படையை வைத்திருந்த வடயாற்றுப்பிள்ளை என்பவரின் ஆதரவையும் அவர் அடைந்தார். அப்போது ஒரு வரலாற்றுத் திருப்பம் நிகழ்ந்தது. ஆற்காட்டை ஆண்ட சந்தா சாகிப் மதுரையை ஆண்ட ராணி மீனாட்சியை பொய்வாக்குறுதி அளித்து ஏமாற்றி தோற்கடித்தான். ராணி தற்கொலை செய்துகொண்டாள். |
421 |
மார்த்தாண்டவர்மா பத்மநாபன் தம்பியையும் ராமன் தம்பியையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நாகர்கோயில் அரண்மனையில் பத்மநாபன் தம்பியும் ராமன் தம்பியும் தங்கள் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். மகாராஜா மச்சின் மேலே தன் அறையில் இருந்தார். வாள்களை அரண்மனையின் உத்தரங்களில் ஒளித்திருந்தனர். |
422 |
ராமன் தம்பியை மார்த்தாண்ட வர்மா மேலே அழைத்தார். அவர் சென்று பேசிக்கொண்டிருக்கையில் அனந்தன் அவரை வசைபாடினான். ராமன் தம்பி திரும்ப வசைபாடியதும் வாளை எடுத்து அவரை வெட்டிக்கொன்றான் அனந்தன். கூச்சலிட்டபடி இறங்கி ஓடிவந்தான். அவனுடைய ஆட்கள் அரண்மனையின் பல இடங்களில் பதுங்கியிருந்தனர். |
423 |
சகோதரர்கள் இருவரும் சதிசெய்து ஆயுதங்களை ஒளித்துக்கொண்டு வந்து மார்த்தாண்ட வர்மாவைக் கொல்ல முயன்றதாகவும் கைகலப்பில் கொல்லப்பட்டதாகவும் அரசுமுறைப்படி அறிவிக்கப்பட்டது. தமையன்களுக்கான சடங்குகள் முடிந்ததும் மார்த்தாண்ட வர்மாவை சந்திக்கவேண்டும் என்று உம்மிணித்தங்கை கோரினாள். |
424 |
அரசரின் படையைச்சேர்ந்த பெண்கள் அவள் ஆடையை நன்கு பரிசோதித்து ஆயுதம் ஏதும் இல்லை என உறுதிசெய்தபின் அவளை அவர் அருகே அனுப்பினர். அவள் தன் காதலன் முன்னால் வந்து நின்று கலங்கிய கண்களால் நோக்கியபின் ஒரு பேரலறலுடன் தன் நாக்கை வலக்கையால் பற்றி பிடுங்கிக்கொண்டாள். அந்த விசையில் குப்புறவிழுந்து துடித்தாள். |
425 |
அவர் குனிந்து அவளை பிடித்து தூக்கியபோது வாயில் திரண்ட குருதியை அவர் முகத்தில் துப்பியபடி உயிர்துறந்தாள். உம்மிணித்தங்கைக்கு சாரோட்டில் ஈமச்சடங்குகள் செய்யப்பட்டன. சாரோடு அரண்மனை அத்துடன் கைவிடப்பட்டது. நெடுங்காலம் அது பாழடைந்து கிடந்தது. என் இளமைக்காலத்தில் நான் அந்த இடிபாடுகளைக் கண்டிருக்கிறேன். |
426 |
பத்மநாபன் தம்பியும், ராமன் தம்பியும் நாடார் குலத்தவரால் இன்று தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர். அவர்களின் கதையைச் சொல்லும் தம்பிமார் கதை என்னும் நாட்டார்பாடல் வில்லுப்பாட்டு வடிவில் வருடம்தோறும் அந்த ஆலயங்களில் பாடப்படுகிறது. ஆனால் எந்தச் சடங்கு செய்த பின்னரும் உம்மிணித்தங்கை அடங்கவில்லை. |
427 |
அனந்தன் ஒரு கால்வாய் அருகே மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழியச் செத்துக்கிடந்தான். அவன் முதுகில் ஐந்து விரலும் பதிய அடிவிழுந்த சிவந்த வடு இருந்தது. அந்தக் கை சாதாரண மானுடக்கைகளை விட இருமடங்கு பெரியதாக இருந்தது. அனந்தனின் அத்தனை வீரர்களும் அப்படி அறைபட்டு வெவ்வேறு இடங்களில் செத்துக்கிடந்தார்கள். |
428 |
இன்னொருவன் ஒரு பனைமரத்தின் மேல் கூரிய மட்டையில் குத்தி வைக்கப்பட்டிருந்தான். அஞ்சி நடுங்கிய மார்த்தாண்ட வர்மா மணலிக்கரை ஊரில் இருந்த கல்பிதமங்கலம் என்னும் குடும்பத்தைச் சேர்ந்த துளு பேசும் பிராமணரான அச்சுதன் போற்றி என்பவரின் உதவியை நாடினார். அச்சுதன் போற்றி அவளை தேடி சாரோடு அரண்மனைக்குச் சென்றார். |
429 |
அங்கு அவள் இல்லை. அவளைத் தேடி பல இடங்களில் அலைந்து கடைசியாக மேலாங்கோட்டில் கள்ளிப்புதர்கள் மண்டிய பொட்டலில் கண்டுகொண்டார். அன்று பங்குனி மாத முழு நிலவுநாள். அலையலையாக காற்றில் பரவிய கூந்தலும், சிவந்த கண்களும், பன்றியின் பல் போன்ற கோரைப் பற்களுமாக அவள் நின்றுகொண்டிருந்தாள். |
430 |
அச்சுதன் போற்றி அவளை அணுகியபோது அருகே நின்றிருந்த பெரிய பனைமரத்தை ஓங்கி கையால் அறைந்து முறிந்து விழச்செய்து யானை போல பிளிறினாள். அவர் அஞ்சாமல் அருகே சென்று நீ யாரென்று தெரியும். உன் கோபம் நியாயமானது. ஆனால் நீ கொல்ல வேண்டியது சாதாரண மனிதர்களை அல்ல. மார்த்தாண்ட வர்மா மகாராஜாவை. |
431 |
நான் பலமுறை முயன்றேன். என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை என்று விம்மினாள். நீ இனி எவரையும் பழிவாங்க வேண்டியதில்லை. அடங்கி அமர்வாய் என்றால் மார்த்தாண்ட வர்மாவின் நூறு தலைமுறைகள் உன் சன்னிதியில் வந்து உனக்கு தலைவணங்கி பூசையிட்டு பிராயச்சித்தம் செய்வார்கள் என்றார் அச்சுதன் போற்றி. |
432 |
ஒரே விடைதான் எனக்குத் தோன்றுகிறது. அபிராமி பழைய ஆய் அரச குலத்தவள். அது அரசருக்கும் மார்த்தாண்ட வர்மாவுக்கும் தெரியும். மக்களுக்கும் தெரிந்திருக்கும். ஆய் அரசர்களின் இடுகாடுதான் மேலாங்கோடு. அங்கே உள்ள பல சிறிய கோயில்கள் அரசர்கள் மற்றும் அரசியரின் உடல்கள் எரியூட்டப்பட்ட இடம் மீது அமைக்கப்பட்டவை. |
433 |
ஆகவேதான் உம்மிணித்தங்கை இறந்தபின் அங்கே சென்றாள். இன்று அந்த ஆலயத்தின் முன் நிற்கையில் நெஞ்சு வியப்பால் விம்முகிறது. எவ்வளவு சிக்கலான வரலாற்றின் அழியாத நினைவுச்சின்னம். நம் ஒவ்வொருவரின் குல தெய்வங்களுக்குப் பின்னாலும் மிகப்பெரிய வரலாற்றுப் பின்புலம் உள்ளது. அவை விதைகள். |
434 |
கொஞ்சம் ஆய்வின் நீர் பட்டால் முளைத்து காடாக மாறக்கூடியவை. வரலாறு அறியா மூடர்களை நம்பி நம் குலதெய்வ வழிபாட்டை அசட்டுத்தனமாக மூடநம்பிக்கை என்றெல்லாம் முத்திரை குத்தி மறந்துவிட்டோம் என்றால் நாம் இழப்பது நம் மூதாதையரைத்தான். களப்பலிகள் இந்தக்கதை மாலைக்குட்டி நாடார் என்பவருடையது. |
435 |
அங்கே பஞ்சம் வந்தபோது அவர் தன் மனைவியையும் அன்னையையும் தந்தையையும் அழைத்துக்கொண்டு அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள பொடியன்விளை என்ற ஊருக்கு வந்தார். அன்று திருவிதாங்கூர் அரசின் கீழே இருந்த இந்தப்பகுதி வெறும் காடு. மழை அதிகமாக இருக்கும் என்பதனால் காடும் அடர்ந்து நச்சுப்பாம்புகள் நிறைந்திருக்கும். |
436 |
சிவப்புத் துணியில் கட்டி தரையில் வைக்காமல் கொண்டு வந்த குலதெய்வத்தை பொடியன்விளையின் காட்டில் பதியனிட்டு ஒரு கருங்கல்லில் பிரதிஷ்டை செய்தார். தன் விரலை அறுத்து ஒரு சொட்டு ரத்தம் கொடுத்து பலிசாந்திசெய்தார். அதைச்சுற்றியிருந்த நிலத்தை வளைத்து வேலியிட்டு காட்டை அழித்து விவசாயம் செய்தார். |
437 |
தோட்டத்தின் நடுவில் ஒரு வீட்டையும் கட்டிக்கொண்டார். செங்கிடாக்காரன் அருளால் அவரது விளைநிலத்தில் செழிப்பாக வாழையும் தென்னையும் வளர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அவர் பணம் சேர்த்தார். அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்குப் பண்டாரம் எனப் பெயரிட்டார். தொடர்ந்து ஆறு குழந்தைகள் பிறந்தன. |
438 |
அன்று இரவு ஆட்டுக்கடாவின் வீச்சம் அடித்தது. அவரது மனைவியின் கனவில் பத்து கைகளிலும் ஆயுதங்களும் கோரைப்பற்களுக்கு நடுவே தொங்கும் நாக்கும் விழித்த ஆட்டுக்கடாக் கண்களும் தலையில் ஆட்டுக்கடா கொம்புகளுமாக செங்கிடாக்காரன் வந்தான். தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று அவள் மன்றாடினாள். |
439 |
செல்வமும் புகழும் கொண்ட ஏழு ஆண் குழந்தைகளை அளிக்கிறேன். உனக்கு பெண்குழந்தை இல்லை என்பது விதி. பிரம்மனின் விதியை மீற எனக்கு அதிகாரம் இல்லை. என்றார் செங்கிடாக்காரன். பெண் குழந்தைதான் வேண்டும். குழந்தை பிறக்காதென்றால் கண் விழித்ததும் உளியை எடுத்து சங்கை அறுத்துக்கொண்டு சாவேன் என்றாள் அவள். |
440 |
வேறுவழியில்லாமல் செங்கிடாக்காரன் அவளுக்கு வரமளித்தான். என் அம்சம் ஒன்று உனக்கு மகளாகப் பிறக்கும். அவளுக்கு பூலம்கொண்டாள் என்று பெயரிடு. ஆனால் பன்னிரண்டு ஆண்டுக்காலம் மட்டுமே அவள் மண்ணில் வாழ்வாள். அதுதான் விதி. அவள் மறுத்துச் சொல்லும்முன்னரே செங்கிடாக்காரன் நிழலாக ஆகி மறைந்தான். |
441 |
அவள் விழித்தெழுந்ததும் அந்தக்கனவை கணவனிடம் சொன்னாள். முதலில் குழந்தை பிறக்கட்டும்,. நடப்பதை பிறகு பார்க்கலாம் என்றார் மாலைக்குட்டிநாடார். அவள் கருவுற்று பெண்குழந்தையைப் பெற்றாள். அவளுக்குப் பூலங்கொண்டாள் எனப் பெயரிட்டனர். அவர்கள் குலத்திலேயே அப்படி ஒரு அழகான பெண்குழந்தை பிறந்ததில்லை. |
442 |
மரகதக்கல் போல கருமையா பச்சையா என்று தெரியாத கண்கள். குழந்தை பிறந்தபோது அவர்களுக்கு ஒரு படபடப்பு இருந்தது. இது பன்னிரண்டு வயதுவரை தானே வாழும் என நினைத்து வருந்தினார்கள். ஆனால் விரைவிலேயே குழந்தையின் அழகில் அனைத்தையும் மறந்துவிட்டார்கள். பூலங்கொண்டாள் தன் அண்ணன்களுக்கும் பெரிய செல்லமாக இருந்தாள். |
443 |
அவளுக்குப் பன்னிரண்டு வயதான போது மாலைக்குட்டி நாடாருக்கு உள்ளூர அச்சம் வரதொடங்கியது. உப்புப்பானை உள்ளிருந்து உளுப்பது போல அவர் உடல் மெலிந்தது. ஆனால் அவள் அம்மா எல்லாவற்றையும் மறந்துவிட்டிருந்தாள். அவர் எதையும் வெளிக்காட்டவில்லை. ஆனால் மகளுக்கு எந்த ஆபத்தும் வராமல் மிகக் கவனமாக பார்த்துக்கொண்டார். |
444 |
பருத்தியைப் பஞ்சாக்கி அதை ராட்டையால் நூல்நூற்பது உயர்குடியைச் சேர்ந்த இளம்பெண்களிடம் ஒரு கவர்ச்சியாகப் பரவியது. அந்தப்பணத்தால் பெண்கள் துணிகளும் ஒப்பனைப் பொருட்களும் வாங்கிக் கொண்டார்கள். பூலங்கொண்டாள் தனக்கும் ராட்டை வேண்டும் என்று ஆசைப்பட்டாள். தன் அண்ணன்களிடம் ராட்டை வாங்கி வரும்படி கேட்டாள். |
445 |
ராட்டை அப்படி சாதாரணமாகக் கிடைக்காது. சுசீந்திரம் தேரோட்டத்தில் மட்டும்தான் சிவகாசி, விருதுநகர் வியாபாரிகள் கொண்டு வருவார்கள். அண்ணன்கள் சந்தைகளில் தேடி கிடைக்காதாகையால் அன்று வெளியூர் பொருட்கள் கடல்வழியாக படகுகளில் வந்து கொண்டிருந்த முக்கியமான சந்தையாக இருந்த மணக்குடி காயலின் கரைக்குச் சென்றார்கள். |
446 |
அவர்கள் கடலோரமாக நடந்து பள்ளம் என்ற ஊருக்கு வந்தனர். அவர்கள் அங்கே காளைகளை வாங்கப் போய்க் கொண்டிருந்த சிலரைச் சந்தித்தனர். அவர்கள் திங்கள்சந்தையில் ராட்டை கிடைக்கும் என்றார்கள். அவர்களுடன் சென்று திங்கள்சந்தையில் நல்ல ராட்டையை வாங்கினர். பருத்தி கொட்டை வைக்க நார்ப்பெட்டியும் வாங்கினர். |
447 |
தந்தைக்குப் பிடித்தமான கருங்கல் களிப்பாக்கும் அதை வைக்கும் ஆமையோட்டு வெற்றிலைப் பெட்டியும் வாங்கினர். பள்ளத்தூர்க்காரர்கள் காளைகளை வாங்கினர். ஒன்றாக அவர்கள் பள்ளத்தூருக்கு வந்தபோது இருட்டிவிட்டது. பள்ளத்தூர்க்காரர்களும் நாடார்கள் என்றாலும் என்ன உபசாதி என்று தெரியவில்லை. |
448 |
ஆகவே அண்ணன்கள் தயங்கினர். விருந்துண்டு சென்றால் அது உறவுக்கு தொடக்கம் போட்டது போன்று ஆகிவிடும். ஆனால் பள்ளதூரார் கட்டாயப்படுத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்துண்டு தாம்பூலமும் போட வைத்தார்கள். இரவு பேசிக்கொண்டிருக்கும்போது தங்கள் குடும்ப வரலாற்றையும் தங்கையையும் பற்றிச் சொன்னார்கள். |
449 |
அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒருநாள் பள்ளத்தூரிலிருந்து ஒன்பது பெரியவர்கள் மங்கலப்பொருட்களுடன் பொடியன்விளைக்கு வந்து மாலைக்குட்டி நாடாரின் வீட்டை விசாரித்து வந்தனர். அவர்களைப் பார்த்தபோதே மாலைக்குட்டி நாடாருக்கு புரிந்துவிட்டது. அவர்கள் பூலங்கொண்டாளை முறைப்படி பெண்கேட்டு வந்திருந்தார்கள். |
450 |
என்று மாலைக்குட்டி நாடார் கேட்டார். அவர்கள் தங்களை விட குறைந்த குலம் என்று தெரிந்ததும் கோபம் கொண்டு கொதித்தார். எப்படி வீடுதேடி வந்து பெண் கேட்கப்போயிற்று? என்று கத்தினார். உங்கள் மகன்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டு தாம்பூலம் போட்டார்கள். அதனால் வந்தோம் என்றார்கள் பள்ளத்தூரார். |
451 |
வீடு தேடி வந்த எங்களை அவமானப்படுத்திவிட்டாய். இன்னும் எண்ணி எட்டுநாட்களில் உன் மகளை சிறையெடுத்துக் கொண்டு போகிறோம் பார். இல்லை என்றால் நாங்கள் சங்கறுத்துச் சாவோம் என்று சபதமிட்டனர் பள்ளத்தூராரின் சபதத்தைக் கேட்ட மாலைக்குட்டி நாடார் தன் மகன்களிடம் அவர்கள் சபதம் செய்துவிட்டார்கள். |
452 |
ஆகவே எட்டு நாட்கள் பூலங்கொண்டாளை கண்மணி போலக் காக்கவேண்டும். ஒருவர் மாறி ஒருவர் அவள் அருகே இருக்க வேண்டும் என்றார். அண்ணன்களும் கண்ணிமை மூடமாட்டோம். சத்தியம் என்று சொல்லி காவல் காத்தனர். இரண்டு நாட்களாயிற்று. பள்ளத்தூரார் பூலங்கொண்டாளை எளிதில் கடத்தமுடியாது என்று அறிந்தனர். |
453 |
பள்ளத்தூராரின் குலதெய்வம் கருங்கடாக்காரன். ஏழு எருமைகளை வெட்டி அந்த ரத்தத்தை கருங்கடாக்காரனுக்கு அபிஷேகம் செய்து கருங்கடாக்காரனை பூசாரிமேல் ஆவேசித்து வரச்செய்தனர். பூலங்கொண்டாளை எப்படியாவது தூக்கிக்கொண்டுவா. இல்லாவிட்டால் நாங்களெல்லாம் உன் சூலத்திலே கழுவேறி சாவோம் என்றனர் குலமூத்தவர். |
454 |
கருங்கடாக்காரன் பூலங்கொண்டாளின் தோழியாக மாறி அவர்களை ஏமாற்றி படுக்கையறைக்குள் நுழைந்து பூலங்கொண்டாள் அருகே படுத்தான். உடனே மிக அழகிய இளைஞனாக மாறி அவளை அணைத்து முத்தமிட்டான். அவளை மனம் மயங்கச்செய்தான். அவள் அவன் சொற்களிலும், தழுவலிலும் மயங்கி அவன் சொன்னது போல செய்ய ஆரம்பித்தாள். |
455 |
எல்லோரும் எழுந்து பந்தங்களைக் கொளுத்திக்கொண்டு பூலங்கொண்டாளைத் தேடி நான்குபக்கமும் ஓடினார்கள். கருங்கடாக்காரனுடன் கணவனைத் தொடரும் மனைவிபோல பூலங்கொண்டாள் நடந்தாள். பொடியன்விளைக்காரர்கள் பள்ளத்தூர் போகும் வழிகளை எல்லாம் மூடிவிட்டதனால் அவர்கள் வேறுவழியாக பல ஊர்களைக் கடந்து கன்னியாகுமரிக்கு வந்தனர். |
456 |
கன்னி பகவதியை வணங்கிவிட்டு சங்கிலித்துறையில் நீராடினர். பின் சர்க்கரைக் குளத்தைக் கடந்துவரும்போது சிலர் பந்தங்களுடன் வருவதைக் கண்ட பூலங்கொண்டாள் கனவு போல மெல்லிய நினைவை அடைந்து என்னை என் அண்ணன்கள் தேடுகிறார்கள் என்றாள். கருங்கடாக்காரன் நீ என் மனைவி என்றால் நான் சொல்வதுபோல செய். |
457 |
எப்படி அவள் மறைந்தாள்? என்றார்கள். செங்கிடாக்காரன் அவர்களில் ஒருவன்மேல் ஆவேசித்து கருங்கடாக்காரன் உங்கள் தங்கையை கொண்டு போயிருக்கிறான். அவன் மனிதர்களை ஏமாற்றும் மந்திரம் தெரிந்தவன் என்றார்கள். எங்களுக்குத் துணையாக வா. எங்கள் தங்கையை மீட்டுக்கொடு என்றார்கள். செங்கிடாக்காரன் வருகிறேன். |
458 |
அங்கிருந்த வேளாளர் தெருவில் குறுமுனி கோவிலின் அருகே இருந்த ஞானாம்பா கிணறுக்கு அருகே வந்ததும் தப்பமுடியாது என்று கண்டு என் செல்லமே அருகே வா என்று அழைத்தான். அவள் அருகே சென்றதும் தூக்கி அந்த கிணற்றின் நீருக்குள் போட்டு காலால் அழுத்திப்பிடித்தான். அவள் காலைப்பற்றியபடி துடித்தாள். |
459 |
அவள் உயிர்விட்டாள். அண்ணன்மார்கள் பள்ளத்தூரின் உள்ளே நுழைந்தனர். குறுமுனிக் கோயிலருகே வந்ததும் தங்கையின் காலடி தடத்தை அடையாளம் கண்டனர். மூத்த அண்ணன் பண்டாரம் கிணற்றில் கயிறுகட்டி இறங்கினான். பூலங்கொண்டாள் கிணற்று நீருக்கு அடியில் பொன்னிறமான மீன்போல தூங்கிய பாவனையில் உயிரற்று கிடப்பதைக் கண்டான். |
460 |
மனமுடைந்து அலறியபடி நீரில் பாய்ந்து அவளை அள்ளி எடுத்தான். பண்டாரம் தங்கையின் உடலைக் கிணற்றின் கரையில் கொண்டு போட்டதும் தம்பிகள் அவள் மேல் விழுந்து கதறினர். மாலைக்குட்டி நாடார் அப்படியே மயங்கி விழுந்தார். பின்னால் வந்த உறவினர்களும் செய்தி அறிந்து பதறினர். அதைக்கண்ட அனைவரும் அழுதார்கள். |
461 |
ஆனால் அந்த ஊர்க்காரர்கள் கிணற்றுநீர் பிணம் விழுந்து தீட்டுப்பட்டு விட்டது என்றும் பள்ளத்தூரார்தான் கிணற்றை இறைத்து புதுத்துலாச் சக்கரம் போடுவதற்குண்டான எல்லாசெலவையும் செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள். உன்னுடைய பெண் அவளே வந்து கிணற்றில் குதித்திருக்கிறாள். கிணற்றருகே வேறு எந்த காலடிச்சுவடும் இல்லை. |
462 |
அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு கிணற்றின் கரையில் துலாவை நட்டனர். பூலங்கொண்டாள் ஆவியாக மாறியதும் ஆற்றல் மிக்கவளாக ஆனாள். அவளை விட்டு விட்டு ஓடிப்போகப் பார்த்த கருங்கிடாக்காரனை கையைபிடித்து நிறுத்தினாள். நீ என்னை தழுவியதனால் நீதான் என் கணவன், எனக்கு நீ காவலிரு என்று சொன்னாள். |
463 |
பூலங்கொண்டாள் கடும் சினம் கொண்டவளாக அந்த துலாக்கோலின் மேல் குடியிருந்தாள். அதன் தூரில் கருங்கிடாய்க்காரன் காவலிருந்தான். ஊரார் தண்ணீர் இறைக்க ஆரம்பித்த போது கருங்கடாக்காரன் துலாவை முறித்து நீர் இறைக்க வந்தவர்களை கிணற்றில் தள்ளிக் கொன்றான். அந்த பலியை ஏற்று பூலங்கொண்டாள் வெறியாட்டம் இட்டாள். |
464 |
அங்கேயே அவர்கள் காத்திருந்தனர். தாகம் தாங்கமுடியாது அருகே வந்த அத்தனை பேரையும் கொன்றார்கள். பூலங்கொண்டாள் அங்குள்ள பிராமணப் பெண்களைப் பிடித்து ஆட்டினாள். வேளாளத் தெருவில் இரவு நேரத்தில் ஓலமிட்டபடி தெருக்களில் ஓடினாள். பொற்கொல்லர்களின் வீட்டில் வந்து கதவை அறைந்து கூச்சலிட்டாள். |
465 |
பூசாரி ரத்தம் கக்கி இறந்தான். அவளை அடக்கவே முடியவில்லை. அந்த ஆங்காரத்தைக் கண்டு அதன்பின் எந்தப்பூசாரியும் அந்த ஊருக்குள் வரவில்லை. ஒருநாள் அவ்வழியாக தலைச்சுமடுடன் சந்தையிலிருந்து வீட்டுக்குச் சென்ற அயலூரைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் தாகம் தாங்காமல் அந்தக் கிணற்றில் நீர் இறைத்துக் குடிக்கப்போனாள். |
466 |
ஆட்டுக்கிடாயின் வாசனையும் கனைப்பும் கேட்டு கர்ப்பிணி பயந்ததனால் அவளுக்குப் பிரசவ வலி எழுந்தது. அவள் தனியாக கிடந்து துடிப்பதைக் கண்டு பூலம்கொண்டாள் மனமிரங்கினாள். கருங்கிடாய்க் காரனை அறைந்து துரத்திவிட்டு அவள் ஒரு சிறுமியின் வடிவில் வந்து அந்தப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தாள். |
467 |
குழந்தையின் அழுகைக்குரலைக் கேட்டு ஊரார் ஓடிவந்தபோது ஒரு பெண் குழந்தையுடன் கிடப்பதைக் கண்டார்கள். தனக்கு ஒரு சிறுமி பிரசவம் பார்த்ததாக அவள் சொன்னாள். அவள் பூலங்கொண்டாள்தான் என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள். குழந்தையை அந்தக் கிணற்றடியில் படுக்கவைத்து பூலங்கொண்டாளிடம் மன்னிப்பு கோரினார்கள். |
468 |
அவளை அங்கேயே கிணற்றடியில் ஒரு சிறுகோயில்கட்டி குடியிருத்தினர். அருகே வாசலுக்குவெளியே கருங்கிடாய்க்காரன் காவலனாக குடியிருத்தப்பட்டான். அம்மைக்கு வருடம்தோறும் குழந்தைகளே கொடை அளித்தன. குழந்தைகளை காக்கும் அவளுக்கு அறம்வளர்த்தாள் என்று பெயரிட்டு வணங்கத்தொடங்கினர். இது ஒரு குலக்கதை. |
469 |
இன்று பார்க்கையில் இந்நிகழ்வை நம்மால் மிக விரிவான வரலாற்றுப்பின்புலத்தில் வைத்துப்பார்க்க முடியும். சங்ககாலம் முதலே மணம்பேசி வருபவர்களுக்கு பெண்கொடுக்க மறுப்பது ஒரு வழக்கமாக இருப்பதைக் காணமுடிகிறது. இதை மகற்கொடை மறுத்தல் என ஒரு தனித்துறையாகவே சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. |
470 |
இது ஏன்? இந்தியப்பெருநிலம் பல்லாயிரம் தொன்மையான குடிகளால் ஆனது. சின்னச்சின்ன குடிகள் பிறருடன் தொடர்பே இல்லாமல் வாழ்ந்தார்கள். சமூகம் வளர வளர அவர்கள் ஒருவரோடொருவர் இணைந்தார்கள். அவ்வாறுதான் சாதிகள் உருவாயின. பலரும் எண்ணிக்கொண்டிருப்பது போல மக்களை எவரும் சாதிகளாகப் பிரிக்கவில்லை. |
471 |
ஆனால் அந்த சாதிக்குள்ளும் அவர்களின் குலஅடையாளம் இருந்துகொண்டுதான் இருக்கும். அதைத்தான் கூட்டம் என்றும் கோத்திரம் என்றும் சொல்கிறோம். எல்லா சாதிகளிலும் இந்த உட்பிரிவுகள் உண்டு. குலங்கள் இணைவதற்கு ஒரேவழி பெண் எடுத்து பெண் கொடுப்பதுதான். பெண்களை கொடுக்காவிட்டால் அவளைக் கவர்ந்துசெல்வதும் வழக்கம். |
472 |
பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். அதைத்தான் இற்செறிப்பு என்று தமிழிலக்கியங்கள் சொல்கின்றன. அன்றெல்லாம் காவலை மீறி பெண்களைக் கவர்ந்துகொண்டு செல்வது ஒரு அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை. அப்படிக்கவர்ந்து கொண்டு சென்றுவிட்டால் வேறு வழியில்லாமல் சமாதானம் ஏற்பட்டு இருகுலங்களும் ஒன்றாகும். |
473 |
சிலசமயம் பெரிய பூசலாக மாறி பல தலைகள் விழும். அபூர்வமாக அந்தப்பெண்ணே கொல்லப்படுவதும் உண்டு. அப்படி கொலைகள் நிகழ்வதும் குலங்களே அழிந்து போவதும் கூட சங்கப்பாடல்களில் காணக்கிடைக்கின்றது. நாம் இன்று சாதி என்று சொல்லும் அடையாளம் இப்படி பலவகையில் இணைந்து இணைந்து உருவாகி வந்தது. |
474 |
இதை டி.டி.கோஸாம்பி போன்ற சரித்திர அறிஞர்கள் விரிவாக விளக்கியிருக்கிறார்கள். நாமே பார்க்கலாம், சென்ற ஐம்பதாண்டுகளில்தான் உட்சாதிகள் நடுவே திருமண உறவு சாத்தியமாகியிருக்கிறது. ஒரு தலைமுறையாக சாதிகள் நடுவே திருமணமும் நிகழ்கிறது. சாதி என்பது நம்முடைய தொன்மையான பழங்குடி மரபிலிருந்து வந்த ஓர் அடையாளம். |
475 |
அவ்வளவுதான். குடும்பங்கள் குலங்களாகி குலம் சாதியாகும் முறையில்தான் நம் சமூகம் வளர்ந்து இன்றைய வேளாண்மை சமூகமாக ஆகியது. அது பல போராட்டங்கள் சமரசங்கள் வழியாக பல ஆயிரமாண்டுகளாக நடந்த ஒரு செயல்பாடு. இன்றும் அது தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கிறது. பூலங்கொண்டாள் அந்த போராட்டத்தில் விழுந்த உயிர்ப்பலி. |
476 |
கிராமத்திற்குச் செல்லும்பாதை அனேகமாக மையச்சாலையில் இருந்து பிரிந்து ஏரிக்கரைவழியாக வந்து ஒர் இடத்தில் திரும்பி ஊருக்குள் புகக்கூடியதாக இருக்கும். ஏரிக்கரையின் அந்தத் திருப்பத்தில் மிகப்பெரிய ஆலமரங்கள் நிற்கும். அடியில் குளுமையான நிழலில் சாவடி என்றோ சத்திரம் என்றோ சொல்லப்படும் கட்டிடம் இருக்கும். |
477 |
சில இடங்களில் அது கல்மண்டபம். பலசமயம் ஓலைக்கூரையிட்ட சிறிய கொட்டகை. உள்ளே பனம்பாய்கள் கிடக்கும். ஆடுபுலி ஆட்டத்திற்காக தரையில் நிரந்தரமாக களம் வரையப்பட்டிருக்கும். ஏரிக்கரைக் காற்று மேலாடை பறக்க வீசிக்கொண்டிருக்கும். மாடுகளை அவிழ்த்துக்கட்டிய சில வண்டிகள் நுகம் சாய்த்து நிற்கும். |
478 |
சாணிவாசம் காற்றில் சுழலும். எந்நேரமும் நாலைந்து கிழவாடிகள் அமர்ந்து அவ்வழியே செல்லும் அத்தனை பேரையும் நக்கல் நையாண்டி செய்துகொண்டிருப்பார்கள். பக்கத்திலேயே மாட்டுக்கு லாடம் கட்டுபவர்கள், ஏற்றம் இறைக்கும் தோல்கமலையை தைப்பவர்கள், சாணைபிடிப்பவர்கள் என பலவகையான தொழில்கள் செய்பவர்கள் தென்படுவார்கள். |
479 |
அவர்களின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருக்கும். எப்போதும் ஏதேனும் நடந்து கொண்டிருக்கும் அந்த நிழலில் அந்தக்கிராமத்தின் அனைத்துவிஷயங்களும் பேசப்படும். சாவடியில் எப்போதும் படுத்தே கிடக்கும் சோம்பேறிகள், மதியத்தூக்கம் போடுபவர்கள், கட்டிங் அடித்துவிட்டு கிடப்பவர்கள் என பலவகை முகங்கள். |
480 |
பெட்டைநாய் ஓட்டத்தில் தன்னை வென்று அடக்கும் நாயைத்தான் ஏற்கும். பிற நாய்களுடன் அந்த ஆண்நாயை சண்டையில் தள்ளி அது ஜெயித்து வரவேண்டும் என எதிர்பார்க்கும். ஆண்யானை பெண்யானை பார்ப்பதற்காக பெரிய மரங்களை மத்தகங்களால் முட்டி கொம்புகளால் குத்திச்சாய்ப்பதைக் காணலாம். ஆடுகள் மண்டை உடைய முட்டிக் கொள்கின்றன. |
481 |
உடல்வலிமை அன்றைய சமூகத்தில் மிகமிக முக்கியமான ஒரு விழுமியமாக எண்ணப்பட்டது. போர்த்திறனும் பயிற்சியும் அதற்கு அடுத்தபடியாக முக்கியமாகக் கருதப்பட்டது. போட்டிச்செய்யுள் அமைத்தல் போன்ற அறிவுசார்ந்த போட்டிகள் உயர் தளத்தில் நிகழ்ந்தன என்பதையும் பண்டைய இலக்கியங்கள் காட்டுகின்றன. |
482 |
மகாராஜாவே வந்து அமர்ந்து அதை பார்ப்பாராம். அதன்பின்னர் மூன்றுநாழி அரிசியை வேகவைத்த சோற்றையும் தின்று காட்டவேண்டும். இது கோவில்பட்டி அருகே ஒரு கிராமத்தில் புழங்கும் கதை. எனக்கு ஒரு முதியவள் இதைச் சொன்னார். அந்த ஊரின் தலைவராக இருந்த நாயக்கருக்கு ஒரேமகள். பேரழகி. செல்லி என்று பெயர். |
483 |
அவளுக்குச் சீதனமாக நிறைய ஆடுகளும் நிலமும் வைத்திருந்தார். ஆகவே ஒரு கெத்து. எல்லாரும் தான் மாப்பிள்ளைக்கல்லைத் தூக்குகிறார்கள். என் மகளை அசாதாரணமான ஒருவன்தான் மணக்கவேண்டும் என்று நினைத்தார். சாவடியில் எவரோ மாப்பிள்ளைக்கல்லைத் தூக்க முயல்வதைக் கண்டு பிறர் கேலிபேசும் போது இவரும் சேர்ந்துகொண்டார். |
484 |
சாவடியே அமைதியடைந்ததைக் கண்டபிறகுதான் உளறிவிட்டோம் என அவருக்கே தெரிந்தது. அது மானுடசாத்தியமே அல்ல. சாதாரணமாக அதை அசைப்பதே கஷ்டம். அதை தலைக்குமேல் ஒரு முறை தூக்கவே பல வருடப்பயிற்சி தேவை. தூக்கி அதே வேகத்தில் கீழே போட்டுவிடுவது எளிது. இறக்கி மேலே ஏற்றுவது நினைத்தே பார்க்கமுடியாது. |
485 |
ஐந்துமுறை ஏற்றியிறக்குவது பூதங்கள் மட்டுமே செய்யக்கூடியது. அதிர்ச்சி காரணமாக அந்த அறைகூவல் எங்கும் பரவியது. ஊரே அறிந்த பின் அதிலிருந்து பின்வாங்கவும் தலைவரால் முடியாத நிலை. அவ்வளவுதான். அவள் காலம் முழுக்க கன்னிதான் என்று அனைவரும் முடிவெடுத்துவிட்டனர். அவர் சோகமாக வீட்டுக்கு வந்து படுத்துவிட்டார். |
486 |
அச்செய்தி வீட்டுக்கு வந்தது. தந்தையின் அறைகூவலை அறிந்த அவள் என் தந்தை சொல் நிற்க வேண்டும். ஐந்துமுறை மாப்பிள்ளைக்கல்லைத் தூக்குபவன் என் கைப்பற்றினால் போதும் என்று சொல்லிவிட்டாள். எவருமே அந்தப்போட்டிக்கு வரவில்லை. வருடங்கள் ஓடின. முதலில் அதை எல்லாரும் ஆச்சரியமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். |
487 |
ஒருகட்டத்தில் அந்த ஊரின் முக்கியமான கேலிப்பொருளாக அவள் ஆனாள். அவளுடைய தோழிகளுக்கெல்லாம் குழந்தைகள் பிறந்தன. அப்பிள்ளைகள் பெரியவர்களானார்கள். அவர்களின் குலதெய்வம் வீரசின்னையா. சத்தியத்திற்கான தெய்வம் அது. சொல்லளித்தபின் வீரசின்னையா பெயரைச்சொல்லி மண்ணைத்தொடுவது அவர்களின் வழக்கம். |
488 |
கோயில் முற்றத்திலிருந்து எடுத்த மண்ணை மஞ்சள்பொடி கலந்து நெற்றிக்கு இட கொடுப்பார்கள். வீரசின்னையாவுக்கு வெல்லக்கட்டி படைத்து அதை பிரசாதமாக அளிப்பார்கள். மாசி மாதம் சிவராத்திரியில் வீரசின்னையாவுக்கு பூசையும் கொடையும் நிகழும். கரும்பு களை கொண்டு கட்டிய கூடையில் பூசைப்பொருட்களைக் கொண்டுவருவார்கள். |
489 |
இதற்கு பள்ளையப்பட்டி பூசை என்று பெயர். சிவராத்திரி விழாவுக்கு செல்லி வீரசின்னையா கோயிலுக்குச் செல்லும்போது சாவடியிலிருந்த வீணர் சிலர் கேலி பேசினார்கள். ஒருவன் மாப்பிள்ளைக்கல் அருகே கிடந்த சிறிய கல் ஒன்றை எடுத்து ஐந்துமுறை தலைமேல் ஆட்டிவிட்டு இது மாப்பிள்ளைக்கல்லின் குழந்தைக்கல். |
490 |
அனைவரும் சிரித்தனர். அழுதபடி அவள் வீரசின்னையா முன் வந்து நின்றாள். கும்பிடும்போது கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. வரும் கார்த்திகைக்குள் எனக்கு திருமணம் நிகழாவிட்டால் உன் சன்னிதியில் வந்து கழுத்து அறுத்துச் சாவேன் என்று மண் தொட்டு வஞ்சினம் உரைத்தபின் திரும்பி நடந்தாள். |
491 |
நாண் இழுத்த வில்போன்ற கால்கள். கணுக்கால் தசை இரும்பில் வார்த்தது போல. உடுக்கு போன்ற சிறிய இடுப்பில் மஞ்சள்பட்டுக் கச்சையை இறுக்கிக் கட்டியிருந்தான். முழங்காலை தாண்டிய நீண்ட கைகளில் புடைத்த புயத்தசையில் பாறையில் பரவியிறங்கும் ஆலமரத்து விழுது போல பெருநரம்பு. படர்ந்த பெரிய முகம். |
492 |
ரத்தம்போல சிவந்த கண்கள். அரிவாள்கள் போல கூர்கொண்டு நின்ற மீசை. வடித்த நீண்டகாதில் சிவப்புக்கல் கடுக்கன். கனத்த குடுமியை பனங்காய் போல சுருட்டி தோளில் கட்டிவைத்திருந்தான். கழுத்தில் ஒற்றைக்கல் பதிக்கப்பட்ட அட்டியல் அணிந்திருந்தான். அவன் குரலும் கோயில்மண்டபத்தில் ஒலிப்பது போல ஆழமாக இருந்தது. |
493 |
ஒரு கிழவர் முழுக்கொட்டைப்பாக்கை அவனுக்கு அளித்தார். அவன் அதை வாங்கி சுற்றுமுற்றும் பார்த்தபின் அதைக்கொண்டு சென்று கீழே கிடந்த ஒரு கல்லில் வைத்து அந்த மாப்பிள்ளைக்கல்லைத் தூக்கி ஐந்துமுறை மெல்ல தட்டி பாக்கை நசுக்கினான். கல்லை தூக்கி அப்பால் வீசி விட்டு பாக்கை வாயிலிட்டு மெல்லத் தொடங்கினான். |
494 |
ஒருவர் அவனைப்பற்றி விசாரித்தார். அவன் பெயர் சின்னையா என்றான். அவனை ஊர்த்தலைவர் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். அவன் குலம் கோத்திரமெல்லாம் கேட்டு அறிந்தபின் பெண்ணைக்கொடுக்க ஊர்த்தலைவர் ஒப்புக்கொண்டார். அங்கேயே விளக்கேற்றி வைத்து பெண்ணைக்கொடுப்பதாகச் சொல்லி வெற்றிலைபாக்கு மாற்றிக்கொண்டார். |
495 |
அவன் குடியும் குலமும் சொல்லி விளக்குதொட்டு சத்தியம் செய்ததோடு சரி. சொந்தக்காரர்கள் யாரையும் கூட்டிவரவில்லை. அவளை மணந்து அவள் வீட்டிலேயே மாப்பிள்ளையாக இருந்தான். ஆனால் அந்தியில் வந்து காலையில் கிளம்பிச் சென்றுவிடுவான். அதிகம் பேசுவதில்லை. எதைக் கேட்டாலும் ஒருசொல்லில் பதில் சொல்வான். |
496 |
புலியைப்பார்ப்பது போல என்று ஒருவர் சொன்னார். ஆனால் அவள் அவன் மேல் மோகம்கொண்டு கிறங்கிக்கிடந்தாள். அவனைப்பற்றி ஒரு சொல் சொல்ல அவள் பொறுப்பதில்லை. அத்துடன் அவன் வந்தபின் அவர்களின் வயல்களில் பொன்போல விளைந்து களஞ்சியங்கள் நிறைந்து வழிந்தன. நாழி கறக்கும் மாடுகள் நானாழி கறந்தன. |
497 |
அவர்கள் வீட்டுக்கு முன் தினமும் குயில்கள் பாடின. அவன் வீட்டுக்கு வரும்போது இனிய செண்பகப்பூ வாசம் எழுந்தது. அவனுடன் அதுவும் சென்றது. ஆனால் அவன் தன்னை சொந்த ஊருக்குக் கூட்டிச்செல்லவில்லை என்னும் குறை செல்லிக்கு ஏறி ஏறி வந்தது. அதை அவனிடம் கேட்கக்கேட்க பிறகு பிறகு என்று அவன் தட்டிக்கழித்தான். |
498 |
ஆவணி என்றான். ஐப்பசி என்றான். சித்திரை வெயில் போகட்டும் என்றான். மார்கழிக்குளிர் என்றான். அவள் பொறுமையிழந்து ஒருநாள் அழுது அடம்பிடித்தாள். இனி உங்களுடன் வந்து உங்கள் வீட்டுப்படியை மிதிக்காமல் உங்களை கணவனாக ஏற்கமாட்டேன். சத்தியம் என்று மண் தொட்டாள். அவன் சரி நாளைக் காலை கிளம்புவோம் என்றான். |
499 |
சீரும் செல்வமும் பிறகு. நான் இவளை மட்டும் கூட்டிச்செல்கிறேன் என்று அவன் சொன்னான். விடிகாலையில் அவளை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு விலகிச்சென்றான். தன்னை எவரும் தொடரக்கூடாது என்று அவன் சொன்னதனால் அவர்கள் வீட்டு வாசலிலேயே வழியனுப்பினார்கள். ஆனால் அவள் தாய்மாமன் ஒருவருக்கு மட்டும் மனம் பொறுக்கவில்லை. |
500 |
வழி இதுவல்லவா? என்று அவள் கேட்டாள். இங்கேதான் என்று அவன் சொன்னான். அவள் அவனைத் தொடர்ந்து சென்றாள். அவன் நேராக வீரசின்னையாவின் ஆலயத்தின் அருகே சென்றான். அவன் சாமி கும்பிடப்போகிறான் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவன் கோயிலுக்குள் நுழைந்தான். அவனை காணாமல் அவள் உள்ளே பார்த்தாள். |
501 |
பின்னர் அலறியபடி அவளும் உள்ளே பாய்ந்தாள். பின்னால் ஓடிவந்த தாய்மாமன் கூச்சலிட்டபடி அணுகி நோக்கிய போது கருவறைக்குள் வீரசின்னையாவின் பீடத்தின் கீழே அவள் இறந்து கிடந்தாள். வீரசின்னையாவின் கழுத்திலணிந்திருந்த மாலை ஒன்று அவள் மேல் உதிர்ந்து கிடந்தது. ஊர்க்காரர்கள் கூடினர். அனைவருக்கும் தெரிந்துவிட்டது. |
502 |
வந்தவர் எவரென்று. அவளையும் தெய்வமாக்கி அருகே நிறுவி பூசையும் கொடையும் அளித்து வழிபடத்தொடங்கினர். குலக்கதைகளுக்குரிய எளிமையான அழகு கொண்ட இக்கதையில் வீரசின்னையாவுக்கு அம்மக்கள் அளித்த தோற்ற வர்ணனையும் ஆளுமையும் அபாரமானது. கரிய ஆணழகன். பேராற்றல் கொண்டவன். ஆனால் அமைதியானவன். |
503 |
கன்னியைப் பித்தாக்கும் காதலன். அவளுக்காக இரங்கி மண்ணுக்கு வந்தவன். அவன் உண்மையில் எங்கிருந்து வந்தான்? தனக்கு எத்தகைய கணவன் வேண்டும் என்று ஒவ்வொரு கன்னிமனமும் கனவு கண்டபடியேதான் இருக்கிறது. அந்த குலத்துக் கன்னியரின் ஒட்டுமொத்தக் கனவிலிருந்து உருவம் கொண்டு வந்தவன் போலிருக்கிறான் அவன். |
504 |
புல்பறிக்கச் செல்லும்போது அந்த இடிந்த கோயிலைப் பார்ப்போம். தரையிலிருந்து வெட்டியெடுக்கப்படும் சொறிப்பாறை என்னும் வெட்டுகல்லை அடுக்கி அதன்மேல் மண்ணால் தளமிட்டு கட்டப்பட்ட கோயில். நான்கடிக்கு நான்கடி அகலம். இரண்டாள் உயரம். வெட்டுகல் மேல் மழையில் புல்முளைத்து காய்ந்து முடிப்பரவல் போலிருந்தது. |
505 |
மேலே இருந்த சிறிய கோபுரம் எப்போதோ இடிந்து விழுந்துவிட்டது. அங்கே முளைத்த கோரைப்புல்லும் நாணல்களும் முட்புதர்களும் அடர்ந்த தலைமுடி போலத் தெரிந்தன. கிறுக்கு பிடித்த நோயாளிக் கிழவி போல நின்றிருந்தது அக்கோயில். பல்லில்லாத அவள் இளித்த வாய்போல கதவற்ற வாசல். அதற்குள் அரையிருள். |
506 |
முழங்கால் அளவுள்ள கற்சிலை. ஒருகையில் சிறிய கலயம். மறுகையில் வளைந்த அரிவாள். அங்கே இருந்த காஞ்சிரத்து வீடு என்ற பழைமையான அரசகுடும்பம் ஒன்று அதைக்கட்டி வழிபட்டு வந்தது. அவர்கள் பல குடிகளாக சிதறி நிலங்களை விற்று விட்டு சென்றனர். சென்னைக்கும், திருவனந்தபுரத்திற்கும் முதல் தலைமுறையினர் சென்றனர். |
507 |
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கொடையோ பலியோ கிடையாது. கோயில் முகப்பில் கிடந்த பலிக்கல்லில் மாங்காயை அறைந்து பிளந்து தின்பதற்காகச் சென்றிருக்கிறோம். ஒருமுறை அதன் மேல் ராஜநாகத்தின் ஆள்நீள சட்டையைப் பார்த்தபோது பயத்தில் புல்லரித்து அசையாமல் நின்று உயிர்கொண்டு ஓடித் திரும்பி விட்டோம். |
508 |
அதன்பின் அப்பக்கமே சென்றதில்லை. ஒருமுறை சிவன்கோயில் அருகே விழுந்து கிடந்த பெரிய பட்டைக்கல் ஒன்றை நெம்புகோல் வைத்து அசைத்து தூக்கி அகற்றியபோது அடியில் ஒரு முருங்கைக்கொம்பு கிடப்பதைக் கண்டேன். அந்தக்கல் விழுந்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும். அடியிலிருந்த முருங்கைக்கொம்பு மட்கவில்லை. |
509 |
உசிரோட இருக்கு என்று நான் கூவினேன். அது எங்கியாவது பூந்து வெளியே வந்திருக்கும், பாரு என்றார் அப்பு அண்ணா. மறுபக்கம் கருங்கல் சுவரினூடாக ஒரு முருங்கைமரம் முளைத்து தலைக்குமேல் எழுந்து நின்றிருந்தது. அதன் தொடக்கம் இதுதான். முருங்க சாகாது. அதுக்கு ஏழு உசிரு என்றார் நாராயணன் போற்றி. |
510 |
தண்டார் என்று ஒரு சாதி இருந்தது. அவர்கள் தேங்காய் பறிப்பவர்கள். படகோட்டும் வேலையும் செய்வார்கள். பேச்சிப்பாறை அணை கட்டப்படுவதற்கு முன்பு எங்களூர் வழியாக ஓடும் கோதையாற்றில் எல்லா காலத்திலும் இருகரைகளையும் முட்டி வெள்ளம் பெருகி ஓடும். மழைக்காலங்களில் ஊர்களையே நிறைத்துச்செல்லும். |
511 |
அன்றெல்லாம் படகுகள் இல்லையேல் ஆறுகளைக் கடக்கமுடியாது. ஆகவே அரசர்கள் பாதைகள் ஆற்றை கடக்கவேண்டிய இடங்களிலெல்லாம் படகுகளை அளித்து அவற்றை ஓட்ட படகோட்டிக் குடும்பங்களையும் அமைத்தனர். படகோட்டிகளுக்கு ஊரின் விளைச்சலில் இருந்தும் கோயிலில் இருந்தும் வருடம் முழுக்க நெல்லும் தேங்காயும் ஊதியமாகச் செல்லும். |
512 |
அன்பளிப்பாகக் கொடுக்கலாம். நான் பள்ளியில் படிக்கும் காலம் வரைக்கும்கூட பல இடங்களில் இந்த படகுகள் ஓடிக்கொண்டிருந்தன. அப்படி படகுகளை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தண்டார் சாதியைச் சேர்ந்தவர்கள். திற்பரப்பு அருகே ஆற்றைக்கடக்கும் சாலை ஒன்றில் படகோட்டும் பொறுப்பிலிருந்தவர் ராமத் தண்டார். |
513 |
பேரழகி. இளமையிலேயே தாயை இழந்த அவளை அவர் தன்னுடன் படகோட்ட அழைத்து வருவார். பெரும்பாலும் படகில்தான் அவள் வாழ்ந்தாள். ஆற்றில் நீந்துவதிலும் படகோட்டுவதிலும் நிகரற்ற திறமைகொண்டவளாக பிருதை வளர்ந்தாள். அவள் கன்னியான பின்னரும் கூட குடிலில் தனித்துவிட முடியாமல் படகோட்ட அழைத்து வந்தார் ராமத்தண்டார். |
514 |
பின்னர் அவள் அழகு ஆண்களின் கண்களை உறுத்துகிறது என்பதைக் கண்டு பகலில் பக்கத்து வீட்டில் அவளை தங்கச்செய்துவிட்டு வந்தார். அவளால் ஆற்றையும் படகையும் காணாமலிருக்க முடியவில்லை. ஆகவே இரவில் தண்டார் வீட்டுக்கு வந்து தூங்கியபின் அவள் துடுப்பை எடுத்துக்கொண்டு ரகசியமாக ஆற்றுக்குச் சென்றாள். |
515 |
அவள் அவரை அங்கிருந்த ஆனைக்கயம் என்னும் ஆழமான சுழி நோக்கி அழைத்துச்சென்றாள். அது எட்டுயானை ஆழமுள்ளது. தேர்ந்த படகோட்டிகள் மட்டுமே அதன் விளிம்பு வழியாகச் சுற்றி மறுபக்கம்செல்லமுடியும். சற்று தவறி அதன் மையத்திற்குச் சென்றாலும் சுழி இழுத்துச்சென்று ஆழத்தில் மணல் குவைக்குள் செருகிவிடும். |
516 |
அவள் அவரை அந்தச்சுழியருகே கொண்டுசென்றாள். அச்சுழியை பார்த்ததுமே புரிந்துகொண்ட பத்ரன் படகை திறமையாகச் செலுத்தி மறுகரைக்குச் சென்றார். அவள் அவரை திரும்பி நோக்கி புன்னகைசெய்தாள். நிலவில் அந்தப்புன்னகை ஒரு மல்லிகைச்செண்டு போல தெரிந்தது. அவள் அவரது ஆண்மையில் மயங்கினாள். அவர் அவள் அழகில் நிலை தடுமாறினார். |
517 |
மீண்டும் மறுநாள் அவர் வந்தார். ஒவ்வொருநாளும் அவர்கள் சந்தித்தனர். நெருங்கி ஒருவரை ஒருவர் அறிந்தனர். காதலையும் காமத்தையும் துய்த்தனர். அவள் கருவுற்றாள். அப்போதெல்லாம் அரசகுடிப் பெண்களை நம்பூதிரிகள் மணக்கும் வழக்கமிருந்தது. காஞ்சிரத்து வீட்டின் தலைவரின் முதல் மகளை பத்ரன் நம்பூதிரிக்கு மணம்பேசினர். |
518 |
மூன்றுமாதக் கரு தன் வயிற்றில் இருப்பதை ஏற்கனவே அவள் அறிந்திருந்தாள். அவள் அழுதபடியே சோர்ந்து படுத்திருப்பதைக் கண்ட தண்டார் என்ன நடந்தது என கேட்டபோது அவள் கதறியழுதபடி அனைத்தையும் சொல்லிவிட்டாள். பத்ரன் அவள் கையில் மும்முறை அடித்து சத்தியம் செய்திருந்தார், அவளைக் கைவிட மாட்டேன் என்று. |
519 |
நம்பூதிரிகளும், அரசர்களும் பிறசாதிப் பெண்களை முறைசாரா மணம்கொள்ளும் வழக்கம் அன்றிருந்தது. அவளை அப்படி மணம் செய்து ஊரறியக் குடியமர்த்துவதாக அவர் வாக்களித்திருந்தார். வாக்கை அவர் மீறமாட்டார், வா நாம் போய் கேட்போம் என்று சொல்லி தண்டார் அவளை நம்பூதிரி இல்லத்திற்கு அழைத்துச்சென்றார். |
520 |
குடிமூத்தவரிடம் நடந்ததைச்சொல்லி நியாயம் கேட்டார். மூத்தவர் பத்ரனை அழைத்து இவர்கள் சொல்வது உண்மையா? என்றார். இல்லை, முழுப்பொய். நான் இவளை அறிந்ததே இல்லை என்று அவர் சொல்லிவிட்டார். வெளியே போ... பணம் வேண்டுமென்றால் இரந்து கேள். அவமதித்து பணம் பெற நினைத்தால் கொன்று ஆற்றில் வீசிவிடுவேன் என்றார் மூத்தவர். |
521 |
மகளே! என்று கூச்சலிட்டார். நெஞ்சிலும் தலையிலும் அறைந்தபடி கதறி அழுதார். அவள் மறைந்துவிட்டாள். அவள் சடலம் கிடைக்கவில்லை. ஆழத்தில் மணலில் புதைந்திருக்கும் அது என எல்லாரும் சொன்னார்கள். தண்டார் அதன்பின் நெடுநாள் உயிர் வாழவில்லை. துயரம் நோயாகியது. தனிமை வேறு. மெல்ல மெலிந்து உயிர்துறந்தார். |
522 |
சிலர் பாய்ந்து துரத்தி நீந்தினர். நீருக்குள் சென்ற பத்ரன் இரண்டு நாட்களுக்குப் பின் நெடுந்தொலைவில் ஒரு பாறையில் ஒட்டிமிதந்து கிடந்தார். ஆனால் அவர் உடலை முதலை கடித்திருக்கவில்லை. காயங்களே இல்லை. அதைவிட அவர் உடலை நோக்கியவர்கள் அதில் ஒரு சொட்டு ரத்தம்கூட இல்லை என்பதைக் கண்டார்கள். |
523 |
செக்கில் வைத்து அழுத்திய புண்ணாக்கு போல வெளிறி இருந்தது அவர் உடல். எவருக்கும் ஏதும் புரியவில்லை. சிலநாட்களுக்குப் பின் அதே நம்பூதிரிமனையைச் சேர்ந்த இன்னொருவர் அதேபோல நீருள் சென்று குருதியே இல்லாமல் பிணமாகக் கிடைத்தார். அந்த மனையின் அத்தனை பேரும் அவ்வாறு நீரிலேயே கொல்லப்பட்டார்கள். |
524 |
அதன்பின் ஆற்றிலிறங்கவே மக்கள் அஞ்சினர். ஆற்றில் நிலவில் படகில் ஒர் அழகியபெண் நீளக்கூந்தல் எழுந்து பறக்க துழாவிச்செல்வதை பலர் கண்டனர். அவள் துடுப்பிடவில்லை. அவள் இரு கைகளும் பலமடங்கு நீளமாக சென்று நீரை துடுப்புபோலத் துழாவின. காஞ்சிரத்து வீட்டு மகளும் நீரில் கொல்லப்பட்டாள். |
525 |
அவர்கள் நோக்கி வந்தபோது ஓர் இடத்தில் நண்டுகள் வளையிட்டு இருந்த துளை வழியாக நீர்க்குமிழிகள் வருவதைக் கண்டனர். ஊரே கூடி அந்த மணல் மேட்டை அள்ளத்தொடங்கியது. மிக ஆழத்தில் செல்லச்செல்ல ஒரு சேலை தெரிந்தது. மேலும் மணலை விலக்கியபோது அங்கே அவள் உடல் இருந்தது. ஆனால் நாற்றமேதும் இல்லை. |
526 |
உயிருடன் இருந்தது. அதில் ரத்த ஓட்டம் இருந்தது. கன்னங்கள் நாணம்கொண்டவைபோலச் சிவப்பாக இருந்தன. உதடுகளில் ஈரம் இருந்தது. ஆனால் அது விழிக்கவுமில்லை. அசையவுமில்லை. மந்திரவாதி அவள் குடித்த ரத்தமெல்லாம் உடலில் ஓடுகிறது என்றான். அவளை தொட்டுத் தூக்கப்போன முதல்சீடன் அறைபட்டவன் போல விழுந்து துடித்து இறந்தான். |
527 |
நீ பேயாக உன் பணியை முடித்துவிட்டாய். இனி தெய்வமாக ஆகி அருள்செய். உனக்கு தேவையான பலிகளையும்,பூசைகளையும் காஞ்சிரத்து குடும்பத்தினரே செய்வார்கள் என்றான் மந்திரவாதி. காஞ்சிரத்து குடும்ப மூத்தவர் கத்தியால் கட்டைவிரலைக் கிழித்து ஒரு குருதித்துளியை வீழ்த்தி அவளுக்குச் சத்தியம் செய்துகொடுத்தார். |
528 |
அவள் அவர்களுக்கு அருளும் தேவியாக ஆனாள். நாட்டார்தெய்வங்களைப் பற்றிய கதைகளில் உள்ள முக்கியமான அம்சம் இது. அநீதிக்கு எதிரான அறச்சீற்றம். அன்றைய சமூக அமைப்பில் ஒன்றும் செய்ய முடியாதவர்களின் அடிவயிற்று ஆவேசமும் அநீதி இழைத்தவர்களின் குற்றவுணர்ச்சியும் இணைந்து இத்தெய்வங்களை உருவாக்குகின்றன. |
529 |
தர்க்கபுத்தி நம் மனசாட்சியை நீர்த்து போகச் செய்துள்ளதா என்ன? எல்லைகளற்ற காதல் நான் இப்போது குடியிருக்கும் இடம் பார்வதிபுரம் சாரதாநகர். இது இருபதாண்டுகளுக்கு முன்புவரை பஞ்சவன்ஏலா என்னும் வயல்வெளியாக இருந்தது. பேச்சிப்பாறை அணைகட்டப்பட்டு அதன் கால்வாய் இப்பகுதி வழியாக வந்ததனால் உருவான வயல்வெளி இது. |
530 |
அதற்கு அப்பாலிருப்பது கள்ளியங்காடு. பஞ்சவன்காடு பல வகையிலும் வரலாற்றுப்புகழ் கொண்டது. அன்றெல்லாம் மதுரையிலிருந்து வரும் தமிழ்நாட்டுப் படைகள் கோட்டாறுக்கு வந்து நாஞ்சில்நாட்டைக் கடந்து வேணாட்டுக்குள் நுழையும் வழி என்பது பஞ்சவன் காடு தான். அங்கேதான் வேணாட்டுப்படைகள் அப்படைகளை எதிர்கொள்ளும். |
531 |
படு களங்களும் நடுகற்களும் நிறைந்த பகுதி இது. நான் மாலைநடை செல்லும் வயல்வெளியில் ஒரு சிறிய ஆலயம் உள்ளது. ஓடுவேய்ந்த ஒற்றையறை கோயில், அதற்குள் ஒரு முழ உயர கற்சிலை. கோயிலைச்சுற்றி ஏழெட்டு சிறிய நடுகற்கள். அங்கே தினப்படி பூசை என ஏதுமில்லை. வருடத்தில் சிலநாட்கள் மட்டும் பலிபூசை உண்டு. |
532 |
குழிக்கோட்டு பாப்பு விளாகத்து கொச்சு நாராயணபிள்ளை என்னும் ஆசானிடம் போர்க்கலை கற்று மாவீரர் என அறியப்பட்டார். இருபதாவது வயதில் வேணாட்டின் தலைநகரான பத்மநாபபுரம் சென்று அரசர் உண்ணிக் கேரளவர்மரின் தளபதியானார். படிப்படியாக உயர்ந்து தன் முப்பது வயதுக்குள் தலைமைத்தளபதியாக ஆனார். |
533 |
அதை இரவிக்குட்டிப்பிள்ளை வெறும் எழுநூறு பேர் கொண்ட படையுடன் பஞ்சவன்காட்டில் சந்தித்து தோற்கடித்து துரத்தியடித்தார். அவரது புகழ் உச்சத்திற்குச் சென்றது. மன்னருக்கு இணையானவராக அவர் மதிக்கப்பட்டார். அரசரின் மனைவியின் உறவினர்கள் இரவிக்குட்டிப்பிள்ளை மேல் கசப்பும் வன்மமும் கொள்ள ஆரம்பித்தனர். |
534 |
அதை எதிர்த்து இரவிக்குட்டிப்பிள்ளை படைகொண்டு சென்றார். ஆனால் அரசியின் உறவினர்கள் போர்க்களத்தில் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அவர் நிற்கும் இடத்தை ஒரு மஞ்சள்கொடியை ஆட்டி நாயக்கர் படைகளுக்குக் காட்டிக் கொடுத்தனர். அவரைக் கைவிட்டு விட்டு பின்னால் நகர்ந்ததுடன் படைகள் பின்வாங்கவும் ஆணையிட்டனர். |
535 |
கேரளபுரத்தில் இரவிக்குட்டிப்பிள்ளையின் சடலம் எரியூட்டப்பட்டது. அந்தச்சிதையில் அவரது மனைவி பாய்ந்து உயிர்துறந்தார். அணுக்கச் சேவகனாகிய காளியும் தன்வாளில் பாய்ந்து தற்பலி ஆனார். அவர்கள் கேரளபுரத்தில் எரியூட்டப்பட்டனர். இரவிக்குட்டிப்பிள்ளையின் இன்னொரு அணுக்கச் சேவகர் பட்டாணி பரீத் அவுலியா என்பவர். |
536 |
இரவிகுட்டிப்பிள்ளை இறந்து விழுந்த இடம்தான் அந்த ஆலயம். அந்த நினைவுக் கோயிலின் அருகே பரீத் அவுலியாவுக்கு ஒரு தர்கா உள்ளது. இன்னும் சற்றுத்தள்ளி அந்தக் குதிரைக்கும் ஒருநடுகல் உள்ளது. அவ்வப்போது அந்த தனித்த இடத்துக்குச் செல்லும்போது ஒரு துயரமான ஏக்கம் வந்து என்னை மூடும். வரலாறு என்பது ஒரு பெரிய கனவு. |
537 |
ஆனால் அங்கே நிலைநிறுத்த வேண்டிய இன்னொரு நடுகல் உள்ளது. அது கேரளபுரத்தின் அருகே உள்ள பறையன்கால் என்னும் ஓடைக்கு அருகே இன்றுள்ளது. பறையன்கால் யட்சி ஆலயம் என இன்று அழைக்கப்படுகிறது. இரவிக்குட்டிப்பிள்ளையின் இல்லத்தில் பணியாற்றிய கண்ணம்மாள் என்னும் பறையர் குலத்துப் பெண் அவள். |
538 |
கண்ணம்மாள் பத்தாண்டுக் காலம் இரவிக்குட்டிப் பிள்ளையின் மனைவியும் மெய்க்காவலருமாக இருந்தாள். அக்காலத்தில் பறையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் மிகச்சிறந்த பாயும் போர்கலைவீரர்கள் ஜிம்னாஸ்டிக் போர்வீரர்கள். குறிப்பாகப் பெண்கள். அவர்களை எப்போதும் உடன் வைத்துக்கொள்வது அரசர்கள் மற்றும் தளபதிகளின் வழக்கம். |
539 |
கண்ணம்மாவின் குடும்பத்திற்கு விளைச்சலில் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. பெண்கள் போருக்குப் போகும் வழக்கம் இல்லை என்பதனால் கண்ணம்மாள் இரவிக்குட்டிப்பிள்ளையை குருதித் திலகமிட்டு வாழ்த்தி அனுப்பினாள். துரோகத்தால் அவர் மறைந்ததை அறிந்ததும் வாளைமேலே தூக்கி வீசி உடலைக் காட்டி உயிர்துறந்தாள். |
540 |
அரசியின் உறவினர்கள் ஒவ்வொருவரையாக தேடிச்சென்று கொன்று பலிதீர்த்தாள். அவர்களில் எவர் இரவில் வெளியே நடமாடினாலும் காலையில் வெள்ளெலும்புக் குவியலாகவே கிடைப்பார்கள். அவளை அஞ்சி பலர் வெளியே செல்வதைத் தவிர்த்தபோது அவர்கள் தூங்கும் அறைகளுக்கு வெளியே சன்னலருகே அவள் காத்திருந்தாள். |
541 |
காலையில் அங்கே மலர்கள் கூட்டமாக உதிர்ந்து கிடப்பதைக் கண்டு அவள் வந்து நிற்பதை அவர்கள் உணர்ந்து நடுங்கினர். அரசியின் குடும்பத்தினரில் ஒருவர் கூட எஞ்சாமல் கொல்லப்பட்ட பின்னரும் அவள் குருதிவெறி கொண்டு அலைந்தாள். அரசியின் குடியில் திருமண உறவு கொண்டவர்களைக் கூட தேடித்தேடிக் கொன்றாள். |
542 |
அவள் இருமுறை கப்பம் அளிப்பதை நிறுத்தியபோது மதுரையை ஆண்ட அரசி மங்கம்மாள் ஜாஃபர்கான் என்னும் கொடூரமான தளபதியின் தலைமையில் ஒருபடையை வேணாட்டுக்கு அனுப்பினாள். ஜாபர்கான் அதே கணியாகுளத்தில் தன் படையுடன் முகாமடித்திருந்த போது இரவில் அவன் படுக்கையருகே ஒரு பெண் விசும்பியபடி வந்து நிற்பதைக் கண்டான். |
543 |
அவள் வாயில் இரு புலிப்பற்கள் மின்னின. கண்கள் கனல்துண்டுகள் போலிருந்தன. கைகளை நீட்டியபோது அவற்றில் கழுகுநகங்கள் நீண்டு எழுந்தன. ஜாஃபர்கான் அலறியபடி எழுந்து ஓடி வெளியே சென்று விழுந்தான். அவன் படுத்திருந்த அதே இடத்தில்தான் இரவிக்குட்டிப்பிள்ளை களம் பட்டார். ஆகவே தான் அவள் அவன் குடலை உருவவில்லை. |
544 |
அன்று இரவிக்குட்டிப்பிள்ளை விழுந்த நாள். அவள் அவரை நினைத்து அழுவதற்காக வந்திருந்தாள். ஜாஃபர்கான் எழுந்து ஓடித் தப்பினான். கடும் காய்ச்சலில் விழுந்து மாதக்கணக்கில் போராடி உயிர்மீண்டான். வேணாட்டுக்கும் மதுரைக்கும் சமாதான ஒப்பந்தம் உருவாகியது. ஜாஃபர்கான் திரும்பிச்சென்றான். |
545 |
அவ்வழக்கம் நின்றுவிட்டிருந்தது. ஆகவே பத்மநாபபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் நம்பூதிரி என்னும் மாந்திரிகரை வரவழைத்து கணித்துப்பார்த்தனர். அவர் வெற்றிலையில் மையிட்டு நோக்கியபோது அதில் கண்ணம்மாள் தீயாகப் பறக்கும் கூந்தலும், எரியும் கண்களும், ரத்தம் வழியும் வாயுமாக வந்து தோன்றினாள். |
546 |
அனைவரும் அஞ்சி விலகினர். அவள் குருதிவெறி கொண்டிருப்பதையே அக்கண்கள் காட்டின. அவளை எதிர்கொள்ளவே முடியாது என மாந்திரீகர் விலகிக்கொண்டார்கள். அரசி அவளை எப்படியாவது அடக்கவேண்டும் என ஆணையிட்டாள். சுப்ரமணியன் நம்பூதிரி பறையன்கால் அருகே உள்ள கண்ணம்மாவின் நடுகல்லருகே சென்று கருநிலவு நாளில் காத்திருந்தார். |
547 |
நள்ளிரவில் ஆயிரம் நரிகள் போல ஊளையிட்டுக்கொண்டு அவள் அவர்முன் வந்தாள். வானத்தில் மின்னல்கள் வெட்டின. இடியெழுந்தது. அவள் கன்னங்கரிய உடல்கொண்டிருந்தாள். அதில் அவள் குடித்த குருதி வழிந்துகொண்டிருந்தது. அவள் வந்தவழி முழுக்க பச்சைமரங்கள் கருகின. சுப்ரமணியன் நம்பூதிரி எந்த மந்திரத்தையும் சொல்லவில்லை. |
548 |
இரவிக்குட்டிப்பிள்ளை இரவிக்குட்டிப்பிள்ளை என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். அவள் அதைக்கேட்டு நின்றாள். மெல்ல அவள் முகம் மாறியது. புன்னகை விரிந்தது. உடல் பொன்னிறமாக ஆகியது. கூந்தல் கரிய அருவியாகியது. நாணமும், நளினமும் கொண்ட உடல் கொண்டாள். மெல்ல அவள் ஒரு பேரழகியாக ஆகி அவர் முன் நின்றாள். |
549 |
உனக்கு என்ன வேண்டும்? என்றார். என் தேவன் இருக்குமிடத்தில் எனக்கும் ஓர் இடம். அவருக்கு அளிக்கும் நீரிலும், உணவிலும் எனக்கும் ஒரு கவளம் வேண்டும் என்றாள். ஆம், அளிப்போம். அவரது குலத்திற்கு நீயும் அன்னையென்று இரு என்றார். அவள் அவர் நீட்டிய வெற்றிலையைத் தொட்டு சத்தியம்செய்தாள். |
550 |
பின்னர் அவளுக்கு அங்கே பெரிய ஆலயம் எழுந்தது. முறைமைப்படி பூசைகளும் வழிபாடுகளும் தொடங்கின. நம் சென்றகாலம் என்பது சாதிய ஏற்றத்தாழ்வுகளால் ஆனது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இக்கதை மிக அபூர்வமானது. எல்லா அடுக்குமுறைகளையும் கடந்து செல்லும் பெருங்காதலின் சித்திரம் இதிலுள்ளது. |
551 |
பையனுக்க வீடு அங்க பாண்டியிலே என்றார். எங்களூரில் ஆரல்வாய்மொழிக்கு அப்பாலுள்ள நிலம் பாண்டிநாடு. நெல்லைமாவட்டத்தில் பணகுடிக்கு அப்பால் ஏதோ சிறியகிராமத்தில் பையன் நிலக்கிழார். நூறு ஏக்கர் நிலம் இருக்கிறது என்றாள். நிலக்கிழாரா? என்று நான் சந்தேகப்பட்டேன். ஏனென்றால் அந்தப் பெண்மணி கணவனை இழந்தவர். |
552 |
நான் சந்தேகப்படுவதை பார்த்து நானும் நினைச்சேன். ஆனா அவங்க சாதகம் பாத்தாக்கும் வந்தாவ என்றார். ஜாதகப்படி பையனுக்கு ஏதோ பெரிய கோளாறுகள் இருக்கின்றன என்றும் அதனுடன் பொருந்தும் பெண்ணைத் தேடி இவளைக் கண்டுபிடித்ததாகவும் இது ஒரு பெரிய வரம் என்றும் திருமண ஆலோசனை கொண்டு வந்த தரகர் சொல்லியிருக்கிறார். |
553 |
நான் சரிதான். ஆனா விசாரிச்சுக்கோ என்று மட்டும் சொன்னேன். அந்த ஊரை அறிந்த எங்கள் துறை ஊழியர் எவரையேனும் அறிமுகம்செய்து கொடுக்கமுடியுமா என்றார் அந்தப்பெண்மணி. நான் தொழிற்சங்கம் வழியாகச் சொல்லி அறிமுகம் செய்து தொலைபேசி எண் ஒன்றைப் பெற்று அளித்தேன். பின்னர் அவரைச் சந்திக்கவில்லை. |
554 |
என்றேன். நிறுத்திட்டோம் சார் என்றார். ஏன்? என்றேன். அந்த ஊருக்குப் போயி விசாரிச்சோம். அந்த வீட்டுமேல் சாபம் இருக்கு சார். எனக்கு அது குழப்பமாக இருந்தது. நல்லா கேட்டிருக்கணும். சும்மா பொறாமையால சொல்லுவாங்க. அவர் இல்லை சார். நல்லா கேட்டாச்சு. ஊருக்குள்ள முத்தாலம்மன் கோயில் பூசாரி கிட்டயே கேட்டேன். |
555 |
எல்லாம் உள்ளதுதான். அவ்வோ குடும்பம் மேலே சாபம் உண்டு. பெண்சாபம். அங்க பெண்ணு வாழாது அந்தக் குடும்பத்தில் நாலைந்து தலைமுறைகளாகப் பெண்குழந்தைகளே பிறப்பதில்லையாம். ஆண்கள் திருமணம் முடித்தால் கூட மருமகள் வாழ்வதில்லை. இப்போதுகூட அந்தக்குடும்பத்தில் இரு இளைஞர்கள் இருக்கிறார்கள். |
556 |
இருவருக்குமே திருமணமாகவில்லை. அவர்களின் தாய் சிறு வயதிலேயே இறந்துவிட்டாள். சித்திகள் இருவரும் இறந்துவிட்டார்கள். இரு சித்தப்பாக்களும் அப்பாவும் அவர்களுடன் தான் இருக்கிறார்கள். ஒருவீட்டில் ஐந்து ஆண்கள். அந்தக் கதையை அந்தப் பெண்மணி சொன்னார். நூறாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. |
557 |
அந்தப் பொட்டலில் வளரும் ஒரே மரம் பனைதான். மழை குறைவாக இருப்பதனால் பனைநீரில் இனிப்பு அதிகம். முதன்மையான தொழில் பதநீர் எடுத்து காய்ச்சி கருப்பட்டி எடுப்பது. பனங்காடுகள் ஜமீன்தாருக்குச் சொந்தமானவை. பெரியநாடார் வணிகர்கள் முன்பணம் கொடுத்து பலநூறு ஏக்கர் பனங்காடுகளை குத்தகைக்கு எடுப்பார்கள். |
558 |
அன்றெல்லாம் பாண்டிக்குப் பனையேறப்போவது எங்களூரில் இன்று துபாய் வேலைக்குச் செல்வதுபோல. அரிசியும் உப்பும் மட்டும் முதலாளியிடமிருந்து கிடைக்கும். பொட்டல்காட்டில் உள்ள முயல், பழவுண்ணி போன்றவற்றை பிடித்து சமைத்து உண்பார்கள். இரவு குடில்களில் அந்திக் கள் அருந்தி வில்லுப்பாட்டு. |
559 |
சீசன் முடியும்போது ஒரு நாளுக்கு ஒரு சக்கரம் என கணக்கிட்டு கூலி கிடைக்கும். அது ஒரு மொத்தத்தொகை. கடன்களை அடைப்பதற்கு அதைப்போல எளியவழி இல்லை. அப்படி ஒரு முதலாளி மாலைக்கண்நாடார் பெயர் இதுவல்ல. நூறு மாட்டு வண்டிகளில் தினமும் கருப்பட்டிச் சிப்பங்களை ஏற்றிக் கொண்டு சென்று சந்தையில் இறக்குபவர். |
560 |
பன்னிரண்டு காடுகள் அவரால் ஆளப்பட்டன. ஆணையிட்டால் ஓடிச்சென்று செய்து முடிக்க நூறு அடியாட்களை சுருட்டு வாள்களும் வேல்கம்புகளுமாக கூடவே வைத்திருந்தார். அவரது பனைக்கிராமங்கள் அனைத்திலும் அவரது ஆட்கள் காவலிருந்தனர். அவருக்கு அந்தப் பன்னிரண்டு இடங்களிலும் வீடும் அங்கெல்லாம் மனைவியரும் இருந்தனர். |
561 |
இந்த மனைவியர் தொழிலை பொறுப்பாகப் பார்த்துக் கொள்வதற்கு. இதற்கு அப்பால் விரும்பிய பெண்ணை அவரே எடுத்துக்கொள்வார். அவரை தட்டிக்கேட்க எவராலும் முடியாது. அப்படித்தான் சந்தையில் ஒரு பெண்ணைப் பார்த்தார். அவள் பெற்றோருக்கு பத்துபொன் பணம் கொடுத்து கூட்டிக் கொண்டு வந்துவிட்டார். அவருக்கு அப்போது அறுபது வயது. |
562 |
அவளுக்கு பதினான்கு. அவளை தாலிகட்டி கொண்டு சென்று ஒரு வீட்டில் குடிவைத்தார். அவள் மேல் மோகம்பிடித்து ஆட்டியது அவரை. ஒவ்வொருநாளும் அவளைத்தேடி வந்தார். அவளோ வாயில்லாப் பூச்சி. கடும் வறுமையில் வாடியவள். மூன்று நேரச்சோறே அவளுக்கு சொர்க்கமாகத் தெரிந்தது. வேறொன்றையும் அவள் எண்ணவுமில்லை. |
563 |
அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்கு அப்பால் அவள் செல்லக்கூடாது என்று அவர் ஆணையிட்டார். மற்ற மனைவிகளை அவளுக்குக் காவல் நிறுத்தினார். அந்த மனைவிகளுக்கு அவள் மேல் பொறாமை எழுந்தது. அவளுக்கு அவர் கொண்டு சென்று கொடுத்த நகைகளையும் துணிகளையும் பார்த்துப்பொருமினர். மெல்ல மெல்ல அவர் மனதில் சந்தேகத்தை வளர்த்தனர். |
564 |
அவளுக்கு அதெல்லாம் தெரியவில்லை. அந்த சிறைக்குள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். ஒருநாள் காலையில் அவள் கொல்லைப்பக்கம் சுவர் அருகே குனிந்து அப்பால் நின்றிருந்த ஒரு பூவை குச்சியை நீட்டிப் பறிக்க முயன்று கொண்டிருந்தாள். மறுபக்கம் வீட்டு முகப்பில் படியேறிய மாலைக்கண் அவள் குனிந்து நிற்பதைக் கண்டார். |
565 |
அவள் பூவைப்பறித்து முகர்ந்தபடி அப்பால் சென்றுவிட்டாள். அவர் சென்று குனிந்து மறுபக்கம் நோக்கினார். அங்கே இளம்பனையேறி ஒருவன் செல்வதைக் கண்டார் சினம் தலைக்கேற ஓடிவந்து அவளை இழுத்திட்டு அடிக்க ஆரம்பித்தார். சந்தர்ப்பத்தை உணர்ந்த மூத்தவள் இவள் அவனிடம் குலவுவதை நான் பலமுறை பார்த்துவிட்டேன். |
566 |
அவர் வெறிகொண்டு கூரை மேல் செருகியிருந்த திரச்சிவால் சாட்டையை எடுத்து அவளை மாறி மாறி அடித்தார். திரச்சி ஆலிலை வடிவம் கொண்ட மாபெரும் மீன். அதன் வால் ஆறடி நீளமிருக்கும். முதலைச்செதில் கொண்டது. அச்செதில்கள் ஒருபக்கச் சாய்வுடன் இருக்கும். அடித்து இழுத்தால் தசையை பிய்த்து எடுத்துக் கொண்டுவரும். |
567 |
அக்காலகட்டத்தில் அது முக்கியமான சித்ரவதை ஆயுதம். அவள் உடல் பிய்ந்து குருதி அறைமுழுக்கச் சிதறியது. அப்போதும் சினம் அடங்காமல் அவளை முடியைப் பிடித்து இழுத்துச்சென்றார். அங்கே பொட்டலில் ஒற்றைப்பனை ஒன்று நின்றது. அதன் கீழே அவளை நிறுத்தினார் பதிகெட்டவளுக்குப் பனைநிழல்னு சொல் இருக்கிறது. |
568 |
வண்டி கட்டிக்கொண்டு சந்தைக்குச் சென்றார். மாலைதான் திரும்பி வந்தார். அவளை சந்தை அலுவல்களில் மறந்துவிட்டார். மாலைதான் நினைவுக்கு வந்தது அவள் பனைநிழலில் நிற்கிறாள் என்று. பகலெல்லாம் அந்தப்பொட்டலில் சித்திரை மாத கொடும் வெயிலில் கையளவு நிழல்கூட விழாத ஒற்றைப்பனையடியில் அவள் நின்றிருந்தாள். |
569 |
அவர் அவளை அள்ளித்தூக்கி நீரை அளித்த போது வாயை இறுக மூடி அதை மறுத்தாள். சிவந்த கண்களைத் திறந்து அவரை நோக்கி பெண்ணருமை அறியாத உன் குலத்திற்கு பன்னிரண்டு தலைமுறைக்கு பெண் வாழமாட்டாள் என்றாள். அவர் நடுங்கிப்போய் நான் என்னசெய்யவேண்டும்? என்றார். சிரித்தபடி அவள் உயிர் துறந்தாள். |
570 |
அவளை அவர் முறைப்படி அடக்கம் செய்தார். எல்லா இறுதிச்சடங்குகளையும் செய்து விண்ணேற்றினார். பெரிய பூசாரிகளையும், சோதிடர்களையும் வரவழைத்து பரிகாரச் சடங்குகளைச் செய்தார். அத்தனை கோயில்களிலும் விளக்கு நாச்சியார் சிலைகளைச் செய்துவைத்தார். பூசை முறைகளும்,அன்னதானங்களும் ஏற்பாடு செய்தார். |
571 |
கோயில் கோயிலாகச் சென்று தெய்வங்களுக்கு முன்னால் நின்று கண்ணீர் விட்டு மன்னிப்பு கோரினார். அவளை தெய்வமாக நிறுவி படையல் கொடுத்து கைகூப்பி அழுது மன்றாடினார். ஒன்றும் பலிக்கவில்லை. அவருக்கு பதினேழு மனைவிகளிலாக முப்பத்தைந்து மகள்கள். அத்தனை பேரும் நான்குவருடங்களில் இறந்தனர். |
572 |
ஊரெங்கும் பரவிய சின்னம்மையில் ஒரே நாளில் இருபத்து நான்கு மகள்கள் இறந்த அன்று அவர்களின் உடல்களை எரித்த மயானத்திலிருந்து மொட்டைபோட்டு எழுந்து தோள்துண்டை கோவணமாகக் கட்டிக்கொண்டு சாமியாராகக் கிளம்பி வடக்கே சென்றார். திரும்பவே இல்லை. ஆனால் சாபம் விடவில்லை. அது பலிகொண்டபடியே இருந்தது. |
573 |
அக்குடும்பத்தில் ஒற்றைப் பெண் கூட எஞ்சவில்லை. அடுத்த தலைமுறையில் ஒருபெண்ணும் பிறக்கவில்லை. வாழவந்த பெண்களும் ஓரிரு வருடங்களிலேயே இறந்தனர். சாபத்தை மறைத்து பெண்ணெடுத்தனர். அயலூரில், அயல்சாதியில் பெண்ணெடுத்தனர். மீண்டும் மீண்டும் பரிகாரங்கள் செய்தனர். சாபம் அப்படியேதான் இருந்தது. |
574 |
நூறாண்டுக்காலம் ஆண்கள் மட்டும் வாழும் வீடாகவே அது எஞ்சியது. செல்வமிருந்தது, அதில் வாழ அரசி இருக்கவில்லை. மூடநம்பிக்கை என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் அதைச் சோதித்துப்பார்க்க நானும் துணியமாட்டேன். பணமும், அதிகாரமும் எதையும் செய்யலாமெனும் திமிரை மனித மனங்களில் வளர்க்கின்றன. |
575 |
அவ வாளணும்லா? என்றார் அந்தப்பெண்மணி. ஆம் என்றேன். காவல்தெய்வங்களின் வாள் நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் அருகே உள்ளது ஆந்திரமுடையார் கோயில். கிராமியச் சிறுதெய்வமான ஆந்திரமுடையாரின் வரலாறு வில்லுப்பாட்டுக் கதையாகப் பாடப்படுகிறது. முனைவர் அ.கா.பெருமாள் இந்த நாட்டார்கதையை தொகுத்து நூலாக்கியிருக்கிறார். |
576 |
களைக்காட்டூர் களக்காடு என்ற ஊரில் வாழ்ந்த மாடன் என்பவருக்கும் அவர் மனைவி பொன்னிலங்கி என்பவருக்கும் பிறந்த ஒரே மகன் ஆந்திரமுடையார். அவர்கள் குமரிமாவட்டத்திலிருந்து அங்கே சென்று குடியேறி நிலம் திருத்திக் கழனியாக்கி வாழ்ந்தவர்கள். ஆந்திரமுடையார் என்னும் பெயர் பின்னர் வந்ததாக இருக்கலாம். |
577 |
தெலுங்குத் தொடர்புகள் ஏதேனும் இருக்க வாய்ப்புண்டு. ஆந்திரமுடையாரின் பின்னணி விவசாயமாக இருந்தாலும் இளமையிலேயே அவரது ஆர்வம் போர்க்கலைகளை நோக்கிச்சென்றது. சுருட்டு வாள் என்னும் உறுமியை வீசும் கலையில் விற்பன்னர். உருட்டுக்கட்டை, கதை போன்றவற்றைக் கையாளும் அளவுக்கு திடமான தோள்கள் கொண்டவர். |
578 |
காரணம் ஆந்திரமுடையார் வீரன் என்றும், மக்களைக் காப்பவர் என்றும் அறியப்பட்டார். அன்றெல்லாம் மக்கள் நீரும் காவலும் உள்ள இடங்களைத் தேடி மக்கள் அலைந்துகொண்டே இருந்தனர். அப்படிப்பட்ட இடங்களில் குடியேறி வீடுகட்டி விவசாயம் செய்தனர். கிட்டத்தட்ட ஈரமுள்ள இடத்தில் புல்முளைப்பதுபோல. |
579 |
களைக்காட்டூர் மணியக்காரர் ஆந்திரமுடையாரை அழைத்து தனக்கு நிகரானவராக கம்பிளிப் போர்வையில் தலைப்பாகையுடன் அமரச்செய்து தாம்பூலமும் வெள்ளிச் செம்பில் நீரும் அளித்து வரிசை செய்தார். பட்டும் வளையும் பரிசாக அளித்து அவரை அந்த ஊருக்கு தலைவராக நியமித்தார். அவ்வூரின் காவலையும் வரிவசூலையும் அவருக்கு அளித்தார். |
580 |
வரி மணியக்காரரிடமிருந்து மேலே சென்று நெல்லையின் நாயக்கர் தளபதியை அடையும். அங்கிருந்து மதுரை அரசுக்குச் செல்லும். ஊர்த்தலைவராக ஆன ஆந்திரமுடையாருக்கு குதிரையிலும் பல்லக்கிலும் செல்லும் உரிமையும் வாளேந்தி தலைப்பாகை கட்டிக் கொள்ளும் அதிகாரமும் கிடைத்தது. அவர் தன் ஊரை திறம்பட அடக்கி ஆண்டார். |
581 |
ஊர்த்தலைவரான அவரை மணம் செய்து கொள்ள பெண்கள் விரும்பினர். ஆனால் அவரோ தனக்கு இணையான ஓர் ஊர்த்தலைவரிடம் பெண் எடுத்தால்தான் தனக்கு மரியாதை பெருகும். குலத்திற்கு அதிகாரம் நிலைக்கும் என்னும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது அன்னை அப்பகுதியின் பிற ஊர்த்தலைவர்களுக்கு தூதனுப்பி மகனுக்கு பெண் கோரினாள். |
582 |
நாள் செல்லச் செல்ல சோர்வு உருவாகியது. ஆந்திரமுடையாரின் அன்னையும் தந்தையும் அவருக்கு முறைப்படி எவருமே பெண்கொடுக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச்சென்று அவரது மாமன் மகளையே பேசி மணமுடித்துவைத்தனர். பொன்னிலங்கியின் அண்ணன் மகள் அவள். |
583 |
திருமணத்திற்கு மணியக்காரர் சரப்பொளி மாலை ஒன்றை அன்பளிப்பாக அளித்தார். திறமையான ஆட்சி காரணமாக ஆந்திரமுடையாரின் கருவூலம் வளர்ந்துகொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஓரு சிற்றரசன் போலவே அவர் ஊரைச் சுற்றி மண்கோட்டை கட்டி நடுவே தனக்கான கல்வீடு எழுப்பி அதில் கொடி பறக்க வாழ்ந்தார். தொழுவமும் களஞ்சியமும் பெருகின. |
584 |
ஆனால் ஆந்திரமுடையாரின் மனைவி மிக வறுமையான குடியில் பிறந்தவள். அவளுக்குக் குடி மரியாதைகள் தெரியவில்லை. பேச்சும், நடப்பும் புரியவில்லை. வெள்ளந்தியான கிராமத்துப் பெண்ணாக இருந்தாள். அது அவரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அவளை பலவாறாக அவர் கண்டித்தார். ஆனாலும் அவளால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. |
585 |
அவள் அவரை அவமதிப்பதாகவே உடனிருந்த அன்னியர் நினைப்பார்கள் என எண்ணியதும் அவர் கடுங்கோபம் கொண்டார். தன் காலிலிருந்த கனத்த மிதியடியை தூக்கி அவள்மேல் வீசினார். அக்காலத்தில் வேட்டைக்கும், போருக்கும் செல்லும் போது அணியும் தோலால் ஆன மிதியடிகளுக்குக் கீழே கனத்த இரும்புத்தகடு வைப்பதுண்டு. |
586 |
அந்த மிதியடி தலையில்பட்டதும் அவர் மனைவி அலறியபடி அங்கேயே விழுந்து உயிர்துறந்தாள். சுற்றியிருந்த பெண்கள் அதைக்கண்டு கதறி அழுதார்கள். அவரது அன்னை என்ன காரியம் செய்துவிட்டாய் என்று கூச்சலிட்டாள். இனி எவராவது வாய்திறந்தால் அவர்களுக்கும் மிதியடிச் சாவுதான் என்று இன்னொரு மிதியடியை கையில் எடுத்தார். |
587 |
அவர்கள் வாயைப்பொத்திக் கொண்டு கண்ணீர் விட்டனர். ஆந்திரமுடையார் மனைவியைக் கொன்றார் என்ற செய்தி பரவியதும் மக்கள் அவரது ஊரைவிட்டு விலகிச் செல்லத் தொடங்கினர். ஒருவருடம் மழை பொய்த்ததும் இனிமேல் மழைபெய்யாது என்னும் வதந்தி பரவ மிஞ்சியவர்களும் மண்ணை அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டார்கள். |
588 |
அக்காலத்தில் ராணிமங்கம்மாள் அமைத்த மடங்கள் சாலைகளில் இளைப்பாறும் இடங்களாக இருந்தன. அங்கே பண்டாரம் என்னும் சாதியைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டிருக்கும். மடங்களைப் பேணி வழிப்போக்கர்களுக்கு உணவும் நீரும் அளிப்பது அவர்களின் கடமை. மிகச் சிறுபான்மையினர் அவர்கள். |
589 |
ஆனால் ஆந்திரமுடையார் வயதில் மூத்தவராகத் தெரிந்தமையால் அவளே தண்ணீரும் உணவும் கொண்டுவந்தாள். அவளைக் கண்டதும் அவர் ஆசைகொண்டார். அவளுடைய திருமணத்தைப் பற்றி விசாரித்தார். மடத்துப்பண்டாரம் என்பது அவர்களின் குலத்தில் மரியாதையில்லாத தொழில். ஏனென்றால் அவர்கள் கோயில்களை ஒட்டி வாழ்பவர்கள். |
590 |
ஆகவே அவளுக்கு மணமகன் கிடைக்கவில்லை என்றார் பண்டாரம். நான் ஒரு நல்ல மாப்பிள்ளையை அனுப்புகிறேன் என்றார் ஆந்திரமுடையார். பண்டாரம் நன்றிப்பெருக்கில் கைகூப்பினார். மறுநாள் அந்த மடத்தின் முன்னால் ஒரு பல்லக்கு வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஆந்திரமுடையார் மணமகன் வந்திருப்பதாகச் சொன்னார். |
591 |
எப்படி நீ பெண் கேட்கலாம்? என்று கூச்சலிடத்தொடங்கினார். அவருடைய தாய்க்கிழவி ஆந்திரமுடையாரை பழித்து வசைபாடினாள். ஊர்க்காரர்கள் சிலரும் வந்து அவர்களுக்கு ஆதரவாக கூச்சலிட்டனர். சிலர் அவரை அடித்துத் துரத்த கம்புகளுடன் வந்தனர். ஆந்திரமுடையார் தன் இடையிலிருந்த சுருட்டுவாளை எடுத்து வீசத்தொடங்கினார். |
592 |
அவர்களை சிதறி ஓடச்செய்து மடத்தைக் கைப்பற்றினார். அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு அப்பெண்ணை அவருக்கே அளிக்க சம்மதித்தனர். அவர் அவளை மணமுடித்து பல்லக்கில் வைத்து தன்னுடன் கொண்டுவந்தார். அன்றிரவு அவர் அவளுடன் இருக்கையில் வடக்கு நாட்டிலிருந்து வந்த கள்ளர்படை ஒன்று வள்ளியூருக்குள் நுழைந்தது. |
593 |
அவர்கள் கொடிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள். மக்கள் அஞ்சி வீடுகளுக்குள் ஒடுங்கிக்கொண்டார்கள். எளியவர்களைக் காக்க எவருமே இல்லை. கள்ளர்படை ஊரைச் சூறையாடியது. வீடுகளை எரித்து கதவுகளை உடைத்து களஞ்சியங்களை கொள்ளையிட்டனர். பெண்களை பிடித்து கைகளை கட்டி வண்டிகளில் ஏற்றிக்கொண்டார்கள். |
594 |
அவருடைய வாளின் நாக்கால் வெட்டுபட்டு திருடர்கள் குருதி கொப்பளிக்க செத்து விழுந்தனர். நான்கு நாழிகைநேரம் அவர் தன்னந்தனியாக நின்று திருடர்களிடம் போராடினார். அஞ்சி ஓடிய மக்கள் அங்கிருந்த குன்றில் ஏறி வானத்தில் எரியம்பு விட்டு திருக்கணங்குடியில் நிலைகொண்டிருந்த நாயக்கர் அரசின் காவல்படையை அழைத்தார்கள். |
595 |
அங்கிருந்து குதிரைப்படை கிளம்பி வள்ளியூருக்கு வந்தது. அந்த குளம்படி ஓசைகேட்டு கள்ளர்கள் பயந்து ஓடினர். கையில் ரத்தம் சொட்டும் சுருட்டு வாளுடன் நின்ற ஆந்திரமுடையாரைக் கண்டு அவரே ஊரைக் காப்பாற்றியவர் என்று புரிந்துகொண்டு ஓடிவந்து வணங்கினர். அவருக்கு பரிசுகளும் காணிக்கைகளும் அளித்தனர். |
596 |
அவர் அப்பதவியில் எண்பது வயதுவரை இருந்தார். மக்களையும் பேரர்களையும் பெற்று நிறைவாழ்க்கை வாழ்ந்து மறைந்தார். மாவீரரை நடுகல்லாக நாட்டி மக்கள் வழிபட்டனர். அவர் பின்னாளில் அம்மக்களுக்குக் குலதெய்வமாக ஆகி ஆந்திரமுடையார் என அறியப்பட்டார். இன்னும் ஊரின் காவல்தெய்வமாக கோயில்கொள்கிறார். |
597 |
இந்தக்கதையின் மடிப்புகள் விசித்திரமானவை. இன்றைய நோக்கில் ஆந்திரமுடையார் ஒரு கொடூரமான மனிதர். சுயநலக்காரர். தன் எளிய மனைவியை அடித்துக் கொன்றாலும் அவருக்குக் குற்றவுணர்ச்சி ஏதுமில்லை. இன்னொரு பெண்ணை பலவந்தமாக பிடித்து மணக்க அவர் தயங்கவில்லை. அது ஒரு சாகசமாகவே அந்த மக்களால் கருதப்பட்டது. |
598 |
அந்த மரத்திலிருந்து விழுந்த மாங்கனி ஒன்றை கோசர் குலத்துப்பெண் ஒருத்தி உண்டுவிட்டாள். அது பெரும் அவமதிப்பு என எண்ணிய நன்னன் அவளைப்பிடித்து சிறையில் அடைத்தான். கோசர்குடி அவனுக்கு அப்பெண்ணை விடுவதற்குரிய பிணைத்தொகை அளிக்க முன்வந்தாலும் அவன் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவளைக் கொன்றான். |
599 |
அவனை புலவர் பெண்கொலை புரிந்த நன்னன் என்று பழித்தார்கள். சான்றோர்கள் அவன் அவைவிட்டு விலகினர். அவனும் அவன் குலத்தினரும் தீராப்பழி ஏற்றனர். அவனை பிற மன்னர்கள் அழித்தனர். ஆனால் ஆந்திரமுடையார் பெண்கொலைப் பழியிலிருந்து எளிதாக தப்புவதைக் காண்கிறோம். அவர் மூத்தவராக மதிக்கப்பட்டு கடவுளாக வழிபடவும் படுகிறார். |
600 |
காரணம் பதினாறாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் உருவான அரசற்ற நிலை, நாயக்கர் ஆட்சியின் இறுதிக்காலம், எங்கும் கொள்ளைகள், கொலைகள். மக்கள்தொகை பெருகியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக புதியநிலங்களில் குடியேறி விவசாயம் செய்தனர். பழைய ஊர்கள் கோட்டைகளுக்குள், சுற்றத்து ஊர்கள் செறிந்து பாதுகாப்பானவையாக இருந்தன. |
601 |
இந்த புதிய ஊர்கள் தனித்த நிலங்களில் பாதுகாப்பற்று கிடந்தன. அவை மீண்டும் மீண்டும் கொள்ளையர்களாலும் படையெடுப்பாளர்களாலும் சூறையாடப்பட்டன. ஆகவே ஊரைக்காக்கும் வீரர்களே முதன்மையான மரியாதைக்கு உரியவர்களாக இருந்தனர். அந்த பண்பாட்டின் கதாநாயகர்கள் அவர்களே. அவர்களின் அத்தனை செயல்களும் மன்னிக்கப்பட்டன. |
602 |
நீர்மரமும் நிலைமரமும் குமரிமாவட்டத்தில் இரவிப்புதூர் என்ற ஊரில் ஒரு காவல்தெய்வம் உள்ளது. இந்த நாட்டார் தெய்வத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை தயிர்சாதத்தை படையலாகக் கொடுத்து வழிபடுகிறார்கள். அதைவிட முக்கியமான சிறப்பு என்னவென்றால் இந்தத்தெய்வம் தலைகீழாக பதிட்டை செய்யப்பட்டிருக்கிறது. |
603 |
படைக்கப்பட்ட சோற்றின் முன்னால் தலைகீழாக கோயில் கொண்டிருக்கும் தெய்வம் வினோதமான ஒரு துணுக்குறலை உருவாக்குகிறது. அனந்தன்சாமி என அழைக்கப்படும் அந்தத் தெய்வத்தின் கதையில் பெரும்பாலான விஷயங்கள் தலைகீழாகவே உள்ளன. பெரும்பாலும் அடித்தள மக்களால் வழிபடப்படும் இந்தத் தெய்வம் உண்மையில் ஒரு நம்பூதிரி பிராமணன். |
604 |
வழக்கமாக நாட்டார் தெய்வங்கள் உயர்சாதியினரால் கொல்லப்பட்ட அடித்தள மக்களாக இருப்பார்கள். இவரைக் கொன்றவர்கள் அடித்தள மக்களாக இன்று கருதப்படும் புலையர் சாதியினர். இன்று குமரி மாவட்டமாகவும் கேரளத்தின் தெற்குப்பகுதியாகவும் உள்ள நிலம் முன்பு திருவிதாங்கூர் என அழைக்கப்படும் தனி நாடாக மன்னரால் ஆளப்பட்டது. |
605 |
திருவாழும்கோடு. செல்வம் வாழும் மலை என்று பொருள். இப்பகுதியில் பதினேழாம் நூற்றாண்டில்தான் அதிகமாக மக்கள் குடியேற்றம் நிகழ்ந்து ஏராளமான ஊர்கள் உருவாயின. அதற்குமுன் கடலோரப்பகுதியிலேயே மக்கள் அதிகமாக வாழ்ந்தனர். கடல்வழியாக நிகழ்ந்த வணிகம் காரணமாக அங்கு மட்டும் உயர்நாகரீகம் உருவானது. |
606 |
பழைய சேரநாடு என்பது இதுதான். இதை ஆண்ட திருவிதாங்கூர் அரசர்கள் தங்களை சேரமான் என்றும் வஞ்சீசபாலன் என்றும் சொல்லிக்கொண்டனர். திருவிதாங்கூர் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் நிலங்களில் ஒன்று. மூன்று மழைக்காலம். ஆகவே அடர்ந்த மழைக்காடுகள் மண்டியது. அங்கே குடியேறி வாழ்வது மிகக்கடினம். |
607 |
அங்கு வாழ்ந்த மக்கள் இவர்களுக்குக் கீழே அடிமைச்சாதிகளாக ஆக்கப்பட்டனர். இப்பகுதியில் உள்ள அத்தனை நாட்டார்க்கதைகளையும் இந்த வரலாற்று பரிமாணத்தை வைத்து புரிந்துகொள்ளமுடியும். திருவிதாங்கூரின் மிக அடித்தள மக்கள் புலையர். தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டு பலநூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள். |
608 |
அங்கு இன்றும் சிற்பத்தொழில் சிறப்புற்றிருக்கிறது. புலையர்களின் கதைகளின்படி பறையர்களும் புலையர்களும் ஆதிக்கசாதிகளாக இன்றைய திருவனந்தபுரம் பகுதியை ஆட்சி செய்தனர். அது அன்று அனந்தன்காடு என அழைக்கப்பட்டது அங்கே இருந்தது விஷ்ணு அல்ல, அவர்களின் குலதெய்வம்தான். அதை அவர்கள் அனந்தன்சாமி என அழைத்தனர். |
609 |
புலையர்கள் மேலும் செல்வாக்கு அடைந்தபோது அவர்களைத் தேடி நம்பூதிரி பிராமணன் ஒருவன் வந்தான். அனந்தன்சாமிக்கு பூசைசெய்யும் பணியை தனக்கு அளிக்கும்படி கோரினான். அவர்கள் அவனை பூசகனாக நியமித்தனர். புலையர்கள் தங்கள் இல்லத்தில் இருந்து தண்ணீரையும், தீயையும் அன்னியருக்குக் கொடுப்பதில்லை. |
610 |
ஒருமுறை கொடுங்காற்றுடன் மழை பெய்தது. சட்டியில் இலையால் மூடி நம்பூதிரி கொண்டுவந்த அனல் அணைந்துவிட்டது. அதைப்பற்ற வைக்க அவன் செய்த முயற்சிகள் வீணாயின. சடங்குமுறைப்படி அவன் மீண்டும் கடற்கரையூருக்குச் சென்று தீ கொண்டுவரவேண்டும். அவன் வந்ததே கடுமையான மழை நடுவே கற்கள் உருண்டு கிடந்த பாதையில். |
611 |
குடித்தலைவரின் ஆணையின் படி ஒருநாள் பூசை முடங்கிவிட்டாலும் நம்பூதிரிக்கு வேலை இல்லாமலாகிவிடும். ஆகவே யாருமறியாமல் மழை வழியாக இலை மறைவுக்குள் நடந்து அருகே இருந்த புலையர்களின் தலைவரின் குடிலுக்குச் சென்று கொல்லைப் பக்கத்தை அடைந்தான். புறவாசல் வழியாக எட்டிப்பார்த்து அம்மா கொஞ்சம் தீ கொடுங்கள். |
612 |
இல்லையேல் நான் வாழமுடியாது என்று கெஞ்சினான். அப்போது அந்த வீட்டில் தலைவரின் அழகான மகள் மட்டுமே இருந்தாள். தலைவர் வேட்டைக்கும் அவர் மனைவி மலைக்கிழங்கு சேகரிக்கவும் சென்றிருந்தார்கள். அவள் இரக்கப்பட்டு அடுப்பிலிருந்து கனலை அள்ளி ஒரு கொட்டாங்கச்சியில் வைத்து கொண்டு வந்து கொடுத்தாள். |
613 |
அவளை அவரால் அதன் பின்பு ஒரு கணம்கூட கண்ணிலிருந்து விலக்கமுடியவில்லை. அவளை அடைவதைப் பற்றி நினைக்கவே முடியாது என்று அவரது உணர்வுகள் சொன்னாலும் அவரது இதயம் அதை ஏற்கவில்லை. நாட்கணக்கில் வதைபட்ட பின் துணிந்து நேராகச்சென்று அவள் தந்தையிடம் பெண் கேட்டார். அன்று புலையர் உயர்சாதி, பிராமணர்கள் கீழ்ச்சாதி. |
614 |
ஆகையால் அவருக்குப் பெண்கொடுக்க அவள் தந்தையான மூத்தபுலையர் மறுத்துவிட்டார். நம்பூதிரி பலவாறு கெஞ்சி மன்றாடினார். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசி ஆயுதத்தை நம்பூதிரி வெளியே எடுத்தார். தர்ப்பைப் புல்லை விரித்து அதன் மேல் தன் பூணூலைப்பிடித்தபடி வடக்குநோக்கி அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். |
615 |
ஆகவே தலைப்புலையர் தாழ்ந்து வந்தார். அவள் தந்தை அவளை கொடுக்க ஒப்புக்கொண்டார். பெண்பேசி முடிக்க நம்பூதிரியை மங்கலப் பொருட்களுடன் வரச்சொன்னார். நம்பூதிரி மலர், தேன், பால், கனிகள், மஞ்சள், பொன், நீர், விளக்கு என எட்டு மங்கலங்களை ஒரு தாலத்தில் வைத்து எடுத்துக்கொண்டு அனந்தன் காட்டுக்குச் சென்றார். |
616 |
உடனே விருந்துக்குச் செல்வோம் என்று எண்ணியிருந்தார். உணவை காட்டுக்குள் ஏற்பாடு செய்திருப்பதாக ஊர்த்தலைவர் சொன்னார். அப்படியென்றால் சாப்பிட்டு விட்டு பெண்ணைப் பார்ப்போம் என்றார் நம்பூதிரி. ஊர்த்தலைவர் நம்பூதிரியை தனியாக அனந்தன்காட்டின் அடர்ந்த புதர்களுக்குள் கூட்டிச்சென்றார். |
617 |
அவர் அவனை அப்படியே ஒரு பாழுங்கிணற்றை நோக்கிக் கொண்டு சென்றார். பேச்சுவாக்கில் அந்தக் கிணற்றைச் சுட்டிக்காட்டி அதற்குள் தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்கும்படிச் சொன்னார் ஊர்த்தலைவர். அறியாமல் குனிந்து உள்ளே பார்த்த நம்பூதிரியின் கால்களை தூக்கி அவரை அப்படியே கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டார். |
618 |
தலைகீழாக கிணற்றில் விழுந்த நம்பூதிரி மண்டை அங்கிருந்த பாறையில் மோதி முட்டைபோல உடைந்து சிதற துடிதுடித்து இறந்தார். கடைசியாக அவர் சொன்ன வார்த்தை பசிக்கிறது. அந்த ஆசை மிச்சமிருந்ததனால் அவர் பேயாக ஆகி அந்த கிணற்றின் உள்ளே இருட்டில் அழுதுகொண்டே குடியிருந்தார். அக்கிணற்றை எவரும் அணுகவில்லை. |
619 |
அருகே மாடுமேய்க்கச் சென்றவர்கள் மெல்லிய அழுகைக்குரல் ஒன்று உள்ளே ஒலிப்பதைக் கேட்டனர். அஞ்சி விலகி ஓடினர். நெடுங்காலம் கழித்து மலைப்பொருட்களை வாங்கி விற்கும் வணிகத்துக்காக வந்த தமிழ்நாட்டுச் செட்டியார்கள் எட்டுபேர் அந்தவழியாக சுமைகளுடன் வந்தனர். நல்ல இருட்டு. அமர இடமில்லை. |
620 |
அங்கே சுமைகளை இறக்கி வைத்து அமர்ந்து இளைப்பாறினர். பசியாக இருந்தமையால் சாப்பிடலாமென்று முடிவு செய்தனர். கமுகுப் பாளையால் தொன்னை கோட்டி கயிற்றில் கட்டி அந்த கிணற்றிலிருந்து நீரை மொண்டார் ஒருவர். அவர்கள் இருட்டுக்குள்ளேயே வட்டமாக அமர்ந்து நடுவே அவர்கள் கொண்டுவந்திருந்த தயிர்ச்சாதப் பொதியை வைத்தனர். |
621 |
இரண்டாவது சுற்று வந்தபோது ஒன்பதாவது கையாக தானும் கைநீட்டினார் நம்பூதிரி. இருட்டாக இருந்தமையால் ஒரு கை கூடியிருப்பதை வணிகர் தலைவர் கவனிக்கவில்லை. அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது நம்பூதிரியின் ஆவியும் கூடவே கிளம்பியது. தலைகீழாக விழுந்து இறந்தமையால் அவர் தலைகீழாகவே நடந்தார். |
622 |
அப்போது பகல். ஆகவே இரண்டாம்சுற்று தயிர்ச்சாதம் உருட்டி வைக்கும் போது ஒரு கை கூடுவதை தலைவர் கவனித்துவிட்டார். உடனே தயிர்சோற்றை அருகே இருந்த கிணற்றுக்குள் வீசினார். சோற்று ருசியால் மெய்மறந்த நம்பூதிரி தலைகீழாக உள்ளே பாய்ந்தார். தலைவர் இடையில் ஒரு மந்திரம் போட்டு நூல் இருந்தது. |
623 |
அதை எடுத்து கிணற்றின்மேல் கட்டி நம்பூதிரியை உள்ளே அடைத்துவிட்டார் தலைவர். நம்பூதிரி உள்ளே கிடந்து கூக்குரலிட்டு அழுதார். தலையை மோதி மோதி கதறினார். என் பசியை போக்காவிட்டால் உங்களை சாபம் போட்டு அழிப்பேன் என்று அலறினார். ஊர்க்காரர்களை அழைத்து அங்கே ஒரு பேயை கட்டியிருப்பதை வணிகர் சொன்னார். |
624 |
அவர்கள் அந்த நம்பூதிரியை அங்கேயே நிறுவி கோயில்கட்டி வருடத்துக்கு ஒருமுறை தயிர்சாதம் படைத்து வழிபட ஆரம்பித்தனர். நம்பூதிரியின் சிலையும் தலைகீழாகவே அமைக்கப்பட்டது. இரவிப்புதூரில் இன்று நாமறிந்த வரலாறு தலைகீழாக நின்றுகொண்டிருக்கிறது. அல்லது நாம்தான் தலைகீழாக நின்றுகொண்டிருக்கிறோம். |
625 |
இது புவிநடுக் கோட்டை ஒட்டிய நிலம். அதேசமயம் மழைமறைவுப் பகுதிகள் கொண்டது. புவிநடுக்கோடை ஒட்டிய நிலங்களில் பொதுவாக வருடம் முழுக்க மழை பெய்வதனால் பசுமைமாறாக் காடுகள் செறிந்திருக்கும். அணுக முடியாத அடர்வுகொண்ட அக்காடுகளில் இரும்புக்கு முந்தைய காலகட்டத்தில் மக்கள் குடியேறி வாழமுடியாது. |
626 |
ஆகவேதான் மலேசியா, பர்மா போன்ற நிலங்களில் பெரும் பண்பாடுகள் எழவில்லை. ஆனால் இங்குள்ள மழைமறைவுப் பகுதிகளில் மழைப்பகுதிகளிலிருந்து ஊறிவரும் ஆறுகளால் நீர்வளம் இருக்கும். ஆனால் காடுகள் அடர்ந்து வளர்வதில்லை. ஆகவே தொல்குடி மக்கள் இங்கே வேட்டையாடியும் வேளாண்மை செய்தும் தழைத்தனர். |
627 |
இக்காரணத்தால் எல்லாகாலத்திலும் இந்தியாவெங்கும் உயர்பண்பாடும் பழங்குடிப்பண்பாடும் அருகருகே இருந்தன. இன்று கூட பெருநகரங்கள் ஒருபக்கம் இங்குள்ளன. இன்னும் கூட சமைத்துச்சாப்பிடத் தெரியாத பழங்குடிகள் மறுபக்கம் உள்ளனர். இவ்விரு பண்பாடுகளுக்கும் நடுவே தொடர்ச்சியான உரையாடல் இங்கு நடந்தபடியே உள்ளது. |
628 |
உயர்பண்பாடு பழங்குடிமரபில் இருந்து தெய்வங்களையும் சடங்குகளையும் வாழ்க்கைக் கூறுகளையும் பெற்றுக்கொண்டே இருக்கிறது. இந்துமதத்தால் வழிபடப்படும் பல தெய்வங்கள் பழங்குடிகளில் இருந்து வந்தவையே என அவர்களின் ஊர்களுக்குச் சென்றால் காணமுடியும். உதாரணம் நாகம். பரவலாக உண்ணும் பல உணவுகள் அவர்களுடையவை. |
629 |
ஆனால் இப்படி மையப்பண்பாடு தான் பெற்றுக்கொண்டதை வளர்த்தெடுத்து காலப்போக்கில் தன்னுடையதாக்கிக் கொள்கிறது. இன்னும் கொஞ்சம் காலம் கழித்து தாங்களே பிறருக்கு அளித்தோம் என்று எண்ணத்தொடங்குகிறது. ஆகவே நாம் அறிந்த நம் குல வரலாற்றை, மத வரலாற்றை எப்போதும் தலைகீழாக ஆக்கிப்பார்க்கவும் சித்தமாக இருக்கவேண்டும். |
630 |
நம் மதமும் பண்பாடும் இரவிப்புதூரில் ஏரியருகே நின்றிருக்கும் ஆலமரம்போல. அதன் நீர்ப்பிம்பத்தையும் சேர்த்தே அதை நாம் பார்த்தாகவேண்டும். ஆற்றாது அழுத கண்ணீர் நாட்டாரியல் ஆய்வாளரான அ.கா.பெருமாள் அவர்கள் என் மூத்த நண்பர். அவரது தெய்வங்கள் முளைக்கும் நிலத்துக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். |
631 |
அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகள் பல. அவற்றில் ஒன்று பொன்னிறத்தாள் அம்மன் கதை. அவரது சுண்ணாம்பு கேட்ட இசக்கி என்னும் நூலில் இக்கதை உள்ளது. ஏடறியாமல் வாய்மொழியிலேயே தலைமுறையாகப் பாடப்பட்டு வந்தது இக்கதை. ஒரு குடும்பத்தின் தனிப்பட்டக் குலக்கதை இது என்று சொல்லலாம். |
632 |
அ.கா.பெருமாள் நான் நடத்திய சொல்புதிது என்னும் சிற்றிதழில் ஆறுமுகப் பெருமாள் நாடாரைப்பற்றி எழுதிய வரலாற்றுக் குறிப்பில் அவரை நாட்டாரியலில் உ.வே.சாமிநாதய்யர் என்று சொல்லலாம் என்று குறிப்பிடுகிறார். பொன்னிறத்தாள் கடையம் என்ற ஊரில் அணஞ்சபெருமாளுக்கும் பொன்மாரிக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவள். |
633 |
நெடுங்காலத் தவத்தின் பயனாகப் பிறந்த பெண்குழந்தையை முற்றத்து வெயில் முகத்திலே படாமல் வளர்த்தனர். இளங்கன்னியாகி தோழியருடன் பந்தாடிக் கொண்டிருந்த பொன்னிறத்தாளைக் கண்டு திருமலை நாயக்கரின் தளவாயின் மூத்த மகனாகிய இணைசூரப்பெருமாள் காதல் கொண்டான். தன் அன்னையிடம் தான் கொண்ட காதலைச் சொன்னான். |
634 |
மூத்த மகனின் சொல்லைத் தட்டமுடியாத தந்தை தன் அகம்படியினருடன் வந்து பொன்னிறத்தாளைப் பெண் கேட்டார். பெரும்பொருள் பரிசம் போட்டு பெண்ணைப் பெற்று மகனுக்கு மணம் முடித்து வைத்தார். இரண்டாம் வருடம் பொன்னிறத்தாள் கருவுற்றாள். ஏழாம் மாதம் முதல் பேறுக்காக அவள் கடையத்தில் அன்னை வீட்டுக்கு வந்தாள். |
635 |
ஒன்பதாம் மாதம் முளைப்பாரி வைக்கும் சடங்கு நடந்தது. தோழிகளுடன் பொன்னிறத்தாளும் விதைகளை மண்கலத்தில் வைத்த மணலில் விதைத்து நீரூற்றி முளைப்பாரி வைத்தாள். தோழிகள் வைத்த கலங்களில் எல்லாம் முளைப்பாரி மெல்லிய ரோமம் போல தளிர்விட்டு எழுந்திருந்தது. பொன்னிறத்தாள் வைத்த விதைகள் அழுகிப்போயிருந்தன. |
636 |
அவள் சோதிடரை அழைத்துக் குறிகேட்டாள். பொன்னிறத்தாளை பெரியதோர் ஆபத்து தொடர்ந்து வருகிறது என்று அவர் எச்சரித்தார். அதைக்கேட்டு அன்னையும் தந்தையும் மனம் தளர்ந்தனர். ஆனால் ஏழு தமையன்களும் நாங்கள் நெடுமரம் போல் இருக்க என்ன தீங்கு வந்துவிடும்? பார்த்துவிடுவோம் என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். |
637 |
ஒன்பதாம் மாத நிறைவில் பொன்னிறத்தாளின் வயிறு வெண்கலக் கலம் போல உருண்டு பளபளத்தது. அதைக்கண்டு அன்னை மகிழ்ச்சியும் அச்சமும் கொண்டாள். குழந்தை வளர வளர பொன்னிறத்தாளும் குழந்தைபோல ஆனாள். அவளுடைய பிடிவாதமும் கோபமும் கூடிக்கூடி வந்தன. அவளுடைய தோழிகள் காட்டில் இருந்த சுனைக்கு நீராடச்சென்றார்கள். |
638 |
உடன் தானும் செல்வேன் என்று பொன்னிறத்தாள் சொன்னாள். அன்னை வேண்டாம் என்று சொன்னபோது அடம்பிடித்தாள். அன்னை அவள் கண்ணீரைக் கண்டு சரி என்று அழுது அனுமதி கொடுத்தாள். ஆனால் நீராடச் செல்வதற்கு முன் மத்தில் கயிறிட்டுத் தயிர்கடைந்து கொண்டிருந்தபோது வெண்ணைக் கலத்தை பூனை தட்டிவிட்டு உடைத்தது. |
639 |
அது தீயசகுனம் என்று சொல்லி அன்னை அழுதுகொண்டே நீராடப் போகவேண்டாம் என்று அவளைத் தடுத்தாள். அன்னை தடுத்ததும் அவள் வீம்பு கூடியது. என்ன ஆனாலும் சுனை நீராடச்சென்றே தீர்வேன் என்றாள். வருவது விதி என்றால் மதிகொண்டு அதைத் தடுக்கமுடியுமா, ஆவது ஆகட்டும். நான் செல்லாமலிருந்தால் என் ஆசை அடங்காமல் மனம் தவிக்கும். |
640 |
கோடைகாலமாக இருந்தபோதிலும் திடீரென்று வானம் இருட்டி மழைபெய்யத் தொடங்கியது. பெண்கள் ஆடைகளை அள்ளிக்கொண்டு மழையில் நனைந்தபடி வீடு திரும்ப ஓடினர். கூடவே ஓடிய பொன்னிறத்தாள் காட்டுக்கொடியில் கால் சிக்கி நின்றுவிட்டாள். அவள் நின்றதை அறியாதபடி மழை மறைத்திருந்தமையால் தோழிகள் ஓடிச் சென்றுவிட்டனர். |
641 |
அவ்வழியாக ஒரு பிராமணப்பூசாரி காட்டு அய்யனார் கோயிலில் பூசை வைப்பதற்காகச் சென்றான். பொன்னிறத்தாள் அவனைக்கண்டு அண்ணா, என்னை காப்பாற்றுங்கள். நான் வழிதவறி விட்டேன். எனக்கு துணை யாருமில்லை. நிறைசூலியாக இருக்கிறேன் என்று கண்ணீருடன் மன்றாடினாள். தங்கையே, நான் காட்டு அய்யனாருக்குப் பூசைவைக்க வேண்டும். |
642 |
உன்னை நான் திரும்பப்போகும் போது கூட்டிச் சென்று உன் வீட்டில் விடுகிறேன் என்று அவளை கொண்டு சென்று ஒளித்து அமரச் செய்துவிட்டு பூசாரி காட்டுக்குள் சென்றான். அந்தக்காட்டு அய்யனார் கோயிலுக்கு அருகே ஒரு காட்டாளம்மன் கோயில் இருந்தது. அதில் பழைய மன்னர்கள் புதைத்து வைத்த பெரிய புதையல் இருந்தது. |
643 |
வெற்றிலையில் மையிட்டு குறிநோக்கிய வயதான கள்ளன் மலைவாதைப் பேய்களுக்கு கருக்கொண்ட ஓணான், மூத்த வெள்ளாடு, கொண்டைச்சேவல் ஆகியவற்றைப் பலியிடவேண்டும். இயக்கி முதுபிராமணனையோ, கருமூத்த சூலியையோ கேட்கிறாள் என்றான். அப்போது அங்கே வந்த பிராமணனை நோக்கி இதோ சிக்கிவிட்டான் என்று கள்ளர்கள் பாய்ந்தனர். |
644 |
சரி அவளை பிடித்தபின் உன்னை விடுகிறோம் என்று அவனை அவர்கள் தொண்டையில் கத்தியை வைத்து கூட்டிச்சென்றார்கள். அவன் மரத்தின் பொந்தில் பதுங்கியிருந்த பொன்னிறத்தாளைக் காட்டினான். அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து எழுந்த பொன்னிறத்தாள் அண்ணா இருட்டிக்கொண்டு வருவதைக் கண்டு நான் பயந்துகொண்டிருந்தேன். |
645 |
என்றாள். பிராமணன் தங்கச்சி, இவர்கள் உன் அண்ணன்களின் நண்பர்கள். உன்னை பத்திரமாக கொண்டுசென்று சேர்ப்பார்கள். இவர்களுடன் நீ தைரியமாக போகலாம் என்றான். அவர்களும் ஆமாம் தங்கச்சி, எங்களை நீ சொந்த அண்ணன்களைப் போலவே நினைக்கலாம் என்றார்கள். அவள் நான் உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் அண்ணன்களே. |
646 |
அண்ணன்களே, என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்? என்னை பத்திரமாக கொண்டு போய் சேர்த்தால் என் தந்தையிடம் சொல்லி நீங்கள் விரும்பும் பொன்னும், பொருளும் தரச்சொல்கிறேன் என்று அழுதாள். அவர்களில் ஒருவன் அவளை எருக்கிலைக் கொம்பால் அடித்து உன்னை காட்டாளம்மனுக்குப் பலி கொடுக்கப் போகிறோம். |
647 |
அதன்பின்னர் அவர்கள் பொன்னிறத்தாளை இழுத்துவந்து அந்தக்களத்தில் ஒரு வாழையிலை மேல் கிடத்தி அவள் வயிற்றைக்கிழித்து குழந்தையை எடுத்து அதைப் பலிகொடுத்தனர். அவளுடைய கிழிந்த வயிற்றுக்குள் பந்தம் கொளுத்தி வைத்தனர். இசக்கி நிறைவடைந்ததும் அவர்கள் அந்தக் கருவூலத்தை திருடிக்கொண்டு தப்பிச்சென்றார்கள். |
648 |
அவள் பலி கொடுக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டனர். மனம் உடைந்த கணவன் இணைசூரப்பெருமாள் அங்கேயே வாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சி உயிர்துறந்தான். அவள் அம்மா மனமுடைந்து இறந்தாள். பொன்னிறத்தாளுக்கு இறுதிக் கிரியைகள் செய்தபின் அவள் அண்ணன்கள் வாளை நட்டு அதன்மேல் பாய்ந்து உயிர்விட்டார்கள். |
649 |
வெறிகொண்டு அந்தக் கள்ளர்களை தேடிச் சென்று மதுரையை அடைந்தாள். அவர்கள் ஒவ்வொருவராகத் தேடிப்பிடித்து நெஞ்சுபிளந்து ரத்தம் குடித்தாள். அவர்கள் அத்தனை பேருடைய குடும்பங்களையும் முற்றாக அழித்து அந்த வீடுகள் இருந்த இடங்களை எருக்கு மேடுகளாக ஆக்கினாள். தன்னை காட்டிக்கொடுத்த பிராமணனை அவள் அறைந்தே கொன்றாள். |
650 |
அவன் குடும்பத்திலுள்ள சிறுகுழந்தைகளைக் கூட அழித்தாள். அத்தனைபேரும் அழிந்த பிறகும் அவளுடைய வெறி அடங்கவில்லை. அந்த வம்சங்களையே ஒவ்வொருவராக கொன்று குவித்தாள். பாண்டியனின் பட்டத்து யானைமேல் ஆவேசித்து தெருக்களில் போனவர்களை எல்லாம் கொன்றாள். பாண்டியன் மந்திரவாதிகளை அழைத்து பொன்னிறத்தாளைக் கட்டச்சொன்னான். |
651 |
இளவேலன் என்ற குறவ மந்திரவாதி அவளைக் கட்டமுன் வந்தான். அவனையும் கொன்று குருதி உறிஞ்சினாள் பொன்னிறத்தாள். அவன் மனைவி வெள்ளைக்குட்டி சீற்றம் கொண்டு எழுந்தாள். பொன்னிறத்தாளை அடக்குவேன் என்று கண்ணீருடன் சபதமிட்டாள். கடும்தவம் செய்து அவள் சிவனையே தன் சித்திரக் களத்தில் வந்து நிற்கச்செய்தாள். |
652 |
பொன்னிறத்தாளை எப்படி அடக்குவது என்று கேட்டாள். அவளுடைய அனல் அடங்கவேண்டும். நான் சொல்லப்போனால் என்னையே தலையைக் கிள்ளி விடுவாள் என்றார் சிவன். வெள்ளைக்குட்டி நேராக பொன்னிறத்தாளிடம் போனாள். நீயும் பெண். நானும் பெண். இரண்டுபேரின் கண்ணீரிலும் ரத்தம் இருக்கிறது. உன்னால் முடிந்தால் என்னைக்கொல் என்றாள். |
653 |
பொன்னிறத்தாள் நூறு கைகளுடன் ரத்தம் வழியும் நாக்கு தொங்க ஆயிரம் சிங்கங்களைப்போல உறுமியபடி முன்னால் வந்தாள். அவளைக் கொல்ல பொன்னிறத்தாளால் முடியவில்லை. அன்னையே, நீ அடங்கவேண்டும். உனக்கு என்ன தேவையோ அதைச்செய்கிறோம். என் கண்ணீர் மேல் ஆணை என்றாள் வேலனின் மனைவி வெள்ளைக்குட்டி. |
654 |
பெண்ணின் கண்ணீருக்கு பொன்னிறத்தாள் அடங்கினாள். அவளை அங்கேயே ஒரு கல்லில் தெய்வமாக நிறுத்தினாள் வெள்ளைக்குட்டி. பொன்னிறத்தாள் மதுரையிலும், தென்காசியிலும் பதினெட்டு இடங்களில் கோயில் கொண்டு வருடம்தோறும் குருதிபலி கொண்டு அடைக்கலம் என்று வருபவர்களுக்கு அருள்புரியத் தொடங்கினாள். |
655 |
அநீதிக்கு இரையானவர்களின் கண்ணீர் என்பது பெரும்புயல் போல கொள்ளைநோய் போல அழிவுத்தன்மை கொண்டது என்கிறது இந்தக்கதை. நம் பேய்த் தெய்வங்கள் பெரும்பாலானவை இந்த அறச்சீற்றம் பற்றி எரிந்த தழல்கள் தான். சிவனே அஞ்சும் மானுடர்கள். ஆனால் இன்னொரு மானுடனின் கண்ணீரை அடையாளம் காணமுடிந்தவர்கள். |
656 |
மற்ற பகவதி ஆலயங்களில் துர்க்கையின் சிலை அமைந்திருக்கும். மண்டைக்காட்டு பகவதியின் ஆலயத்திலுள்ள முக்கியமான வேறுபாடு இங்குள்ளது ஒரு சிதல்புற்று மண்ணுக்குள் வாழும் கரையான் என்பதுதான். ஏறத்தாழ இருபதடி உயரமும் இரு சிகரங்களும் கொண்ட இந்த மாபெரும் புற்று மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. |
657 |
அதன்மேல் பகவதியின் முகம் பதிக்கப்பட்டு அம்மனாக வழிபடப்படுகிறது. மண்டைக்காட்டுப் பகவதியைப் பற்றி பலவகையான கதைகள் இங்கே பேசப்படுகின்றன. கொட்டாரத்தில் சங்குண்ணி என்னும் வரலாற்றாசிரியர் எழுதிய ஐதீகமாலை என்னும் நூலில் மிக எளிமையான ஒரு கதையே உள்ளது. அந்த இடம் வறண்ட புதர்நிலமாக இருந்தது. |
658 |
அங்கே அடிநிலைச் சாதி மக்கள் மட்டுமே செல்வார்கள். அவர்களில் ஒர் இளைஞர்கூட்டம் காய்ந்த பனங்காயைக் கொண்டு பந்தாடிக்கொண்டிருந்தது. இதற்கு கட்டையடி என்று பெயர். பந்து சென்று ஒரு புற்றின்மேல் பட்டது. புற்றின் ஒருபகுதி உடைந்து உள்ளிருந்து ரத்தம் வழியலாயிற்று. அதை நிறுத்த முடியவில்லை. |
659 |
பிராமணர் நிமித்திகர்களைக் கொண்டு பார்த்தபோது அந்தப்புற்றுவாயில் பாலை ஊற்றினால் குருதி நிற்கும் என்று தெரிந்தது. அவர் அங்கே பூசைகளும் படையலும் செய்ய ஆரம்பித்தார். அங்கே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வழிபடும்பொருட்டு வரத்தொடங்கினர். அந்த இடம் முக்கியமான கோயிலாக ஆகியது. காணிக்கைகள் குவிந்தன. |
660 |
இது பருத்திவிளை பொன்னையா நாடார் என்பவரின் குடும்பத்திற்குச் சொந்தமானது என இன்னொரு வரலாறு உண்டு. அவர்கள் அந்த கரட்டு நிலத்திலுள்ள பனைமரங்களில் பனை ஏறி வாழ்ந்தவர்கள். அவ்வம்சத்தில் வந்த அனந்தன் நாடார் என்பவர் அங்கே பனையேறிவந்தார். அவரது மனைவி பொன்னம்மை. அவர்களுடைய குலதெய்வம் பத்ரகாளி. |
661 |
நாடார்கள் பனையையே பத்ரகாளியாகக் கும்பிட்டு வந்தகாலம் அது. ஒரு பருவத்தில் முதற்பனையில் இருந்து முதலில் இறக்கும் பதநீரை பத்ரகாளிக்கு படைத்துவிட்டு எடுத்துக்கொள்வது அக்காலத்து வழக்கம். அனந்தன்நாடார் அப்படி கோடைகாலத்தின் முதல் பதநீரை எடுத்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். |
662 |
நாடார் பனைக்கு முன் பூ வைத்து வணங்கிவிட்டு படையல் பதநீரை அருகே வைத்துவிட்டுச் சென்றார். பார்க்க பூசை நடந்ததுபோலவே இருந்தது. அவர் குளித்து வருவதற்குள் பொன்னம்மை அங்கே வந்தாள். பனைக்கு பூ சூட்டியிருப்பதைப் பார்த்து படையல் முடிந்துவிட்டது என்று சொல்லி பதநீரை எடுத்துச் சென்றுவிட்டாள். |
663 |
என்றாள் பொன்னம்மை. அன்று ஒரு பெண் ஆணை எதிர்த்துப்பேசுவதை பெரும் அவமதிப்பாகக் காணும் மனநிலை இருந்தது. அனந்தன் நாடார் கையில் இருந்த பெரிய முருக்குத்தடியால் மனைவியை ஓங்கி அறைந்தார். முருக்குத்தடி என்பது பனையின் அடித்தூரை ஏறிக்கடப்பதற்காக ஊன்றப்படும் பெரிய கழி பொன்னம்மை தலை உடைந்து அங்கேயே இறந்தாள். |
664 |
பொன்னம்மையின் குடும்பமும் செல்வாக்கானது. ஆகவே அனந்தன் நாடார் பயந்துபோய் பொன்னம்மையின் சடலத்தைக் கொண்டுசென்று பனங்காட்டில் இருந்த ஒரு சிதல்புற்றை உடைத்து உள்ளே போட்டுவிட்டு ஊரைவிட்டு ஓடினார். ஜெயத்துங்கநாடு என்று அன்று அழைக்கப்பட்ட கொல்லம் பகுதிக்குச் சென்று ஒளிந்துகொண்டார். |
665 |
நெல்லைமாவட்டம் நான்குநேரி முதல் குமரிமாவட்டம் கருங்கல் வரையிலான பகுதி செம்மண் நிலம். இப்பகுதியில் அன்றுமின்றும் சிதல்புற்றுக்கள் மிக அதிகம். மிகப்பெரிய கூடுகளைக் கட்டும் சிதல்கள் இவை. மண்ணுக்கு அடியில் முப்பதடி ஆழம் வரை இவை வேரோடிச் சென்றிருக்கும். மண்ணுக்குமேல் முப்பதடிவரை கூம்பாக வளரும். |
666 |
இப்படிப்பட்ட பெரிய சிதல்புற்றுக்கள் பொதுவாக பெருங்காடாக இருந்து பின்னர் பாலைவனமாக ஆன நிலங்களில் உருவாகக்கூடியவை. நான் ஆப்ரிக்காவிலும் இதேபோன்ற புற்றுகளைப் பார்த்திருக்கிறேன். பெரிய மரங்கள் விழுந்து மண்ணுக்குள் போய்விட்டிருப்பதனால் அவற்றை உண்ணும் சிதல்கள் உருவாகி வந்திருக்கின்றன. |
667 |
கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஊர்களைக் கைவிட்டு ஆரல்வாய்மொழிவரை பின்வாங்கிவந்து தங்கள் எல்லைகளை அமைத்திருக்கிறார்கள். இதற்குக்காரணம் முன்பு இப்பகுதியில் பெய்த மழை ஏதோ காரணத்தால் படிப்படியாக இல்லாமலாகி இந்த நிலம் அரைப்பாலைவனமாக ஆனதுதான் என்று தோன்றுகிறது. ஆகவேதான் இப்பகுதியில் சிதல் புற்றுகளும் உள்ளன. |
668 |
அந்தப்புற்றுக்குள் பொன்னம்மையின் எலும்புக்கூடு கண்டடையப்பட்டது. பொன்னம்மையின் ஆவி சாந்தமடைவதற்காக அவள் குடும்பத்தார் அந்தப்புற்றின் முன்னால் படுக்கை பூசை செய்ய ஆரம்பித்தனர். மிருகத்தை பலிகொடுத்து அந்த ரத்தத்தை சமைத்த சோற்றுடன் கலந்து அதை மனிதவடிவில் ஆக்கி பரப்பி வைத்து படைப்பார்கள். |
669 |
அப்போது பெண்கள் சிலருக்கு ஆவேசம் வந்து பொன்னம்மை தெய்வமாகிவிட்டாள் என்றும், அவளுக்கு பூசைசெய்தால் அனைத்து நலன்களையும் பெறலாம் என்றும் சொல்லப்பட்டது. விளைவாக அந்தக்குடும்பம் பொன்னம்மையை தெய்வமாக ஆக்கி வழிபடலாயிற்று. கொல்லம் சென்றிருந்த அனந்தன் நாடார் இச்செய்தி அறிந்து அங்கே வந்து புற்றை வழிபட்டார். |
670 |
அப்போதுதான் ஆலயத்தின் உரிமை குறித்த பூசல்கள் ஆரம்பமாயின. அதைப்புரிந்துகொள்ள திருவிதாங்கூரின் நில உரிமை முறையை அறிந்துகொள்ளவேண்டும். இங்குள்ள நிலம் முழுக்க அரசர், கோயில், பிராமணர் ஆகிய மூன்று தரப்பினரில் ஒருவருக்கு மட்டுமே சொந்தம். ராஜஸ்வம், தேவஸ்வம், பிரம்மஸ்வம் இது ஜன்ம உரிமை பிறப்புரிமை எனப்படும். |
671 |
நில உரிமையாளர் ஜன்மி எனப்படுவார். ஆனால் அவர்களின் நில உரிமை என்பது குத்தகைப்பணம் பெறும் உரிமை மட்டுமே. மற்றபடி நிலங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. நடைமுறை உரிமை அந்நிலத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு உரியது. தமிழகம் முழுக்க ஏறத்தாழ இதே வகை நில உரிமைதான் இருந்தது. |
672 |
சோழர்களால் உருவாக்கப்பட்ட நில உரிமைமுறை இது மண்டைக்காட்டு அம்மன் கோயிலை அதன் ஜன்மிகளான பிராமணர்கள் கையகப்படுத்தினர். அன்று திருவிதாங்கூர் அரசு பிராமணர்களின் நிலங்களையும் கோயில்நிலங்களையும் வரிபோட்டும் அரசுடைமை ஆக்கியும் உரிமையாக்கிக் கொண்டிருந்தது. அதற்கு முன்னின்று செயல்பட்டவர் திவான் சி. |
673 |
ஏனென்றால் திருவிதாங்கூர் அரசு அன்று வெள்ளைய அரசுக்குக் கட்டவேண்டிய கப்பம் மிகமிக அதிகம். கப்பம் கட்டமுடியாமல் வெள்ளையர்களிடம் மன்றாடிக்கொண்டிருந்தார்கள். வெள்ளையர்கள் ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டிருந்தமையால் அவர்களுக்கும் இவர்கள் எவ்வளவு கொடுத்தும் போதவில்லை. |
674 |
மண்டைக் காட்டம்மன் பகவதியாக ஆனாள். அவள் நாடார் சாதிப்பெண் என்பது மறைக்கப்பட்டது. புற்று மட்டுமே கதையில் இடம்பெற்றது. மண்டைக்காட்டு அம்மன் கோயிலின் வரலாற்றை எழுதிய குமரிமாவட்ட வரலாற்றாசிரியர்கள் அனைவருமே கொட்டாரத்தில் சங்குண்ணியின் கதையின் வேறுபட்ட வடிவங்களையே அளிக்கிறார்கள். |
675 |
கன்யாகுமரி வழியாக வந்த பகவதி யோகி தவம் செய்வதை அறிந்து அருகே வந்து அவருக்கு அருள் செய்தாள். அவள் அந்தப்புற்றில் இருந்து அருள் புரியவேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். அவ்வாறுதான் தேவியின் எண்ணப்படி இடையர்கள் புற்றைக் கண்டடைந்தனர். அந்தப்புற்று ஆதிசங்கரரின் சக்கரத்தின் வடிவம் என்கிறார் தம்பி. |
676 |
வரலாற்று ஆதாரம் தேடிச்சென்றால் இக்கோயிலில் நாடார் சாதியினருக்குரிய உரிமைகள் முக்கியமாக கண்ணில் படுகின்றன. பருத்திவிளை நாடார் குடும்பம் இன்றும் முதன்மை மண்டகப்படி மற்றும் கோயிலுக்குரிய நெய்யும் எண்ணையும் அளித்தல் ஆகிய உரிமைகளைக் கொண்டிருக்கிறது. வேறுசில நாடார்குடும்பங்களுக்கும் உரிமைகள் உள்ளன. |
677 |
ஆகவே அனந்தன் நாடார் கதையே உண்மையாக இருக்கலாமென்று எண்ணத் தோன்றுகிறது. அந்தச் சித்தர் அனந்தன்நாடாராக இருக்கக்கூடும் இவ்வளவும் வரலாறு. ஓரு நாட்டார்தெய்வம் எப்படி அனைத்துச் சமூகங்களுக்கும் உரிமை கொண்டதாக ஆகிறது, அந்தப்போக்கில் எப்படி புராணங்கள் உருவாகி வருகின்றன என்பதன் சித்திரம் இது. |
678 |
வரலாறும், புராணமும் இந்தப் புற்றுபோல தானாக வளர்வதுதான். ஆனால் இன்னொன்றையும் இங்கே கருத்தில் கொண்டாக வேண்டும். புற்று எப்படி தெய்வமாகிறது?. இயற்கையின் பயங்கரம், மனிதன் புரிந்துகொள்ள முடியாத மகத்துவம் வெளிப்படும் இடங்களை தெய்வமாக வழிபடுவது ஒருவகை ஆன்மிக நிலையே. அதை மூடநம்பிக்கை என மூடர்கள் சொல்லலாம். |
679 |
ஆப்ரிக்காவில் உள்ள சில சிதல்புற்றுக்கள் மூவாயிரம் வருடம் பழையவை. நூறடி ஆழம் கொண்டவை. இருநூறடி வரை உயரம் கொண்டவை. இன்றும் வாழ்பவை. தொடர்ந்து அவை வளர்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றின் உள்ளே உள்ள கட்டிட அமைப்பு மிகமிகச் சிக்கலானது. உள்ளே காற்று போக வழிகள் உள்ளன. போகவும் வரவும் தனித்தனிப் பாதைகள். |
680 |
அவற்றின் பொறியியலை அறிவியலாளர்கள் கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். அதிலிருந்து பல நுட்பங்களை கற்றுக்கொள்கிறார்கள். அந்தச் சிதல்புற்றுகளைக் கட்டிய சிதல்கள் ஒருவார காலம் மட்டுமே உயிர்வாழ்பவை. அவற்றின் மூளை மிகமிகச்சிறியது. ஒரு தனிச் சிதல் அந்த கூட்டை பார்க்கவோ, உணரவோ முடியாது. |
681 |
அப்படியென்றால் அந்த சிதல்புற்றின் வடிவமும், அதன் பொறியியல் நுட்பங்களும் எங்கே இருக்கின்றன? அவை சிதல் என்னும் உயிரின் கூட்டுமனத்தில் உள்ளன. அவற்றுக்கு தனித்தனியாக ஒன்றும் தெரியாது, கூட்டாக அவற்றுக்கு இருக்கும் அறிவு பிரம்மாண்டமானது. வைரஸ்கள், பாக்டீரியாக்கள் போன்ற அனைத்துக்கும் தனி மனம் இல்லை. |
682 |
நாம் ஒரு பூச்சிமருந்தைக் கண்டுபிடித்தால் அவை அந்த மருந்தைப் புரிந்துகொண்டு அதற்கு எதிராக தங்களை மாற்றிக்கொள்வது அப்படித்தான். நம் உடலில் செல்கள் எப்படி தனித்தனியாகச் செயல்படுகின்றனவோ அப்படித்தான் சிதல்கள் செயல்படுகின்றன. அந்தச் சிதல்கூடு நம் உடல்போல ஒரு அமைப்பாக வளர்ந்துகொண்டிருக்கிறது. |
683 |
ஒரு செல்லுக்கு நம் உடல் என்ன செய்கிறது என்று தெரியாது. அது வாழ்வது தன் சொந்த வாழ்க்கையை. ஆனால் செல்கள் சேர்ந்ததுதான் நம் உடல். இந்த மாபெரும் விந்தையைத்தான் புற்றுவடிவில் காண்கிறோம். ஆகவேதான் தொன்மையான குடிகள் புற்றை வழிபடுகிறார்கள். இந்தியா முழுக்கவே புற்றுவழிபாடு உள்ளது. |
684 |
பொன்னம்மை மறைந்த புற்று பகவதியாக ஆனதன் பின்னணியில் உள்ளது இயற்கை பற்றிய இந்த வியப்புதான். புற்றை பகவதி என்று சொல்லலாமா என்று பகுத்தறிவுடன் கேட்கலாம். புற்றாக வெளிப்படும் இயற்கையின் பிரம்மாண்டம்தான் பகவதியின் தோற்றம். நாம் பகவதியை அப்படித்தான் அறியமுடியும் என்று ஆத்திகர்கள் பதில்சொல்வார்கள். |
685 |
போர் முடிந்து திரும்பி வரும் மாக்பத் மூன்று சூனியக்காரிகளைப் பார்க்கிறான்.அவனுடைய படைத்தளபதியும் தலைவனுமான டங்கனை அவன் கொல்வானென்று அவை குறிகள் வைக்கின்றன. மாக்பத்தின் மனைவி அச்செய்தி அறிந்து பேராசை கொள்கிறாள். டங்கனைக் கொன்றால் மாக்பத் அரசனாகி விடலாமென்று அவனைத் தூண்டுகிறாள். |
686 |
அதைப்போன்று தன் தந்தையின் ஆவியை ஹாம்லெட் பார்க்கும் இடமும் ஷேக்ஸ்பியர் நாடங்களில் முக்கியமானது. மேலை நாட்டு நூல்களில் இறந்தவர்கள் நிறைவுறாத ஆத்மாக்களாக எழுந்து வந்து உயிருள்ளவருடன் உரையாடுவதும் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதும் பல்வேறு வகையில் செவ்விலக்கியங்களில் எழுதப்பட்டுள்ளன. |
687 |
அதை எண்ணிக் கொண்டிருக்கையில் மகாபாரதத்தில் அத்தகைய இடங்கள் ஏதேனும் வருகின்றனவா என்று பார்த்தேன். ஆச்சரியமாக மகாபாரதத்தில் இறந்தவர்களின் ஆவிகள் எழுந்து வரும் தருணங்களே இல்லை. மகாபாரதம் பிரம்மாண்டமான ஒரு கதைக்களஞ்சியம் என்பதனால் எங்கேனும் துணைக்கதைகளில் ஊடுருவியிருக்கலாம். |
688 |
மூதாதையர் மறைந்த பின்னர் அவர்களுக்கு நீர்க்கடன்கள் செய்வதைப் பற்றியும் அவர்களுக்கு உகக்காததை செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் மகாபாரதம் பல இடங்களில் வலியுறுத்துகிறது. ஆனால் ஏன் ஆவிகள் இல்லை? மீண்டும் எண்ணிக்கொண்டிருந்த போது கிரேக்க தொன்மங்களில் இறந்தவர்களின் ஆவிகள் வருகின்றனவா என்ற வினா எழுந்தது. |
689 |
பார்த்தவனை அக்கணமே கல்லாக்கும் மெடூசாக்கள் வருகின்றன. ஒற்றைக்கண் சைக்ளோப்கள் வருகின்றன. ஆனால் ஆவிகள் இல்லை! பல்வேறு கேள்விகளை என்னுள் எழுப்பியது இது. மகாபாரதத்துக்கும் கிரேக்கத் தொன்மங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அக்கிலீசை அர்ஜுனன் என்றும், ஹெர்குலிஸை பீமன் என்றும் சாதாரணமாகவே ஒப்பிடலாம். |
690 |
தெய்வ வல்லமைகளுக்கு முன் இப்பேய்களுக்கான இடம் பெரிதல்ல என்று தோன்றியிருக்கலாம். அவை உருவாக்கும் சிக்கலான கதைக்களத்தில் இந்த இறந்து போன ஆவிகள் வந்து ஆற்றுவதற்கொன்றுமில்லை என்றிருக்கலாம். ஆனால் அதைவிட நிறைந்த வரலாற்றுப் பார்வையுடன் இதைப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. |
691 |
ஆப்பிரிக்காவின் மைய மதஓட்டமே இறந்தவர்களை நிறைவு செய்யும் சடங்குகளாக இருக்கிறது. பல பழங்குடிகளுக்கு மூதாதையரே தெய்வங்களாக இருக்கிறார்கள். சொல்லப்போனால் மண்ணில் மனிதர்கள் முதலில் கண்டடைந்த முதல் தெய்வமே மூதாதையர் தான். நீத்தார் வழிபாடே முதல் மதம் என்று பழங்குடி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். |
692 |
அதிலிருந்து வளர்ந்து எழுந்து பல்வேறு தெய்வங்களை மனிதன் படைத்துக்கொண்டான். மின்னலை ஏந்தி வரும் இந்திரன், ஏழுபுரவிகளில் செல்லும் சூரியன், கடல் அலைகளாக வருணன். காற்றாக வாயு, இறப்பாக எமன். பல்வேறு இயற்கை ஆற்றல்களும் தெய்வமாயின. அன்பு, கருணை, அறம், போன்ற மதிப்பீடுகள் தெய்வ உருவம் கொண்டன. |
693 |
நீத்தார் மதத்திலிருந்து முழுமுதல் தெய்வத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவார்த்த மதம் வரைக்குமான ஒரு நீண்ட பயணம் நடந்து முடிந்த பிறகுதான் ரிக்வேதமே எழுதப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் தொடக்க காலத்திலேயே நீத்தார் வழிபாடும், ஆவி வழிபாடும் தத்துவார்த்தமாக கடந்து செல்லப்பட்டுவிட்டன. |
694 |
ஆக இந்துமதத்தின் தத்துவார்த்த அடித்தளம் கொண்ட உயர் தளத்தில் ஆவிகள் இடம் பெறவில்லை. ஆகவே தத்துவத்தில் இருந்து முளைத்தெழுந்த இதிகாசங்களிலும் புராணங்களிலும் ஆவிகளுக்கு இடமிருக்கவில்லை. திருவிளையாடல் புராணத்திலோ பெரிய புராணத்திலோ ஆவிகள் இல்லை. ஆனால் ஆவிகள் முற்றிலும் இல்லாமலும் இல்லை. |
695 |
நமது ஆலயங்கள் பலவற்றின் முன்னால் பிரம்மஹத்திக்கான சிறிய பிரதிஷ்டைகள் இருப்பதை பார்க்கலாம். பிராமணனைக் கொன்ற ஒருவன் பிரம்மஹத்தியிலிருந்து தப்பி கோயிலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான் என்றும் அவன் வெளிவருவதற்காக காத்த பிரம்மஹத்தி யுக யுகங்களாக அங்கே அமர்ந்திருக்கிறது என்றும் கதைகள் இருக்கும். |
696 |
நாட்டுப்புறக்கதைகள் முழுக்க இறந்தவர்களின் வஞ்சமும் பழியும் தான் பேசப்படுகிறது. ஆனால் கதைகளின் மேல்தளத்தில் அவை செல்வதே இல்லை. இதையே மேலைக்கலாசாரத்துக்கும் சொல்ல முடியும். பழங்குடி நம்பிக்கைகளிலிருந்து எழுந்து கிரேக்க மதம் போன்று மிகப்பெரிய புராண செல்வம் கொண்ட ஒரு மதம் உருவாகிவிட்டது. |
697 |
கிரேக்க புராண மரபுக்குள் இடம் இல்லாது வெளியே நின்ற நம்பிக்கைகளைத் தான் பேகன் மதம் என்று சொல்கிறார்கள். பேகன் மதத்தில் தான் ஆவிகளும் பெருமிடத்தை வகிக்கின்றன. கிரேக்க மதம் அவற்றை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் பின்பு வந்த கிறிஸ்துவம் பேகன் மதத்துடன் மிகப்பெரிய ஒரு போரை நிகழ்த்தியது. |
698 |
ஆவி ஒழிப்பு என்பது பாதிரியார்களின் பணியாக ஈராயிரம் ஆண்டு இருந்திருக்கிறது. அதற்கு காரணம் ஆவி நம்பிக்கைகளால் நிறைந்த பேகன் மதத்துடன் கிறிஸ்தவம் கொண்ட போரே. இந்த ஒரு அணுகுமுறையில் நாம் அறிந்த பல கதைகளை விளங்கிக் கொளள முடியும். ட்ராகுலா ஓர் ஆவி.ஆகவேதான் சிலுவையைக் கண்டால் அஞ்சி பின்னால் விலகுகிறார். |
699 |
பதினைந்தாம் நூற்றாண்டுக்குப்பிறகு ஐரோப்பா முழுக்க கிறிஸ்தவ புராண மரபிலிருந்து விலகி புதிய இலக்கிய போக்குகளை உருவாக்க ஆரம்பித்தனர். அவர்கள் கிரேக்க தொன்மங்களில் இருந்தும் பேகன் கதைகளில் இருந்தும் தங்கள் கருக்களை எடுத்துக் கொண்டனர். ஷேக்ஸ்பியர் அவ்வாறு எடுத்து எழுதிய கவிஞர். |
700 |
முழுக்க முழுக்க பேகன் பாரம்பரியம் கொண்டது. மாக்பத் எதிர்கொள்ளும் சூனியக்காரிகளும் சரி, ஆவி வடிவாக ஹாம்லெட்டுடன் வந்து பேசும் தந்தையும் சரி, அந்த பேகன் மரபின் தொடர்ச்சியே. அவர்களுக்கு நவீன இலக்கிய நோக்கில் ஒரு மறுவிளக்கத்தை ஷேக்ஸ்பியரால் அளிக்க முடிந்திருக்கிறது என்பதனாலேயே அது முக்கியமானதாகிறது. |
701 |
டங்கனை மாக்பத் கொலை செய்கிறான். அன்றிரவு அவனுடைய மாளிகையின் அனைத்துக் கதவுகளும் தட்டப்படுகின்றன. காவலன் ஒருவன்,, ? என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். அது மனசாட்சியின் அலைக்கழிப்பு. அதிலிருந்து டங்கனின் ஆவி எழுகிறது. கிட்டத்தட்ட இத்தகைய ஒரு காட்சி மகாபாரதத்தில் வருகிறது. |
702 |
போர் முடிந்து நெடுங்காலமாகியிருக்கிறது. விதவைகளும், மைந்தரை இழந்த அன்னையரும் கண்ணீருடன் வந்தமர்ந்திருக்கிறார்கள். அங்கே வியாசர் வருகிறார். ஒவ்வொருவரும் தங்கள் இறந்து போன கணவரையும், மைந்தர்களையும் பார்க்க வேண்டுமென்று மன்றாடுகிறார்கள். வியாசர் கங்கையை தன் கைகளால் தொட்டு அதை ஒளிபெறச்செய்கிறார். |
703 |
காவியம் ஒரு போதும் சென்று தொடாத இருண்ட ஆழத்தில் அவர்கள் பெயர் கூடத் தெரியாமல் அழிந்திருப்பார்கள் அல்லவா? மகாபாரதமோ, கிரேக்க செவ்வியலோ சென்று தொடாத ஒரு ஆழமென்பது நம்முடைய நாட்டுப்புறப் பண்பாட்டின் வெளி. அங்கே தான் மண் மறைந்த நம்முடைய முன்னோர்கள் வாழ்கிறார்கள். அவர்களை எந்தக்காவியமும் பாடுவதில்லை. |
704 |
ஆனால் நம் நினைவில் அவர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். மகாபாரதமும் ராமாயணமும் புராணங்களும் காவியங்களும் இந்துப்பண்பாட்டின் கோபுரங்கள். அவை அஸ்திவாரம் அடித்தளமிட்டு நின்றிருக்கும் மண் என்பது நம்முடைய குலதெய்வங்களும், மூத்தாரும், நீத்தாரும், வாழும் நாட்டுப்புறப்பண்பாடு தான். |
705 |
அழுதவர்கள், அறிந்தவர்கள் எனது அம்மாவுடைய சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம். மேலே விஷ்ணு கோயிலும் கீழே சிவன் கோயிலும் இருக்க நடுவே அழகிய தெப்பக்குளம் கொண்ட ஊர். விஷ்ணு கோயிலின் வலப்பக்கமாக அம்மாவுடைய பாரம்பரிய வீடு. இன்று அதை இடித்து ஓட்டு வீடாகக் கட்டிவிட்டார்கள். |
706 |
திருப்பிரான்மலை என்று சங்ககாலத்திலேயே புகழ் பெற்ற சிவன் கோவில் இன்று திப்ரமலை என்று அழைக்கப்படுகிறது. அக்கோயிலுக்கு வெளியே இரு சிறு நடுகற்களாக குடிகொண்டிருக்கிறார்கள் கண்ணக்கரைத் தம்புராட்டிகள். திப்ரமலையிலிருந்த தொன்மையான ஒரு வேளாளக் குடும்பம் கண்ணக்கரைத் தம்புரான்கள் என்று அழைக்கப்பட்டனர். |
707 |
நான்குசுற்றும் உள்முற்றங்கள் கொண்ட மிகப்பெரிய வீடு. அக்காலத்தில் குமரியின் அப்பகுதியில் நட்டாலம், திப்ரமலை, வாள்வெச்ச கோஷ்டம் போன்று ஓரிரண்டு கோயில்களையும் அவற்றைச் சுற்றியிருக்கும் சிற்றூர்களையும் தவிர மீதிப் பகுதியெல்லாம் செம்மண்மேடும் அடர்வற்ற புதர்காடுமாக வீணே கிடந்தன. |
708 |
ஆயிரத்து எண்ணூற்று எழுபதுகளில் தமிழகத்தை வாட்டிய பெரும்பஞ்சத்தின் போதுதான் பெருவாரியான மக்கள் அங்கே குடியேறினர். ஏறத்தாழ அதே காலகட்டத்தில் போர்ச்சுகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மரவள்ளிக்கிழங்கு இப்பகுதியின் செம்மண்ணில் மிகச்சிறப்பாக விளைய ஆரம்பித்தது. மேட்டுநிலமான அங்கு வேறு வேளாண்மை நிகழாது. |
709 |
இன்றைய நட்டாலத்தையோ திற்பரப்பையோ வைத்துக் கொண்டு நூறாண்டுகளுக்கு முந்தைய ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்வது கடினம். திப்ரமலையின் கண்ணக்கரைத் குடும்பக்காரர்கள் எல்லையற்ற நிலத்திற்கு உடைமையாளர்களாக இருந்த போதும் கூட ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கையை தான் வாழ்ந்திருந்தார்கள் என்று கொள்ள வேண்டும். |
710 |
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் மக்கள் இங்கு வந்து குடியேறி பொட்டல் நிலங்களை கால்பணம், அரைப்பணம் கொடுத்து வருடக் குத்தகைக்கு எடுத்து மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். கண்ணக்கரை குடும்பத்தின் தலைவராக அன்றிருந்தவர் அரத்தன் பிள்ளை. |
711 |
வள்ளியம்மைக்கு நான்கு குழந்தைகள். வள்ளியம்மையின் கணவரும் இரணியலில் ஒரு சிறிய நில உடைமையாளருமான மல்லன் பிள்ளை ஒருமுறை வள்ளியம்மையை பார்க்க வந்தபோது இரவில் தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த புளியமரத்தில் கூடு கட்டியிருந்த விஷக்குளவிகளால் தாக்கப்பட்டார்கள். இருவரும் அங்கேயே உயிர் துறந்தார்கள். |
712 |
தங்கையின் இறப்பால் அரத்தன் பிள்ளை மனச்சோர்வு அடைந்து படுத்த படுக்கையாக இருந்தார். நிலங்களை வீடு தேடிவந்து கேட்பவர்களுக்கெல்லாம் வெற்றிலையில் பாக்கு வைத்து சத்தியம் வாங்கிக் கொண்டு கையளித்துக் கொண்டிருந்தார் அரத்தன்பிள்ளை. அவர்களில் பெரும்பாலானவர்கள் வேளாண்மைக்கு புதியவர்கள். |
713 |
ஆகவே நிலங்கள் குத்தகைக்கு சென்றாலும் கூட கண்ணக்கரை குடும்பத்திற்கு மிகக்குறைவாகவே பணம் வந்து கொண்டிருந்தது. இறந்த வள்ளியம்மைக்கு பொன்னப்பன் என்ற மூத்த மகனும் தேவம்மாள், உமையம்மை என்ற இரு மகள்களும் கடைசியாக தாணப்பன் என்ற மகனும் இருந்தனர். பொன்னப்பனுக்கு பதினெட்டு வயது இளையவன் தாணப்பன். |
714 |
நேர்மாறாக ஒரு கால் ஊனமுற்றவனும், உடல் மெலிந்தவனுமாகிய தாணப்பன் செலவாளியாகவும் பெண்கள் விஷயத்தில் மிதமிஞ்சிய ஆர்வம் கொண்டவனாகவும் இருந்தான். அப்போது உருவாகி வந்து கொண்டிருந்த புதுக்கடை சந்தையிலே குடியேறி விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்களிடம் அவனுக்குத் தொடர்பிருந்தது. |
715 |
அவன் கேளிக்கையில் ஈடுபடுவதற்கான பல்வேறு வாய்ப்புகளை புதுக்கடைச் சந்தை அவனுக்கு அளித்தது. வழக்கமாக வேளாளக் குடும்பங்களில் பதினைந்து, பதினாறு வயதிலேயே பெண்களுக்குத் திருமணமாகிவிடும். ஆனால் கண்ணக்கரை குடும்பத்தின் பொருளியல் வீழ்ச்சி காரணமாக எவரும் பெண் கொள்ள தேடி வரவில்லை. |
716 |
ஆகவே தேவம்மையும் உமையம்மையும் இருபது வயது வரைக்கும் கன்னியராகவே இருந்தனர். அன்றைய வேளாள குடும்பங்களின் இற்செறிப்பு முறை காரணமாக அவர்கள் கண்ணக்கரை வீட்டின் மிகப்பெரிய சுற்று மதில்களுக்குள்ளேயே வாழ்ந்தனர். அதற்கப்பால் இருக்கும் உலகத்தை அவர்கள் மொழி வழியாகவே அறிந்திருந்தனர். |
717 |
திருவிதாங்கூரில் போர்கள் நிகழ்ந்து நெடுங்காலமாகிறது என்பதனால் அவை ஆண்டுக்கொரு முறை எடுத்து தூய்மைப்படுத்தபடுவதன்றி பயன்படாமலே இருந்தன. தங்கள் வீரம் மறைந்து விடக்கூடாது என்பதற்காக மாதத்திற்கு இரண்டு முறையாவது வேட்டைக்குச் செல்லும் வழக்கத்தை அவர்கள் கட்டாயமாகக் கொண்டிருந்தார்கள். |
718 |
நரிவேட்டை ஆடுவது அன்றைய வேளாண்மையின் ஒரு பகுதியாகவே இருந்தது. பன்றி வேட்டையும் மரவள்ளிக்கிழங்கை பாதுகாப்பதற்கு அவசியமானது. காட்டுப்பன்றி இறைச்சியை வேட்டைப்பொருளாக கொண்டு வந்து உண்ணும் வழக்கம் இருந்தது. பொன்னப்பனும், தாணப்பனும் வேட்டைக்குச் சென்றபின் அந்தியில் திரும்பி வரவில்லை. |
719 |
சகோதரிகள் இருவரும் இரவெல்லாம் அவர்கள் திரும்பி வருவதற்காக காத்திருந்தார்கள். மறுநாள் விடியற்காலையில் வீட்டுமுன் நாய்களின் ஊளைச்சத்தம் கேட்டு பதறி ஓடிச்சென்று கதவைத் திறந்து பார்த்தனர். வாசலில் எட்டு நாய்களும் நின்றிருந்தன. அவற்றின் உடம்பெல்லாம் ரத்தம் பரவி உலர்ந்து கருமையடைந்திருந்தது. |
720 |
ஊளையிட்டபடியும், மண்ணைப்பிராண்டியபடியும் அவை பதறி தவித்தன. என்ன நடந்ததென்று அப்பெண்களால் ஊகிக்க முடியவில்லை. அப்போது அவ்வீட்டில் வேலைக்காரர்களும் இல்லை. போதிய வேலைக்காரர்கள் கூலி கிடைக்காமல் நின்றுவிட்டிருந்தனர். ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே அங்கு சமையல் நடந்து கொண்டிருந்தது. |
721 |
வீட்டை விட்டு வெளியே சென்றறியாத தேவம்மையும் உமையம்மையும் என்ன செய்வது என்று அறியாமல் நெஞ்சில் அறைந்து அழுதனர். எழ முடியாமல் திண்ணையில் கட்டிலில் படுத்திருந்த அறத்தன் பிள்ளை கண்ணீருடன் அவர்களுக்கு ஏதோ ஆகிவிட்டது. வெளியே சென்று யாரையாவது கூட்டிக் கொண்டு சென்று பாருங்கள் என்று கதறினார். |
722 |
என்று கேட்டாள். அவன் கை சுட்டி ஏதோ சொல்லி கதறியழுதான். அவன் சுட்டிக்காட்டிய அதே திசையில் ஏற்கனவே நாய்கள் ஓடிச்சென்றிருந்தன. அவை அங்கு சென்று ஊளையிட்டதைக் கண்டு தேவம்மாள் விரைந்தோடினாள். உமையம்மை தொடர்ந்து சென்றாள். அங்கே பொன்னப்பன் உடல் சிதைந்து உறைந்த ரத்தத்தில் ஊறிக்கிடந்தான். |
723 |
அவன் கால்களிலும் தோள்களிலும் அமர்ந்து கவ்வி இழுத்து அவனை எழுப்ப முயன்றன. கால்மடித்து அமர்ந்து வானை நோக்கி முகத்தை நீட்டி ஊளையிட்டுக் கதறின. அவன் அருகே ஒரு பெரிய பாறை ரத்தம் படிந்து உருண்டிருந்தது. பாறை உருண்டு விழுந்து பொன்னப்பன் இறந்துவிட்டான் என்று தேவம்மாள் சொன்னாள். |
724 |
ஆனால் அருகே வராமல் தொலைவிலே நின்று தலையில் அறைந்து அழுது கொண்டிருக்கும் தாணப்பனைக் கண்டவுடன் ஏதோ தவறாக நிகழ்ந்துவிட்டது என்று வள்ளியம்மைக்கு ஓர் உள்ளுணர்வு சொன்னது. அவள் நேராகச் சென்று தாணப்பனின் இருகைகளையும் சுழற்றி தரையில் அமரவைத்து சொல் நடந்தது என்ன? என்ன நடந்தது சொல் என்றாள். |
725 |
நம் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் எவையும் நமக்கு உரிமையானவை அல்ல. அவை திப்ரமலை கோயிலுக்கும் திருவிதாங்கூர் அரசருக்கும் சொந்தமானவை என்று பொன்னப்பன் சொன்னான். நாம் அதை ஏன் சொல்ல வேண்டும்? பாண்டிநாட்டாருக்கு அதெல்லாம் தெரியாது. பேசாமல் விற்றுவிடலாம் என்று தாணப்பன் வாதாட பொன்னப்பன் மறுத்துவிட்டான். |
726 |
பொன்னப்பன் இறந்தால் நிலங்களை விற்று கடன்களை அடைக்கலாம் என்று தாணப்பன் நினைத்தான். அவனுக்குக் கடன் கொடுத்த புதுக்கடை சாயபுக்கள் ஒரு மாதத்திற்குள் பணம் கொண்டு வந்து கட்டவில்லையென்றால் வீட்டுக்கு வந்து அவனை கைகால்களைக் கட்டி குதிரை வண்டியின் பின்னால் இழுத்துச் செல்லப்போவதாக மிரட்டியிருந்தார்கள். |
727 |
குன்றின் மேல் ஏறியதும் பன்றி மறைந்துவிட்டது. பொன்னப்பன் கீழே நாய்களுடன் இருந்தான். மேலிருந்து பார்த்தபோது ஆழத்தில் குனிந்து நிற்பதை தாணப்பன் கண்டான். அருகே இருந்த மிகப்பெரிய பாறை ஒன்றை தள்ளி உருட்டி விட்டான். உருண்டு வந்த பாறை பொன்னப்பன் மேல் விழுந்து அவனை நசுக்கி கடந்து சென்றது. |
728 |
பாறை அணுகியதுமே அது தாணப்பனால் செய்யப்பட்டது என்பதை பொன்னப்பன் அறிந்தான். பிள்ளையைப் போல் வளர்த்தேனே தாணப்பா! என்று கதறியபடி அவன் நசுங்கி உயிர் விட்டான். அந்த வார்த்தை வாள் போல தாணப்பன் நெஞ்சில் பதிந்தது. அவனால் மேலே நிற்க முடியவில்லை. நெஞ்சில் அடித்து கதறியபடி கீழே ஓடி வந்தான். |
729 |
நான் தவறு செய்துவிட்டேன். என்னைக்கொல்லுங்கள். நான் தவறு செய்துவிட்டேன். எனக்கு மோட்சம் இல்லை என்று தாணப்பன் கதறி அழுதான். மூத்தவளாகிய தேவம்மை சரி எப்படியானாலும் நீ என் தம்பி. வந்து பெரிய மாமாவின் கால்களில் விழுந்து மன்னிப்புக்கேள் என்றாள். ஆனால் இளையவளாகிய உமையம்மை இல்லை. |
730 |
அவர்களின் அழுகுரல் கேட்டதும் உளக்கொந்தளிப்பால் அரத்தன் பிள்ளை துடித்து இறந்தார். சகோதரிகள் இருவரும் அந்தப்பெரிய வீட்டின் அனைத்துக் கதவுகளையும் அடைத்து இருளுக்குள் ஒருவர் நாவை இன்னொருவர் பிடித்து இழுத்து பிடுங்கி உயிர் விட்டார்கள். நாய்களின் ஓலம் பல நாட்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. |
731 |
இப்பகுதியில் வீடுகள் தனித்தனியாக தோட்டத்திற்குள்தான் இருக்கும். கண்ணக்கரை வீட்டுத் தோட்டம் மிகப்பெரியது. வீடும் மிகப்பெரியது. ஆகவே பக்கத்து வீட்டுக்காரர்கள் நெடுந்தொலைவில் இருந்தனர். என்ன நிகழ்ந்தது என்று அவர்கள் ஒருவருடன் ஒருவர் கேட்டுக்கொண்டாலும் கூட எவரும் அங்கு சென்று பார்க்கவில்லை. |
732 |
ஏனென்றால் அது பஞ்ச காலமானதால் அனைத்து வீடுகளிலுமே வறுமைதான் நிறைந்திருந்தது. கிழங்குகளும், பலாக்காயோ சேகரித்து வந்து அன்றைய உணவை உண்டு படுப்பதே பெரும்பாலானவர்களின் நாளாக இருந்தது. சில நாட்களுக்குப்பின் நாய்களின் சத்தம் கேட்காமலாயிற்று. அதன்பிறகு எவரும் கண்ணக்கரைத் வீட்டைப்பற்றி நினைக்கவும் இல்லை. |
733 |
வீட்டைச் சுற்றி நாய்கள் இறந்து மட்கி எலும்புக்கூடுகளாகக் கிடப்பதையும் வீடு முழுமையாக உள்ளிருந்து தாழிடப்பட்டிருப்பதையும் கண்டான். அவன் அலறியபடி ஓடிவந்து கோயிலில் குடியிருந்த மக்களிடம் விஷயத்தைச் சொன்னான். அவர்கள் திகைத்து ஓடிச்சென்று பார்த்தனர். திண்ணையில் அரத்தன்பிள்ளையின் எலும்புக்கூடு கிடந்தது. |
734 |
எங்கள் அனல் அணைய வேண்டும் என்று அவர்கள் கோரினர். திப்ரமலையின் தலைமைப் பூசாரியாகிய சுப்ரமண்யன் நம்பூதிரி அவர்கள் இருவரையும் இரு கற்களில் ஆவாஹனம் செய்து கோயிலுக்கு தெற்கு பக்கத்தில் நின்றிருந்த பெரிய பலாமரத்தின் அடியில் பதிட்டை செய்து ரத்த பலி கொடுத்து, முறை பூசை செய்து அமைதியடையச்செய்தார். |
735 |
அல்லது இதன் அர்த்தமென்பது ஊழ் என்று மட்டும் சொல்லலாம். செல்வமும் செல்வாக்கும் புகழுமாக பொலிந்து நின்ற ஒரு குடும்பம் சோப்பு நுரை போல வெடித்து வெடித்து இருந்த இடம் தெரியாமல் காணாமல் ஆகியது. எதற்காக கண்ணக்கரை தம்புராட்டிகளை வேண்டிக் கொள்கிறார்கள்? என்று பெரிய மாமாவிடம் கேட்டேன். |
736 |
அது மகாபாரதக்கதை, ஆனால் மகாபாரதத்தில் அது இல்லை. நாட்டார்க்கதைகளில் உள்ளது. மலையபாரதம் என்னும் ஒரு வாய்மொழி மகாபாரத வடிவம் இருந்திருக்கிறது. இது கேரளத்தின் பாடகர்குலமான மலையர்களால் பாடப்பட்டது. இவர்களை வேலர்கள் என்றும் சொல்வதுண்டு. மலையபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது இக்கதை. |
737 |
பதினான்கு வருடம் காட்டிலிருக்கும் போது பாண்டவர்களை மக்கள் மறந்துவிடுவார்கள் என்றும் அதற்குள் பாரத வர்ஷத்தில் இருக்கும் பிற அரசர்களை எல்லாம் தன் சார்பில் சேர்த்துக் கொண்டு வலுவான அரசொன்றை அமைத்து அவர்கள் திரும்பி வரமுடியாமல் செய்துவிடலாம் என்றும் துரியோதனன் எண்ணியிருந்தான். |
738 |
அப்போது அவனிடம் சொல்கிறார்கள். பாண்டவர்களை மந்திரம் மூலம் கொல்ல முடியும் என்று. துரியோதனனுக்கு அதில் நம்பிக்கை வரவில்லை. திரிகர்த்தன் என்னும் அமைச்சன் துரியோதனனிடம் மந்திரவித்தையின் மகிமைகள் பற்றி சொல்கிறான். நாம் காணும் மனிதர்கள் நமது கண்ணுக்குத் தெரியும் மாயவடிவங்கள். |
739 |
அந்த அசல் நாடகத்தை தெய்வங்களே பார்க்கமுடியும். தெய்வங்கள் பார்க்கும் அந்த அசல் நாடகத்தின் சில பகுதிகளை பார்க்கத்தெரிந்தவன் தான் மாந்திரீகன் என்கிறான். துரியோதனன் ஒத்துக் கொள்கிறான். திரிகர்த்தன் அதற்காகத் தேர்ந்தெடுத்தது பரத மலையன் என்பவரை. அவரிடம் சென்று துரியோதனன் அழைப்பதாக சொல்கிறார்கள். |
740 |
பதினான்கு நாட்கள் உண்ணாநோன்பிருந்து தன் மாந்திரிக வலிமையை பெருக்கிக் கொண்டிருப்பதாக அவர் சொல்லி அனுப்பிவிடுகிறார். பதினான்கு நாட்கள் துரியோதனன் காத்திருக்கிறான். இறுதியில் துரியோதனனின் அரண்மனையின் ஏழு கோட்டைகள் கடந்து அவன் படுக்கையறையில் வந்து பரத மலையன் துரியோதனனைச் சந்தித்தார். |
741 |
மலையன் அதை முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. பேராசையின் பொருட்டு மந்திரவாதத்தை செய்வது செய்பவனுக்கே தீங்கை விளைவிக்கும் என்று சொன்னார். ஆனால் துரியோதனன் பாதி நாடும் கருவூலமும் அளிப்பதாக சொல்லும் போது அவர் மனம் மாறுகிறது. நாங்கள் ஆயிரம் ஆண்டுகளாக காட்டில் வாழும் குடிகளாக இருக்கிறோம். |
742 |
உங்களிடம் அடிமைகளாக வாழ்கிறோம். இப்போது உங்களை வெல்வதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. ஆகவே இதை நான் ஒத்துக் கொள்கிறேன் என்று சொன்னார். எப்படி பாண்டவர்களைக் கொல்வது என்று மலையனிடம் துரியோதனன் கேட்டான். நிழல் குத்து என்னும் மந்திரவித்தையைப் பற்றி பரதமலையன் சொன்னார். பாண்டவர்களோ பெருவீரர்கள். |
743 |
மனிதர்கள் எவ்வளவு பாதுகாப்பாகச் சென்றாலும் அவர்களின் நிழல் மண்ணிலும் முட்களிலும் சேற்றிலும் விழுந்து செல்கிறது. எங்கும் நிழல் காயம்படுவதோ கறைபடுவதோ இல்லை. ஆனால் நிழலில் காயமோ கறையோ பட்டால் மனிதர்கள் எவற்றின் நிழல்களோ அந்த மூல வடிவங்கள் காயமும் கறையும் அடையும் என்று மலையன் சொல்கிறார். |
744 |
மந்திரம் வழியாக அந்நிழல்களைக் கொல்ல முடியும் என்கிறார் மலையன். ஆனால் அதைச் செய்தபின் மலையனின் அத்தனை மந்திரவித்தைகளும் அழிந்துவிடும். துரியோதனன் பெரும்பணம் கொடுத்து அனுப்புகிறான். பரதமலையன் வீட்டிற்குச் சென்று பூசைகள் செய்து தன் ஆற்றலை பெருக்கிக் கொண்டு ஒரு கத்தியுடன் காட்டுக்குச் செல்கிறார். |
745 |
காட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் பாண்டவர்களை ரகசியமாகப் பின் தொடர்கிறார். பசித்து களைத்து அவர்கள் ஒரு மரநிழலில் அமரும்போது அந்தி வேளையில் அவர்களின் நிழல்கள் நீண்டு விழுகின்றன. மலையன் அவர்கள் அறியாமல் சென்று அந்நிழல்களை வெறியுடன் நூறுமுறை கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறார். |
746 |
அந்தக் குத்துக்கள் அவர்கள் உடல்மேல் படவில்லை, ஆத்மாவில் பதிகின்றன. குருதி பெருகாமலேயே கத்திக்குத்து ஏற்று அவர்கள் கீழே விழுந்து துடித்து உயிர் துறக்கிறார்கள். குந்தி நெஞ்சிலும் மாரிலும் அடித்துக் கொண்டு அழ மலையன் திரும்பி வந்து துரியோதனனிடம் பாண்டவர்களைக் கொன்று விட்டேன் என்று சொன்னார். |
747 |
குடிலில் மலையத்தி அழுது கொண்டு இருந்தாள். ஏன் அழுகிறாய்? என்று கேட்டார் மலையன். மலையத்தி நான் வரும் வழியில் ஒரு கூட்டிலிருந்து ஐந்து குஞ்சுகள் கீழே விழுந்து இறந்து கிடந்தன. அன்னைப்பறவை சுற்றிச் சுற்றி வந்து கதறி அழுவதைப்பார்த்தேன் அந்த துயரத்தை என்னால் தாளமுடியவில்லை என்று கதறி அழுதாள். |
748 |
அதற்கு மலையன் மறுக்கிறான். உயிர் கொடுங்கள் என்று மீண்டும் மீண்டும் அவள் கேட்கும்போது என்னால் உயிர் கொடுக்க முடியாது. எனது தவ வலிமையை செலவழித்துவிட்டேன் என்றார். திகைப்புடன் என்ன செய்தீர்கள்? என்று கேட்டாள் மலையத்தி. என் தவ வலிமையைப் பயன்படுத்தி பாண்டவர்களைக் கொன்றுவிட்டேன். |
749 |
இனி நம் குடிகள் அரசகுடிகளாக வாழும் என்றார் மலையன். சீறி எழுந்த மலையத்தி நீ நீசன். அறம் மறந்தவன். மூதாதையருக்கு முன்பாக தலைதூக்கி நிற்கும் தகுதியை அழித்துவிட்டாய். இனி உன் மனைவியல்ல நான். என்று சொல்லி தன் தாலியை அறுத்து அவன் முகத்தில் வீசிவிட்டாள். இதோ இந்தக் குழந்தை உனக்குப்பிறந்தது. |
750 |
அந்தப்பழி என் மீதும் என் தாய்மீதும் என் மூதன்னையர் மீதும் வரும். ஆகவே இவனும் வாழக்கூடாது. என்று கூவினாள். மலையன் அவளை பாய்ந்து பிடிக்க வரும்போது தன் கையிலிருந்த அரிவாளால் மலையனின் ஒரே குழந்தையை வெட்டிக் கொன்றாள். மகனின் உடலை எடுத்து மார்போடு அணைத்தபடி நெஞ்சில் அறைந்து மலையன் அழுதார். |
751 |
பித்து பிடித்தவளாக மலையத்தி சிரித்துக் கொண்டும் அழுதுகொண்டும் நடந்து காட்டுக்குச் சென்றாள். அங்கே தன் ஐந்து மகன்களின் உடலைப் பிடித்துக் கொண்டு கதறி அழுத குந்தியுடன் சேர்ந்து தானும் கதறி அழுதாள். மலையன் தன் மகனின் சடலத்துடன் துவாரகைக்கு ஓடிப்போய் கிருஷ்ணனின் கால்களில் விழுந்து கதறி அழுதார். |
752 |
நீங்கள் தெய்வம். எனக்குத்தெரியும். என்று கதறினார். கிருஷ்ணன் நீ பிழை செய்யவில்லை. உன்னுடைய நிழல்குத்து உண்மையில் விழுந்தது அங்கு மரக்கிளையில் இருந்த ஒரு கூட்டில் பதுங்கியிருந்த ஐந்து குஞ்சுகளின் மீதே. அந்த நிழல்கள் பாண்டவர்களின் நிழல்களுக்கு மேல் விழுந்திருந்ததனால் நீ அதைக்காணவில்லை. |
753 |
பாண்டவர்கள் இறந்ததாகக் காட்டியது எனது மாயமே. உன்னுடைய குழந்தை இறந்தது மாயமே என்று சொன்னார். பாண்டவர்கள் தூக்கத்திலிருந்து சிரித்தபடி எழுந்தார்கள். மலையனின் குழந்தையும் எழுந்தது. மலையத்தியும் மலையனும் கிருஷ்ணனை வணங்கி அருள் பெற்று குழந்தையுடன் தங்கள் சிற்றூருக்குக் கிளம்பிச் சென்றார்கள். |
754 |
நூறாண்டுகளுக்கு முன்பு மலையாளப்பெருங்கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனோன் அவர்களால் கோயில் கலையாக இருந்த கதகளி மீட்டெடுக்கப்பட்டது. கேரளத்திற்குரிய ஒரு பொதுக்கலையாக அதை அவர் மாற்றினார். அதற்காக அவர் அமைத்த கேரள கலாமண்டலம் என்னும் அமைப்பு திரிசூர் அருகே ஷொர்ணூர் என்னும் ஊரில் உள்ளது. |
755 |
சன்னதம் கொண்டு வெறி கொண்டு அந்த தெய்வங்கள் ஆடும். தெய்யம் ஆட்டத்தை ஆடும் சாதி வேலன் என்று சொல்லப்படுகிறது. சங்ககாலம் முதலே வேலர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளது. சங்கப்பாடல்களில் தலைவி அணங்கு கொள்ளும் போது அதாவது பேய் பிடிக்கும்போது வேலனை வரவழைத்து வெறியாட்டு என்னும் சடங்கை செய்ய வைக்கிறார்கள். |
756 |
ஆனால் கதகளி சம்ஸ்கிருதத்தின் செவ்வியல் நாடகத்தை ஒட்டி தன்னை மறுஆக்கம் செய்து கொண்டது. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோட்டயத்துத் தம்புரான் என்ற அரச குலத்து கவிஞர் கதகளியை நாம் இன்று காணும் வடிவத்தில் அமைத்தார். சம்ஸ்கிருத செவ்வியல் நாடகங்களின் அரங்க முறைமைகள், நடிப்பு நுட்பங்கள் கதகளியில் உண்டு. |
757 |
ஆனால் கதகளியில் அவை பெருமளவு இடம் பெறுகின்றன. இந்தியாவில் எப்போதும் நாட்டார் கலையும் செவ்வியல் கலையும் இரு போக்குகளாக சமானமான வலிமையுடன் இருந்தன. நாட்டார் கலை நுட்பத்தை விட தீவிரம், உக்கிரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது. செவ்வியல்கலை முழுக்க நுட்பம், மென்மை ஆகியவற்றை வளர்த்தெடுப்பது. |
758 |
கதளியில் இரண்டு அம்சங்களுமே உண்டு. இரண்டும் மிகச்சரியாக கலந்து ஒருவடிவமாகக் கதகளி இருக்கிறது. அக்காரணத்தால் தான் இந்தியாவின் தலை சிறந்த நாடகக்கலையாக உலகெங்கும் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிழல்குத்து என்னும் கதகளிக் கதையின் வெற்றி அதில் உள்ள நாட்டுப்புறக் கதையம்சத்தில் உள்ளது. |
759 |
ஒரு மனிதனை அவன் நிழலைக் கொண்டு கொல்ல முடியுமென்னும் எண்ணமே அற்புதமானது. ஒவ்வொரு தருணத்திலும் நம்முடன் வந்து கொண்டிருக்கும் நம் நிழல் நமக்குரியதுதானா? அது சூரியனால் உருவாக்கப்படுவது. விண்வெளியால் படைத்து மண்ணில் பரப்பப்படுவது. அது நாமேதான். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இல்லை. |
760 |
உருவகரீதியாகப் பார்த்தால் ஒருவனின் புகழைக் கொல்வது போலத்தானே அது? சுவாரசியமான அம்சம் ஒன்று. மகாபாரதத்தில் நூற்றுக்கணக்கான நாட்டுப்புறக்கதைகள் உள்ளன. அதை ஒரு நாட்டுப்புற கதைக்களஞ்சியம் என்றே சொல்லிவிடலாம். அதே போல இந்தியா முழுக்க நாட்டுப்புறக்கதைகள் அனைத்திலுமே மகாபாரதம்தான் உள்ளது. |
761 |
ஆனால் ஒன்றின் மேல் ஒன்று படர்ந்து ஒற்றைப் பெருக்காகவும் அவை உள்ளன. ஒன்று இன்னொன்றுக்கு நிழல். ஒரு புராணத்தில் எங்கே நாட்டுப்புறக்கலை உள்ளது, எங்கே நாட்டுப்புற கதைக்குள் ஒரு புராணம் ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கத் தெரிந்தவன்தான் இந்தியப்பண்பாடை உண்மையில் புரிந்துகொள்ள முடியும். |
762 |
இரு அன்னையர் குமரிமாவட்டத்தில் உள்ள இரணியல் தொன்மையான வரலாற்றுப்புகழ் கொண்ட நகரம். இன்று தேய்ந்து ஒரு எளிய சிற்றூராக உள்ளது. முன்பு அதற்கு இரணியசிங்கநல்லூர் என்று பெயர். அதைத் தலைமையாக்கி ஆண்ட பாஸ்கர ரவிவர்மன் என்னும் சேர மன்னனைத் தான் ராஜராஜ சோழன் தோற்கடித்து சேரநாட்டை கைப்பற்றினார். |
763 |
அதன்பின் முந்நூறாண்டுக்காலம் சோழர் சேரநாட்டை ஆண்டனர். சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின்னர் மெல்ல மீண்டும் சேரர் குலம் தலையெடுத்தது. தலைக்குளம் என்னும் ஊரில் இருந்த அவர்களின் குருதிவழியில் இருந்து உருவான அரசபரம்பரை பின்னர் பத்மநாப புரத்தைத் தலைநகரமாகக் கொண்டு இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பது வரை ஆண்டது. |
764 |
இன்றும் அந்த அரச மரபு திருவனந்தபுரத்தில் உள்ளது. இரணியல் தொடர்ந்து பலவகையான வரலாற்று முக்கியத்துவம் உடைய ஊராகவே நீடித்தது. அங்கே சமீபகாலம் வரை இருந்த இரணியல் அரண்மனைக்கு ஒரு தொன்மக்கதை உண்டு. சேரன் செங்குட்டுவனின் குருதிவழியில் வந்த சேரமான் பெருமாள் அரசர்களில் கடைசிப்பெருமாள் குலசேகரப்பெருமாள். |
765 |
அங்கே அவருக்கு ஓர் அரண்மனையை அன்றிருந்த தலக்குளம் அரசி அமைத்துக்கொடுத்தார். தலக்குளம் அரசகுலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தியை முதியவரான குலசேகரப் பெருமாள் மணந்து கொண்டார். அவர் அவள் மேல் பெருங்காதலுடன் இருந்தார். அவர் சேரன் செங்குட்டுவனின் கருவூலத்தை அந்தப் பெண்ணுக்கு அளித்தார். |
766 |
ஆகவே அந்தப்பெண் அனைத்து சிற்றரசர்களும் ஏற்ற பேரரசியாகி திருவிதாங்கூரை ஒட்டுமொத்தமாக ஆளத் தொடங்கினார். அவள் தங்கையின் குழந்தைகளில் இருந்து தலக்குளம் அரசகுலம் உருவானது. இன்று திருவனந்தபுரம் கோயிலில் ரகசிய அறைகளில் உள்ள பெரும் செல்வம் குலசேகரப்பெருமாள் கொண்டு வந்ததுதான் என்பது ஒரு நம்பிக்கை. |
767 |
அரண்மனை இடிக்கப்பட்டபின் அருகே உள்ள கோயிலில் அவளை குடியிருத்தி பூசைசெய்து வருகிறார்கள். குலசேகரப்பெருமாள் மறைந்தபின்னர் அவர் வாழ்ந்த அரண்மனையை அவ்வாறே நெடுங்காலம் பேணி வந்தார்கள். அங்கே எவரும் குடியிருக்கவில்லை. அதைப்பேணும் பொறுப்பு மீனாட்சிப்பிள்ளை என்னும் பெண்ணின் குடும்பத்திற்குரியதாக இருந்தது. |
768 |
அக்கால வழக்கப்படி கணவன் எப்போதாவதுதான் மனைவியைப் பார்க்க வந்தார். அவள் தாயுடன் வசித்து அரண்மனையைப் பேணும் பணியைச் செய்துவந்தாள் ஒருநாள் குலசேகரப்பெருமாள் படுத்திருந்த பள்ளியறையை அவள் தூய்மை செய்யும்போது கீழே அவருடைய செம்புக் கோளாம்பிக்கு அருகே ஒரு பொன்நாணயம் இருப்பதைக் கண்டாள். |
769 |
அப்படுக்கையில் விரித்திருந்த பட்டு கசங்கியிருந்தது. அதில் எவரோ படுத்து எழுந்து சென்றதைப்போல. அவள் அந்த பொன் நாணயத்தை எடுத்துக்கொண்டாள். அதை எவரிடமும் சொல்லவில்லை. அதன்பின் ஒவ்வொருநாளும் அவள் அங்கே ஒரு பொன்நாணயத்தைப் பார்த்தாள். அதை எடுத்து எவரிடமும் சொல்லாமல் தன் பெட்டிக்குள் போட்டு வைத்தாள். |
770 |
அந்தப்பொன் நாணயம் அவ்விஷயத்தை வெளியே சொல்லாமலிருக்க அளிக்கப்பட்ட லஞ்சமா என அவள் சந்தேகப்பட்டாள். அப்படியென்றால் கூட அவளுக்கு நாள் தோறும் ஏன் அத்தனை பொன் தரப்படுகிறது ? அவளுடைய பெட்டி பொன்னால் நிறைந்தது. அதை என்னசெய்வது என்றே அவளுக்குத்தெரியவில்லை. ஆனால் ஆசையால் அவள் எவரிடமும் அதைச் சொல்லவில்லை. |
771 |
அவள் கருவுற்றாள். குழந்தை பிறந்து அவள் படுத்திருந்தபோது மீனாட்சிப்பிள்ளை அரண்மனையைத் தூய்மை செய்தாள். அப்போது அவளுக்குப் பொன் கிடைக்கவில்லை. மீண்டும் காமாட்சி தூய்மைப்பணிக்கு வந்தபோது பொன் நாணயம் கிடைக்கலாயிற்று. எழுபது எண்பது என பொன் வளர்ந்து தொண்ணூறாயிற்று. நூறு ஆகி ஆயிரத்தை நெருங்கியது. |
772 |
ஆயிரம் பொன் ஆனபின் தன் கணவனிடம் சொல்லலாம் என அவள் நினைத்தாள். அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தயக்கம் போயிற்று. அந்தப்பொன்னைக் கொண்டு தன் மகனை ஒரு பெரிய செல்வந்தனாக ஆக்குவதைப்பற்றிக் கனவு கண்டாள். அதை ரகசியமாக எண்ணி எண்ணிப்பார்த்தாள். தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது பொன் ஆகிவிட்டிருந்தது. |
773 |
மகன் பள்ளியறைக்குள் சென்று விட்டிருந்தான். அவள் டேய் எங்கே இருக்கிறாய்? என்று மகனை கூப்பிட்டாள். அக்காவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று அவன் சொன்னான். அவள் பள்ளியறைக்குள் ஓடிச்சென்றாள். அங்கே பட்டுமெத்தை மேல் பேரழகியான இளம்பெண் ஒருத்தி தன் மகனை மார்பின்மேல் இட்டு கொஞ்சிக்கொண்டிருப்பதைக் கண்டாள். |
774 |
நாக்கு நீண்டு பாம்பு போல படமெடுத்துச் சீறியது. இரு கைகளையும் அவள் விரித்தபோது அவை சிறகுபோல விரிந்தன. அவள் மகன் அப்பெண்ணின் தோளில் பற்றிக்கொண்டு கிடந்தான். மகனே! என அவள் கூச்சலிட்டாள். ஓடி அருகே செல்வதற்குள் அந்த யட்சி மேலேறிப்பறந்து கூரைவழியாக வெளியே சென்று விட்டாள். அவள் மகனுக்காகத் தேடி அலைந்தாள். |
775 |
அவர்தான் அவளிடம் வந்தது யார் என்று சொன்னார். தலக்குளம் அரசகுடியில் பிறந்து வயோதிகரான குலசேகரப்பெருமாளுக்கு மனைவியாகி கன்னியாகவே வாழ்ந்து மறைந்த அந்த இளவரசிதான் அது. அவளுடைய நிறைவேறாத குழந்தை ஆசைதான் அங்கே அவளை வரச்செய்தது. அந்த இளவரசியின் அஸ்திமாடம் காட்டுக்குள் இருந்தது. |
776 |
யட்சி குழந்தையை தன் யட்சியுலகுக்குக் கொண்டுசென்றுவிட்டாள். இனி அக்குழந்தை திரும்பி வராது என்றார் சோதிடர். அங்கே மேலும் ஒரு பொன் நாணயம் இருந்தது. அதை எடுத்து அவளிடம் கொடுத்த சோதிடர் யட்சி உனக்கு பொன் அளித்தது இக்குழந்தைக்கான விலையாகத்தான். இதோ இத்துடன் ஆயிரம் பொன்நாணயம் ஆகி கணக்கு முடிகிறது என்றார். |
777 |
ஒருகுழந்தைக்காக இத்தனை பொன்னா? நீ பெரிய அதிருஷ்டசாலி என்றார் சோதிடர். ஆனால் அலறியபடி மயங்கி விழுந்த காமாட்சி அதன்பின் விழித்தபோது மனநிலை பிறழ்ந்திருந்தாள். தன்னிடமிருந்த பொன்நாணயங்களை அள்ளி வீசி வீரிட்டு அழுதாள். நெஞ்சிலும் தலையிலும் அறைந்தபடி அவள் அந்தக்காட்டிலேயே சுற்றி அலைந்தாள். |
778 |
உணவும் துயிலும் இல்லாமல் முடியெல்லாம் சடையாகி உடல் மெலிந்து மெல்ல நோயுற்று இறந்து காட்டில் ஒரு புதருக்குள் மட்கிக் கிடந்தாள். தன் இருகைகளாலும் முலைகளைப் பற்றி இறுக்கியபடி அவள் சடலம் கிடந்தது. அந்தப்பொன் நாணயங்களை பொறுக்க எவருக்கும் தைரியம் வரவில்லை. அவை அங்கேயே மண்ணில் புதைந்து மறைந்தன. |
779 |
மலரில் குழந்தைவடிவம் செய்து அவளுக்கு படையலிட்டு பூசை செய்து சாந்தியளித்தனர். நாட்டார்கதைகளுக்குரிய ஒரு பயங்கர வசீகரம் இக்கதைக்கு உண்டு. பேரரசியாக ஆனபின்னரும் பிள்ளைக்காக ஏங்கிய அரசி ஒரு பேரன்னை. பெரும் பொற்குவை கையிலிருந்தபோதும் கூட பிள்ளைக்காக தேடி உயிர்விட்ட அன்னை அவளை விட ஒரு படிமேலானவள். |
780 |
காத்திருக்கும் கல் தமிழகத்தின் பல கோயில்களில் வாசலுக்கு வெளியே ஒரு கல் தெய்வமாக நின்றிருக்கும். அதற்கு பூசைகள் வழிபாடுகள் ஏதும் செய்யப்படுவதில்லை. அதை எவரும் வணங்குவதுமில்லை. சாதாரணமான கல்லைப்போல அதை நடத்தமாட்டார்கள். அவ்வளவுதான். அதில் மாட்டைக் கட்டுவதில்லை. செருப்பை வைப்பதில்லை. |
781 |
ஆனால் நாய்களுக்கு அந்த வேறுபாடு தெரிவதில்லை. பலசமயம் அவை கால்தூக்கி மூத்திரம் சொட்டிவிட்டுச் செல்லும். அதை பிரம்மஹத்தி என்பார்கள். நெல்லை அருகே ஒரு பிரம்மஹத்திக் கல் இருந்தது. அதன் மேல் நான் என் கையிலிருந்த பையை வைத்ததும் வழிகாட்டி ஓடி வந்து சார் அது பிரம்மஹத்திக்கல்லாக்கும். |
782 |
சாமியில்லா? என்றார். நான் பையை எடுத்துவிட்டு குனிந்து பார்த்தேன். பரிதாபமான ஒரு கல். என்ன கதை என்று கேட்டேன். வழிகாட்டி சொன்ன கதை இது. கலியுகத்தின் ஆரம்பத்தில் நடந்த கதை இது. கனகன் என்னும் பிராமணன் மிகவும் ஏழைக்குடும்பத்தில் பிறந்தான். அவனுக்கு ஒரு கால் ஊனம். ஒரு கண்ணும் சரியாகத்தெரியாது. |
783 |
அறிவும் மிகவும் குறைவு. ஆனாலும் அவன் வேதம் படித்து புரோகிதம் செய்து வந்தான். அவன் அன்னையும் தந்தையும் முன்னரே இறந்துவிட்டார்கள். அவனுக்கு முப்பது வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. பதினெட்டு வயது முதலே அவன் தானே தனக்குப் பெண் தேடி அலைய ஆரம்பித்தாலும் ஊனமுற்றவனுக்குப் பெண்கொடுக்க எவரும் தயாராகவில்லை. |
784 |
திருமணம் ஆகி மகன் பிறக்காவிட்டால் நீர்க்கடன் கொடுக்க ஆளில்லாமல் சாக வேண்டியிருக்கும். பிராமணர்களைப்பொறுத்தவரை அது மிகப்பெரிய துயரம். அவர்கள் புத் என்னும் நரகத்தில் சென்று விழுவார்கள். அவர்களுடன் அவர்களுடைய ஏழுதலைமுறை முன்னோர்களும் வந்து அந்த நரகத்தில் விழுவார்கள். அவர்களின் சாபமும் வந்துசேரும். |
785 |
ஆகவே கனகன் பெண் தேடி அலைந்தான். மீண்டும் மீண்டும் ஏமாந்தாலும் அவமதிக்கப்பட்டாலும் அவன் மனம் தளரவில்லை. ஒரு பெண்ணை மணப்பதென்பது தன் மூதாதையருக்குச் செய்யவேண்டிய கடமை என்றே நினைத்தான். அவன் இப்படி பெண் தேடிக்கொண்டிருப்பது அனைவருக்கும் ஒரு வேடிக்கையாக ஆகியது. பலவகையிலும் அவனை பகடிசெய்தார்கள். |
786 |
ஜானகி என்று பெயர் அவளுக்கு. பேரழகி. அவர் மிகப்பெரிய நிலக்கிழாராகையால் அவர் மகளை மருமகளாக்க வைதிகர் பலர் போட்டியிட்டனர். முன்பு அந்த வைதிகர் ஒரு பஞ்சாயத்தில் ஒரு சாராருக்கு எதிராகத் தீர்ப்பு சொல்லியிருந்தார் அவர்கள் வைதிகர் மேல் காழ்ப்புடன் இருந்தனர். அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். |
787 |
அதன்படி தரகன் ஒருவன் வந்து வைதிகரிடம் பேசினான். பேரழகனும் பெரும் செல்வந்தனும் நான்குவேதங்களையும் கற்றவனுமாகிய ஒரு இளம் பிராமணன் வெளியூரில் இருப்பதாகவும் அவனுக்கு பெண் தேடியபோது வைதிகரின் பெண்ணைப்பற்றிக் கேள்விப்பட்டதாகவும் சொன்னான். அவர் மகிழ்ந்து பெண்பார்க்க வரலாம் என்று ஒப்புக்கொண்டார். |
788 |
அவனும் மகிழ்ந்து சந்தனம் ஜவ்வாது எல்லாம் பூசிக்கொண்டு மலர்மாலை அணிந்து தரகனுடன் சென்றான். தரகன் வைதிகரின் வீட்டை அணுகியதும் நின்று நீயே போய் பெண்ணைக்கேள். வெற்றிலை பாக்குடன் சென்று கேட்டால் அவர் பெண் கொடுப்பார். என் மனைவிக்கு இன்று வீட்டுவிலக்கு. ஆகவே நான் மங்கலகாரியத்துக்கு வருவது முறையல்ல என்றான். |
789 |
கடும் கோபத்துடன் கையை ஓங்கியபடி முன்னால் வந்து அவலட்சணமே, யாரைக்கேட்டு வீட்டுக்கு முன் வந்தாய்? ஓடு என்றார். கனகனுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. வெற்றிலைபாக்கை நீட்டியபடி நான் உங்கள் மகளைப் பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்றான். அவர் தட்டை தட்டி வீசி அவன் முகத்தில் உமிழ்ந்து போடா. |
790 |
ஒற்றைக்காலில் நின்று லட்சம் முறை காயத்ரி மந்திரத்தைச் சொல், தருகிறேன். என்றார் சொல்கிறேன் என்று சொல்லி கனகன் கைகூப்பி ஒற்றைக்காலில் நின்று காயத்ரி மந்திரம் சொல்லத்தொடங்கினான். ஆரம்பத்தில் ஏளனமாகச் சிரித்த வைதிகர் அவன் தீவிரமாக அதைச் செய்வதைக்கண்டு அஞ்சினார். அதற்குள் ஊர்க்காரர்கள் கூடிவிட்டார்கள். |
791 |
நடுவெயில் வந்தபோதும் கனகன் அப்படியே ஒற்றைக்காலில் நின்று மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தான். இரவில் பனி கொட்டியபோதும் அவன் அப்படியே நின்றான். உணவும் நீரும் இல்லாமல் தூக்கமில்லாமல் ஒற்றைக்காலில் ஒருவாரம் அவன் காயத்ரி ஜபம் செய்தபடி நின்றான். அதற்குள் அவனைச்சூழ்ந்து ஊர்க்காரர்கள் வந்து கூடிவிட்டனர். |
792 |
மடத்திலிருந்து தூதர் வந்தார். ஒருலட்சம் முறை காயத்ரி சொல்லி முடித்ததும் கனகன் ரத்தம்போல சிவந்த கண்களைத் திறந்து பெண்ணைக்கொடு என்று கேட்டான். வைதிகர் கண்ணீர் விட்டு கைகூப்பியபடி நின்றார். நீங்கள் அளித்த வாக்கு அது. அதை மீறினால் மூதாதையரும் நீங்களும் நரகத்துக்கே செல்வீர்கள் என்றார்கள் ஊர்க்காரர்கள். |
793 |
வைதிகர் கண்ணீர் வழிந்து மார்பில் சொட்ட வீட்டுக்குள் சென்று தன் மகளை அழைத்துவந்து கனகனுக்கு தண்ணீர் ஊற்றி கன்னிகாதானம் செய்தார். பேரழகியான மனைவியுடன் கனகன் ஊருக்குத் திரும்பி வந்தான். அவனைக் கேலிசெய்தவர்கள் அனைவரும் வாயடைந்தனர். நடந்ததை அறிந்தபோது அவன் மேல் பெரும் மதிப்பு கொண்டனர். |
794 |
நிறைய தட்சிணையும் வரத்தொடங்கியது. ஆனால் அவன் மனைவி மட்டும் அவன் மேல் அதிருப்தியுடனேயே இருந்தாள். தனக்கு இப்படி ஒரு அவலட்சணம் கணவனாக வந்ததை அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ஊரில் உள்ள அத்தனை பெண்களும் தன்னைத்தான் கேலி செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு மனம் புழுங்கினாள். |
795 |
அவனை அருகே விடுவதுமில்லை. எப்போதும் எரிச்சலுடன் பேசினாள். ஏதாவது சொன்னால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து சாபமிட்டாள். அவள் அழகைக்கண்டு கனகன் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டான். எப்படியாவது ஒரு மகன் பிறந்தால் மட்டும் போதும் என்று எண்ணினான். ஒருநாள் ஜானகி கோயிலுக்குச் சென்றபோது அங்கே யாருமில்லை. |
796 |
கோபுரத்தில் இருந்த ஒரு சிலையை அவள் பார்த்தாள். அந்த ஆணழகைக் கண்டு ஏங்கிப் பெருமூச்சுவிட்டாள். அது இந்திரனின் சிலை. இந்திரனும் அவளைப்பார்த்துவிட்டான். அன்று இரவு கனகன் வேற்றூருக்கு வைதிகவேலையாகச் சென்றிருந்தான். அவ்வேளையில் இந்திரன் ஒரு பூனையாக மாறி அவள் வீட்டுக்குள் நுழைந்தான். |
797 |
அவன் தன் முன் வந்தபோது அவள் பயந்து நடுங்கினாலும் இந்திரனின் வசீகரத்தால் அவள் அடிமைப்பட்டாள். அவளுடன் தங்கிவிட்டு அவன் சென்றான். அவர்கள் கனகனுக்குத் தெரியாமல் காதல்வாழ்க்கை வாழ்ந்தனர். வந்திருப்பது இந்திரன் என்று ஜானகிக்குத் தெரியாது. அழகான ஒர் இளவரசன் என்று மட்டும்தான் அவள் நினைத்தாள். |
798 |
அவள் கனகனிடமும் அன்பாக இருக்கத்தொடங்கினாள். கனகன் தன் மூதாதையர் தனக்கு அருள் செய்ததாகவே அதை எடுத்துக்கொண்டான். அவனும் மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் ஊர்ப்பெண்கள் அவள் மேல் சந்தேகம் கொண்டார்கள். இரவில் கனகன் இல்லாதபோது அவள் பூவைத்து பொட்டிட்டு புத்தாடை அணிந்துகொள்வதை கண்டார்கள். |
799 |
யார் வந்து செல்கிறார்கள் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் எவரோ வந்துசெல்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிந்தது. அவர்களில் ஒரு கிழவி கனகனிடம் தன் சந்தேகத்தைச் சொன்னாள். கனகன் முதலில் கொந்தளித்து அவளை வசைபாடினாலும் மெல்ல அதை சோதித்துப் பார்க்கவேண்டும் என்று அவனுக்குத்தோன்றியது. |
800 |
அவன் அவளைக் கவனிக்க ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதில் சந்தேகம் வலுப்பட்டது. ஒருநாள் வெளியூர் செல்வதாக அவளிடம் சொல்லிவிட்டுச் சென்ற கனகன் நள்ளிரவில் திரும்பி வந்தான். வீடு உள்ளே தாழிடப்பட்டிருப்பதைக் கண்டான். உள்ளே ஆண்குரலில் பேச்சொலியும் சிரிப்பொலியும் கேட்டது. |
801 |
எப்படி உள்ளே செல்வது என்று அவன் சுற்றிவந்தான். அக்கால வீடுகளில் கொல்லைப் பக்கக் கதவில் ஒரு திட்டிவாசல் போல இருக்கும். இரவில் பூட்டிவிட்டால் பாதுகாப்புக்காரணங்களுக்காக வீட்டுவாசலைத் திறக்கமாட்டார்கள். ஏதாவது அழுக்கு குப்பையை வெளியே போடவேண்டும் என்றால் அந்த சிறிய திறப்பை பயன்படுத்துவார்கள். |
802 |
என்று கூச்சலிட்டாள். காமத்தில் தன்னை மறந்திருந்த இந்திரன் அனிச்சையாக தன்னருகே இருந்த அரிவாளை எடுத்து வீசினான். அது வஜ்ராயுதம். மிக மிகக்கூரியது. கனகனின் தலை துண்டாக விழுந்தது. அடப்பாவி! என்று அந்த வெட்டுண்ட தலையின் வாய் சொல்லியது. இந்திரன் அனைத்தையும் உடனே ஊகித்து அறிந்தான். |
803 |
கனகனின் உடலில் இருந்து எழுந்த பிரம்மஹத்தி அவனை தொடர்ந்து ஓடியது. இந்திரன் மானுடவடிவம் கொண்டிருந்தமையால் வானத்துக்கு எழமுடியவில்லை. அவன் பதறியபடி ஓடினான். பிரம்மஹத்தி அவனை விடாது துரத்தியது. பூம்புகாரிலிருந்து ஓடிய இந்திரன் பல ஊர்கள் வழியாக மூச்சிரைக்க ஓடினான். மலைகளில் ஏறினான். |
804 |
மண்ணுக்குள் போகும் குகைகளுக்குள் ஒளிந்து ஓடினான். நீர்நிலைகளுக்குள் பாய்ந்து முக்குளியிட்டான். எங்கே சென்றாலும் பிரம்மஹத்தி அவனை விடாமல் தொடர்ந்து வந்தது. அவன் கோயிலுக்கு வந்தபோது மேலும் ஓடமுடியாதபடி களைத்திருந்தான். கோயிலுக்குள் அவன் நுழைந்தபோது பிரம்மஹத்தி வாசலிலேயே நின்றது. |
805 |
அது ஆவி என்பதனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. அவன் வெளிவர அது காத்திருந்தது. கோயிலுக்குள் நுழைந்த இந்திரன் இந்திராணியை எண்ணி மனமுருகி அழைத்தான். அவள் ஒரு கிளிவடிவில் கோயிலுக்குள் வந்து இறங்கினாள். இந்திரனை ஒரு பல்லியாக மாற்றி தன் அலகால் கவ்வி எடுத்துக்கொண்டு வானத்தில் பறந்து மறைந்தாள். |
806 |
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு இறப்போ காலமோ இல்லை. ஆகவே அது முடிவிலி வரை அங்கேயே காத்திருக்கும். அதான் இந்த பிரம்மஹத்தி. யுகயுகமா காத்துண்டிருக்கும் என்றார் வழிகாட்டி. நான் பேய்க்கதைகள் பல கேட்டிருக்கிறேன். அத்தனை இரக்கத்திற்குரிய பேய்த்தெய்வத்தை அன்றுதான் பார்த்தேன். |
807 |
அந்தப்பேயை ஏன் தெய்வமாக்கினான் மனிதன்? ஏனென்றால் காத்திருப்பு என்றால் என்ன என்று அத்தனை மனிதர்களுக்கும் தெரியும். அதைப்போல வதையும் இன்பமும் வேறு இல்லை. ஆனால் எல்லா காத்திருப்புகளும் முடிவுள்ளவையே. காத்திருக்கப்படுவது அடையப்படும். அல்லது காத்திருப்பவர் காலத்தில் மறைவார். |
808 |
காலத்தை அறியாது மண்ணில் ஊன்றி நின்ற அக்கல்லை தொட்டுக்கும்பிட்டேன். பாம்பும் கீரியும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவைகுண்டம் என்னும் ஊரில் அக்காலத்தில் ஆறுபத்து அக்ரஹாரம் என்று ஒரு தெரு இருந்தது. அவர்கள் அனைவருமே வடக்கே துவாரகையிலிருந்து அங்கே வந்து குடியேறியவர்கள் என்பது அவர்களின் குலநம்பிக்கை. |
809 |
பேரழகி. செல்வமும் வேதபாரம்பரியமும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். அவர்களுக்கு திருமணமாகி ஏழாண்டுகள் ஆன பின்னரும் பிள்ளை பிறக்கவில்லை. சீவைகுண்டத்தில் இருக்கும் பெருமாளையும் சிவனையும் அவர்கள் வணங்கி நோன்பிருந்தமையால் அவள் கருவுற்றாள். உரிய வேதச்சடங்குகளும், பிராமணர்களுக்குத் தானமும் செய்தனர். |
810 |
வயிற்றைத் தொட்டுப்பார்த்தால் குழந்தையின் அசைவு தெரிந்தது. தாயோ, சேயோ இறப்பது உறுதி என்னும் நிலை. ஹரிகிருஷ்ணன் அழகப்பன் என்னும் ஒட்டனை அழைத்து என்ன செய்யலாம் என்று கேட்டான். வள்ளியூரில் மணிமாலைக்காரி என்னும் புகழ்பெற்ற மருத்துவச்சி இருக்கிறாள். ஆயிரம் பிள்ளை எடுத்த கைகள் கொண்டவள். |
811 |
அவள் வந்தால் குழந்தையும் தாயும் பிழைக்கக்கூடும் என்றான் ஒட்டன். உரிய பரிசுகள் அளித்து ஒட்டனை வள்ளியூருக்கு அனுப்பினான் ஹரிகிருஷ்ணன். இரண்டு நாட்களுக்குப்பின் மருத்துவச்சி மணிமாலைக்காரியை ஒட்டன் அழைத்துவந்தான். அவள் கூன்விழுந்து பசுவைப் போல நடந்து வந்தாள்.இரு முலைகளும் தொங்கி ஆடின. |
812 |
வடித்து நீட்டிய காதில் மரத்தாலான குழைகளையும் கழுத்தில் கல்மாலையையும் கைகளில் இரும்புவளையல்களையும் அணிந்திருந்தாள். நெற்றியிலும், தோளிலும் புறங்கையிலும் பாம்பு வடிவங்களைப் பச்சை குத்தியிருந்தாள். அவளைக் கண்டதும் ஆனந்தாயி அழத்தொடங்கினாள். நான் செத்துவிடுவேன்... என்னைக் காப்பாற்று என்று கதறினாள். |
813 |
நீ சாகமாட்டாய். பெண்குழந்தை பிறக்கும் என்றாள் மருத்துவச்சி. அவள் ஆனந்தாயியின் வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். உயிரசைவை கண்டபின்னர் ஏழுவகை மூலிகைகளை நீரிலிட்டு ஆவிபிடிக்க வைத்தாள். சுக்கு மிளகு திப்பிலியை கருக்கி புகையாக்கி மூச்சுபிடிக்க வைத்தாள். ஆனந்தாயி தும்மத்தொடங்கினாள். |
814 |
அவள் உடலில் வியர்வை வழிந்தது. ஏழு தும்மலுக்குப் பின் இடுப்புவலி தொடங்கியது. சாட்டை வீசுவதுபோல வலித்தது. அவள் கதறியழத் தொடங்கினாள். மருத்துவச்சி மஞ்சள்வேப்பெண்ணைக் கலவையில் சூடம் கலந்து அவள் வயிற்றில் தடவினாள். ஆனந்தாயி பாம்புகள் நெளிவது போலவும் கீரிகள் ஓடுவது போலவும் மாயவடிவங்களைக் கண்டாள். |
815 |
அவள் நரம்புகள் அதிர்ந்தன. அலறிக் கொண்டிருக்கையிலேயே அவள் பெண்குழந்தை ஒன்றை ஈன்றாள். குருதி தரையெங்கும் பெருகியது. அவள் உடல் வாளால் வெட்டியதுபோலத் திறந்திருந்தது. அந்தக் குழந்தை சாதாரணக்குழந்தைகளை விட இருமடங்கு பெரிதாக இருந்தது. ஹரிகிருஷ்ணன் அனைவருக்கும் பரிசுகள் அளித்தார். |
816 |
அதைக்கண்டதும் பயந்து அலறிக்கொண்டு எழுந்து விட்டேன். வாழைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது போன்ற ஓசையுடன் அது விழுந்து அப்பால் சென்றது என்றான் ஹரிகிருஷ்ணன் பயந்து நடுங்கி திண்ணையில் அமர்ந்துவிட்டார். இந்தக்குழந்தைக்கு சர்ப்பதோஷம் இருக்கிறது. இதை நாகம் தீண்டுவதற்கான வாய்ப்புள்ளது. |
817 |
ஐந்துவயது வரை இதைப் பாதுகாப்பாக வைக்கவேண்டும். ஐந்து வயதுக்குள் இதை பாம்பு கடிக்காவிட்டால் இது நூறாண்டு நிறைவாழ்வு வாழும் என்றான் சோதிடன் ஹரிகிருஷ்ணன் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிடாமலிருக்க எல்லாவற்றையும் செய்தான். மந்திரத் தகடுகளைப் பொறித்தான். மூலிகைகளைக் கட்டித் தொங்கவிட்டான். |
818 |
அப்போது அவன் வீட்டுக்கு ஒரு குறவன் வந்தான். அவனிடம் ஒரு கீரிப்பிள்ளை இருந்தது. பாம்புக்குக் காவல் கீரிப்பிள்ளை. தெய்வங்களை விட பெரிய காவல் அதுவே என்றான். அவன் அந்தக்கீரிப்பிள்ளையை நான்கணா கொடுத்து வாங்கினான். ஆனந்தாயியின் வீட்டில் அந்தக் கீரிப்பிள்ளை இன்னொரு பிள்ளைபோலவே வளர்ந்தது. |
819 |
அதுவும் குழந்தையை தன் உடன்பிறப்பாகவே நினைத்தது. ஆனந்தாயி இரவு ஒருபக்கம் கீரிப் பிள்ளையையும் இன்னொரு பக்கம் குழந்தையையும் போட்டுக்கொண்டு தான் தூங்கினாள். ஒருநாள் ஹரிகிருஷ்ணன் வெளியூருக்கு புரோகிதம் பார்க்கச் சென்றிருந்தான். வீட்டில் யாருமில்லை. கொல்லைப்பக்கம் கீரை பறிப்பதற்காக ஆனந்தாயி சென்றாள். |
820 |
கீரிப்பிள்ளையை குழந்தைக்குக் காவலாக்கி விட்டு சென்றாள். அவள் இல்லாத தருணத்தில் வீட்டுக்குள் ஒரு ராஜநாகம் நுழைந்தது. தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பாம்பைநோக்கிச் சென்று அதன் வாலைப்பிடித்தது. பாம்பு திரும்பி குழந்தையைக் கடிப்பதற்குள் கீரிப்பிள்ளை பாய்ந்து பாம்பின் படத்தைக் கவ்வியது. |
821 |
பாம்பை குதறிப்போட்டு விட்டு கீரிப்பிள்ளை வாய் முழுக்க ரத்தத்துடன் கொல்லைக்கு ஓடிச்சென்றது. குழந்தையைக் காப்பாற்றிய செய்தியை ஆனந்தாயியிடம் சொல்ல அது விரும்பியது. குழந்தையை கீரி கொன்றுவிட்டது என்ற எண்ணம் அறியாமல் ஆனந்தாயிக்கு வந்தது. அவள் கையிலிருந்த அரிவாளால் கீரிப்பிள்ளையை வெட்டினாள். |
822 |
அருகில் பாம்பு துண்டுபட்டுக் கிடந்தது. ஆனந்தாயி அனைத்தும் புரிந்ததும் நெஞ்சில் அறைந்து அழுதபடி ஓடிச்சென்று அந்தக் கீரியை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். அவள் இடது முலையிலிருந்து பால் பீய்ச்சியடிக்கத் தொடங்கியது. அவள் கதறி அழுதுகொண்டே இருந்தாள். ஊர்க்காரர்கள் வந்து அவளை தூக்கிப்படுக்க வைத்தனர். |
823 |
அதை நிறுத்தவே முடியவில்லை. ஹரிகிருஷ்ணன் ஊரிலிருந்து வந்து அவளை அணைத்து ஆறுதல் சொன்னான். புரோகிதர்கள் வந்து நடந்தது நடந்துவிட்டது. பிள்ளை தப்பித்ததே. நாம் தெய்வத்திற்கு பிராயச்சித்தம் செய்வோம் என்றார்கள். ஆனால் முலையிலிருந்து பெருகிய பாலை நிறுத்த முடியவில்லை. நாள்கணக்காக ஊறி வழிந்தது. |
824 |
பால் வழிவது நிற்கவே இல்லை. அவர்கள் சோதிடனைக் கண்டு என்ன செய்வதென்று கேட்டனர். ஏழு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பிழைநிகர் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று அவன் சொன்னான். பிராமணப்பெண் அயலூர் செல்லக்கூடாது என்பதனால் ஹரிகிருஷ்ணன் ஏழு பிராமணர்களுடன் அவளுக்காக தீர்த்தமாடச் சென்றான். |
825 |
அங்கு நீராடியபின் பாபநாசத் தீர்த்தக்கரைக்கு சென்றார்கள். ஏழு தீர்த்தங்களில் நீராடிவிட்டு அவர்கள் திரும்பி வரும்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காட்டுவழியில் இருட்டிவிட்டது. மேலும் செல்வது அறிவுடைமை அல்ல என்பதனால் அவர்கள் அங்கே ஒரு பழைய சத்திரத்தில் தங்க முடிவுசெய்தனர். அங்கே எருக்கு முளைத்திருந்தது. |
826 |
ஹரிகிருஷ்ணன் மிகுந்த களைப்புடன் இருந்ததனால் எருக்கு என்றால் என்ன தலையெழுத்து நன்றாக இருந்தால் போதும் என்று சமாதானம் சொன்னான். அவர்கள் அங்கேயே படுத்துத் தூங்கினர். இரவில் அருகே படுத்திருந்த பிராமணனின் கை தன் மேல் விழுந்ததை ஹரிகிருஷ்ணன் உணர்ந்தான். அதை அவன் தட்டிவிட்டான். |
827 |
அவன் உதட்டில் அது கடித்தது. கனவு என நினைத்த ஹரிகிருஷ்ணன் நஞ்சு உடலில் ஏறவே மூச்சும் எழாமல் அங்கேயே துடித்து உயிர்விட்டான். தோழர்கள் காலையில் எழுந்தபோது ஹரிகிருஷ்ணன் தூங்கிக் கிடப்பதைக் கண்டு நீராடச்சென்றார்கள். திரும்பிவந்த போதும் அவன் எழாமல் கிடப்பதைக்கண்டு அவன் காலைப்பிடித்து அசைத்தனர். |
828 |
அங்கிருந்து சீவைகுண்டம் சென்று ஆனந்தாயியைக் கண்டு நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். அவள் அதுகேட்டு நெஞ்சில் அறைந்தபடி விழுந்தாள். மகளைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள். அவள் வலதுமுலையில் இருந்து ரத்தம் பீய்ச்சியடிக்கத் தொடங்கியது அவள் மார்பில் ரத்தம் வழிவதைக் கண்ட சொந்தக்காரர்கள் கூடி நீ இசக்கி. |
829 |
இப்போது கணவனையும் பலிகொண்டாய். இனி நீ இங்கே இருக்கக்கூடாது. ஓடு என்றார்கள். ஊர்க்காரர்களும் நீயும் உன் மகளும் இனி அக்ரஹாரத்தில் இருந்தால் இது அழியும் என்றார்கள். உண்மையில் அவள் சொத்துக்களை அவர்கள் கைப்பற்றிக் கொள்ளத் திட்டமிட்டார்கள். பேய் வாழ்ந்த வீட்டை நாங்கள் இடிப்போம். |
830 |
சொத்துக்களை ஊருக்குள் பங்கு போட்டுக்கொள்வோம் என்று சொன்னார்கள் ஆனந்தாயி சீவைகுண்டத்தில் உள்ள மணியக்காரன் முத்தையனிடம் சென்று முறையிட்டாள். அவளது வழக்கைக் கேட்ட மணியக்காரன் எனக்கு தெய்வம் அழகான மகளைக் கொடுத்திருக்கிறான். அவளுக்கு திருமணம் குறித்திருக்கிறேன். நான் பொய் நீதி சொல்லமாட்டேன். |
831 |
நீதிப்படி சொத்துக்கள் உனக்கே சொந்தமாக வேண்டும். நீ அக்ரஹாரத்தில் வாழலாம் என வழக்கைத் தீர்த்து வைத்தான். அன்றிரவு ஆனந்தாயியின் சொந்தக்காரர்கள் மணியக்காரனின் வீட்டிற்குச் சென்று நீ பேய்க்கு ஆதரவாகத் தீர்ப்பு சொன்னால் உனக்கு கீரி செத்த பாவம் வந்து சேரும். உன் பெண் பாம்பு கடித்துச் சாவாள் என்றார்கள். |
832 |
அவன் அஞ்சினான். அடுத்தநாள் காலையில் ஆனந்தாயியை அழைத்து நீ பெண்ணல்ல பேய். பெண்ணுக்குத்தான் நீதி. உனக்கு அல்ல. உனக்குச் சொத்தில் உரிமை இல்லை. நீ வீட்டைவிட்டு வெளியே போகவேண்டும் என்றான். ஆனந்தாயியின் நெஞ்சில் குருதி வழிந்துகொண்டே இருந்தது. அவள் மகளைத் தூக்கிக்கொண்டு ஊரைவிட்டே கிளம்பினாள். |
833 |
கணவன் இறந்த ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு சென்றாள். அங்கே அவள் கணவனுக்கு நீர்க்கடன் செய்த சுனை அருகே சென்று நின்றாள். தன் குழந்தையை உடம்போடு துணியால் கட்டிக்கொண்டு நீரில் பாய்ந்து மூழ்கி உயிர்விட்டாள். அந்த சுனையில் அவள் முலையிலிருந்து பெருகிய ரத்தம் கலந்தது. அந்த சுனையிலிருந்து நீர் பெருகி எழுந்தது. |
834 |
அது ஆறாக ஓட ஆரம்பித்தது. பெருமழையாக வானில் எழுந்தது. அன்று மணியக்காரன் தன் மகள் மணிமாலைக்கு திருமணம் நிச்சயம் செய்திருந்தான். வெள்ளம் பெருகி சீவைகுண்டத்தை மூடியது. திருமணப்பந்தலில் புகுந்து மணியக்காரனையும் மகளையும் அள்ளிக்கொண்டு சென்றது. ஊரெல்லாம் மூழ்கி சீவைகுண்டத்தின் அக்ரஹாரமே இடிந்து விழுந்தது. |
835 |
அங்கிருந்த பிராமணர்கள் கதறி அழுதனர். அந்த வெள்ளத்தில் ஆனந்தாயியின் பிணமும் அவள் மகள் கிருஷ்ணத்தம்மாளின் பிணமும் மிதந்து வந்து பந்தல்காலில் முட்டி நின்றன. இறந்துபோன ஆனந்தாயி கைலாசம் சென்று சிவனைக் கண்டாள். நீ வெள்ளத்தில் வந்ததால் வெள்ளமாரி அம்மன் என இனி அழைக்கப்படுவாய் என்றார். |
836 |
அவளுக்கு வணங்குபவர்களுக்கு அருள் புரியவும் பிழை செய்பவர்களைத் தண்டிக்கவும் வரங்களும் தந்தார். அவள் மண்ணுக்கு வந்து தெய்வமாகக் கோயில் கொண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூர்க்காரர்கள் அவளை தெய்வமாக வழிபட்டார்கள். இந்தத் தொடரில் இதுவரை வந்த கதைகளை வாசித்தவர்களுக்கு இக்கதையில் பல நுட்பமான உண்மைகள் தெரியவரும். |
837 |
அதற்கு முன்னரே அது சில நூல்களில் சொல்லப்பட்டுள்ளது என சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அது மிகமிகத் தொன்மையான ஒரு கதை எனத் தோன்றுகிறது. சமண, பௌத்த நூல்களிலும் அக்கதை சற்று மாறுபட்ட வடிவில் உள்ளது. தமிழில் மணிமேகலையில் இந்தக்கதை உள்ளது. அதிலிருந்து பாடப்புத்தகத்தில் இக்கதை சேர்க்கப்பட்டுள்ளது. |
838 |
இக்கதை எப்படி ஒரு நாட்டார்தெய்வத்தின் கதையில் சேர்ந்தது? இங்கே நடந்ததைப்போலவே இதைச் சொல்கிறார்கள் இந்தத் தெய்வத்தை வழிபடுபவர்கள். உண்மையில் நடந்தது இதுவாகவே இருக்கும். ஒரு பிராமணப் பெண்ணின் கணவன் பாம்பு கடித்து இறந்தான். அவள் உறவினர் சொத்துக்களைப் பிடுங்கிவிட்டு அவளைத் துரத்தியடித்தனர். |
839 |
காலப்போக்கில் செவிவழிச்செய்திகளை எல்லாம் அந்தக்கதைமேல் ஏற்றிக்கொண்டார்கள். அவள் பிராமணப்பெண் ஆதலால் பிராமணப்பெண் கீரியைக்கொன்ற பழைய கதையும் சேர்ந்துகொண்டது. அதாவது நாட்டார் மரபில் இருந்து புராணங்கள் உருவாவது போலவே சிலசமயம் புராணங்களில் இருந்தும் நாட்டார் மரபு உருவாகக்கூடும். |
840 |
அதில் அந்தச்சடலங்கள் மிதந்துவருவது போன்றவை உதாரணம். அவையெல்லாமே கவித்துவமாக துக்கத்தைச் சொல்பவை. அந்த மாய அம்சத்தைக் கூர்ந்து நோக்குவது நம் பண்பாட்டைப் புரிந்துகொள்ள மிக உதவியானது. கீரியும் பாம்பும் இரு எதிர்முனைகளாகக் காட்டப்படுகின்றன. விதியின் இரு முகங்கள். மனிதர்களின் இருமுகங்கள்!. |
841 |
நான் இன்று வரை எழுதித்தீராத கதைகளை அங்கேதான் கேட்டேன். கதைசொல்ல ஆரம்பித்தால் ஒருவர் சொல்லி முடிக்க இன்னொருவர் என விடிய விடிய பேசிக்கொண்டிருப்போம். பல மூத்தவர்கள் அபாரமான கதைசொல்லிகள் என இன்று உணர்கிறேன். அதற்கு என்ன காரணம் என்று யோசிக்கும்போது அவர்களின் உலகம் மிகச்சிறியது என்பதுதான் என படுகிறது. |
842 |
அதிகம்போனால் பத்துகிலோமீட்டருக்குள்தான் வாழ்க்கையே. வாசிக்கத் தெரியாது. செய்தித்தாள்கள், வானொலி என எந்த உலகத்தொடர்பும் இல்லை. ஆகவே வாழ்க்கையை கற்பனையால் நிரப்பிக்கொண்டார்கள். அப்பு அண்ணா ஒரு மகத்தான பேய்க்கதைசொல்லி. உண்மையிலேயே பயந்தவர் என்பதனால் கதைகள் உயிர்வாதையுடன் இருக்கும். |
843 |
வேறெங்கும் தென்படமாட்டார். ஆனாலும் அவர் பேயைக் காண்பது தடைபடவில்லை. நான் திண்ணைக்குச் செல்லும்போது அவர் பிள்ளைக்கல் அருகே பேயைக்கண்ட கதை ஓடிக்கொண்டிருந்தது. மூலச்சல்தம்பி என்று புகழ்பெற்ற நாயர் குடும்பத்தின் கதை அது. பழங்காலத்தில் வாளேந்தி செல்லவும் பல்லக்கில் ஏறவும் உரிமைகொண்டவர்கள். |
844 |
அவர்கள் குடும்பத்தில் இறுதி வாரிசாக வந்த கண்ணன் தம்பி பெருவீரர். மதயானையின் இயல்புகொண்டவர். ஆதலால் அவரை ஆனைத்தம்பி என்றுதான் ஊரில் அழைத்தனர். கடும்கோபம் கொள்பவர். கோபம் வந்தால் அருகில் இருப்பது பாறாங்கல்லா, கடப்பாரையா என்று பார்க்கமாட்டார். கீழாளரைக் கொன்றால் கேள்விமுறை அன்றில்லை. |
845 |
முதல் மூன்று மனைவியரிலும் அவருக்குப் பிள்ளைகள் இல்லை. ஆகவே நிறையக்குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பெண்ணெடுக்க வேண்டும் என்று களியல் கடந்துசென்று மலையடிவாரத்தில் குடியிருக்கும் ஏழைக்குடும்பத்தில் இருந்து ஒன்பதாவது மகளான காளியை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு மணம்புரிந்து கூட்டிவந்தார். |
846 |
ஆகவே அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். வழக்கமாக அவர் படுக்கையில் தவிர பெண்களிடம் பேசுவதோ முகம் கொடுப்பதோ இல்லை. அன்றைய வழக்கம் அது. பெண்கள் இரண்டாம்தரமான பிறவிகள் என்னும் நம்பிக்கை ஓங்கியிருந்த காலம். குடியாளும் ஆண்கள் முன் வீட்டுப்பெண்கள் வந்து நிற்கவும் மாட்டார்கள். |
847 |
காலை எழுந்ததுமே அவள் முகத்தில்தான் விழிக்கவேண்டும் என்று விரும்பினார். நாள் முழுக்க நினைத்து நினைத்து அவளை அழைத்து அருகே அமரச்செய்து கொஞ்சினார். அவள் விரும்புவதை எல்லாம் கொண்டுவந்து கொடுத்தார். நினைத்ததெல்லாம் கிடைக்கும் என அறிந்ததும் அவள் தன் ரகசிய ஆசைகளை எல்லாம் சொல்லத் தொடங்கினாள். |
848 |
தேங்காய்பட்டினத்தில் இருந்து அவள் விரும்பிய மீனை மீனவர்கள் கொண்டு வந்து கொடுத்தனர். மிளாமானின் பால் குடித்தால் நல்லது என்று யாரோ அவளிடம் சொன்னார்கள். கண்ணன் தம்பியின் ஆணைப்படி ஏவலர்கள் காடெல்லாம் அலைந்து ஒரு குட்டிபோட்ட மிளாமானை பிடித்து கொண்டுவந்து பால்கறந்து கொடுத்தார்கள். |
849 |
வேர்ப்பலாச்சுளை வேண்டுமென்று கேட்டாள். அது பலா பழுக்கும் காலமே அல்ல. இருந்தாலும் பருவம் தவறிய பலாவுக்காக தேடி அலைந்து நெய்யாற்றின்கரை அருகே இருந்து பறித்துக்கொண்டு வந்து கொடுத்தார்கள். அவரே தன் கைப்பட அவளுக்கு அதையெல்லாம் ஊட்டினார். நாள்செல்லச்செல்ல அவள் செல்லம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. |
850 |
மூத்த பலாமரத்தின் உச்சிக்கிளையில் சென்று அமரவேண்டும் என விரும்பினாள். அதற்காகவே ஒரு ஏணி கட்டி அதில் அவளை ஏற்றிக்கொண்டு சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த பரணில் அமரச்செய்தனர். பசும்பாலில் குளிக்கவேண்டுமென ஆசைப்பட்டாள். பன்னிரண்டு காராம்பசுக்களின் பால் கறந்து அவளை குளிப்பாட்டினர். |
851 |
ஆகவே அவர்கள் அனைவரும் அவளுக்கு அரசியைப்போல அஞ்சி அஞ்சி பணிவிடைசெய்தனர். ஒருநாள் அவள் மகாராணி விரித்துப் படுக்கும் வீராளிப்பட்டில் படுக்கவேண்டும் என விரும்பினாள். அதேபோன்ற பட்டு போதாது, மகாராணி படுத்த பட்டே வேண்டும் என்று அடம்பிடித்தாள். அவர் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. |
852 |
ஒரு பெண்ணின் ஆசைதானே? நான் தந்ததாகச் சொல்லிக் கொடு என்று ஒரு செம்பட்டுச் சால்வையை அளித்தார். பெருமகிழ்ச்சியுடன் அதைக்கொண்டு வந்து மனைவியிடம் அளித்தார் கண்ணன். ஆனால் அவள் அலட்சியமாக உதட்டைச் சுழித்து இதில் சரிகை இல்லை என்று சொன்னபடி தூக்கி வெளியே நின்றிருந்த நாய் மேல் வீசினாள். |
853 |
பின்னால் தெறித்து விழுந்த அவள் குருதிப்போக்கு நிற்காமல் துடித்து இறந்தாள். அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று காட்டிக்கொண்டார். தூக்கிச்சென்று எரிக்கும்படி ஆணையிட்டு விட்டு வயல்களைப் பார்வையிடச் சென்றார். அவளை அவர்கள் காட்டு ஓரமாக அக்குடும்பத்தின் மயானத்திலேயே எரித்தனர். |
854 |
அவர் ஒரு மாதகாலம் எதுவும் நினைக்காதவராக வாழ்ந்தார். பலவகையான வேலைகள். வேட்டை. திருவனந்தபுரம் பயணம். அந்தப்பரபரப்பில் அவளை மறந்து விட்டதாகவே நினைத்தார். ஆனால் அடுத்தமாதம் ஒருநாள் அவர் படுத்து தூக்கத்தில் மூழ்கும்போது ஒரு விசும்பல் ஓசையைக் கேட்டார். முதலில் அறைக்குள் எவரோ இருப்பதாகவே தோன்றியது. |
855 |
எழுந்து நோக்கியபோது எவருமில்லை. சாளரத்துக்கு அப்பால் எவராவது நிற்கிறார்களா என்று பார்த்தார். எவரும் அப்பகுதியில் இல்லை. எல்லாம் வெறும் மனப்பிரமை என நினைத்து தூங்கிப்போனார். அதை மறுநாள் நினைவுகூரவுமில்லை. மறுநாளும் அதே விசும்பல் ஒலி கேட்டது. யாராவது விளையாடுகிறார்களா என்று பார்த்தார். |
856 |
தெள்ளத்தெளிவாக அந்த விசும்பல் ஓசை கேட்டபோது உண்மையிலேயே பயந்துபோனார். உடம்பு புல்லரித்து நடுங்க எழுந்து படுக்கையில் அமர்ந்துவிட்டார். கணியனை வரவழைத்து என்ன நிகழ்கிறது என்று கணித்துப் பார்த்தார். இறந்தவளின் ஆவி அமைதியின்றி அலைகிறது என்று அவன் களம் அமைத்து சோழி பரப்பி குறிநோக்கிச் சொன்னான். |
857 |
என்ன கழுவாய் செய்யலாம் என்று அவர் கேட்டார். பிள்ளையுடன் செத்தவளுக்கு ஒரு பிள்ளைக்கல் நாட்டவேண்டும். அவள் ஆவிக்கு உதிரபலி கொடுத்து சாந்தி செய்யவேண்டும் என்றார் கணியர். வருடம்தோறும் அவள் இறந்தநாளில் குருதிகொடை அளிக்கவேண்டும் என்று வகுத்தார். அதன்படி பிள்ளைக்கல் நாட்டப்பட்டது. |
858 |
ஒரு பெரிய கல்லும், அருகே சிறிய கல்லும் தொட்டுக் கொண்டிருக்கும்படி நாட்டப்பட்ட நடுகல் அது. அதற்கு வெள்ளாடு பலிகொடுத்து பூசை செய்து முறைப்படி சாந்திபூசை செய்யப்பட்டது. அனைத்தும் நிறைவுற்றபோது இனி எதற்கும் அஞ்சவேண்டியதில்லை என்றார் கணியர். அவரும் நிம்மதியாக உறங்கச் சென்றார். |
859 |
ஆனால் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. அன்று அக்குரல் கேட்குமா என்று மனம் ஊசிமுனையில் இருந்தது. படுத்து கண்களை மூடியபோது அமைதியாக இருந்தது. இலைகள் மேல் காற்று ஓடும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. எதுவும் கேட்கவில்லை. அவ்வளவுதான், முடிந்துவிட்டது என அவர் எண்ணிய கணம் மிக அருகே விசும்பல் ஓசை கேட்டது. |
860 |
நெஞ்சிலும் தலையிலும் அறைந்துகொண்டு அழுதார். அவரை பிடிக்கப்போனவர்களை எட்டி உதைத்தார். அதன்பின் அவர் இரவையே அஞ்சினார். விளக்குகளை ஏற்றிவைத்துக் கொண்டு இரவெல்லாம் தூங்கமாலிருந்தார். பகலில் வெயிலில் படுத்துத் தூங்கினார். ஆனால் நாளடைவில் பகலிலும் தூங்கப்போகும் போது அந்த விசும்பல் ஓசை கேட்கத்தொடங்கியது. |
861 |
பின்னர் அடிக்கடி அது அவர் அருகே கேட்டது. அவருடன் அந்த ஓசை எப்போதும் இருந்தது. பலவகையான மந்திரவாதிகளும் பூசகர்களும் வந்து அவளுக்கு சாந்தி பூசை செய்தனர். அவளைக் கட்டி நிறுத்த முயன்றனர். எதுவும் உதவவில்லை. நாளடைவில் அவர் பைத்தியம் போல ஆனார். பிறர் கண்ணைப் பார்ப்பதில்லை. தனக்குத்தானே பேசிக்கொண்டார். |
862 |
அழுதார். சிலசமயம் தலையில் அறைந்துகொண்டு சிரித்தார். ஒருநாள் அவர் தன் மண்டையை ஓங்கி ஓங்கி அறைந்தபடி ஓடினார். அவரை பின் தொடர்ந்து சென்றவர்கள் தடுப்பதற்குள் அந்த பிள்ளைக்கல்லில் தன் தலையை ஓங்கி அறைந்தார். மண்டை உடைந்து துடித்தவரை அவர்கள் அள்ளித்தூக்கினர். மூளை அவர்கள் கையில் அரிசிக்கூழ் போல வழிந்தது. |
863 |
என்றேன். காலையில் அப்பு அண்ணா பிள்ளைக்கல் பக்கமாக புல் பறிக்கச் சென்றாராம். மழைமூட்டமான நேரம். அப்பகுதியில் யாருமில்லை. ஒரு இளம்பெண் இரு மகன்களை இடுப்பில் வைத்தபடி நின்றிருந்தாள். அவள் இருமுலைகளிலும் இரு பிள்ளைகளும் பால் குடித்துக்கொண்டிருந்தன. யாரு? என்று கேட்டிருக்கிறார். |
864 |
ஏன் இங்க நிக்கிறே? என்றார். அவள் திரும்பிப் பார்த்தாள். அப்போது மின்னல் வெட்டியது. இடியோசை வெடித்தது. அவள் கண்கள் இரு கொள்ளிகள் போல ஒளிவிட்டன. வாய்க்குள் ரத்தநிறமான வெளிச்சம். அப்பு அண்ணா அப்படியே பாய்ந்து ஓடி வந்துவிட்டார். நான் கதையைக்கேட்டு சற்றுநேரம் பிரமிப்புடன் இருந்தேன். |
865 |
லே கூமுட்ட, மூத்த மகன் கண்ணன் தம்பியில்லா? என்றார் நேசமணி. எனக்குப்புரியவில்லை. இப்ப புரியாது. கொஞ்சம் வயசானா புரியும் என்றார் அப்பால் இருந்த கேசவன் மாமா. பேய் தெய்வமாகும் கதை சொந்தத்தில் ஒரு திருமண வீட்டின் இரவு, உறவினர்கள் சூழ்ந்திருந்த சபையில் மூத்த மாமா ஒருவர் கதைசொல்லிக் கொண்டிருந்தார். |
866 |
இப்போது இருபத்தாறு சிறிய குடும்பங்களாகச் சிதறிப்பரந்திருக்கும் முந்தைய கூட்டுக்குடும்பத்திற்குச் சொந்தமான பழைய வீடு ஒன்று என் சொந்த ஊரான திருவரம்புக்கு அருகே இருந்தது. ஏகப்பட்டபேருக்கு சொந்தமானது என்பதனால் வீட்டை எவரும் பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள். வீடு அப்படியே சரிந்து விழுந்து மண்ணாகிவிட்டது. |
867 |
வீட்டைச்சுற்றி இரண்டு ஏக்கர் நிலம். அது இருபத்தாறு குடும்பங்களைச்சேர்ந்த நூற்றுபதினேழுபேருக்கு சொந்தமானது. ஆகவே விற்கவும் முடியாது ஒத்திக்கோ, பாட்டத்திற்கோ கூட கொடுக்கமுடியாது. அப்படியே போட்டுவிட்டிருந்தார்கள். குமரிமாவட்டத்தின் நிலம் ஒருவருடம் பராமரிப்பில்லாமல் விட்டுவிட்டால் காடாகிவிடும். |
868 |
தென்கிழக்கு மூலையில் அக்னிசாஸ்தாவின் கோயில். கோயில் என்றால் ஒரு பீடம், அதன்மேல் சிலை. சாஸ்தாவின் வாகனம் நாய். அவர் பார்த்தது நாயைத்தான். அவர் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதையொட்டி இருந்த நான்கு ஏக்கர் நிலம் அவருக்கு வழிவழியாக வந்தது. அதை தென்னந்தோப்பாக ஆக்கியிருந்தார். |
869 |
கால்நடையாகவே காடுவழியாக கேரளத்திற்குக் கொண்டுசென்று நெடுமங்காட்டிலோ, நெய்யாற்றின்கரையிலோ விற்றுவிட்டு பணத்துடன் திரும்பிவிடுவார்கள். மெல்லமெல்ல தேங்காய் வியாபாரிகளே திருட்டுத்தேங்காயை பாதிவிலைக்கு வாங்கத் தொடங்கினர். தோப்பு உரிமையாளர்கள் இரவுபகலாகக் காவல் கிடக்க வேண்டியிருந்தது. |
870 |
மாமாவின் தென்னந்தோப்பு இருந்தபகுதியில் கைவிடப்பட்ட பழமையான வீடும் அவர்களின் கைவிடப்பட்ட குலதெய்வங்களும் இருந்தமையால் பொதுவாக மக்கள் நடமாட்டம் இருக்காது. எனவே திருட்டுப்பயமே இருந்ததில்லை. ஆனால் ஒருநாள் அவர் தோட்டத்திற்குச் சென்றபோது ஐம்பது தேங்காய்களின் மட்டை கிடப்பதைக் கண்டார். |
871 |
மாமாவின் வாழ்வாதாரமே அந்தத் தென்னைகள்தான். ஆகவே காவல் காக்க ஆரம்பித்தார். ஆனால் அங்கேயே இரவு தங்க அவருக்குப் பயம். நாலைந்துமுறை எட்டுகட்டை டார்ச் விளக்குடன் சென்று மரங்கள்தோறும் ஒளிவீசிப் பார்த்து விட்டுத் திரும்பிவருவார். அப்படி அவர் ஒருமுறை சென்றபோது தான் அதைப்பார்த்தார். |
872 |
மாமா அன்று வீட்டிலிருந்து கிளம்பியபோது நாய்கள் குரைத்துக்கொண்டே இருந்தன. எதையோ பயந்ததுபோல. ஊருக்குள் திருடர்கூட்டம் இறங்கியிருக்கலாம் என்று அவர் நினைத்தார். ஆகவே டார்ச் விளக்குடன் ஒரு குத்தீட்டியையும் கையில் எடுத்துக் கொண்டார். அன்று அரைநிலா தான். அது முன்னரே எழுந்துவிட்டது. |
873 |
மேகங்கள் விலகத் தொடங்கியதும் நிழல்கள் தெளிவடையத் தொடங்கின. மாமா தென்னந்தோப்புக்குச் சென்றபோது தென்னை ஓலைகளின் ஒவ்வொரு இலைகளும் தெளிவாகத் தெரியத் தொடங்கின. அவர் டார்ச் அடித்து தென்னை மரங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தபோது நாய்கள் குரைப்பதை முழுமையாக நிறுத்திவிட்டிருப்பதை உணர்ந்தார். |
874 |
அவர் அருகே சென்று பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை. ஒரு மட்டையை எடுத்து அதைக் குத்திப் பார்த்தார். அது நடுங்கியபடி ஒண்டியதே ஒழிய ஓசையே எழுப்பவில்லை. அதை பாம்பு கடித்திருக்கும் என்று நினைத்தார். மேற்கொண்டு அங்கே நிற்க அஞ்சி நடந்தபோது இன்னொரு நாயை விறகுக்குவியல் அருகே பார்த்தார். |
875 |
அதுவும் அதேபோல நடுங்கிக்கொண்டிருந்தது. அதன் கண்களில் தெரிந்த பயம் அவரையும் பயமுறுத்தியது. அது எந்தத்திசையில் பார்க்கிறது என்று பார்த்தார். அங்கே மரவள்ளித் தோட்டத்திற்குள் ஒரு பெரிய குதிரை நின்றிருந்தது. நன்றாகக் கொழுத்த பெரிய குதிரை. நிலவில் அதன் உடல் மின்னிக்கொண்டிருந்தது. |
876 |
அங்கே குதிரையே கிடையாது. நாகர்கோயிலில் மட்டும் தான் குதிரைகள் உண்டு. அவையும் சொறிபிடித்த ஜட்காக் குதிரைகள். அதன் பின்பக்கம் வால் எழுந்து வளைந்திருப்பதை மறுகணம் கண்டார். உடனே உடல் பதறியது. அதன்பின்னரே மனம் அறிந்ததை மூளை அறிந்தது, அது ஒரு நாய்! பொதுவாக சாஸ்தாவுக்கு யானைதான் வாகனம். |
877 |
அபூர்வமாகக் குதிரை. ஆனால் அக்னிசாஸ்தா அனல் வடிவமானவர். அனல்நிறம் கொண்டது நாய். ஆகவே நாயை வாகனமாக கொண்டிருக்கிறார். சாஸ்தா இரவுலா போகும் நேரம். மாமா அப்படியே குப்புறப் படுத்துக்கொண்டார். கண்களையே திறக்கவில்லை. விடிந்ததும் எழுந்து பார்த்தபோதுதான் உடலில் உயிர் எஞ்சியிருப்பதை உறுதிசெய்து கொண்டார். |
878 |
காய்ச்சல் வந்து உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டது. அவர் சொன்னதை எவரும் முதலில் நம்பவில்லை. ஆனால் அவர் சொல்லிக்கொண்டே இருந்ததைக் கண்டு சந்தேகம் வந்த சிலர் கம்புகளுடன் சென்று பார்த்தனர். மரவள்ளித் தோட்டத்தில் நாயின் காலடித்தடம் இருந்தது. பத்துமடங்கு பெரிய தடம், பத்து மடங்கு பெரிய இடைவெளி. |
879 |
கூட்டத்தில் எவரோ சரிதான், இனி திருடனுங்க அந்தப்பக்கமா போகாம பண்ணிட்டாரு. ஆளு கில்லாடி என்றனர். மாமாவின் நோக்கமே அதுவாக இருக்கவும் கூடும்.ஆனால் நான் நம் தெய்வங்களைப் பற்றி நினைத்துக்கொண்டேன்.நமக்கு எதுதான் தெய்வம் இல்லை? யானை, பசு, காளை, எருமை, மான், பன்றி, காகம், பருந்து, கிளி, நாய். |
880 |
பிரம்மாண்டமான ஒரு நாட்டார் மரபுக்கும் தத்துவ சிந்தனைக்குமான உறவால் இவை உருவாகிவந்துள்ளன. என்னருகே அன்று ஏழுவயதான மகன் அஜிதன் அமர்ந்திருந்தான். அவன் ஆங்கில பேய்ப்படங்களில் மெய்மறந்து வாழ்ந்த காலம். அப்பா, அது லைகன்தானே? என்றான். நான் திடுக்கிட்டேன். எப்படி விளக்குவதென்றே தெரியவில்லை. |
881 |
ஐரோப்பிய நாட்டுப்புறத் தொன்மங்களில் இருந்து வந்த ஒரு பேய்வடிவம் லைகன். ஓநாய் வடிவம் கொண்ட பேய் அது. மண்ணுக்கு அடியில் இருட்டில் வாழ்வது. இருண்ட இரவுகளில் மேலே வந்து மக்களை வேட்டையாடும். என்றும் சொல்வார்கள். எனப்படும் ரத்தக் காட்டேரிகளும் இவையும் இணைந்தே இருக்கும். வாய் பிணநாற்றம் அடிக்கும். |
882 |
உண்மையில் இவை ஐரோப்பாவில் ஈராயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்த தொன்மையான நாட்டார் வழிபாட்டில் வழிபடப்பட்ட தெய்வங்கள். அதிலும் குறிப்பாக ஓநாய் பழைய வேட்டைச் சமூகத்தின் முக்கியமான தெய்வம். ஓநாயை தெய்வமாக வழிபடுவதைப்பற்றிப் பேசும் சீன நாவலான ஓநாய் குலச்சின்னம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. |
883 |
மகாபாரதத்தில் பீமன் கூட ஓநாய் என்றே சொல்லப்படுகிறான். விருகோதரன் என. ஐரோப்பாவில் இருந்த தொல்மதங்களை பொதுவாக மதங்கள் என்பார்கள். கிபி இரண்டாம் நூற்றாண்டில் ரோமாபுரியின் பேரரசர்களால் கிறித்தவ மதம் ஐரோப்பாவில் பரப்பப்பட்டபோது அனைத்து பாகன் மதங்களும் முழுமையாக அழிக்கப்பட்டன. |
884 |
கூடவே அந்தத் தெய்வங்கள் எல்லாம் பேய்கள், பிசாசுகள் என்று விளக்கப்பட்டன. அவை அழிவையும், நோய்களையும் அளிப்பவை என்று கூறப்பட்டன. இன்றுகூட அந்நம்பிக்கை ஐரோப்பாவில் வலிமையாகவே உள்ளது. இவ்வாறு நோய்களை அளிக்கும் பேய்களை திருப்தி செய்வதற்காக ஒரு பலிச்சடங்கை குளிர்காலத் தொடக்கத்தில் செய்தனர். |
885 |
பேய்களை அடக்கும் புனிதர்களை வழிபடும் நாள் அது. அனைத்துப் புனிதர்களின் நாள் என்ற பொருளில் அது ஹாலோவீன் என்று அழைக்கப்படுகிறது. அன்று விதவிதமான பேய்களின் வேடங்களை அணிந்துகொண்டு கொண்டாடுகிறார்கள். தடைசெய்யப்பட்டாலும் மக்கள் மேலும் நெடுங்காலம் தங்கள் தெய்வங்களை ரகசியமாக வழிபட்டனர். |
886 |
அவர்களை தேடித்தேடி வேட்டையாடியது ரோமாபுரி அரசு. இந்த மதவேட்டை இன்குவிசிஷன் என்று சொல்லப்பட்டது. அப்படி ரகசிய வழிபாடுகள் செய்தவர்கள் சூனியக்காரர்கள் என்று சொல்லப்பட்டு உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். ஜோன் ஆஃப் ஆர்க் போன்ற மாபெரும் வீராங்கனைகள் அப்படி எரித்துக்கொல்லப்பட்டார்கள். |
887 |
நாம் உலகமெங்கும் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள்தான். இந்தியாவிலும் அது நிகழ்ந்தது. அசுரர்கள் என நம் புராணங்களில் சொல்லப்படுபவர்கள் தோற்கடிக்கப்பட்ட மன்னர்கள். நாகர்கள் தோற்கடிக்கப் பட்டபோது அவர்கள் பாதாளத்தில் வாழ்பவர்களாக மாற்றப்பட்டார்கள். |
888 |
ஆகவே தோற்கடிக்கப்பட்ட தெய்வங்கள் கூட அழிவதில்லை. அவை வெறும் பேய்களாக மாறிவிடுவதில்லை. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவை வேறுவடிவில் மையமதத்திற்குள் எழுந்து வந்துவிடுகின்றன. ராமாயணத்தில் ராவணன் வில்லன். ஆனால் சிலநூறாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட உத்தர ராமாயணத்தில் ராவணன் கதாநாயகன் ஆகிவிட்டான். |
889 |
நாகங்கள் இன்றும் நம் ஆலயங்கள் அனைத்திலும் தெய்வமாக அமைந்துள்ளன. நாகம் துணையாக இல்லாத தெய்வமே நமக்கு இல்லை! பண்பாடுகள் நடுவே போட்டியும், போரும்,வெற்றி தோல்வியும் இல்லாத இடமே இல்லை. ஆனால் ஒரு பண்பாடு இன்னொன்றுடன் உரையாடலைத் தொடங்கியதென்றால் படிப்படியாக அது பண்பாடுகளின் இணைவுக்கே இடமளிக்கும். |
890 |
இந்தியாவில் நடந்தது அதுதான். நம் அத்தனை பேய்களும் அப்படி என்றோ எவரோ வழிபட்ட தெய்வங்கள். ஆகவேதான் அவை ஒரேசமயம் அச்சமூட்டும் பேய்களாகவும் இருக்கின்றன. அருள்தரும் தெய்வங்களாகவும் திகழ்கின்றன. மீறலின் தெய்வீகம் தடிவீரச்சாமி கதை என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை ஒருமுறை கேட்டேன். |
891 |
நெல்லைமாவட்டத்தில் ஏழூர் பள்ளர் என்னும் குடும்பம் இருந்தது. முருகன்குறிச்சி, முனிக்குளம், வெள்ளக்கோயில், தெப்பக்குளம், பாளையன்கோட்டை, திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை ஆகிய ஏழு ஊர்களில் உள்ள திருச்செந்தூர் ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களை இவர்கள் குத்தகைக்கு எடுத்து வேளாண்மை செய்தனர். |
892 |
புரதவண்ணார் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் நீலவண்ணானும் அவர் மனைவி மாடத்தியும் அவர்களுக்கு குழந்தைகளில்லாமையால் நெடுநாள் தான தர்மங்கள் செய்தனர். பிராமணர்களுக்கு காணிக்கைகள் அளித்தும் வழிப்போக்கருக்கு நீரும் உணவும் அளித்தும் தண்ணீர்ப்பந்தல்களும், சுமைதாங்கிகளும் அமைத்தும் அறம்செய்தனர். |
893 |
சங்கரநயினார் கைலாயம் சென்று அங்கிருந்த ஆதிசிவனிடம் மாடத்திக்கு பிள்ளைவரம் கொடுக்கவா என்று கேட்டபோது அவளுக்கு இப்பிறவியில் பிள்ளைப்பேறு இல்லை என்றார் சிவன். மாடத்தியின் தவத்தைக்கண்டு மனமிரங்கிய சங்கரநயினாரே மைந்தனாகப் பிறக்க மனம்கொண்டார். ஆனால் பதினெட்டு ஆண்டுக்காலம் மட்டுமே அவர் மண்ணில் வாழமுடியும். |
894 |
மாடத்தியின் கனவில் வந்த சங்கர்நயினார் என் வடிவில் உனக்கு மகன் பிறப்பான். அவனுக்குப் பதினெட்டு வயதில் ஒரு கண்டம் உண்டு என்றார். மாடத்தி மகிழ்ந்து கண்ணீர்விட்டாள். தெய்வாம்சத்துடன் பிறந்த மைந்தனுக்கு மந்திரமூர்த்தி என்று பெயரிட்டனர். அவன் இளமையிலேயே கலைகளைக் கற்பதில் தேர்ச்சி பெற்றிருந்தான். |
895 |
குலத்தொழிலைச் செய்யாமல் தான்தோன்றிதனாக அலைந்தான். பொட்டல்காட்டில் காளி கோயில்களிலேயே இரவு தங்கினான். மாறுவேடமிட்டு வணிகனாக பல ஊர்களுக்குச் சென்று பார்த்து வந்தான். தானகவே எழுதப்படிக்க கற்றான். அவனுக்கு பொட்டல்காளியின் கோயில் ஒன்றின் அடியிலிருந்து பன்னிரண்டு சுவடிகள் கிடைத்தன. |
896 |
தறுதலை என பெயர்பெற்ற மகனுக்கு பெற்றோர் பெண் தேடினர். எங்கும் அவனுக்கு பெண்கொடுக்க குடும்பங்கள் முன்வரவில்லை. ஆகவே நெடுந்தொலைவில் குமரிமாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியில் இருந்து சாத்தப்பிள்ளை என்னும் பெண்ணை அவனுக்கு மணம்முடித்தனர். அவள் மந்திர மூர்த்தியின் அழகைக்கண்டு மயங்கி மணம் புரியச் சம்மதித்தாள். |
897 |
அவள் தாமிரவருணியில் துணிவெளுக்கும் தொழில் செய்து பிழைத்தாள். எவருக்கும் அடங்காமல் அலைந்த மந்திரமூர்த்திக்கும் புதியவன்நாடார் என்னும் நண்பன் அமைந்தான். அவன் மந்திரமூர்த்தியிடம் மந்திரங்கள் கற்றுக்கொள்ள விரும்பினான். மந்திரமூர்த்தி அவனுக்கு மந்திரவித்தைகளை கற்றுக்கொடுத்தான். |
898 |
நாடாராகிய எனக்குச் சமானமாக நீ எப்படி அமரலாம்? என்று கேட்டுவிட்டான். அதன்பின் மந்திரமூர்த்தி முக்கியமான மந்திரங்களை புதியவனுக்குச் சொல்லித் தரவில்லை. பொறுமையிழந்த புதியவன் மந்திரமூர்த்தியை கடுமையாக வசைபாடிவிட்டுப் பிரிந்து சென்றான். திருச்செந்தூரிலிருந்த செம்பாரக்குடும்பனுக்கு ஏழு பிள்ளைகள். |
899 |
அவள் பேரழகி. தந்தை நிலக்கிழார் ஆகையால் செல்லமாக வளர்ந்தவள். பணத்திமிரும் சாதித்திமிரும் இருந்தன. அவள் ஒருநாள் தாமிரவருணியில் நீராடும் பொருட்டு தன் தோழிகளுடன் திருச்செந்தூரிலிருந்து வந்தாள். வரும்வழியில் அவள் கொண்டுவந்த மாற்றுச்சேலை வண்டியிலிருந்து எங்கோ விழுந்துவிட்டது. |
900 |
நீராடிவிட்டு எழுந்தபோதுதான் மாற்றுச்சேலை இல்லை என்பதை சோணமுத்து அறிந்தாள். ஈர ஆடையுடன் செல்லவும் முடியாது. அப்போதுதான் அப்பால் சாத்தப்பிள்ளை வைத்திருந்த வெள்ளாவிப்பானைகளைக் கண்டாள். அங்கே பெண்கள் இருப்பார்கள் என்று எண்ணி அங்கே சென்றாள். அங்கே அப்போது மந்திரமூர்த்திதான் இருந்தான். |
901 |
அவனைக் கண்டதும் சோணமுத்து திகைத்து ஈர ஆடையால் மூடிய உடலை ஒளித்துக்கொண்டாள். அவன் அவள் அழகைக்கண்டு செயல்மறந்தான். அவள் மெல்லிய குரலில் அவனிடம் மாற்றுச்சேலை கேட்டாள். அவன் அழகிய சேலை ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்தான். அந்தச்சேலையில் வசியமந்திரம் செய்து அனுப்பியிருந்தான் மந்திரமூர்த்தி. |
902 |
அவள் அதை உடுத்ததுமே அவனுக்கு மனம்வசப்பட்டாள். அவனை நினைத்துக் கொண்டே இருந்தாள். அவனை நினைக்கக்கூடாது என எண்ண எண்ண அந்நினைப்பு பெருகியது. மறுநாள் அவன் அவளை காத்து பொட்டலில் இருந்த குடிசையில் அமர்ந்திருந்தான். அவள் அவனுக்கு கோழிக்குழம்பு வைத்து எடுத்துக்கொண்டு நள்ளிரவில் கிளம்பி அங்கே வந்தாள். |
903 |
அப்போது உள்ளே மந்திரமூர்த்தியும் சோணமுத்துவும் ஒன்றாக இருந்தனர். குடிசைக்கதவு தட்டப்பட்டதும் தன் மாயத்தால் மந்திரமூர்த்தி சோணமுத்துவை ஒரு சேலை ஓவியமாக ஆக்கினான். அவளை அங்கேயே விட்டுவிட்டு தான் ஒரு பூனையாக மாறி வெளியே பாய்ந்தான் அந்தப்பூனைதான் அவன். பிடியுங்கள் என்று புதியவன் கூவினான். |
904 |
அவர்கள் அதைத் துரத்திச்சென்றனர். பூனை மரநாயாக மாறி மரத்தில் ஏறியது. அதை சூழ்ந்து சுற்றிலும் புகைபோட்டனர். அது காகமாக மாறிப் பறந்து மறைந்தது. சோணமுத்துவை வீட்டில் சிறையிட்டார் செம்பாரக்குடும்பன். அவளுக்கு மந்திரமூர்த்தி ஒரு மாயம் கற்றுக்கொடுத்தான். அவள் அதைச் சொன்னதும் ஒரு சேலையாக மாறிவிடுவாள். |
905 |
அவள் தோழி அதை அவர்களின் வீட்டுக்கொல்லைப் பக்கத்து தூமைஅறையில் எடுத்துப்போடுவாள். அங்கே பறவையாக மாறி வரும் மந்திரமூர்த்தி அவளை மீண்டும் சோணமுத்துவாக ஆக்கி அவளுடன் இருந்தான். அவர்களை எவரும் தடுக்கமுடியவில்லை. ஆனால் ஒருநாள் கொண்டையன்கோட்டை மறவர்கள் செம்பாரக்குடும்பனின் வீட்டை கொள்ளையிட வந்தனர். |
906 |
கொள்ளையடிக்க வீட்டில் புகுந்த மறவர் அத்தனைபேரையும் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளையடித்துச்சென்றனர். மயக்கம் தெளிந்த செம்பாரக்குடும்பனும் படையினரும் பொருள் பறிபோனதை அறிந்து அலறினர். அப்போது அவர்களில் ஒருவன் ஓர் அறைக்குள் மந்திரமூர்த்தியும் சோணமுத்துவும் ஒன்றாகக் கட்டப்பட்டிருப்பதைக் கண்டான். |
907 |
அவனால் எந்த மந்திரத்தையும் சொல்லவோ சைகை செய்யவோ முடியவில்லை. அவன் செயலற்றவன் ஆனான். அவனை அவர்கள் ஊர்த்தலைவர் வடமலையப்ப பிள்ளையிடம் கொண்டுசென்றனர். தகாத உறவு வைத்திருந்த மந்திரமூர்த்தியை அடித்து இழுத்துச்சென்று பொட்டல்காளி கோயிலுக்கு அழைத்துச்சென்று கைகளைக் கட்டி வாளால் வெட்டினர். |
908 |
துடித்துக்கொண்டிருந்த உடல் உயிர் அடங்கவில்லை. மந்திரமூர்த்தி சைகையால் காவலர்தலைவனிடம் தன் இடையிலிருந்த மந்திரக்குளிகையை கழற்றும்படிச் சொன்னான். அவர்கள் அதைக் கழற்றியதும் அவன் உயிர் பிரிந்தது. செய்தியறிந்து ஓடிவந்த சாத்தப்பிள்ளையும் சோணமுத்துவும் அவன் உடல்மேல் விழுந்து அலறி அழுதனர். |
909 |
சோணமுத்து அங்கேயே மயங்கி உயிர்விட்டாள். அவன் சிதையில் ஏறி சாத்தப்பிள்ளை எரிந்தாள். பேயுருவம் கொண்ட மந்திரமூத்தி இரு கைகளிலும் உழலைத் தடிகள் ஏந்தி புதியவன் வீட்டுக்குள் நுழைந்தான். புயல்போல ஓசை கேட்டு புதியவன் எழுந்து பார்த்தபோது அவன் வீட்டின் கதவு நொறுங்கியது. சட்டி பானைகள் தூள்தூளாயின. |
910 |
கட்டிலும் பீடமும் சிதறியது. அவன் தப்பி ஓடினான்.அவன் தலையை ஒரே அடியில் நொறுக்கினான் மந்திர மூர்த்தி. இருகைகளிலும் தடி ஏந்திய பெரிய உருவம் ஒன்று செம்பாரக்குடும்பன் வீட்டில் நுழைந்தது. அதன் அறைபட்டு கதவுகளெல்லாம் உடைந்தன. களஞ்சியங்களும் கட்டில்களும் சிதறின. சுவர்கள் சரிந்தன. |
911 |
ஊரெங்கும் வீடுகள் உடைந்தன. தலையுடைந்தவர்கள் தெருக்களில் சிதறிக்கிடந்தனர். செம்பாரக்குடும்பன் திருச்செந்தூர் சோதிடர்களிடம் சென்று கேட்டான். வந்திருப்பது மந்திரமூர்த்தி என்று அறிந்த செம்பாரக்குடும்பன் பணிந்தார். மந்திரமூர்த்தியை ஒரு கல்லில் பதியச்செய்து கோயில் எழுப்பினார். |
912 |
அறுகொலைத்தெய்வம் என்று ஒரு சொல்லாட்சியே உண்டு. வாழ்வு முடியாது இறந்தவர்களும்,அநீதியாகக் கொல்லப்பட்டவர்களும் ஆத்மா அணையாது மண்ணில் பேயென உலவி பலிகொள்வதும் அவர்களை அனல் அணைத்து விண்ணுக்கு அனுப்பும்பொருட்டு பலியும் கொடையும் அளிப்பதும் காலப்போக்கில் அவர்கள் தெய்வங்களாவதும் நாட்டார் கதைகளில் காணப்படுவதே. |
913 |
அம்மக்களின் குற்றவுணவும் அச்சமும் இறந்தவர்களை தெய்வமாக்குகின்றன என்ற விளக்கமே நவீன ஆய்வாளர்களிடமிருந்து வருகிறது. ஆனால் அது மட்டும்தானா காரணம்? மேலே சொன்ன கதையில் அன்றைய சமூகச்சூழ்நிலை தெளிவாகவே உள்ளது. சாதியடுக்கில் வடமலையப்பர் போன்ற வேளாளர்கள் தலைமையில் இருந்திருக்கிறார்கள். |
914 |
அவர்களுக்குக் கீழே அடிமையாக இருந்தவர்கள் வண்ணார் போன்றவர்கள். செம்பாரக்குடும்பன் மகள் சோணமுத்து. சம்ஸ்கிருதத்தில் சோண என்றால் செந்நிறம். வடமொழிப்பெயர்களையே போட்டிருக்கிறார்கள். வண்ணாரக்குடியில் பிறந்தாலும் மந்திரமூர்த்தியின் பெற்றோர் சங்கரன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். |
915 |
நோன்பு நோற்றிருக்கிறார்கள். தெய்வமே மகனாகப்பிறந்தது என நம்பியிருக்கிறார்கள். மந்திரமூர்த்தியின் ஆளுமையில் உள்ள அதீதத்தன்மையே உண்மையில் அவனைச் சாமியாக்கியது. தன் சாதியின் எல்லைகளுக்குள் அவன் அடங்கவில்லை. தன் குலத்தொழிலைச் செய்யவில்லை. குடும்பத்தில் அடங்கவில்லை. சாதியின் எல்லைகளை மீறி காதலித்தான். |
916 |
அவனுடைய மந்திரத்திறன்கள் எல்லாம் பின்னாளில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களால் சேர்க்கப்பட்டவை. அவன் சங்கரநயினாரின் அவதாரம் என்பதே கூட சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். மழுப்பப்படாத உண்மை, அவன் ஒரு கலகக்காரன் என்பது. சாமானியர்களை கட்டுபடுத்தும் தனிமனித நெறிகளையும் சமூக கட்டுப்பாடுகளையும் மீறிச்சென்றான் என்பது. |
917 |
மனிதன் தெய்வமாகலாமா? ஆகலாம். அவனில் எழும் அந்த மீறலுக்கான துடிப்பை தெய்வீகமானது என எண்ணுவோம் என்றால் அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உயிரின் மூலவிசை மகாபாரதத்தில் தீர்க்கதமஸ் என்னும் முனிவரைப் பற்றிய கதை வருகிறது. இது மகாபாரதத்திற்கும் முன்னால் வேதகாலத்திலிருந்தே இருந்துவரும் கதை. |
918 |
இன்றைய பார்வையில் கொஞ்சம் ஆபாசமான கதை இது. பிரம்மனின் மைந்தராகிய அங்கிரஸுக்கு உதத்யன், பிரகஸ்பதி என்று இரு பிள்ளைகள் பிறந்தனர். இருவருமே பல்லாயிரம் பிள்ளைகளையும் ஞானங்களையும் உருவாக்கிய பிரஜாபதிகள். பிறப்பிப்பவர் என்று இச்சொல்லுக்குப் பொருள் உதத்யனின் மனைவியான மமதை கருவுற்றாள். |
919 |
மமதை அதை தடுத்தாள். தன் கருவில் உருவாகியிருக்கும் மைந்தன் வேதவேதாந்தங்களை கருவிலேயே அறிந்துகொண்டு மேதையாக ஆகிவிட்டிருக்கிறான் என்றும் அவனை அழிக்கவேண்டாம் என்றும் கைகூப்பி வேண்டினாள். ஆனால் காமத்தில் மதிமறந்திருந்த பிரகஸ்பதி அதை பொருட்படுத்தவில்லை. அவர் உடல் அவர் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. |
920 |
அவர் அவளிடம் வலுக்கட்டாயமாக உறவுகொண்டார். அவள் கருவிலிருந்த அந்தக்குழந்தை சிறிய தந்தையே, இது பாவம். நான் உருவாகி வெளிவரச் சித்தமாக இருக்கிறேன். உங்கள் விந்து இங்கே வந்தால் நான் இறக்கவேண்டும். இத்தகைய காமம் குருட்டுத்தனமானது. இழிவை அளிப்பது என்றது. அதை பிரஹஸ்பதி பொருட்படுத்தவில்லை. |
921 |
அவ்வாறு பிறந்த குழந்தைக்கு தீர்க்கதமஸ் என்று பெயரிட்டனர். முடிவிலா இருள் என்று அதற்குப்பொருள். தீர்க்கதமஸ் வேதத்தில் முழுமையான ஞானம் கொண்டவராக இருந்தார். கூடவே அளவில்லாத காமமும் கொண்டிருந்தார். பிரத்வேஷி என்னும் பெண்ணை அவர் மணந்துகொண்டார். அவளில் கௌதமர் முதலிய நூறு மைந்தர்கள் பிறந்தனர். |
922 |
அவர்களனைவருமே ஞானம் கனிந்த முனிவர்களாக ஆயினர். விழியிழந்த தீர்க்கதமஸ் அடங்கமுடியாத காமம் கொண்டிருந்தார். வேதம் ஓதுவதற்கு மேலதிகமாக உண்பதும், புணர்வதும் மட்டுமே அவர் வேலை. அவர் ஒளிவழியாக உறவுகொள்ளும் வித்தையை கற்று பல தேவகன்னிகைகளை அவர்கள் அறியாமலேயே புணர்ந்தார். அவர்கள் அவரை சாபமிட்டனர். |
923 |
அந்த கூடை கங்கையில் மிதந்து செல்வதைக்கண்ட பலி என்னும் மன்னர் அதை தன் ஏவலரை அனுப்பி இழுத்துக் கரைக்குக் கொண்டுவந்தார். அவர் ஒரு பிரஜாபதி என்று நிமித்திகர் வழியாக அரசர் அறிந்தார். வேதமறிந்த ஞானியான அவரிடமிருந்து தன் குடிக்கு மைந்தர்கள் பிறக்கவேண்டும் என அவர் விரும்பினார். |
924 |
அது அவரது மைந்தர்களுக்கு மற்ற குடிகளுக்கு மேல் அதிகாரத்தை உருவாக்கும் என அவர் எண்ணினார். அது அன்றிருந்த ஒரு சடங்கு. அரசர் தன் மனைவி சுதேஷ்ணையை அவரிடம் இரவு சென்று தங்கும்படி ஆணையிட்டார். ஆனால் வெறுப்பு உருவாக்கும் தோற்றம் கொண்ட விழியிழந்த முனிவரை சுதேஷ்ணை விரும்பவில்லை. |
925 |
அந்தசேடியில் தீர்க்கதமஸுக்கு காக்ஷீவான் உட்பட பல மைந்தர் பிறந்தனர். அவர்களெல்லாம் வேத அறிஞர்களாக பின்னாளில் ஆனார்கள். சுதேஷ்ணை முனிவரிடம் செல்லவில்லை என்று அறிந்த பலி சினம் கொண்டார். மீண்டும் தன் மனைவியை முனிவரிடம் அனுப்பினார். அவரிடமிருந்து அவள் கருவுற்று ஐந்து மைந்தரைப் பெற்றாள். |
926 |
அங்கம், வங்கம், கலிங்கம், புண்டரம், சுங்கம் என்னும் நாடுகளை உருவாக்கிய முதல்அரசர்கள் சுதேஷ்ணையில் தீர்க்கதமஸின் மைந்தர்களாகப் பிறந்தவர்களே. இதைத்தவிரவும் தீர்க்கதமஸுக்கு உசிகை என்னும் மனைவியும் பல பாலுறவுத் தொடர்புகளும் இருந்தன. அவர் இறந்தபோது ஆயிரக்கணக்கான மைந்தர்கள் பெருகியிருந்தனர். |
927 |
அவர்கள் அவரை நீர்க்கடன் செய்து விண்ணுக்கு அனுப்பினர். அவர் விண்ணுலகு சென்று அங்கே காமத்தின் தெய்வமான இந்திரனின் சபையில் மகிழ்ந்திருக்கிறார். இந்தக் கதையை மகாபாரதம் எவ்வகையிலும் பெருமைப்படுத்திச் சொல்லவில்லை. இழிவுபடுத்தியும் சொல்லவில்லை. இது இப்படித்தான் என்று சொல்லிச் செல்வதே அதன் வழக்கம். |
928 |
ஆனால் இதை வாசிக்கையிலேயே நாம் ஒன்றைப்புரிந்துகொள்வோம். தீர்க்கதமஸைப் போன்ற தந்தையர் நம் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு. காமம், சுயநலம், ஆணவம் தவிர எந்த இயல்பும் இல்லாதவர்கள். எவரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள்.அவர்களை என்ன செய்வதென்றே நமக்குத் தெரிவதில்லை. அவர்களை வெறுக்க நினைப்போம். |
929 |
காரணம் அவர் நம் தந்தை, தாத்தா, முப்பாட்டா. அவர் வலிமையுடன் இருக்கும் காலம் வரை அவரை அனைவரும் ரகசியமாக வசைபாடுவார்கள். ஆனால் வயதாகி நோயுற்று வீழ்ந்தால் அந்த வெறுப்பு மறைந்துவிடும். இந்த நடைமுறை உண்மை வாழ்க்கையில் இருந்துகொண்டே இருப்பதனால்தான் இந்தக்கதையும் அழியாமல் இருந்துகொண்டே இருக்கிறது. |
930 |
ஆண்சிங்கம் வேட்டையாடுவது மிக மிக அபூர்வம். அது காமத்தில் ஈடுபடுவதைத் தவிர மிச்ச நேரமெல்லாம் தூங்கிக்கொண்டே தான் இருக்கும். மற்ற ஆண்கள் தன் பெண்களை அண்டாமல் பார்த்துக்கொள்ளும். ஏன், எந்த ஆண்நாய் குட்டிகளைப் பேணுகிறது? பெண்நாயை அது விரட்டி உறவு கொண்டுவிட்டு செல்கிறது, அவ்வளவுதான். |
931 |
அந்த விலங்கியல்புக்கு எதிராகவே நம் பண்பாடு உருவாகி வந்திருக்கிறது. பல்லாயிரமாண்டுகளாக அந்த விலங்கியல்பை நாம் நிராகரித்து கசந்து வெறுத்து வருகிறோம். ஆனால் அது இயற்கையின் அடிப்படை என்பதனாலேயே நம் நடைமுறைப் புத்தியைக் கடந்த ஒரு புனிதம் அதற்குண்டு. தீர்க்கதமஸ் ஒரு பிரஜாபதி என்கின்றன நூல்கள். |
932 |
அவர் அத்தனை பிள்ளைகளை பிறப்பித்தார். ஒரு பாலைவனத்தில் ஒரே விதை மட்டும் சென்று விழுகிறது, அது முளைத்து அங்கே படிப்படியாக ஒரு காடு உருவாக வேண்டுமென்றால் அது எத்தனை வீரியமானதாக இருக்கவேண்டும்? அந்த வீரியம் அவரிடமிருக்கிறது. அதுவே அவரை பிரஜாபதியாக ஆக்குகிறது. அதை குருட்டுக்காமம் என்று சொல்கிறது வேதம். |
933 |
ஆகவேதான் அவர் விழியிழந்தவராக காட்டப்படுகிறார். கண்மண் தெரியாத காமம் அது. அது என்ன செய்தாலும் அதெல்லாம் இயற்கையின் விருப்பமே. நம்முடைய குலதெய்வங்களையும் நாட்டுப்புறத் தெய்வங்களையும் பற்றி இன்றைய தலைமுறையினரிடம் சொல்லும் போது அவர்கள் தீர்க்கதமஸ் கதையை கேட்டு நாம் அடையும் இதே ஒவ்வாமையை அடைகிறார்கள். |
934 |
எதுக்காக இந்தச்சாமியைக் கும்பிடுகிறோம் என்கிறார்கள். நாட்டுப்புறக்கதைகள் அனைத்திலும் புராணக்கதையின் அந்த அமைப்பு உண்டு என்பதைக் காணலாம். நாட்டுப்புறக் கதைநாயகர்கள் சாதாரணமாகப் பிறப்பதில்லை. வேண்டி தவமிருந்தே பிறக்கிறார்கள். சாதாரணமானவர்கள் செய்யமுடியாதவற்றைச் செய்கிறார்கள். |
935 |
சமீபத்தில் ஒரு கோயில் திருவிழாவில் மாயாண்டிச்சாமி கதையை ஒரு வில்லுப்பாட்டுக்காரி பாடிக்கொண்டிருந்தாள். பாட்டைக் கேட்டுக்கொண்டு நான் ஒரு அந்திநடை சென்றேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் அந்த வில்லுப்பாட்டை கிராமம் முழுக்க நடந்தபடி கேட்டேன். சட்டென்று ஒரு பெரிய வியப்பு ஏற்பட்டது. |
936 |
இளமையிலேயே மாயாண்டி எப்படி இறப்பார் என அருள்வாக்கு வந்துவிடுகிறது. அவர் எவருக்கும் அடங்காதவராக வளர்கிறார். தனக்கு முதல்மரியாதை தராத பூசாரியின் தாம்பாளத்தை எட்டி உதைக்கிறார். தன்னை பிடிக்கவந்த அரசரின் படைகளை ஒளிந்திருந்து அடித்து துரத்துகிறார். விரும்பிய பெண்களை தூக்கிக் கொண்டுவந்து அனுபவிக்கிறார். |
937 |
மக்கள் அஞ்சி அவரை வழிபடுகிறார்கள். மாயாண்டிச்சாமி பிறந்த நாள் முதல் கொல்லப்படுவதுவரை செய்தவை அனைத்துமே காமத்தாலும் ஆணவத்தாலும் சுயநலத்தாலும் செய்யப்பட்ட வீரசாகசங்கள்தான். அதன் விளைவாக அவர் கொல்லப்பட்டபோது தெய்வமானார். சந்தன வீரப்பனை அவரது சாதியினர் தெய்வமாக வழிபடுவதன் பண்பாட்டுக்கூறு இதுவே. |
938 |
இந்த மனிதனில் செயல்படும் அந்த முதன்மையான ஆற்றல் என்ன என்றே பார்க்கவேண்டும். சிங்கத்தில், எருதில், நாயில் எல்லாம் செயல்படும் ஆற்றல்தான் அது. அதை திருஷ்ணை என்று நம் மரபு சொல்லும். வாழ்வதற்கும், வெல்வதற்கும், வாரிசை உருவாக்குவதற்கும் தேவையான ஆற்றல் அது. அதை தமிழில் காமம் என்று சொல்லலாம். |
939 |
அதன் பிறகு புலிவால் பிடித்த மாடப்பன் என்றே அவன் ஊரில் புகழ் பெற்றான். அவனது மனைவி கருமறத்தி. எட்டுபேரை ஒற்றையாக நின்று அடித்து வீழ்த்தும் உடல்வலுவும் தைரியமும் கொண்டவள். அவளுக்கு வயது வந்தபோது அவளுக்குரிய ஆண்மகன் யாரென்று அவள் அப்பா தேடிக்கொண்டிருந்த போதுதான் மாடப்பன் பற்றி தகவல் கிடைத்தது. |
940 |
மாடப்பன் ஒரு சந்தையில் பன்னிரண்டு பேரை தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவதைக் கண்டு கருமறத்தியின் தந்தை மகிழ்ச்சி அடைந்தார். அவனிடம் சென்று தன் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். உன் மகள் என்னிடம் ஒருநாழிகை நேரம் ஒற்றைக்கு ஒற்றை சண்டையிட்டாள் என்றால் அவளை மணந்து கொள்கிறேன் என்றான் மாடப்பன். |
941 |
தந்தை ஒத்துக்கொண்டார். தன் நண்பர்களுடன் கருமறத்தியின் ஊருக்குச் சென்றான் மாடப்பன். அங்கே கோயில் கற்சிலை போல வந்து நின்ற கருமறத்தியைக் கண்டு வியப்படைந்தான். இருவரும் கச்சை கட்டிக் கொண்டு மற்போர் புரிந்தனர். மூன்று நாழிகை நேரம் ஆகியும் மாடப்பனால் கருமறத்தியை வெல்ல முடியவில்லை. |
942 |
வடக்கே கோவில்பட்டி வரையிலும் கிழக்கே திருச்செந்தூர் வரையிலும் மேற்கே கொல்லம் வரையிலும் சென்று திருட்டு தொழில் செய்து பணம் ஈட்டிக் கொண்டு வந்தான். அச்செல்வத்தைக் கொண்டு மணிக்காஞ்சியில் ஒரு அழகிய வீட்டைக் கட்டி மாடு கன்றுகளுடன் கருமறத்தி வாழ்ந்தாள். ஆனால் அவர்களுக்கு பிள்ளை இல்லை. |
943 |
அவளுக்கு குழந்தையே பிறக்கவில்லை. திருடப்போன இடத்தில் நீ கர்ப்பிணிப் பெண்ணையோ, பசுவையோ, பார்ப்பனனையோ கொன்றிருப்பாய் என்று கருமறத்தி மாடப்பனை கண்டித்தாள். மாடப்பன் குலதெய்வமாகிய நீலராசனின் கோயில் முன்னால் மும்முறை கையறைந்து சத்தியம் செய்து அந்தப் பிழைகளை தான் செய்யவில்லை என்று சொன்னான். |
944 |
குறத்தியை வணங்கி மூன்று முறை நிறைநாழி நெல்லளித்து நற்குறி சொல்லும்படி கருமறத்தி கேட்டாள். தன் கைக்கோலால் அவள் தலையைத் தொட்டு வாழ்த்திய குறத்தி உன் முகம் சொல்கிறது. நீ ஆண்மகனை பெறுவாய். அவன் தன் இருபது வயதில் இறப்பான் என்றாள். அதைக் கேட்டதும் கருமறத்தி கண்ணீருடன் கைகூப்பினாள். |
945 |
பெண்ணே, அவன் விதியை யாரும் மாற்ற முடியாது. ஆனால் அவன் தெய்வமாவான் என்று லக்ஷ்மிப்பிராட்டி அருளினாள். குறத்தியின் நற்செய்தி கேட்டு அவளை வாழ்த்தி மீண்டும் மூன்று முறை நாழியால் நெல் அளந்து கொடுத்து கருமறத்தி ஊருக்குத் திரும்பி வந்தாள். தன் கணவனிடம் தான் கேட்ட நற்குறியைச் சொன்னாள். |
946 |
ஆறாவது மாதத்தில் அவள் கருவுற்றாள். குலதெய்வம் நீலராசன் கோயிலிலும், திருச்செந்தூர் முருகன் கோயிலிலும், நெல்லையப்பர் காந்திமதி கோயிலிலும் நன்றிக் கடன்களைச் செலுத்தி பக்தியுடன் நோன்பிருந்து தன் வயிறு வளர்வதைக் கவனித்தாள். வலப்பக்கமாக வயிறு சரிந்தபோது உள்ளே இருப்பது ஆண்குழந்தை என்று தெரிந்தது. |
947 |
ஆனால் ஆண் குழந்தை இருப்பதற்கான எடை வயிற்றில் தெரியவில்லை. ஒன்பது மாதமாகியும் குழந்தை கனக்காததால் மருத்துவரிடம் காட்டி வயிற்றில் குழந்தை உயிருடன் இருக்கிறதா? என்று கேட்டாள். அவர் குழந்தை உயிருடன் தான் இருக்கிறது. ஆனால் மிகச்சிறிய அளவில் இருக்கிறது என்றார். கருமறத்திக்கு பெரிய ஏமாற்றம். |
948 |
மாவீரனாக குழந்தை பிறக்கும் என்று நினைத்திருந்தாள். தந்தையும் தாயும் போர் புகழ் பெற்ற வீரர்களாக இருந்தும் மகன் மட்டும் ஏன் இப்படி பிறக்க வேண்டும் என்று எண்ணி எண்ணி ஏங்கினாள். பத்தாவது மாதம் குழந்தை பிறந்தது. அது பல்லிக்குஞ்சு போலிருந்தது. கரிய நிறமும், சிறிய புழு போன்ற கை, கால்களும் கொண்டிருந்தது. |
949 |
இந்தக் குழந்தை பிழைக்காதென்று மருத்துவச்சி சொன்னாள். முலை கவ்வி பால் குடிக்கவும் அதனால் முடியவில்லை. அது அழும் ஓசையை காது கொடுத்துதான் கேட்க முடிந்தது. நான் நோன்பிருந்து பெற்ற பிள்ளை. இவனைச் சாகவிடமாட்டேன் என்று கருமறத்தி சொன்னாள். குழந்தையை எடுத்து தன் முலைகளுக்கு நடுவே வைத்து அழுத்திக் கொண்டாள். |
950 |
தானாகவே பாலைப் பிழிந்து குழந்தையின் வாயில் விட்டு அதைக் குடிக்க வைத்தாள். குரங்கு தன் குட்டியை வைத்திருப்பது போல எப்போதும் குழந்தையை கையிலேயே வைத்திருந்தாள். அவள் உடல் சூடு கொண்டு குழந்தை மெதுவாக உயிர் கொண்டது. ஏழு வயது வரைக்கும் அந்தக் குழந்தை அம்மாவின் இடுப்பிலேயே இருந்து வளர்ந்தது. |
951 |
இவனுக்கு யானைப்பால் கொடு. அப்போது தான் இவன் எழுந்து நடப்பான் என்று கேலி பேசினார்கள். என் மகன் தெய்வமாவான். குறத்தி அருள்வாக்கு இருக்கிறது என்று கருமறத்தி பதில் சொன்னாள். அவனுக்குத் தன் கையாலேயே உணவை சமைத்து ஊட்டினாள். அவனைக் குளிப்பாட்டி தன் அருகே படுக்க வைத்து தூங்கவைத்தாள். |
952 |
ஊர்ப்பெண்களுக்கு அவன் ஒரு கேலிப்பொருளாக இருந்தான். அவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு என்னைக் கட்டிக் கொள்கிறாயா? எட்டு பிள்ளை பெற்றுக் கொடுப்பேன் என்று கேலிபேசுவார்கள். அவன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு உடலைக் குறுக்கி அமர்ந்திருப்பான். கைகால்கள் நடுங்கிக் கொண்டிருக்கும். |
953 |
ஒரு நாள் மாடப்பன் காதுபட ஊற்றுமலை ஜமீந்தார் காட்டில் வேட்டைக்குச் சென்ற போது அவருடைய வேட்டை நாய் ஓர் இடத்தை காலால் தோண்டிப் பறித்ததாகவும் அங்கிருந்து நிறைய பொன் அவருக்கு கிடைத்ததாகவும் செய்தி வந்துள்ளது என்றான் ஒருவன். அதைக் கேட்டு மாடப்பன் நடுங்குவதை அவன் கவனித்தான். ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை. |
954 |
இருட்டுக்குள் நடந்து ஊற்றுமலைக்குச் சென்ற மாடப்பன் அங்கிருந்த மலைக்காட்டில் புகுந்து ஒரு வன்னி மரத்தை அணுகி அதன் அடியில் தான் புதைத்திருந்த செல்வத்தை தோண்டி எடுத்து எண்ணி சரிபார்த்தான். அதை அவன் திரும்ப புதைப்பதற்குள் அவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்ட ஆரம்பித்தார்கள். |
955 |
அதற்குள் அவனை வெட்டி வீழ்த்தி தலையை துண்டாக்கி அந்த பொன் நாணயங்களைத் திருடிக்கொண்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள். மாடப்பன் இறந்த பிறகு கருமறத்தி தனியாக இருப்பதை அறிந்த மாடப்பனின் பங்காளிகள் அவன் சொத்தில் பங்கு கேட்டு பூசலிட்டார்கள். கருமறத்தியை பஞ்சாயத்துக்கு அழைத்தார்கள். |
956 |
பொய்க்கணக்குகளும் ஆதாரங்களும் காட்டி மாடப்பன் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டார்கள். மாடத்தி கொஞ்சம் கொஞ்சமாக வறுமை வாய்ப்பட்டாள். அவள் ஊரில் வேலைக்கெல்லாம் செல்ல முடியாது. போர்த்தொழில் செய்யும் மறவர்கள் விவசாயமோ பிற தொழில்களோ செய்வதில்லை. ஆனால் மகனை வளர்த்தாக வேண்டும். |
957 |
உன் மகன் எழுந்து நடக்கவே ஆற்றலற்றவனாக இருக்கிறான். இவனுக்கு எப்படிக் குலத்தொழில் சொல்லிக் கொடுப்பது? என்று பொன்பாண்டி சொன்னான். இல்லை, அவன் தெய்வமாவான் என்று குறி சொல்லப்பட்டிருக்கிறது. திருட்டுக்கு வந்தால் அவனுக்கு வீரம் வரும். அவனை அழைத்துச் செல்லுங்கள் என்று அவள் காலில் விழுந்து கேட்டுக்கொண்டாள். |
958 |
குலதெய்வமாகிய நீலராசனை வணங்கி காணிக்கை வைத்து கிளம்பினார்கள். வன்னியடி மறவன் பார்ப்பதற்கு திருடன் போன்ற தோற்றம் இல்லாதவனாக இருந்ததனால் அவனை கன்னி செட்டியிடம் களவுத்தூதாக அனுப்பினார்கள். வன்னியடிமறவன் ஒரு தேசாந்திரி வேஷம் போட்டு கன்னிச் செட்டியின் வீட்டுக்கு காலைவேளையில் சென்றான். |
959 |
தலையை மொட்டையடித்து,காதை வடித்து நீட்டி, அதில் தோடுகள் அணிந்து, வெண்ணிற வேட்டியும் மேலாடையும் போட்டுக் கொண்டு, பெரிய தொந்தியும் எடை மிக்க உடலுமாக கன்னிசெட்டி அமர்ந்திருந்தான். வன்னியடிமறவன் சென்று வணங்கி ஐயா, நான் அன்னிய நாட்டைச் சேர்ந்தவன். எனக்கு இந்த ஊரில் யாரையும் தெரியாது. |
960 |
எனக்கு இன்று தங்கவும், உண்ணவும் இடம் கொடுங்கள் என்று கேட்டான். இங்கு தங்குவதற்கு நாங்கள் இடம்கொடுப்பதில்லை. கோயில் சாவடிக்கு செல். அங்கே நீ தங்கிக் கொள்ளலாம். உன்னுடைய சாப்பாட்டையும், வழிச்செலவு பணத்தையும் நான் என் வேலைக்காரனிடம்கொடுத்து அனுப்புகிறேன் என்று கன்னிச் செட்டி சொன்னான். |
961 |
என்று கேட்டான். அது களவுத்தூது என செட்டி புரிந்துகொண்டான். நான் திருட வந்தவன். இரவு உங்கள் வீட்டில் கன்னம் வைப்பதை நீ விரும்பவில்லை என்றால் ஈட்டுத் தொகையாக கேட்கும் பணத்தை கொடுத்து அனுப்பவேண்டும் என்பது அதன் பொருள். வடக்கு சூரங்குடி மறவருக்குரிய குறியீட்டு வார்த்தை அது. |
962 |
அடிபட்டு சுருண்டு விழுந்து உடல் இழுத்துக் கொள்ள அங்கேயே வன்னியடிமறவன் மயக்கமானான். வன்னியடிமறவனை இழுத்துக் கொண்டு வந்து ஊருக்கு வெளியே போட்டுவிட்டு தன் வீட்டை பூட்டிக் கொண்டு மற்ற செட்டியார்கள் அனைவரிடமும் வடக்கு சூரங்குடி மறவனை ஒரே அடியில் வீழ்த்தியதைப்பற்றி பெருமையடித்துக் கொண்டான் கன்னி செட்டி. |
963 |
வன்னியடிமறவனின் அம்மா கருமறத்தி வயிற்றிலும் நெஞ்சிலும் அறைந்தபடி ஓடி வந்து தலையற்றுக் கிடக்கும் தன் மைந்தனின் உடலை எடுத்து நெஞ்சோடு அணைத்தபடி கதறி அழுதாள். நெஞ்சடைத்து மகன் மேலேயே விழுந்து உயிர் துறந்தாள். ஊருக்கு வெளியே தெற்கு பொட்டலில் அவர்கள் இருவரையும் சேர்த்தே புதைத்தார்கள். |
964 |
மறுவாரமே வடக்குச் சூரங்குடி கூட்டம் பொன்பாண்டித்தேவன் தலைமையில் சென்று கன்னி செட்டியின் வீட்டை கொல்லைப்பக்கத்தில் கன்னம் வைத்து உள்ளே நுழைந்து இரும்பு பெட்டியை உடைத்து மொத்தப்பொன்னையும், பணத்தையும் அள்ளி வந்தது. அந்த செல்வத்தை ஊர்க் கப்பமாக கட்டி அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொண்டார்கள். |
965 |
கள்ளும் கிடா விருந்தும் அருந்தி இரவெல்லாம் நடனமிட்டார்கள். அப்போது அங்கிருந்த பத்துவயதுச் சிறுவன் ஒருவனுக்கு சன்னதம் வந்தது. அவன் தன்னைவிட இருமடங்கு பெரிய கிடா ஒன்றை இரு கைகளாலும் தூக்கி தலைக்கு மேல் சுழற்றி நூறடி தொலைவுக்கு வீசினான். கரகரத்த ஆண்மைக்குரலில் நான் வன்னியடி மறவன் வந்திருக்கிறேன். |
966 |
அதன் பின்னரே வன்னியடி மறவன் அந்தச் சிறுவனின் உடலிலிருந்து மலையேறினான். மறு ஆடி மாசம் அமாவாசைக்கு வன்னியடி மறவனை புதைத்த இடத்தில் காரைக் கோவில் ஒன்று கட்டி அதில் அவனை வாள்ஏந்திய கோலத்தில் சிலையாக வைத்து தெய்வமாக்கினார்கள். அவன் அன்னை காலடியில் சிறிய உருண்டைக் கல்லாக பதிட்டை செய்யப்பட்டாள். |
967 |
அப்போது அருகிலிருந்த இன்னொரு தமிழ்ப்பேராசிரியர், வள்ளுவர் தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்றார் மண்ணில் வாழ்கையில் அரிய செயல்களைச் செய்தவர்கள், மாவீரர்கள், பெருந்தியாகங்களை ஆற்றியவர்கள், சான்றோர்கள் தெய்வமாகிறார்கள். |
968 |
அ.காபெருமாள் வன்னியடி மறவன் கதையைச் சொன்னார். சிரித்தபடி ஒரு நாட்டார் தெய்வத்திற்குரிய எந்தச் சிறப்பும் வன்னியடி மறவனுக்கு இல்லை. மக்கள் அவனை தெய்வமாக்கியது அவன் மீது கொண்ட பயத்தாலோ, வியப்பாலோ, நன்றியுணர்ச்சியாலோ அல்ல. வெறும் இரக்கத்தால் என்றார். இரக்கமும் ஒரு உயர்ந்த உணர்வு தானே. |
969 |
அறத்தால் வீழ்தல் குமரிமாவட்டத்தில் பறவைக்கரசனூர் என்னும் ஊர் உள்ளது. கருடனின் கோயில் இங்குள்ளது. இன்று இது பறக்கை என அழைக்கப்படுகிறது. பறக்கை அருகே பள்ளத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த ஐந்துமுடி நாடார்கள் என்னும் குடியில் சிதம்பர நாடார் என்பவரின் மகனாகப்பிறந்தவர் செல்லையா நாடார். |
970 |
தன் ஏழு தோழிகளையும் அழைத்துக்கொண்டு நாடாச்சியம்மாள் இருக்கன்துறை அய்யன் கோயிலுக்குச் சென்று மைந்தன்பிறந்தால் யானை அளிப்பதாக வேண்டிக்கொண்டாள். அதன்பின் கன்யாகுமரி பகவதி கோயில் முதல் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் வரை பதினெட்டு கோயில்களில் அவள் மகன் பிறக்க வேண்டிக்கொண்டாள். |
971 |
தேர் உடைந்து கிடக்கிறது. நீ அதை எல்லாம் சரிசெய்து பூசை செய்தால் உனக்குப் பிள்ளை பிறக்கும் என்று வரம் கொடுத்தாள். செல்லையா நாடார் அந்தக்கனவைக் கேட்டதுமே அது உண்மை என்று புரிந்துகொண்டார். அவரும் அவரது குடும்பமும் அவர்கள் பிறந்த பொட்டல் ஊரை விட்டுவிட்டு பள்ளத்தூருக்கு வந்து வியாபாரம் செய்துவந்தனர். |
972 |
அவர் பணம்செலவுசெய்து அக்கோயிலை புதியதாக எடுத்துக்கட்டினார். அந்தப்பணி முடிந்தபோது நாடாச்சியம்மாள் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு அழகிய குழந்தை வந்து அவளுக்கு ஒரு மலரை கொடுத்தது. தெய்வ அம்சம் உள்ள குழந்தை பிறக்கும் என்று அந்தக்கனவின் பலனை ஆராய்ந்தவர்கள் சொன்னார்கள். நாடாச்சியம்மாளுக்கு கரு அமைந்தது. |
973 |
அவள் வயிறு சினை எருமையின் வயிற்றைவிட பெரியதாக வளர்ந்தது. பதினாறு மாதமாகியும் குழந்தை பிறக்கவில்லை. செம்பொன்கரையில் உள்ள காலகன்னி என்ற மருத்துவச்சியை அழைத்து வருமாறு செல்லையா நாடார் ஒட்டனை அனுப்பினார. பதினாறு மாத கர்ப்பமென்றால் அது அசுரலட்சணம். நான் வரமாட்டேன் என்று காலகன்னி சொன்னாள். |
974 |
ஒட்டன் மருத்துவச்சிக்கு நிறைய பொன் தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து வந்தான். காலகன்னி மகப்பேறு பார்த்தாள். நாடாச்சியம்மைக்கு அவள் கனவில் கண்ட ஆண்குழந்தை அப்படியே வந்து பிறந்தது. அதற்கு சிதம்பர நாடார் என்று பெயரிட்டனர். சிதம்பரத்திற்கு ஏழு வயதானதும் திண்ணைப் பள்ளியில் சேர்த்தனர். |
975 |
ஏழு வாரங்களில் அவன் மொழியைக் கற்றான். எழுபது வாரங்களில் ஆறு சாஸ்திரங்களையும் கற்று முடித்தான். யானையேற்றமும், குதிரையேற்றமும், வாள்சண்டையும், வேல்சண்டையும் அவனுக்கு கற்பித்தவர்கள் அவர்கள் சொல்வதற்குள் அவன் கற்றதைக் கண்டனர். சிதம்பர நாடாரை தெய்வாம்சம் கொண்டவன் என்று ஊரில் பேசினார்கள். |
976 |
அன்று வள்ளியூர் வரைக்கும் திருவிதாங்கூர் அரசர் ஆட்சியில் இருந்தது. சிதம்பரநாடாரின் வீரத்தை அறிந்த அரசர் அவருக்கு பறக்கை வரை உள்ள பகுதிகளில் காவல்பொறுப்பை அளித்தார். சிதம்பர நாடார் ஒவ்வொரு நாளும் குதிரை மேல் ஏறி புங்கடி மடம் வரை சென்று எங்கும் எந்த குற்றமும் நிகழாமல் பார்த்துக்கொண்டார். |
977 |
அவருக்கு இருபத்தெட்டு வயதானபோது அவர் அப்பகுதியின் அரசன் என்றே அறியப்படலானார். ஒருநாள் பறக்கை அக்ரஹாரத்தில் பாப்பாத்தி என்னும் பெயர்கொண்ட ஒரு பிராமணப்பெண் நாகப்பாம்பு கடித்து இறந்து போனாள். அவள் பதினெட்டு வயதான கன்னி என்பதனால் அவள் உறவினர் அவளை அன்றே சுடுகாட்டுக்குக் கொண்டு வந்து சிதையில் ஏற்றினர். |
978 |
அவருக்கு மந்திரவித்தை தெரியும். அவருக்கு சுடுகாட்டில் பூசைசெய்து மையிடும் வழக்கம் இருந்தது. சிதையிலிருந்த பாப்பாத்தி மிக அழகாக இருந்தாள். அவள் பெற்றோர் கதறி அழுதபடியே செல்வதைக் கண்ட சிதம்பர நாடார் மனமிரங்கினார். அவளைக் கடித்த பாம்பை வரவழைத்து அவள் உடலில் உள்ள விஷத்தை உறிஞ்சச் செய்தார். |
979 |
நீங்கள் யார்? என்றாள். நடந்ததைச் சொன்ன சிதம்பர நாடார் நீ உன் பெற்றோரிடம் செல் என்று சொல்லி அனுப்பினார். அவள் அவரை வணங்கி அக்ரஹாரத்துக்குச் சென்றாள். ஆனால் அவள் இறுதிச்சடங்குகள் செய்து சுடுகாட்டுக்கு அனுப்பப்பட்டவள் என்பதனால் செத்தவள் என்றே கொள்ளவேண்டும் என்று பிராமணப் பெரியவர்கள் சொன்னார்கள். |
980 |
இனி நீரே என்னை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றாள். சரி, நீ என்னுடன் வா என்று அவர் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது தாய் பாப்பாத்தியை அன்போடு வரவேற்றாள். அழகான மருமகள் அமைந்ததைக் கண்டு அவள் பெருமைகொண்டாள். பாப்பாத்தியும் சிதம்பர நாடாரும் கணவன் மனைவியாக வாழ்ந்தனர். |
981 |
ஏழுமாதம் ஆனபோனது பாப்பாத்தி என் அம்மாவைப் பார்க்க ஆசையாக உள்ளது. என்னை அழைத்துச்செல்லுங்கள் என்றாள். சிதம்பர நாடார் அவளை அழைத்துக்கொண்டு பறக்கைக்கு வந்தார். கூடவே அவரது உதவியாளனாகிய சிறுவன் ஒருவனும் சென்றான். மூன்று பேரும் பறக்கை பிராமணத் தெரு வழியாக குதிரையில் சென்றனர். |
982 |
ஆனால் அவள் அன்னை மகளை வந்து கட்டிப்பிடித்தாள். இருவரும் கண்ணீர்விட்டு அழுதனர். பிராமணப் பெண்ணின் பெற்றோர்களின் விருப்பப்படி அன்று இரவு அக்ரஹாரத்தில் தங்கினர். நாடார் ஒருவர் குதிரையிலே அக்ரஹாரம் வழியாகச் சென்ற செய்தி பிராமணர் தெருக்களில் பரவியது. பறக்கை ஊரின் வேளாளர்களும் அதைஅறிந்தனர். |
983 |
அவரைக் கொல்லக்கூடாது என ஆணையிட்டார். பறக்கைக்காரர்களுக்கு சிதம்பரநாடாரைக் கொல்ல அனுமதி இல்லை என்று ஆணையிட்டார். இரண்டு ஓலைகளுடன் இரு தூதர்களும் ஒன்றாகவே திரும்பினர். இருவரும் வில்லுக்குறி ஊரின் அருகே உள்ள தோட்டியம்பலத்தில் ஓய்வெடுத்தனர். சிதம்பரநாடாரின் தூதர் அயர்ந்து உறங்கினான். |
984 |
பறக்கை பிராமண தூதன் உறங்காமல் இருந்தான். அவன் முன்னதாகவே புறப்பட்டு பறக்கைக்கு வந்துவிட்டான். பறக்கை பிராமணர்களும், வேளாளர்களும் சிதம்பர நாடாரைப் பிடித்து கயிற்றால் கட்டி சாவடியில் வைத்திருந்தனர். மன்னரின் ஆணை வரும் என அறிந்த சிதம்பர நாடார் அவர்கள் தன்னைப் பிடிக்கவும் கட்டவும் ஒப்புக்கொண்டார். |
985 |
அவர்கள் அவரை ஊரின் தெற்குப் பகுதியில் இருந்த புங்கடிக்குக் கொண்டு வந்தனர். அப்போது பிராமணரின் தூதுவன் குதிரையில் வந்தான். பண்டாரவிளை அருகே அவன் வந்தபோது ஏரியின் மறுகரையில் புங்கடியில் இருந்தவர்கள் ஆணை என்ன? என்று கேட்டனர். அவன் நாடாரைக் கொல்லவேண்டாம் எனக்கூறி கையைக் காட்டினான். |
986 |
பிராமணர்களில் ஒருசிலர் கொல்லும்படி ஆணை என்று அவன் கை காட்டுகிறான். கொல்லுங்கள் என்று சொன்னார்கள். கொலைகாரன் சிதம்பர நாடாரை வெட்டினான். சிதம்பர நாடார் இறந்ததைக் கேள்விப்பட்ட அவள் அன்னை, பாப்பாத்தி இருவரும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு உயிரை விட்டனர். இரு சாதியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். |
987 |
நாடாரின் ஆட்கள் பிந்தி வந்த சிதம்பரநாடாரின் தூதனைக் கொன்றார்கள். இறந்த மூன்று பேரும் சாந்தி அடையாமல் பறக்கை ஊரில் ஆவிகளாக நுழைந்தனர். தங்களை சதிசெய்து கொன்றவர்களை இருட்டில் சென்று முதுகில் அறைந்து கொன்றார்கள். ஊரில் ஏராளமான மரணங்கள் நடப்பதைக்கண்டு அதற்கான காரணத்தைத் தேடினர். |
988 |
தங்கள் தவறை உணர்ந்த பிராமணர்களும், வேளாளர்களும் பறக்கை புங்கடியில் சிதம்பரநாடாருக்கு கோவில் கட்டினார்கள். வருடம் தோறும் அவருக்கு உயிர்பலி கொடுத்து ஆறுதல்படுத்தினர். காலப்போக்கில் சிதம்பரநாடார் அவர்களுக்கு நன்மை தரும் தெய்வமாக ஆனார். அவர்களின் குலதெய்வமாக மாறி அருள்புரியலானார். |
989 |
பறக்கையில் இன்று சிதம்பரநாடாரின் ஆலயம் அனைத்துச் சாதிகளும் பூசை செய்யும் பெரிய கோயில். சிதம்பரநாடார் மாடனுக்கு வருடம் தோறும் பெரிய கொடைவிழாவும் நடைபெறுகிறது. இந்தக்கதையை இன்று கேட்கையில் இதில் கற்பனை மிகச்சிறிய அளவிலேயே உள்ளது என்று தோன்றுகிறது. பெரும்பாலும் உண்மைக்கதை இது. |
990 |
இதிலுள்ளது அக்காலத்தைய சாதி முறையின் நெருக்கடி. ஆனால் வழக்கமாக நம் அரசியல்வாதிகள் சொல்வதுபோல சாதிய ஒடுக்குமுறை ஒன்றும் அல்ல. சிதம்பரநாடார் காவலதிகாரியாகத்தான் இருந்திருக்கிறார். அவரைக்கொல்ல அரசனையே ஏமாற்ற வேண்டியிருந்திருக்கிறது. அனைத்து வகையிலும் ஒரு சான்றோனாக இருந்திருக்கிறார் சிதம்பரநாடார். |
991 |
பல நாட்டுப்புறத் தெய்வங்கள் புராணக் கதாபாத்திரங்களை நினைவுறுத்துகிறார்கள். எனக்கு சிதம்பர நாடார் ஏனோ கர்ணனை நினைவூட்டினார். அனைத்து ஆற்றல்கள் இருந்தும் அவர் அமைதியாக மரணத்திற்குச் சென்ற அந்தக் காட்சிதான் காரணமாக இருக்குமோ? அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் என்று எண்ணிக்கொண்டேன். |
992 |
உலகவரலாற்றின் மிகப்பெரிய பஞ்சங்களில் ஒன்று அது. இந்தியாவின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒருபங்கினர் பட்டினி கிடந்து செத்து அழிந்தனர். ஐந்தில் ஒருபங்கினர் அகதிகளாக மலேசியா, பர்மா. இலங்கை, ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் போன்ற அயல்நாடுகளுக்கு தங்களையே அடிமைகளாக விற்றுக்கொண்டு குடியேறினர். |
993 |
தென்னகத்தில் மட்டும் இரண்டுகோடிப்பேர் இறந்திருப்பார்கள் என கணக்கிடப்படுகிறது. சென்னையில் ஒருநாளுக்குச் சராசரியாக முப்பதாயிரம் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன. ஒரு மனிதன் தொடர்ச்சியாக இருபதுநாட்கள் எந்த உணவையும் உண்ணாமலிருந்தால்தான் உயிர்துறப்பான். நடுவே கைப்பிடி உணவு உண்டால் கூட ஆயுள் நீளும். |
994 |
சொல்லப்போனால் பெரிய அளவில் பதிவுகளே இல்லை. நாட்டுப்புறப்பாடல்களில் தான் செய்திகள் உள்ளன. அப்பஞ்சத்தை மிகச்சமீபகாலமாகத்தான் ஆங்கிலேய ஆவணங்களில் இருந்து தகவல்கள் திரட்டி வெள்ளைய ஆய்வாளர்களே எழுதியிருக்கிறார்கள். நான் அப்பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்டு வெள்ளையானை என்னும் நாவலை எழுதியிருக்கிறேன். |
995 |
ஏனென்றால் இது இரு பருவமழைகளை நம்பி இருக்கும் துணைக்கண்டம். ஆகவேதான் சோழர்களும் சரி, நாயக்கர்களும் சரி, மழைநீரைத் தேக்கிவைக்கும் மாபெரும் ஏரிகளை உருவாக்கினார்கள். அந்த ஏரிகளில் மிகப் பெரும்பாலானவை சுதந்திரத்திற்குப் பின் தூர்ந்துபோக விடப்பட்டுள்ளன என்பது நம் அறியாமைக்கும் பொறுப்பின்மைக்கும் சான்று. |
996 |
பன்னிரண்டு ஆண்டுக்காலம் அப்படி நெல் சேர்த்துவைக்கப்படும். அது பஞ்சம் தாங்குவதற்கான ஒரு ஏற்பாடு. தொடர்ந்து ஆறேழு ஆண்டுகள் மழையோ விளைச்சலோ இல்லை என்றாலும் எவரும் உணவில்லாது சாகமாட்டார்கள். வெள்ளைய அரசு அன்று உலகத்தைக் கைப்பற்ற போரிட்டுக் கொண்டிருந்தது. அதற்கு அளவில்லாத உணவு தேவைப்பட்டது. |
997 |
ஆகவே ரயில்பாதைகள் அமைத்து நெல்விளையும் இடங்களை துறைமுகங்களுடன் இணைத்தனர். விளைந்த நெல்லை முழுக்க திரட்டி வெளிநாட்டுக்குக் கொண்டுசென்றனர். சென்னை ராஜதானியில் மக்கள் லட்சக்கணக்கில் செத்துக்கொண்டிருந்தபோது விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்களில் இருந்து கப்பல் கப்பலாக நெல் ஏற்றுமதி செய்யப்பட்டது. |
998 |
ஆனால் அன்றைய சென்னை கவர்னர் பக்கிங்ஹாம் அதற்குச் செவிசாய்க்கவில்லை. இந்தப்பஞ்சத்தால் தமிழகத்தின் வறண்ட நிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் அன்றைய திருவிதாங்கூருக்குள் குடியேறினார்கள். இவர்களை மிகக்குறைந்த செலவில் கூலியாட்களாக அமர்த்தி வேலைசெய்ய வைக்கமுடிந்தது. கூலியே கிடையாது, உணவு மட்டும்தான். |
999 |
அதனாலும் செலவு கட்டுப்படியாகாமல் மூலம்திருநாள் மகாராஜா குமரிமாவட்டத்திலிருந்த ஏராளமான குளங்களை வயல்களாக ஏலம் போட்டு விற்றார். பேச்சிப்பாறை அணை குமரிமாவட்டத்தின் முகத்தையே மாற்றியமைத்தது. பருத்தி விளைந்திருந்த வறண்ட நிலமான தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டங்கள் தென்னந்தோப்புகளும், வயல்களும் ஆக மாறின. |
1000 |
அந்தச்சாதனையை நிகழ்த்தியவர் ஐரோப்பிய பொறியியலாளரான மிஞ்சின். மிஞ்சித்துரை என அழைக்கப்படும் அவரது சமாதி இன்றும் பேச்சிப்பாறை அணைப்பகுதியில் உள்ளது. குமரிமாவட்ட மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதுமுண்டு. என் இளவயதில் நான் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டதைப் பற்றிய ஏராளமான கதைகளைக் கேட்டிருக்கிறேன். |
1001 |
கோதையாற்றைத் தவிர கல்லாறு, சிற்றாறு, குட்டியாறு ஆகிய அணைகளும் அங்கேதான் இணைகின்றன. அந்த இடத்திற்கு கீழே மலை செங்குத்தாக இறங்குகிறது. அதற்குக்கீழே அணைகட்டமுடியாது, நிலம் விரிந்துவிடுகிறது. ஆனால் மலைவிளிம்பில் அணைகட்டினால் நீரின் அழுத்ததை அது தாங்காது என்று பிற பொறியாளர் சொன்னார்கள். |
1002 |
ஏனென்றால் குமரிமாவட்டம் வருடத்தில் மூன்று பெரிய மழைக்காலம் கொண்டது. அதிலும் பேச்சிப்பாறை பகுதியில் எப்போதுமே மழை இருக்கும். இங்குள்ள ஆறுகள் அனைத்துமே என்றும் வற்றாத ஜீவநதிகள். மழை மிகவும் பெய்து நான்கு ஆறுகளிலும் நீர்பெருகினால் அணை தாங்காது என எச்சரித்தார்கள் அப்பகுதியை அறிந்தவர்கள். |
1003 |
இந்தியாவில் மிக ஆழமான அஸ்திவாரம் தோண்டப்பட்ட அணைகளில் ஒன்று பேச்சிப்பாறை அணை. இந்நிகழ்வை நாட்டுப் புறக்கதையாக எங்களூரில் அடித்தளமக்கள் பாடுவார்கள். மிஞ்சினை செம்பன் துரை என்பார்கள். அவர் குதிரைமேல் ஏறி கையில் துப்பாக்கியுடன் பணிகளைப் பார்வையிட வருவாராம். அவர் உண்மையில் மனிதன் அல்ல, பூதம் என்பார்கள். |
1004 |
அவர் மனிதர்களின் இறைச்சியை சுட்டு கத்தியால் வெட்டித் தின்பார். முதன்முதலாக அவர் பேச்சி அன்னை ஆண்ட பேச்சிப்பாறைக் காட்டுக்குள் வந்தபோது பேச்சி அன்னை பேருருக்கொண்டு அவர் முன் தோன்றினாள். காதில் யானைகளைக் குண்டலமாகப் போட்டிருந்தாள். கழுத்தில் மலைப்பாம்புகளை வடமாக அணிந்திருந்தாள். |
1005 |
உன் மகளை அடையாமல் உயிருடன் திரும்ப மாட்டேன் பேச்சி அன்னை வெறிகொண்டு கூத்தாடினாள். இடியும் மழையுமாக அவரை அச்சுறுத்தினாள். செம்பன் துரை ஊரிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்களைக் காட்டுக்குள் கொண்டுவந்தார். மூன்றுவேளைக் கஞ்சியும் மாதம் மூன்றணாவும் என்பதுதான் அவர் அளித்த வாக்குறுதி. |
1006 |
அது மந்திரம்போலப் பரவி மக்கள் தேவைக்குமேல் வந்து குழுமிக்கொண்டே இருந்தார்கள். மழையிலும் குளிரிலும் மக்கள் செத்தார்கள். மலேரியாவில் கூட்டம் கூட்டமாக மறைந்தார்கள். ஆனால் நீர் அள்ள நீர் வந்து நிறைவது போல மக்கள் வந்து கொண்டிருந்தனர். பலமுறை அணை இடிந்துசரிந்தபோது செம்பன் துரை மனம் வருந்தினார். |
1007 |
உனக்கு என்ன வேண்டும்? சொல் தருகிறேன் என்றார் செம்பன் துரை. ஆயிரம் மனிதத்தலை வேண்டும் என்றாள் பேச்சி. ஆயிரமில்லை, ஐயாயிரம். எடுத்துக்கொள் என்று துரை வாக்களித்தார். மறுநாள் அந்த அணையின் கட்டுமானக்குழிக்குள் செம்புநாணயங்களை அவர் வாரி இறைத்தார். அதைக் கண்டதும் ஏழைமக்கள் கூட்டம்கூட்டமாக உள்ளே பாய்ந்தனர். |
1008 |
அந்நேரத்தில் மண்ணும் சேறுமாகப் பெருகிவந்த கோதை அவர்களை அள்ளி உண்டாள். அதோடு அவள் பசி அடங்கியது. கோதையை அடக்கி பேச்சியை வசப்படுத்தினார் செம்பன் துரை. பல்வேறு வடிவில் இந்தக்கதையைக் கேட்டிருந்தாலும் பொதுவாக இருந்தது ஏழைமக்களின் கூட்டச்சாவுதான். அது நிகழாமலிருக்கவே வாய்ப்பில்லை. |
1009 |
எங்களூரில் துள்ளக்காய்ச்சல் என்பார்கள். மழைபெய்யும் போது காடு ஒரு நரகம். இளமையில் காட்டுவேலைக்காக நான் சிறிதுநாள் பேச்சிப்பாறை அருகே காட்டில் இருந்தேன். ஒருநாள் இரவில் மலையடிவாரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அங்கே தீ மின்னிக்கொண்டிருப்பதைப்போல. நான் எழுந்து சென்று பார்த்தேன். |
1010 |
அவை மின்மினிகள். பல்லாயிரக்கணக்கில். அந்த ஒளி இணைந்து ஒரு படலம்போல ஆகியிருந்தது. என்னுடனிருந்த ஒரு மலைவேலைக்காரர் சொன்னார் அவை மின்மினிகள் அல்ல. பேச்சிப்பாறை அணை கட்டப்படும்போது இறந்துபோன மக்களின் ஆவிகள். அவர்களின் கண்களுக்குள் இருந்த கருமணிகள் அவை. இரவில் அவை ஒளிபெற்று உலவுகின்றன. |
1011 |
மூலம் திருநாளும், மிஞ்சினும் வரலாற்றில் இருக்கிறார்கள். ஆனால் அங்கு செத்துவிழுந்த ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றி ஒரு சொல்கூட எங்குமிருக்காது. தாதுவருஷத்தில் செத்து அழிந்த கோடிக் கணக்கானவர்களை இந்திய வரலாறு நினைவிலா வைத்திருக்கிறது? ஆனால் அந்தமக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். |
1012 |
உலகவரலாற்றின் மிகப்பெரிய பஞ்சங்களில் ஒன்று அது. இந்தியாவின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒருபங்கினர் பட்டினி கிடந்து செத்து அழிந்தனர். ஐந்தில் ஒருபங்கினர் அகதிகளாக மலேசியா, பர்மா. இலங்கை, ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் போன்ற அயல்நாடுகளுக்கு தங்களையே அடிமைகளாக விற்றுக்கொண்டு குடியேறினர். |
1013 |
தென்னகத்தில் மட்டும் இரண்டுகோடிப்பேர் இறந்திருப்பார்கள் என கணக்கிடப்படுகிறது. சென்னையில் ஒருநாளுக்குச் சராசரியாக முப்பதாயிரம் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன. ஒரு மனிதன் தொடர்ச்சியாக இருபதுநாட்கள் எந்த உணவையும் உண்ணாமலிருந்தால்தான் உயிர்துறப்பான். நடுவே கைப்பிடி உணவு உண்டால் கூட ஆயுள் நீளும். |
1014 |
சொல்லப்போனால் பெரிய அளவில் பதிவுகளே இல்லை. நாட்டுப்புறப்பாடல்களில் தான் செய்திகள் உள்ளன. அப்பஞ்சத்தை மிகச்சமீபகாலமாகத்தான் ஆங்கிலேய ஆவணங்களில் இருந்து தகவல்கள் திரட்டி வெள்ளைய ஆய்வாளர்களே எழுதியிருக்கிறார்கள். நான் அப்பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்டு வெள்ளையானை என்னும் நாவலை எழுதியிருக்கிறேன். |
1015 |
ஏனென்றால் இது இரு பருவமழைகளை நம்பி இருக்கும் துணைக்கண்டம். ஆகவேதான் சோழர்களும் சரி, நாயக்கர்களும் சரி, மழைநீரைத் தேக்கிவைக்கும் மாபெரும் ஏரிகளை உருவாக்கினார்கள். அந்த ஏரிகளில் மிகப் பெரும்பாலானவை சுதந்திரத்திற்குப் பின் தூர்ந்துபோக விடப்பட்டுள்ளன என்பது நம் அறியாமைக்கும் பொறுப்பின்மைக்கும் சான்று. |
1016 |
பன்னிரண்டு ஆண்டுக்காலம் அப்படி நெல் சேர்த்துவைக்கப்படும். அது பஞ்சம் தாங்குவதற்கான ஒரு ஏற்பாடு. தொடர்ந்து ஆறேழு ஆண்டுகள் மழையோ விளைச்சலோ இல்லை என்றாலும் எவரும் உணவில்லாது சாகமாட்டார்கள். வெள்ளைய அரசு அன்று உலகத்தைக் கைப்பற்ற போரிட்டுக் கொண்டிருந்தது. அதற்கு அளவில்லாத உணவு தேவைப்பட்டது. |
1017 |
ஆகவே ரயில்பாதைகள் அமைத்து நெல்விளையும் இடங்களை துறைமுகங்களுடன் இணைத்தனர். விளைந்த நெல்லை முழுக்க திரட்டி வெளிநாட்டுக்குக் கொண்டுசென்றனர். சென்னை ராஜதானியில் மக்கள் லட்சக்கணக்கில் செத்துக்கொண்டிருந்தபோது விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்களில் இருந்து கப்பல் கப்பலாக நெல் ஏற்றுமதி செய்யப்பட்டது. |
1018 |
ஆனால் அன்றைய சென்னை கவர்னர் பக்கிங்ஹாம் அதற்குச் செவிசாய்க்கவில்லை. இந்தப்பஞ்சத்தால் தமிழகத்தின் வறண்ட நிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் அன்றைய திருவிதாங்கூருக்குள் குடியேறினார்கள். இவர்களை மிகக்குறைந்த செலவில் கூலியாட்களாக அமர்த்தி வேலைசெய்ய வைக்கமுடிந்தது. கூலியே கிடையாது, உணவு மட்டும்தான். |
1019 |
அதனாலும் செலவு கட்டுப்படியாகாமல் மூலம்திருநாள் மகாராஜா குமரிமாவட்டத்திலிருந்த ஏராளமான குளங்களை வயல்களாக ஏலம் போட்டு விற்றார். பேச்சிப்பாறை அணை குமரிமாவட்டத்தின் முகத்தையே மாற்றியமைத்தது. பருத்தி விளைந்திருந்த வறண்ட நிலமான தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டங்கள் தென்னந்தோப்புகளும், வயல்களும் ஆக மாறின. |
1020 |
அந்தச்சாதனையை நிகழ்த்தியவர் ஐரோப்பிய பொறியியலாளரான மிஞ்சின். மிஞ்சித்துரை என அழைக்கப்படும் அவரது சமாதி இன்றும் பேச்சிப்பாறை அணைப்பகுதியில் உள்ளது. குமரிமாவட்ட மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதுமுண்டு. என் இளவயதில் நான் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டதைப் பற்றிய ஏராளமான கதைகளைக் கேட்டிருக்கிறேன். |
1021 |
கோதையாற்றைத் தவிர கல்லாறு, சிற்றாறு, குட்டியாறு ஆகிய அணைகளும் அங்கேதான் இணைகின்றன. அந்த இடத்திற்கு கீழே மலை செங்குத்தாக இறங்குகிறது. அதற்குக்கீழே அணைகட்டமுடியாது, நிலம் விரிந்துவிடுகிறது. ஆனால் மலைவிளிம்பில் அணைகட்டினால் நீரின் அழுத்ததை அது தாங்காது என்று பிற பொறியாளர் சொன்னார்கள். |
1022 |
ஏனென்றால் குமரிமாவட்டம் வருடத்தில் மூன்று பெரிய மழைக்காலம் கொண்டது. அதிலும் பேச்சிப்பாறை பகுதியில் எப்போதுமே மழை இருக்கும். இங்குள்ள ஆறுகள் அனைத்துமே என்றும் வற்றாத ஜீவநதிகள். மழை மிகவும் பெய்து நான்கு ஆறுகளிலும் நீர்பெருகினால் அணை தாங்காது என எச்சரித்தார்கள் அப்பகுதியை அறிந்தவர்கள். |
1023 |
இந்தியாவில் மிக ஆழமான அஸ்திவாரம் தோண்டப்பட்ட அணைகளில் ஒன்று பேச்சிப்பாறை அணை. இந்நிகழ்வை நாட்டுப் புறக்கதையாக எங்களூரில் அடித்தளமக்கள் பாடுவார்கள். மிஞ்சினை செம்பன் துரை என்பார்கள். அவர் குதிரைமேல் ஏறி கையில் துப்பாக்கியுடன் பணிகளைப் பார்வையிட வருவாராம். அவர் உண்மையில் மனிதன் அல்ல, பூதம் என்பார்கள். |
1024 |
அவர் மனிதர்களின் இறைச்சியை சுட்டு கத்தியால் வெட்டித் தின்பார். முதன்முதலாக அவர் பேச்சி அன்னை ஆண்ட பேச்சிப்பாறைக் காட்டுக்குள் வந்தபோது பேச்சி அன்னை பேருருக்கொண்டு அவர் முன் தோன்றினாள். காதில் யானைகளைக் குண்டலமாகப் போட்டிருந்தாள். கழுத்தில் மலைப்பாம்புகளை வடமாக அணிந்திருந்தாள். |
1025 |
உன் மகளை அடையாமல் உயிருடன் திரும்ப மாட்டேன் பேச்சி அன்னை வெறிகொண்டு கூத்தாடினாள். இடியும் மழையுமாக அவரை அச்சுறுத்தினாள். செம்பன் துரை ஊரிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்களைக் காட்டுக்குள் கொண்டுவந்தார். மூன்றுவேளைக் கஞ்சியும் மாதம் மூன்றணாவும் என்பதுதான் அவர் அளித்த வாக்குறுதி. |
1026 |
அது மந்திரம்போலப் பரவி மக்கள் தேவைக்குமேல் வந்து குழுமிக்கொண்டே இருந்தார்கள். மழையிலும் குளிரிலும் மக்கள் செத்தார்கள். மலேரியாவில் கூட்டம் கூட்டமாக மறைந்தார்கள். ஆனால் நீர் அள்ள நீர் வந்து நிறைவது போல மக்கள் வந்து கொண்டிருந்தனர். பலமுறை அணை இடிந்துசரிந்தபோது செம்பன் துரை மனம் வருந்தினார். |
1027 |
உனக்கு என்ன வேண்டும்? சொல் தருகிறேன் என்றார் செம்பன் துரை. ஆயிரம் மனிதத்தலை வேண்டும் என்றாள் பேச்சி. ஆயிரமில்லை, ஐயாயிரம். எடுத்துக்கொள் என்று துரை வாக்களித்தார். மறுநாள் அந்த அணையின் கட்டுமானக்குழிக்குள் செம்புநாணயங்களை அவர் வாரி இறைத்தார். அதைக் கண்டதும் ஏழைமக்கள் கூட்டம்கூட்டமாக உள்ளே பாய்ந்தனர். |
1028 |
அந்நேரத்தில் மண்ணும் சேறுமாகப் பெருகிவந்த கோதை அவர்களை அள்ளி உண்டாள். அதோடு அவள் பசி அடங்கியது. கோதையை அடக்கி பேச்சியை வசப்படுத்தினார் செம்பன் துரை. பல்வேறு வடிவில் இந்தக்கதையைக் கேட்டிருந்தாலும் பொதுவாக இருந்தது ஏழைமக்களின் கூட்டச்சாவுதான். அது நிகழாமலிருக்கவே வாய்ப்பில்லை. |
1029 |
எங்களூரில் துள்ளக்காய்ச்சல் என்பார்கள். மழைபெய்யும் போது காடு ஒரு நரகம். இளமையில் காட்டுவேலைக்காக நான் சிறிதுநாள் பேச்சிப்பாறை அருகே காட்டில் இருந்தேன். ஒருநாள் இரவில் மலையடிவாரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அங்கே தீ மின்னிக்கொண்டிருப்பதைப்போல. நான் எழுந்து சென்று பார்த்தேன். |
1030 |
அவை மின்மினிகள். பல்லாயிரக்கணக்கில். அந்த ஒளி இணைந்து ஒரு படலம்போல ஆகியிருந்தது. என்னுடனிருந்த ஒரு மலைவேலைக்காரர் சொன்னார் அவை மின்மினிகள் அல்ல. பேச்சிப்பாறை அணை கட்டப்படும்போது இறந்துபோன மக்களின் ஆவிகள். அவர்களின் கண்களுக்குள் இருந்த கருமணிகள் அவை. இரவில் அவை ஒளிபெற்று உலவுகின்றன. |
1031 |
மூலம் திருநாளும், மிஞ்சினும் வரலாற்றில் இருக்கிறார்கள். ஆனால் அங்கு செத்துவிழுந்த ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றி ஒரு சொல்கூட எங்குமிருக்காது. தாதுவருஷத்தில் செத்து அழிந்த கோடிக் கணக்கானவர்களை இந்திய வரலாறு நினைவிலா வைத்திருக்கிறது? ஆனால் அந்தமக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். |
1032 |
மடிப்பு மடிப்பாக விரிந்து பரவும் ஆடைகளும், அடர்ந்த புருவங்களும், தெறிக்கும் உருண்டை விழிகளும், விரித்து விரிந்த பற்களும் கொண்டு கையில் கொலைஆயுதங்களை ஓங்கியபடி உறுத்துப்பார்க்கும் அவர்களின் திசைக் காவல்தெய்வங்கள் நம்மூர் முனியப்பனைப் போலவோ அய்யனாரைப் போலவோ பயங்கரத் தோற்றம் கொண்டவை. |
1033 |
இதையெல்லாம் தெய்வமென்று எப்படி இவர்களால் ஏற்கமுடிகிறது? என்று அவர்கள் ஒவ்வொரு நாளும் எண்ணி வியந்தார்கள். இந்த மக்களை எப்படியாவது கடைத்தேற்ற வேண்டியது தங்களது கடமை என்று எண்ணிக் கொண்டார்கள். அவர்களுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு சீனச்சிறுமியை வேலைக்கு வைத்தார்கள். |
1034 |
மிகப்பணிவான சிறுமி. சுறுசுறுப்பாக வேலைகள் அனைத்தையும் செய்பவள். அன்பானவள். ஆனால் இரண்டே வாரத்தில் அவள் வேலையை விட்டு நின்றுவிட்டாள். ஏன் வேலையைவிட்டு நின்றுவிட்டாள் என்று கேட்பதற்காக அத்தம்பதிகள் அந்தப்பெண்ணைத் தேடிச் சென்றார்கள். இவர்கள் சென்றதுமே அந்தப்பெண் ஓடி ஒளிந்துகொண்டாள். |
1035 |
அந்தப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் ஒளிந்து கொண்டார்கள். மறைவிடங்களிலிருந்து பீதி நிறைந்த முகத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று இவர்களுக்குத் தெரியவில்லை. அங்கு சற்று ஆங்கிலம் தெரிந்த படித்த இளைஞன் ஒருவன் இருந்தான். |
1036 |
அவன் சென்று விசாரித்துவிட்டு வந்து சொன்னான். அவனே சற்று பயந்திருந்தான். உங்கள் வீட்டில் வேலை செய்யும்போது ஒருநாள் இரவில் நீங்கள் ஒரு அறைக்குள் சென்று ஏதோ செய்வதை அந்தப்பெண் பார்த்திருக்கிறாள். நீங்கள் மண்டியிட்டு கைகளை மார்போடு சேர்த்து கண்களை மூடிக் கொண்டு ஏதோ மந்திரம் போல சொன்னீர்கள். |
1037 |
உங்கள் முன்னால் ஒரு கொடூரமான சிற்பம். அதில் குறுக்காக அறையப்பட்ட மரக்கட்டையில் ஒரு பிணம் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கால்களிலிருந்தும் கைகளிலிருந்தும் ரத்தம் வழிந்தது. தலையில் ஒரு முள்ளாலான கிரீடம். அந்தப் பேயுருவத்தை பார்த்து அவள் பயந்து ஓடிவந்திருக்கிறாள். அது எங்கள் தெய்வம். |
1038 |
தெய்வம் என்றால் இறக்ககூடாது அல்லவா? என்றார் சீனர். பிணத்தை வழிபடாதீர்கள். அது தவறு. எப்போதுமே மதங்களுக்கிடையேயான பரிமாற்றம் இப்படித்தான் இருக்கும். ஒருவரின் நம்பிக்கை இன்னொருவருக்கு பேய் என்றும் பூதம் என்றும் தோன்றுகிறது. மற்ற நம்பிக்கைகளை புரிந்துகொள்வது மிகமிகக் கடினம். |
1039 |
அதைக்கேட்டு இங்குள்ள நாத்திகர்களும் அதையே சொன்னார்கள். ஆனால் ஜோஸஃப் கேம்பல் போன்ற அறிஞர்கள் விரிவான ஆய்வுகள் வழியாக இவற்றின் குறியீட்டு அர்த்தங்கள் எப்படியெல்லாம் விரிந்துள்ளன என்று சொல்லியிருக்கிறார்கள். நம் நாத்திகர்கள் அதையெல்லாம் இன்னும் வாசிக்கவில்லை. வேதங்களில் உள்ள ஒரு அரிய படிமம் திரிசிரஸ். |
1040 |
அவர் ஒரு முனிவர் அவருக்கு மூன்று தலைகள். ஒரு தலை இறைச்சி உண்டு கள் அருந்தி மகிழ்ந்திருக்கும். ஒரு தலை வேதமோதியபடி இருக்கும். மூன்றாவது தலை இவை அனைத்தையும் பார்த்து ஞானத்தில் மூழ்கியிருக்கும். இந்தத் தொன்மையான உருவகம் இன்று வரை இந்துமதத்தை மிகச் சரியாக உருவகப்படுத்துகிறது. |
1041 |
வேத முதல்வர்களாகிய விஷ்ணுவும் சிவனும் முருகனும் இந்து மதத்தின் தெய்வங்கள்தான். எந்த தெய்வத்தையும் வழிபடாமல் தன்னுள் நிறைந்திருக்கும் ஆத்மாவே பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் பிரம்மம் என்று உணர்ந்து அமர்ந்திருக்கும் அத்வைதியும் இந்துமதத்தவர்தான். இவர்களுக்குள் முரண்பாடு இல்லை. |
1042 |
வெளியே நின்று பார்ப்பவர்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் மூன்று வகையான வழிபாடுகள் என்று நினைக்கிறார்கள். ஆராய்ந்தால் நம் தெய்வங்களுக்கு எல்லாம் இந்த மூன்று முகங்கள் உண்டு எனத் தெரியும். பொன்னார் மேனியன் என்றும், அழகே உருவான சுந்தரேசன் என்றும் சிவனை வழிபடுகிற ஒரு மரபிருக்கிறது. |
1043 |
சைவசித்தாந்திகளுக்கு இப்பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் சக்தியை ஆட்டி வைக்கும் சிவமெனும் அறியவே முடியாத கருத்துதான் சிவன். அதேபோல சிங்க வடிவம் கொண்டு மிகக்கோரமான தோற்றத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் விஷ்ணுதான். அகோபிலம் போன்ற கோயில்களில் நரசிம்மருக்கு ஆடுகளை வெட்டி ரத்தபலி கொடுக்கிறார்கள். |
1044 |
அதேசமயம் தாமரை இதழ் போன்ற கண்கள் கொண்ட பேரழகனாகவும் விஷ்ணுவை வழிபடுகிறோம். மூன்று மடிப்புக்ளாக மடிந்த காலத்தின்மேல் இப்பிரபஞ்சமே தன் உடலாககொண்டு படுத்திருக்கும் நினைப்புக்கெட்டாத காக்கும் சக்திதான் விஷ்ணு என்று விசிஷ்டாத்வைத வைணவர்கள் வணங்குவார்கள். அதேபோலத்தான் நாட்டுப்புறத்தெய்வங்கள். |
1045 |
அவை மனிதர்களாக வாழ்ந்தவை. தங்கள் அருஞ்செயல்களால் சிலர் தெய்வமானார்கள். தங்களை மீறிய ஊழ்வினைக்கு ஆட்பட்டதனால் சிலர் தெய்வங்களானார்கள். இங்கே வாழ்க்கை முடியாது இறந்ததனால் சிலர் தெய்வங்களானார்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும் என இதைப்பற்றித் திருக்குறள் சொல்கிறது. |
1046 |
இப்படி கொஞ்சம் விரிந்த பார்வையில் அணுகினால் இந்துமதம் செயல்படும் முறை தெரியும். அதன் ஒருமுனையில் பெயரோ குணங்களோ அடையாளங்களோ இல்லாததும் மனித நினைப்புக்கெல்லாம் அப்பாற்பட்டதுமான பிரம்மம் என்னும் தெய்வம் உள்ளது. நேர் மறுமுனையில் நம் தாத்தாவாக இருந்து இறந்தவர் தெய்வமாக உள்ளார். |
1047 |
நம் தாத்தாவை பிரம்மத்தின் அம்சம் என்று வழிபடுகிறோம். ஏனென்றால் எல்லாமே பிரம்மம்தான். எங்கே இந்த நம்மை மீறிய ஒரு மகத்துவம் வெளிப்படுகிறதோ அங்கே பிரம்மத்தை மேலும் தெளிவாக நம்மால் காணமுடிகிறது. எல்லா பொருளிலும் சூரியஒளி பட்டு பிரதிபலிக்கிறது. கண்ணாடியில் மேலும் கூடுதலாக ஒளிவிடுகிறது. |
1048 |
அவர்களின் பயங்கரமும் கொடூரமும் அருளும் இந்தப்பிரபஞ்சத்தின் சாரமாக உள்ள பிரம்மத்தின் பலவகையான முகங்கள்தான். ஆகவே பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் முதற்பெருந்தெய்வம் எல்லாமே ஒன்றுதான். மெய்மை ஒன்றுதான், அறிஞர் அதை பலவாக வழிபடுகிறார்கள் ஏகம் சத்விப்ரா, பஹுதா வதந்தி! என்று ரிக்வேத வாக்கியம் சொல்கிறது. |
1049 |
பின் அட்டை இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. |
1050 |
நாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான தொன்ம மரபுக்கும் என்ன உறவு, அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆராய்கின்றன இக்கதைகள். |
Комментарии